Sunday, November 28, 2010

மலர் 3 இணைய இதழ் 4 11 நவம்பர் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையம் பலரின், தியானம் என்பது என்ன ? அதை செய்வது எப்படி ?அதை உபயோகிக்கும் விதம் என்ன ? அதனால் நாம் அடைவது என்ன ? ஓஷோவின் வழி என்ன, செய்தி என்ன? என்பது போன்ற சந்தேகங்களுக்கு பதில் அளித்து அதை நடைமுறைப் படுத்தவும் உதவி வருகிறது.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். தங்கி தியானம் செய்யலாம்.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.சிரிப்பு

ஆழமான சிரிப்பில் மனம் கரைந்துவிடுகிறது.

சிரிப்பு மனதின் பாகமோ, இதயத்தின் பாகமோ அல்ல.

உண்மையான சிரிப்பு உனது அடிவயிற்றின் ஆழத்திலிருந்து வரும்போது அது உனது மையத்திலிருந்து வருகிறது. அலைகள் மையத்திலிருந்து கிளம்பி வெளிவட்டத்துக்கு வருவது போல உண்மையான சிரிப்பு உனது மையத்திலிருந்து கிளம்பி அலையலையாய் வெளிப்புறத்துக்கு வரும்.

சிரிப்பு உன்னுள் ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.

நீ உன்னைப் பார்த்து சிரிப்பதுதான் உண்மையான சிரிப்பு.

எப்போதும் உனது அடி வயிற்றிலிருந்து வருவதுதான் உண்மையான சிரிப்பு.

நீ சிரிக்கும்போது எதிர்காலத்திலோ, இறந்த காலத்திலோ இருக்க முடியாது.

சிரிப்பு முடிவானதின் வாயிலை திறக்கக் கூடும்.

2.அன்பு

நிஜமான அன்பு என்பது உள் வெளியை நிறைக்கும் ஏதோ ஒன்று அல்ல. அதற்கு பதிலாக உள்வெளியை பகிர்ந்து கொள்வதோடு சம்பந்தப்பட்டது. நீ பகிர்ந்துகொண்டால் அது அன்பு. பகிர்தல்தான் மனிதனை தெய்வீகத்தோடு இணைப்பது. அன்புதான் உன்னை தெய்வீகத்தோடு இணைக்கும் பாலம்.

அன்பு அபாயகரமான பாதை. துணிவுள்ளவர்கள் மட்டுமே அதில் பயணம் செய்யமுடியும்.

அன்பு செய்வது என்பது உனது ஆணவத்தை விடுவது, உன்னை இழப்பது. அன்பு என்றால் இல்லாமல் போவது.

நீ மிகவும் தலைகனம் பிடித்தவனாய் இருந்தால் உன்னால் காதலில் விழ முடியாது.

உடலுக்கு எப்படி உணவு தேவையோ அது போல ஆன்மாவுக்கு தேவையானது அன்பு.

அன்புக்கு தர்க்கம் கிடையாது, அன்புக்கு காரணம் கிடையாது, அன்புதான் வாழ்க்கை.

அன்பு நிபந்தனைகளற்ற பரிசு, அது பேரம் பேசுவதல்ல.

3.மையம்.

மையமின்றி வாழ்வு இல்லை. உனக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். அது வேறு விஷயம். அதை நீ உருவாக்க முடியாது, நீ அதை திரும்பவும் கண்டுபிடிக்க வேண்டும். நினைவில் வைத்துக் கொள், நான் நீ அதை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, நீ திரும்பவும் கண்டு பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.

மையமின்றி யாரும் உயிர்த்திருக்க முடியாது. மையமில்லாமல் வாழ்வு சாத்தியமேயில்லை.

புயலின் நடுவே அசையாதிருக்கும் அந்த மையத்தை கண்டறி.

கவனமாயிருப்பது, விழிப்புணர்வோடிருப்பது ஒன்று மட்டுமே உன் மையமாகட்டும்.

வெளிப்புறமின்றி மையமில்லை. அவை உண்மையில் ஒன்றே.

எல்லா சிறப்பானவைகளும் மையத்திலிருந்து தோன்றியவையே.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

இந்த தலையங்கத்தில் மூன்று தலைப்புகளில் எழுதப் போகிறேன்.

வரும் நண்பரிகளிடம் நான் முதலில் சோதிக்க வேண்டியிருப்பது அவர்கள் தன்னைப் பார்க்க தயாராய் இருக்கிறார்களா என்பதைத்தான்.

அது இல்லாதவர்கள் தியானம் செய்வதில்கூட சமூக மனத்தின் பேராசையும், பாதுகாப்புத் தேடுதலுமே ஓங்கி நிற்பதை நான் பார்க்கிறேன்.

உதாரணமாக ஒரு நண்பர் நான் அந்த சாமியாரிடம் போனேன், அதற்குப் பின்பு கஷ்டம் நீங்கி நன்றாக இருக்கிறேன் என்கிறார். இன்னொருவர் அந்தக் கோயிலுக்குப் போய் அங்கு ஓரிடத்தில் நின்றால் அங்கு ஒரு சக்தியிருப்பதை உணர்கிறேன். அதற்காகவே அங்கு தவறாது போகிறேன். அது எனக்கு அமைதி கொடுக்கிறது என்கிறார்.

ஓஷோவையும் படிக்கிறார்கள், தியானம் செய்கிறார்கள். ஆனால் ஈர்ப்பு வேறொங்கோ இருப்பது ஏன்,? மேலும் ஓஷோவிடமும் அப்படி ஒரு பயன்பெறவே வர விரும்புகிறார்கள். ஓஷோவும் அப்படி பயனளிப்பார், தனது நோயைத் தீர்ப்பார், வியாபாரத்தைப் பெருக்குவார், ஆரோக்கியம் தருவார் என்று நம்ப விரும்புகிறார்கள்.

நண்பர்கரளே, தயவுசெய்து ஓஷோவையாவது அவர் வழியே விட்டுவிடுங்கள்.

உங்களது ஆசைகளை, பேராசைகளை, பயத்தை, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓஷோவை பயன்படுத்திக் கொள்ள நினைக்காதீர்கள். சாமியாரிடம் போனால் கஷ்டம் நீங்கி விட்டது என்றால் இங்கு எல்லோரும் ஏன் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? சாமியாரின் முகவரி தெரியாத ஒன்றுதான் பிரச்னையா? மடத்தனம் இது.!

ஒரு முறை நான் பல வருடங்களுக்கு முன்பு தற்செயலாக மகரிஷி மகேஷ்யோகி அவருடையதேயான சேனலில் அவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அவர் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தியாவின் அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம் நமது பார்லிமெண்டின் வாஸ்து சரியில்லை என்பதுதான் என்று. இவருக்கு என்று ஒரு தனி தொலைக் காட்சி சேனல்.! இதைப் பார்த்து ஏமாறும் மக்கள் கூட்டம்.! என்ன சொல்வது நமது சமூகத்தை?

நான் கூறவந்தது என்னவென்றால், இப்படி நம்புகிறவர்கள், ஏமாறுகிறவர்கள் அனைவரின் பொதுகுணமாக இருப்பது தன்னைப் பார்க்க பயப்படும் தன்மைதான்.

ஆனால் ஓஷோ உன்னைப் பார்ப்பதுதான் ஆரம்பம் என்பவர். உன்னை அப்படியே ஏற்றுக் கொள், அப்படியே பார், எல்லா அசிங்கங்களையும், சேர்த்து வைத்துள்ள எல்லா குப்பைகளையும் பார். பார்க்க முடிந்த பின்பு தானே சுத்தம் செய்வது, எப்படி சுத்தம் செய்வது என்பதெல்லாம் வருகிறது. சுத்தம் செய்த பின்பு தானே தியான வாய்ப்பு வருகிறது.!

ஒரு செடி உள்ளிருந்து வளர்கிறது. வெளியே உள்ளவைகளை வாழ்க்கைச் சூழ்நிலையை பயன்படுத்தி வளர்கிறது. வளர்ந்து மலர்கிறது. மணம் பரப்புகிறது. காயாகி, கனியாகி உதிர்கிறது. மேலும் இந்த முழுவதையும் அழகோடு, ஆனந்தத்தோடு செய்கிறது.

மனிதனுக்கு என்ன ஆனது? முதலில் உள்ளிருந்து வாழ்வதை நிறுத்தி விட்டான். வெளி விஷயங்களை உணரவும் முடிவதில்லை. உள்ளிருந்து வாழும் உடலோடு ஆன தொடர்பும் கொஞ்சமே இப்போது மிச்சமிருக்கிறது.

நாம் இயற்கையின் தொடர்பை மதிப்பதில்லை. அதன் அவசியத்தை நாம் மறந்து விட்டோம்.

ஒரு மான் கூட்டமும், அதை கொன்று வாழும் புலியும் ஒரே காட்டில் ஒரே இடத்தில்தான் வாழ்கின்றன. எந்த மான் கூட்டமும் புலியில்லாத காட்டிற்கு தப்பி ஓடிவிட முயற்சிப்பதில்லை. புலி துரத்தும்போது ஓடுகிறது. ஏதாவது ஒரு மானை புலி பிடித்தவுடன் புலி நின்று விடுகிறது. மான் கூட்டமும் ஓடுவதை நிறுத்திவிட்டு மேய ஆரம்பிக்கிறது. புலியும், எதற்கு தினமும் இந்த துரத்தல் சில நாள் எதுவும் கிடைப்பதில்லை, மான் லாவகமாக தப்பி ஓடி விடுகிறது. ஆகவே ஒரு பத்து மான்களை அடித்து ஒரு குகையில் சேர்த்து வைக்கலாம் என்று திட்டமிடுவதில்லை. பசிக்கும்போது தேட ஆரம்பிக்கிறது. உண்டவுடன் இளைப்பாற ஆரம்பித்து விடுகிறது.

இப்படி இயற்கையில் எதிரெதிர் ஆனவை என்று நாம் நினைக்கும் அனைத்தும் சேர்த்து வாழ்கின்றன. மான் பெருகி பஞ்சம் வந்து விடாமல் புலி காக்கிறது. புலி உணவின்றி இறந்துவிடாமல் மான் காக்கிறது.

ஆனால் மனிதனின் நிலை என்ன? எதிரானது என்று தோன்றுவதை எல்லாம் அழித்து சமநிலையைக் குலைக்கிறான்.

வெள்ளம் வராது இருக்க அணை கட்டுகிறான். வெள்ளம் வந்தால்தான் அது கொண்டு வரும் வண்டல் மண் நிலம் முழுவதும் பரவி, நிலத்தின் வளம் அழிந்துவிடாமல் காப்பாற்றப் படும். ஆனால் அணையில் ஆறு அடித்து வரும் வண்டல்மண் எல்லாம் பயனற்று அணையின் அடியில் சேகரமாகிறது படிந்துவிடுகிறது. மேலேதான் நீர் வெளியேற திறக்கப்படுவதால் வண்டல்மண் வீணாவதே நடக்கிறது.

உதாரணத்திற்கு ஒன்று இது. இப்படி சமநிலையைக் கெடுப்பதால், காடுகளை அழித்து, பெட்ரோல் சேமிப்புகளைக் குடித்து, காற்றை மாசுபடுத்தி, தற்கொலைப் பாதையில் செல்வதே இன்றைய நாகரீகத்தின் விளைவாக இருக்கிறது.

விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி இயற்கையை அழிக்காமல் வாழ்வதை விட்டுவிட்டு அதை வெற்றி கொள்ளும் வெறியில் மனிதன் அழிவுப் பாதையில் செல்கிறான்.

மலைகள் தகர்க்கப்படுகின்றன. சேலம் பக்கத்தில் பல மலைகளைக் காணோம். பூனாவைச் சுற்றி மலைகள் சமமாக்கப்பட்டு அடுக்குமாடி வீடுகளாக்கப்பட்டு விட்டன. எதற்கு இந்த தற்கொலை முயற்சி ?ஏன் இந்த தற்கொலை முயற்சி?

இதன் காரணம் மனிதன் தனது உள்ளுணர்வை இழந்து விட்டதுதான். இயற்கையோடுள்ள இணைப்புணர்வை இழந்து விட்டதுதான். ஒரு உதாரணம் சொல்கிறேன். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது இது. நான் பார்க்கவில்லை. ஒரு நண்பர் கூறிய தகவல். ஆனால் இது உண்மைதான், மேலும் இது போன்ற உதாரணங்களை கோடிக்கணக்கில் கொடுக்கமுடியும். அதாவது ஒரு மரம் கொஞ்சம் பெரிய காயாக காய்த்து வெடிக்கிறது. அப்போது அதனுள்ளிலிருந்து விதைகள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. அந்த விதைகளுக்கு ஹெலிக்காப்டரைப் போல மெல்லிய இறக்கைகள் உள்ளன. மேலும் அவை வெளிப்படுகையில் ஒரு விசை போன்ற துடிப்பை விதைகள் பெறுகின்றன. அதன் மூலம் அது காற்றில் பறக்க ஆரம்பித்து வெகுதூரம் செல்கிறது. அந்த இறக்கைகள் காற்றில் சுழன்று வெகுதூரம் விதையை எடுத்துச் செல்கின்றன. இதைப் பார்த்து நண்பர் ஆச்சரியப்பட்டு போனார். எவ்வளவு அறிவோடு எல்லாம் இருக்கிறது என்ற ஆச்சரியம் அவருக்கு. இதைக் கேட்ட நான் சொன்னேன். இந்த அறிவுக்கே ஆச்சரியப் படுகிறீர்களே! இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள். அந்த மரம் ஒரு அடி கூட அதன் வாழ்நாளில் நகர்ந்ததில்லை. பிறகு எப்படி பறப்பது பற்றி அதற்கு தெரிந்தது,? மரம்தான் காயை உருவாக்கியது, அதன் விதைகளை அது தான் அவ்வாறு உருவாக்கிறது. ஆனால் அதற்கு காற்றில் பறக்க இப்படி இறக்கையோடு நமது விதையை ஏற்படுத்த வேண்டும். அதன் ஆரம்பத்திற்கு ஒரு விசை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அதற்கு எப்படித் தெரிந்தது? அதன் சொந்த அனுபவம் என்ன? சொந்த அனுபவமும் இல்லை, படித்ததும் இல்லை, கல்லூரி சென்று கற்கவும் இல்லை, ஆனால் தவறில்லாமல் முதல்முறையே மிகச் சரியாகத் தயாரித்து வெற்றிகரமாக செயல்படுத்துகிறது.! எப்படி - இந்த ஆச்சரியத்தை யோசியுங்கள் என்றேன். நீங்களும் யோசியுங்கள்.

நமது சொந்த அனுபவம், பார்த்தது, கேட்டது, படித்தது, கற்றது என்ற ஐம்புலன் அனுபவத்தை அறிவென்று எண்ணி அல்லல்படும் நாம் இதை கண்டிப்பாக யோசிக்க வேண்டும். இயற்கையின் இணைப்புணர்வே நமது உண்மையான வழிகாட்டி, அந்த உணர்வே நமது வாழ்வின் சாரம்.

இன்றைய மனிதன் நோக்கம், பார்வை, இலக்கு, இலட்சியம், கொள்கை, கோட்பாடு, நெறிமுறை, கருத்து, உறுதி, ஆகிய எல்லாமே சரியான திசையில், சரியான கண்ணோட்டத்தோடு இல்லை என்பது அடிப்படை சமூக பிரச்சனை.

இந்த சமூகம் பணத்தை முன்னிறுத்தி விட்டது. பாதுகாப்பை முன்னிறுத்தி விட்டது. சுயநலத்தை முன்னிறுத்து விட்டது. போலி கௌவரத்தை, அதிகாரத்தை, ஆடம்பரத்தை முன்னிறுத்தி விட்டது. வீண் பெருமையை, அடுத்தவர் புகழ்ச்சியை முன்னிறுத்தி விட்டது. பயத்தையும் சந்தேகத்தையும், முன்னிறுத்தி விட்டது. பேராசையை முன்னிறுத்தி விட்டது. தன் குடும்பம், தன் இனம், தன் மொழி என்பதை முன்னிறுத்தி விட்டது.

ஆனால் நமது சமூகம் பணத்திற்கு பதிலாக குணத்தை முன்னிறுத்துவதாக, பேராசைக்கு பதிலாக பகிர்ந்து கொடுப்பதை, பொறாமைக்கு பதிலாக அன்பை, அதிகாரம் தேடுவதற்கு பதிலாக அருளை, கருணையை, போட்டிக்கு பதிலாக அமைதியை, வறட்டு கெளரவம் தேடுவதற்கு பதிலாக கடவுள் நிலை தேடுதலை முன்னிறுத்தியதாக இருந்தது. முழு வாழ்க்கை முறையும் கடவுள் நிலை பெறுவதை முன்னிறுத்தியே இருந்தது. அதற்கான ஒரு முழு மனவியலும் இங்கே ஓங்கி வளர்ந்திருந்தது.

நடுவில் என்ன ஆனது. மேற்கு நாடுகளைப் பார்த்து பணப்பேய், அதிகாரப்பேய், அதற்காக எந்த சூழ்ச்சியும், சுரண்டலும் செய்வது, மது, மாது, சூதுவே மகிழ்ச்சி என்ற மயக்கம் நம்மைப் பிடித்துக் கொண்டது. ஆகவே நாம் திசை மாறினோம். இலக்கு மாறினோம். இதுவே நம் சமூகத்தின் இன்றைய அவலம்.

பாதுகாப்பை முன்னிறுத்திய சமூகமாக நம்முடையதும் மாறி விட்டது. அடிமையாய் வறுமையாய் இருந்ததன் விளைவால் நாம் மேற்கத்திய வாழ்க்கைக்கு அதிகம் ஈர்க்கப்பட்டோம்.

இதனால் இன்று பாதுகாப்பான வாழ்வை எட்டிவிட்டவர்கள் அடைய வேண்டியதை அடைந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்ள முயல்கிறார்கள்.! அரசாங்க உத்தியோகம் பெற்றவர்கள், புதுப் பணக்காரராய் மாறி விட்டவர்கள், வாடகையும் வட்டியும் வாங்கி வாழ்பவர்கள் இவர்களெல்லாம், வரவுக்குள் வாழ்வைச் சுருக்கி பாதுகாப்பான வாழ்வை தவறவிட்டுவிடாமல் வாழும் போக்கு நமது சமூகத்தில் இருக்கிறது.

மேலும் இவர்கள் இதில் பெருமை வேறு பட்டுக்கொள்கிறார்கள், வாழ்வில் வெற்றி அடைந்துவிட்டதுபோல. ஆனால் உண்மை என்ன?

பாதுகாப்பு எதற்கு? வாழ்வதற்கு, பயமின்றி வாழ்வதற்கு.! ஒரு செடி வளர்வதற்கு அதைச் சுற்றிப் போடும் வேலி ஒரு பாதுகாப்பு. ஆனால் வேலியை முதலில் முள்வேலி, பிறகு கம்பி வேலி, பிறகு காம்பவுண்ட் சுவர் என்று அதிகரித்துக் கொண்டே போய்விட்டு விதையை மண்ணில் விதைக்காமல் வைத்திருந்தால் என்ன பயன்? ஆனால் ஒருவருக்கும் இதைப் பற்றிய உணர்வே இல்லை. பாங்க் இருப்பை, சொத்து மதிப்பை, அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் வாழும் தைரியம் வருவதில்லை.

இதற்கும் காரணம் இருக்கிறது. சுற்றிலும் இந்தப் பாதுகாப்பை அடையாமல், இந்தப் பாதுகாப்பை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் கூட்டம் இருக்கிறது. அதைப் பார்க்கையில் நாம் அடைந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி பிறக்கிறது. இது பொய்யானதுதான். நமது கற்பனைதான்.

உண்மையான உணர்வு எதுவுமே உள்ளிருந்து வர வேண்டும். பசி, தாகம் போல. ஆனால் இந்தப் பொய்யான உணர்வு கொடுக்கும் அகங்கார போதையில் அனைவரும் மகிழ்ந்து கொள்கிறார்கள். காலை எழுந்தவுடன் பேப்பர் படித்து, எங்கெங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, கலவரம் என்றெல்லாம் தெரிந்துகொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. ஏனெனில் இது எதுவும் நடக்காமல் நான் நன்றாக இருக்கிறேன் என்று மகிழ்ந்து கொள்ள இது மிகவும் அவசியமாக இருக்கிறது. நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப உணர்வதன் மேல் இன்றைய மனிதனுக்கு விருப்பம் ஏற்படுகிறது.

ஆனால் இது ஒரு மனநோய்தான். மற்றவர்களின் துன்பமே நமது மகிழ்ச்சிக்கு காரணமாய் இருப்பது ஒரு நோயல்லாமல் வேறென்ன? அடுத்த வீட்டுக்காரனின் வெற்றியும் தோல்வியுமே உனது கோபத்தையும் மகிழ்ச்சியையும் தீர்மானிப்பதாய் இருப்பது ஒரு அவலம்தான்.

மேலும் நாம் இதை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு ஊட்டி விடுகிறோம். இதன் அடியில் உள்ள பயத்தைப் போக்கிக் கொள்ளும் வழியை நாமும் தெரிந்துகொள்வதில்லை. குழந்தைகள் பயத்தை உணரும்போதும் அதைக் கடப்பதற்கு நாம் சொல்லியும் தருவதில்லை. அதை அமுக்கி வைக்கும், மறைத்துக் கொள்ளும் வழிகளையே சொல்லித் தருகிறோம்.

நமக்கு வாழ்வின் இலக்கே மாறிப்போனது அல்லது மறந்துபோனதுதான் இந்நிலைக்குக் காரணம் என்று உணர்ந்தால், நமக்கு உறைத்தால் அப்போதுதான் விடிவு பிறக்கும். நிறைவு கிடைக்கும். நாம் திரும்பவும் வாழ ஆரம்பிப்போம். போதையை நோக்கியல்ல, சத்தியத்தை நோக்கி.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

கண்ணீர்

இதயம் கரைகையில் எழுவது கண்ணீர்

அதுவே மனிதனைக் கழுவி,
அவன் ஆன்மாவை காப்பாற்றி வருகிறது.

இடர்களை இறக்கிவைத்து,
வாழ்வைத் தொடர வழி செய்கிறது.

இன்பம் முட்டும்போதெல்லாம்,
நன்றியை பொங்கிப் பெருக வைக்கிறது.

உடல் உபாதையில் உழழும்போது,
வலியைக் கரைத்து வழிகிறது கண்ணீர்.

இப்படி மனிதனை இயற்கையோடு.......
இணைத்து வைத்திருப்பது கண்ணீர்.

அவன் இதயம் திறக்கும்போதெல்லாம்.......
அதில் பூத்து மலர்வது கண்ணீர்.

ஆம்.......
உடலின்பால் அன்பு,
உறவின்பால் அன்பு,
உள்ளத்தின்பால் அன்பு,
உயிரின்பால் அன்பு,
என்று.......
அன்பு எழும்போதெல்லாம் முகிழ்வது கண்ணீர்.

கண்ணீர் அன்பின் வெளிப்பாடு,
ஆகவே கண்ணீர் விடுங்கள்,
உங்களை அன்பால் கழுவுங்கள்.

2,
அன்பு இல்லையே

உன்னை பார்க்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் நான் உன்மீது அன்பு கொண்டிருக்கிறேன்.

உன் பேச்சைக் கேட்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு......

உன்னை நினைக்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு.......

உன்னை தனியாகப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு......

நீ நான், நான் நீ
ஆம் இதுதான் பிடித்திருக்கிறது

ஓஷோ வீடியோ

1. Osho : Meditation is a very simple phenomenon



2. Osho : Rediscovering your joyful self



3. Osho : Spiritual growth and enlightenment



தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

இதயத்துடனான இணைப்பை இழந்து விடாதே.

உணர்வுதான் உண்மையான வாழ்க்கை. நினைப்பு போலியானது. ஏனெனில் நினைப்பு என்பது அதைப் பற்றியது. அது உண்மையானதல்ல. மதுவைப் பற்றிய நினைப்பு உனக்கு போதையை கொடுக்காது. மதுதான் உனக்கு போதையை கொடுப்பது. நீ மதுவைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கலாம், ஆனால் மது பற்றிய நினைப்பு மட்டுமே உனக்கு போதை தராது. நீ அதை குடிக்க வேண்டும். குடிப்பது உணர்வின் மூலமே நிகழும்.
நினைப்பு ஒரு போலியான செயல், ஒரு பதிலான செயல். அது உனக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்ச்சியை தரும். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை. அதனால் நினைப்பிலிருந்து உணர்வுக்கு நிலைமாறு. அதற்கு சிறந்த வழி இதயத்திலிருந்து சுவாசிக்க ஆரம்பிப்பதுதான்.

பகலில், எவ்வளவு முறை நினைவு வருகிறதோ அவ்வளவு முறை ஒரு ஆழமான மூச்சு எடு. அது உனது இதயத்தின் மையத்தை சென்று அடைவதாக உணரு. முழு இயற்கையும் உன் இதயமையம் எதுவோ அங்கே உன்னுள் சொரிவதாக உணர்ந்து பார். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அது சாதாரணமாக வலது பக்கத்தில் இருக்கும். அதற்கும் உடல்ரீதியான இதயத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது முற்றிலும் வித்தியாசமான விஷயம். அது நுண் உடலை சேர்ந்தது.
ஆழமாக மூச்செடு. நீ என்ன செய்தாலும் ஆழமான மூச்செடுத்து ஐந்து தடவைகள் செய். மூச்சை இழுத்து இதயத்தை நிரப்பு. இயற்கை இதயத்தின் மூலமாக நிரம்புவதாக இதயத்தின் நடுவே உணர்ந்து பார். வாழ்வு, தெய்வீகம், இயற்கை, துடிப்பு எல்லாமும் சொரிவதாக உணர். பின் அழுத்தமாக மூச்சை வெளியே விடு. இதயத்திலிருந்து உனக்கு கிடைத்த எல்லாவற்றையும் திரும்ப இயற்கைக்கு, தெய்வீகத்திற்கு கொடுப்பதாக உணர்ந்து கொடு.

ஒரு நாளைக்கு இதை பல தடவைகள் செய். ஆனால் எப்போது இதை செய்தாலும் முதலில் ஐந்து தடவைகள் ஆழமான மூச்செடு. அது தலையிலிருந்து இதயத்துக்கு இடம் மாற உனக்கு உதவி புரியும்.

நீ மேலும் மேலும் உண்ர்வுள்ளவனாக மாறுவாய். நீ விழிப்படையாத பல விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய். நீ அதிக சுவை அறிபவனாக, அதிக வாசனை உணர்வுள்ளவனாக, தொடு உணர்ச்சி அதிகம் உள்ளவனாக மாறுவாய். உன்னால் அதிகம் கேட்க முடியும், அதிகமாக பார்க்க முடியும். எல்லாமும் அதிக ஆழமானதாக மாறும். தலையிலிருந்து இதயத்துக்கு இடம் மாறு, திடீரென உனது புலன்கள் ஜொலிப்பதை நீ உணர்வாய். வாழ்வு உன்னுள் துடிப்பதை, உன் மூலம் பாய்ந்தோட தயாராக இருப்பதை, உன் மூலம் பொங்கி வருவதை நீ உணர்வாய்.

தியான யுக்தி – 2

உணர்வோடு சுவையறிதல்

நாம் சுயஉணர்வின்றி, இயந்திரதனமாக, அவசரமாக சாப்பிடுகிறோம். சுவையை அறியாமல் ருசித்து உணராமல் சாப்பிடும்போது நாம் உணவை அடைக்கிறோம், அவ்வளவுதான். மிகவும் மெதுவாக சாப்பிடு, சுவையை ருசி. பொருட்களை விழுங்காதே. அவசரமின்றி ருசித்து சுவையாகவே மாறி விடு. இனிப்பை உணரும்போது இனிப்பாகவே மாறு. அப்போது அதை உனது உடல் முழுவதும் உணர முடியும். வாயில் மட்டுமின்றி. நாக்கில் மட்டுமின்றி அலை போல உடல் முழுவதும் பரவுவதை உணர முடியும்.

நீ எதை சாப்பிட்டாலும் அந்த சுவையை உணரு, அந்த சுவையாகவே மாறு. சுவையறியாவிட்டால் உனது புலன்கள் இறந்தவையாகி விடும். அவை மேலும் மேலும் உணர்விழந்துவிடும். உணர்விழந்து இருக்கும்போது உனது உடலை உன்னால் உணர முடியாது. உனது உணர்ச்சிகளை உன்னால் உணர முடியாது. அப்போது நீ உனது தலையில் மட்டும்தான் இருப்பாய்.

தண்ணீர் குடிக்கும்போது அதன் குளிர்ச்சியை உணரு. கண்களை மூடி, மெதுவாக உணர்ந்து குடி. குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்து அந்த குளிர்ச்சியாகவே நீ மாறு. ஏனெனில் தண்ணீரில் இருந்த அந்த குளிர்ச்சி இப்போது உனது உடலுக்கு மாற்றப்பட்டு விட்டது. அது உனது உடலின் பாகமாகி விட்டது. தண்ணீரில் இருந்த குளிர்ச்சி இப்போது உன் வாயில், உனது நாக்கில் உள்ளது. அது உனது உடல் முழுவதும் நிகழ அனுமதி. அதன் குணம் உடல் பூராவும் பரவ அனுமதித்தால் உனது உடலில் குளிர்ச்சியை நீ உணரலாம். இந்த முறையில் உனது புலனுணர்வு வளரும், நீ மேலும் மேலும் உயிர்துடிப்போடும், நிறைவாகவும் மாறுவாய்.

தியான யுக்தி 3

மனதை உபயோகிக்காமல் பார்த்தல்

நீ பொருட்களை எப்படி பார்க்கிறாய் என்பது உன்னைப் பொருத்தது, பொருட்களை பொருத்ததல்ல. இடைச்செருகல் செய்யும் மனதை விட்டு விட்டு நேரடியாக தனித்து பொருட்களை பார்க்கும் ஒரு நிலைக்கு வரும் வரை மனம் உன்னை மொழிபெயர்த்துக் கொண்டேதான் இருக்கும். அது நிறத்தை மாற்றும், அது பல விஷயங்களை கலந்து இடையூறு செய்யும். அவை தூய்மையானதாக இராது.

அதனால் உண்மையை அடைய ஒரே வழிதான் உள்ளது. – எப்படி நீ உனது பார்வையாக மாறுவது, மனதின் துணையை எப்படி கைவிடுவது என கற்றுக் கொள்வதுதான். இந்த மனதின் கொந்தளிப்புதான் பிரச்னை. ஏனெனில் மனத்தினால் கனவுகளை மட்டும்தான் உருவாக்க முடியும். ஆனால் மனதால் மிக அழகான கனவுகளை உருவாக்க முடியும். அதனால் நீ மிகவும் கிளர்ச்சியுறுகிறாய். இந்த கிளர்ச்சியினால் அந்த கனவு உண்மை போல தோன்றுகிறது. நீ மிகவும் அதீத கிளர்ச்சியுறும்போது போதையடைந்து விடுகிறாய். நீ உணர்வோடு இல்லை. அப்போது நீ பார்ப்பது எதுவும் நீ பார்ப்பதல்ல. மேலும் எத்தனை மனம் உண்டோ அத்தனை உலகம் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு மனமும் அதன் சொந்த உலகில் வாழ்கிறது. நீ அடுத்தவரின் முட்டாள்தனத்தை எண்ணி சிரிக்கலாம், ஆனால் நீ உன்னுடைய முட்டாள்தனத்தை பார்த்தே சிரிக்காத வரை நீ இயல்பானவனாகவோ, உண்மையானவனாகவோ, தாவோவின் வழி செல்பவனாகவோ ஆக முடியாது. என்ன செய்வது ?

மனதை கொண்டு வராமல் இருந்து பார்க்க முதலில் சிறிய விஷயங்களில் முயற்சி செய். ஒரு மலரை பார்க்கும் போது வெறுமனே பார். அழகு என்றோ அசிங்கம் என்றோ சொல்லாதே. வார்த்தைகளை கொண்டு வராதே. சொற்படுத்தாதே. வெறுமனே பார். மனம் மிகவும் சங்கடப்படும், அசௌகரியப்படும். ஏதாவது சொல்ல முற்படும். ‘அமைதியாக இரு, நான் பார்க்கிறேன், என்னை பார்க்க விடு’ என்று சொல்லி விடு.

முதலில் இது கடினமானதாக இருக்கும். ஆனால் உனக்கு அதிக ஈடுபாடு இல்லாத விஷயங்களில் இருந்து இதை ஆரம்பி. வார்த்தைகள் எதையும் உள்ளே கொண்டு வராமல் உனது மனைவியை பார்ப்பது கடினம். நீ உணர்வுரீதியாக இணைந்திருக்கிறாய், ஈடுபாடு கொண்டிருக்கிறாய். அன்போ, கோபமோ ஆனால் ஈடுபட்டிருக்கிறாய். நடுநிலையான விஷயங்களில் இருந்து ஆரம்பி, பின்தான் உணர்வுரீதியாக கட்டுண்டுள்ள சூழ்நிலைகளை கையாள முடியும்.

எப்போது என்னால் விஷயங்களை மனமின்றி பார்க்கமுடியும் என்று உனக்கு தோன்றுகிறதோ அதன்பின் சொந்த பிடிப்புக்கள் மீது முயற்ச்சித்துப் பார். மெது மெதுவாக அதில் திறமை வந்துவிடும். நீ மனதோடு அதிக நாட்கள் இருந்துள்ளதால் மனமின்றி ஒரு கணம் கூட இருக்க முடியாது என்றே உனக்குத் தோன்றும். மனமின்றி இருக்க முடியும் என்பதை உன்னால் நம்ப முடியாது. ஆனால் முயற்சித்துப் பார். எந்த அளவு மனதை தள்ளி வைக்கிறாயோ அந்த அளவு வெளிச்சம் உனக்குத் தெரியும். ஏனெனில் அப்போது அங்கே கனவுகள் இல்லை, எனவே கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது, ஆகாயம் உனக்கு தெரிகிறது, சூரியன் எழுகிறது, அது வந்து உன் இதயத்தை தொடுகிறது, ஒளி உன்னை வந்தடைகிறது. உனக்குள் கனவுகள் குறைய குறைய நீ சத்யத்தால் மேலும் மேலும் நிரப்பப்படுவாய்.

யார் பிராமணன் - ஓஷோவின் கதை - 28

நான் ஜபல்பூர் எனப்படும் ஊரில் இருபது வருடங்கள் தங்கி இருந்தேன். அதன் பழைய பெயர் ஜபலாபுர். அது மிகப் பெரிய ஞானிகளில் ஒருவரும், உபநிஷதத்தை எழுதியவருள் ஒருவருமான சத்யகம் ஜபால் என்ற ஞானியின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த கதை சத்யகம் ஜபால் தெடர்புடையது.

சத்யகம் குழந்தையாய் இருக்கும் போதே மிகவும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் அனுபவிக்காதவரை அவர் எதையும் நம்புவதில்லை. அவர் இளைஞனாக ஆன போது – அவருக்கு பன்னிரெண்டு வயதானபோது – அவர் தனது தாயிடம், “இந்த நாட்டின் இளவரசன் காட்டில் இருக்கும் குருகுலம் செல்கிறான். அவனுக்கும் எனது வயதுதான். நானும் போக விரும்புகிறேன், நானும் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இதுதான் நேரம்.” என்றார்.

தாய், “அது மிகவும் கஷ்டம், சத்யகம். ஆனால் எனக்குத் தெரியும், நீ பிறவியிலேயே தேடுதல் ஆர்வமுடையவன். நீ உன்னை ஒருநாள் ஒரு குருவிடம் அனுப்பச் சொல்லிக் கேட்பாய் என்று நான் பயந்து கொண்டேதான் இருந்தேன். நான் ஒரு ஏழைபெண். ஆனால் அது பிரச்னையல்ல. பிரச்னை என்னவென்றால் நான் இளமையாக இருந்தபோது பல வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் ஏழை, ஆனால் அழகானவளாக இருந்தேன். அதனால் உனது தந்தை யாரென்று தெரியாது. நான் உன்னை ஒரு குருவிடம் அனுப்பினால் அவர்கள் உன் தந்தை யாரென்று கேட்பார்கள். உன் தந்தை யாரென்று தெரியாது என்று சொன்னால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடும்.

ஆனால் முயற்சி செய்வதில் எதுவும் தப்பில்லை. நீ போய் நான் உன்னிடம் இப்போது சொன்னது போலவே உண்மையை அப்படியே சொல். நான் ஏழையாக இருந்ததால் பலர் என்னுடைய உடலை உபயோகித்திருக்கின்றனர். என்னுடைய தந்தை யாரென்று எனக்குத் தெரியாது என்பதை சொல். உன்னுடைய பெயர் சத்யகம் என்றும் உன் தாய் பெயர் ஜபாலா என்றும் சொல். அப்போது அவர்கள் உன்னை சத்யகம் ஜபால் என்று அழைக்கட்டும். உண்மையை பொறுத்தவரை உனது தந்தை யாரென்பது ஒரு பிரச்னையல்ல.”

சத்யகம் காட்டில் உள்ள ஒரு வயதான குருவிடம் சென்றான். நிச்சயமாக முதல் கேள்வி, உன்னுடைய பெயர் என்ன? உன்னுடைய தந்தை பெயர் என்ன? என்று கேட்பார்கள் என்று தெரிந்தே போனான்.

அவர்கள் கேட்டவுடன் அவன் தன் தாய் சொன்னதை அப்படியே சொன்னான்.
அங்கு பல இளவரசர்கள், பணக்காரர்களின் புதல்வர்கள் ஆகியோர் சீடர்களாக இருந்தனர். அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் அந்த வயதான குரு, “நான் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். உனது தந்தை யாரென்பது பொருட்டல்ல. நீ ஆணித்தரமாகவும், நேர்மையாகவும், பயமில்லாமலும் இருப்பது தான் இங்கு முக்கியமான விஷயம். எந்தவிதமான தர்மசங்கடமும் இல்லாமல் உண்மையை சொல்லும் நேர்மை உன்னிடம் இருப்பதுதான் சிறப்பு. உன் தாய் உனக்கு சரியான பெயர்தான் கொடுத்திருக்கிறாள் சத்யகம் சத்யகம் என்றால் உண்மையை அடைவது மட்டுமே தேடுதலாக கொண்டவன் என்று பொருள். உனக்கு மிக அழகான தாய் கிடைத்திருக்கிறாள், நீ இன்றிலிருந்து சத்யகம் ஜபால் என்று அழைக்கப்படுவாய்.

இங்கு பிராமணர்கள் மட்டுமே சீடர்களாக ஏற்றுக்கொள்ளப் படுவது தான் சம்பிரதாயம். நான் உன்னை ஒரு பிராமணன் என்று பிரகடனப்படுத்துகிறேன். ஏனெனில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்த உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம் இருக்கும்.” என்றார்.

அவை மிக அழகான நாட்கள். அந்த வயதான குருவின் பெயர் உதாலக்.
சத்யகம் அவருடைய மிக நெருங்கிய அன்பான சீடனாக ஆனான். அவருக்கு தகுதி இருந்தது. அவர் மிகவும் தூய்மையானவராகவும் மிகவும் நிர்மலமானவராகவும் இருந்தார்.

ஆனால் உதாலக்கு சில வரையறைகள் இருந்தன. அவர் கற்றுக் கொடுப்பதில் மிகச் சிறந்தவராக இருந்த போதிலும் அவர் ஞானமடையவில்லை. அதனால் அவர் சத்யகமுக்கு எல்லா சமயநூல்களையும் கற்றுக் கொடுத்தார், அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், ஆனால் அவர் எல்லோரையும் நம்பவைப்பது போல சத்யகம்மை நம்பவைக்கவில்லை. சத்யகம் கேள்வி கேட்பார் என்பதற்காக அல்ல. அவருடைய நிர்மலமான தன்மை அந்த அளவு உண்மையானதாக இருந்தது. அவர், “நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாமே நான் நூல்களில் இருந்து படித்ததுதான். அவை எனக்கு சொந்தமானவை அல்ல. நான் அவற்றை அனுபவப்படவில்லை. அதை நான் வாழ்ந்து பார்த்ததில்லை. இன்னும் உள்ளே காட்டிற்க்குள் வாழும் ஒரு மனிதரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் அன்பானவர், கருணையானவர், உண்மையே வடிவானவர். நீ அவரிடம் போ.” என்று கூறி சத்யகம்மை அவரிடம் அனுப்பி வைத்தார்.

உதாலக் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாரே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. உதாலக் மிகப் பிரபலமானவர், சிறந்த பண்டிதர்.......
சத்யகம் அந்த இன்னொருவரிடம் சென்றார். அவர் சத்யகம்முக்கு பல புதிய சமய நூல்களையும், எல்லா வேதங்களையும், இந்த உலகத்தின் பழைமையான நூல்களையும் கற்பித்தார். பல வருடங்களுக்கு பிறகு, “இப்போது உனக்கு அனைத்தும் தெரியும், இனி கற்பதற்கு எதுவும் இல்லை. நீ திரும்பி வீட்டுக்குப் போகலாம்.” என்றார்.

முதலில் சத்யகம் உதாலக்கை காண சென்றார். உதாலக் ஜன்னல் வழியே காட்டிக்குள்ளிலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையின் வழியே சத்யகம் வருவதை பார்த்தார். அவர் அதிர்ச்சியடைந்தார். சத்யகம்மின் நிர்மலமான தன்மை காணாமல் போயிருந்தது. அதற்கு பதிலாக பெருமை குடியிருந்தது – எல்லோருக்கும் ஆவது போலவே, அவருக்கு இப்போது இந்த உலகத்திலுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் தெரியும் என்ற நினைப்பே ஆணவத்தை கொடுத்திருந்தது.

அவர் உள்ளே வந்தார். அவர் உதாலக்கின் பாதங்களை தொட குனியும்போது உதாலக், “எனது பாதங்களில் விழாதே. முதலில் நீ உன்னுடைய நிர்மலமான தன்மையை எங்கே தொலைத்தாய் என எனக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை தவறான மனிதரிடம் அனுப்பி விட்டேன் போலத் தெரிகிறது” என்றார்.

சத்யகம், “தவறான மனிதரிடமா, அவர் அறிய வேண்டிய அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார் .“ என்று கூறினார்.

உதாலக், “நீ எனது பாதங்களில் விழுவதற்கு முன் நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன் – நீ எதையாவது அனுபவப்பட்டாயா அல்லது எல்லாமே வெறும் தகவல்கள் மட்டும்தானா? ஏதாவது நிலைமாற்றம் நிகழ்ந்ததா? உனக்கு தெரிந்திருப்பவை அனைத்தும் உன்னுடையவை என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.

சத்யகம், “அப்படி எதையும் கூற முடியாது. நான் அறிந்திருப்பவை அனைத்தும் நூல்களில் உள்ளவை மட்டுமே. நான் எதையும் அனுபவப்படவில்லை” என்று கூறினார்.

அப்போது உதாலக், “நீ போன பிறகு வேறொரு மனிதரைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். நீ அவரிடம் போ. உனக்கு அனுபவப்படாத வரை திரும்பி வராதே. நான் உன்னை அனுப்பும் போது இருந்ததை விட மதிப்பு குறைந்தவனாக திரும்பி வந்திருக்கிறாய். மதிப்பிட முடியாத ஒன்றை நீ இழந்து விட்டாய். அறிவு என்று நீ அழைப்பது கடன் வாங்கப் பட்டதாக இருந்தால் அது உனது அறியாமையை மூடி மறைப்பதாக மட்டுமே இருக்கும். அது உன்னை அறிந்தவனாக ஆக்காது. நான் சொல்லும் இந்த மனிதரிடம் செல், அவரிடம், உண்மையை பற்றி, கடவுளைப் பற்றி, அன்பைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் பெறுவதற்காக வரவில்லை என்று கூறு. நீ கடவுளை, அன்பை, உண்மையை தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறாய் என்று சொல். உங்களால் இதை செய்ய முடியுமென்றால் நான் இங்கே இருக்கிறேன். இல்லையென்றால் நான் நேரத்தை வீணாக்காமல் வேறு ஒரு குருவை தேடிப் போகிறேன் என்று சொல்” என்று கூறினார்.

சத்யகம் சென்று அப்படியே கூறினார்.

அந்த குரு ஒரு மரத்தடியில் தனது சில சீடர்களுடன் உட்கார்ந்திருந்தார். இந்த கோரிக்கையை கேட்டவுடன் அவர், “அது சாத்தியமானதுதான், ஆனால் நீ வித்தியாசமான ஒன்றை கேட்கிறாய். இங்கே பல சீடர்கள் உள்ளனர். அவர்கள் இன்னும் அதிக விவரமான தகவல்கள் கேட்கின்றனர். இதைப் பற்றி, அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் உனக்கு தகவல்கள் சேகரிக்க விருப்பம் இல்லையென்றால், நீ உண்மையை தெரிந்து கொள்வதற்காக எதையும் செய்ய தயார் என்றால் சத்தியத்திற்கான உனது தேடுதல் உன்னையே நீ அர்ப்பணித்துக்கொள்ள தயாராக இருக்குமானால் நான் உனக்காக ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்”. என்றார்.

சத்யகம், “நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மையறியாமல் திரும்பி செல்ல என்னால் முடியாது. எனக்கு சதயகம் என்று பெயரிட்ட எனது தாயிடமோ, அல்லது நான் உண்மையை கூறிய ஒரே காரணத்தினாலேயே நான் பிராமணனா இல்லையா என்று கவலைப் படாமல் என்னை ஏற்றுக் கொண்ட எனது குருவிடமோ திரும்பி போக முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.” என்று கேட்டான்.

குரு, “இங்கே நீ பார்க்கும் இந்த பசுக்களை கூட்டிக் கொண்டு உள்ளே காட்டிற்க்குள் சென்று விடு. எந்த மனிதருடனும் தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் எவ்வளவு அடர்ந்த காட்டிற்க்குள் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் உள்ளே சென்று விடு. நீ மொழியை, வார்த்தைகளை மறக்கவேண்டும் என்பதுதான் காரணம். பசுக்களுடன் வாழ், அவற்றை பாதுகாத்து வா, உனது குழலுடன் விளையாடு, நடனமாடு – ஆனால் வார்த்தைகளை மறந்துவிடு. இந்த பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆனவுடன் திரும்பி வா.” என்றார்.

இங்கே இருந்த மற்ற சீடர்களுக்கு என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை – ஏனெனில் அங்கு இருந்தது ஒரு டஜன் அல்லது இரண்டு டஜன் பசுக்கள்தான். அவை எப்போது ஆயிரம் பசுக்கள் ஆவது ?

ஆனால் சத்யகம் பசுக்களை கூட்டிக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள், மனித சஞ்சாரமற்ற இடத்துக்கு, மனித வாடையற்ற இடத்துக்கு சென்றார். முதல் சில தினங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பசுக்கள் மட்டுமே அவரது தோழமையாக இருந்தன. அவை மிக அமைதியான மக்கள். அவன் தனது புல்லாங்குழலை வாசிப்பான், காட்டில் தனியாக நடனமாடுவான், மரத்தடியில் படுத்து ஓய்வெடுப்பான்.
முதல் சில வருடங்கள் தொடர்ந்து பசுக்களை கணக்கெடுத்து வந்தான். பின் மெது மெதுவாக அதை விட்டு விட்டான். ஏனெனில் அவை ஆயிரமாக மாறுவது இயலாததாக தோன்றியது. மேலும் எப்படி கணக்கெடுப்பது என்பதையும் அவன் மறந்துவிட்டான். மொழி மறைந்துவிட்டது.

வார்த்தைகள் மறைந்துவிட்டன. கணக்கு எடுக்க இயலவில்லை.

இந்த கதை மிகவும் அழகானது.

பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் அடைந்தவுடன் பசுக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. ஏனெனில் அவைகள் வீடு செல்ல விரும்பின. இவனுக்கு எப்படி எண்ணுவது என்பது மறந்து போய் விட்டது. இறுதியில் பசுக்கள், “நாம் இவனுக்கு சொல்லியாக வேண்டும். இல்லாவிடில் இந்த தனிமையான வனமே நமது கல்லறையாகிவிடும்.” என்று முடிவெடுத்தன.

அதனால் ஒருநாள் பசுக்கள் சத்யகம்மை பிடித்து நிறுத்தி, “இங்கே பார், சத்யகம், நாங்கள் இப்போது ஆயிரம் பசுக்களாகி விட்டோம். நாம் இப்போது வீடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றன.

சத்யகம், “உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இப்போது என்னிடம் இதை சொல்லியிராவிட்டால்........ நான் வீட்டை பற்றியும் திரும்பி போவது பற்றியும் மறந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் மிகவும் அழகானதாக..... பரவசமாக இருக்கிறது. இந்த மௌனத்தில் மலர்கள் பூச்சொரிகின்றன. நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். நான் யார் என்பதையும் நான் எதற்காக இங்கே வந்தேன் என்பதையும் நான் மறந்து விட்டேன். இங்கே எல்லாமும் முடிவடைந்துவிட்டது. புல்லாங்குழல் வாசிப்பது மட்டுமே போதும். மரத்தடியில் ஓய்வெடுப்பது மட்டுமே போதும், இந்த அழகான பசுக்கள் சுற்றிலும் அமைதியாக இருப்பதை பார்ப்பது மட்டுமே மிக அருமையானது. ஆனால் நீங்கள் வற்புறுத்தினால், நாம் திரும்பிப் போவோம்.” என்றான்.

அந்த குருவின் சீடர்கள் சத்யகம் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவதை பார்த்தனர். அவர்கள் குருவிடம், “அவன் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவான் என நாங்கள் நினைக்கவேயில்லை. அவன் வந்து விட்டான். நாங்கள் எண்ணி விட்டோம் அவை மிகச் சரியாக ஆயிரம் பசுக்கள் உள்ளன. அவன் வருகிறான்.” என்றனர்.

அவன் வந்து நின்றான்........பசுக் கூட்டத்தின் நடுவே நின்றான்.

குரு தனது சீடர்களிடம், “நீங்கள் தவறாக எண்ணியிருக்கிறீர்கள். அங்கே ஆயிரத்தோரு பசுக்கள் உள்ளன. நீங்கள் சத்யகம்மை எண்ண மறந்து விட்டீர்கள். அவன் உங்களது உலகத்தை விட்டு தாண்டி போய் விட்டான். அவன் நிர்மலமான தன்மையினுள், மௌனத்தினுள், அறிவுக்கெட்டாதனுள் நுழைந்து விட்டான். அவன் பசுக்கள் எப்படி நிற்கிறதோ அங்கேயே நிற்கிறான் பாருங்கள்.” என்றார்.

குரு, “சத்யகம், நீ வெளியே வரலாம். இப்போது நீ உன்னை இங்கே அனுப்பிய உனது குருவிடம் செல்லலாம். அவர் மிகவும் வயதானவர், அவர் உன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடும். உன் தாய் உனக்காக காத்துக் கொண்டிருப்பாள்.” என்றார்.

சத்யகம் தனது முதல் ஆசிரியரிடம் – சத்யகம் ஒரு தகவல் களஞ்சியமாக மட்டுமே மாறியதால் தனது வெகுளித்தனத்தை தொலைத்து, தனது நிலையிலிருந்து கீழிறங்கி ஒரு பிராமணனாக இல்லாமல் போய் விட்டார் எனக் கூறி தனது பாதத்தில் விழக் கூடாது என தடுத்த உதாலக்கிடம் - திரும்பி வந்தார். இவர் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த உதாலக் பின் வாசல் வழியாக ஓடிப் போய் விட்டார். ஏனெனில் இப்போது சத்யகம் தனது பாதங்களில் விழ அனுமதிக்க கூடாது. தான்தான் அவர் பாதங்களில் விழ வேண்டும். ஏனெனில் உதாலக் இப்போது வெறும் பண்டிட் மட்டுமே, ஆனால் சத்யகம் இப்போது விழிப்புணர்வு பெற்று அறிந்தவராகி விட்டார்.

உதாலக் வீட்டிலிருந்து தப்பிப் போய் விட்டார். “என்னால் அவரை சந்திக்க முடியாது. நான் வெட்கமடைகிறேன். உதாலக் இறந்து போய்விட்டார். அவர் உன்னை நினைத்துக் கொண்டே இறந்தார் என சத்யகம்மிடம் சொல்லி விடு. அவரை அவருடைய தாயிடம் போக சொல்” என தனது மனைவியிடம் சொல்ல சொல்லிவிட்டு போய் விட்டார். வெவ்வேறு விதமான மக்கள் இருக்கிறார்கள்.

சத்யகம் வீடு திரும்பினார்.

தாய்க்கு மிகவும் வயதாகி விட்டிருந்தது. ஆனால் அவள் காத்துக் கொண்டே...........இருந்தாள். “உண்மை எப்போதும் ஜெயிக்கும் என்பதை நீ நிரூபித்துவிட்டாய், சத்யகம். பிராமணன் என்பவன் பிறப்பது இல்லை, பிராமணன் என்பது அடையவேண்டிய ஒரு குணாதிசியம் என்பதை நீ நிரூபித்துவிட்டாய். ஒவ்வெருவரும் பிறப்பால் சூத்திரர்தான், ஏனெனில் ஒவ்வொருவரும் பிறப்பில் ஒன்றானவரே. ஒருவன் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதனாலும், ஒருமை படுத்திக் கொள்வதனாலும், மையம் மற்றும் ஞானத்தை அடைவதனாலும், தான் ஒரு பிராமணன் என்பதை நிரூபிக்கவேண்டும். பிராமண குடும்பத்தில் பிறப்பதால் மட்டுமே அவன் பிராமணன் ஆவதில்லை.” என்றாள்.

Source : BEYOND ENLIGHTENMENT, che - 25

Thursday, October 28, 2010

மலர் 3 இணைய இதழ் 3 11 அக்டோபர் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையம் தனது தனித்துவமான விதத்தில் பலவிதமான நபர்களின் பிரச்னைகளின் அடி ஆழத்தை கண்டாய்ந்து அவர்கள் அதிலிருந்து வெளி வர உதவி வருகிறது. நான் இதிலிருந்து வெளிவர வேண்டும், ஆனால் எப்படி என தெரியவில்லையே என்று முழுமையாக விரும்பும் நபர்கள் ஒருமுறை முயற்சி செய்யலாம். தேவை முழுமையான விருப்பம் மட்டுமே. அப்போதுதான் தன்னை வெளிப்படுத்தி கொள்ள அவர்களால் முடியும். இந்த ஓஷோ மையத்தை பொறுத்தவரை யாரும் மதிப்பீடு செய்யப்படுவதில்லை, அவரவர் சூழ்நிலை மற்றும் வளர்ப்பு மற்றும் பதிவுகள் மூலமே அனைத்தும் நடக்கிறது என்பதை அவரவர்களுக்கே புரிய வைப்பதே நோக்கம் என்பதால் தயக்கம் தேவையில்லை. அவரவர்களை அவரவர்களுக்கே ஓஷோவின் வழிகாட்டல் மற்றும் தியானங்களின் படி விழிப்புணர்வு கொள்ள வைப்பதையே நாம் தனிநபர் அகநலபகுத்தாய்வு என குறிப்பிடுகிறோம்.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். தங்கி தியானம் செய்யலாம்.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.
உங்களது வாழ்வை ஓர் அழகியல் அனுபவமாக்குங்கள். அப்படி அழகியல் அனுபவமாக மாற்றப் பெரிதாக ஒன்றும் தேவையில்லை. வெறும் அழகான உணர்வு நிலையே தேவை ஒரு நுண்ணுணர்வுள்ள ஆன்மா. அதிக உணர்வு கொள்ளுங்கள், அதிக உணர்ச்சியுடனிருங்கள். அப்போது நீங்கள் அதிக ஆன்ம உணர்வும் பெறுவீர்கள்.
2.
ஒருமையில் இருக்கும் துணிவை நுண்ணறிவு தருகிறது. மேலும் படைப்புத் தன்மையையும் நுண்ணறிவு தருகிறது. படைப்பதற்கு மிகப் பெரிய பசியும், மிப்பெரிய தவிப்பும் எழுகிறது. அதற்குப் பின்தான், அதன் தொடர்ச்சியாகத்தான், நீங்கள் மகிழ்ச்சியடைய முடியும், நீங்கள் பரமானந்தமடைய முடியும்.
3.
வாழ்வுக்கு மிகப்பெரிய ஒட்டுமொத்தமான ஆம் என்பதையே நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். நான் உங்களுக்குத் துறந்துவிடுதலைக் கற்பிக்கவில்லை, மாறாக மகிழ்ச்சியடைதலையே கற்பிக்கிறேன். மகிழ்ச்சி கொள், மகிழ்ச்சி கொள், மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன், மகிழ்ச்சி கொள், ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும்போது கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுவீர்கள்.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

எனது தலையங்கங்கள் அமைவதுதான். நான் யோசித்து எழுதுவது அல்ல. அதில் வரும் கருத்துக்களும், பார்வைகளும் ஓஷோவைப் பகிர்ந்து கொள்ளும்போது வெளிப்படுபவைதான். ஆகவே இதில் உங்கள் பங்கும், ஓஷோவின் பங்கும் நிறைய பெரும்பகுதியாக உள்ளன. எனது பகுதி நான் இதற்குப் பயன்படுகிறேன் என்பதே. தலையங்கம் சில ஒருமாதம், இரண்டு மாதம் முன்பே வந்துவிடும். எழுதிவிடுவேன். சில சமயம் கடைசி நாட்களில் வரும். ஏன் வராமலேயே போகும் ஒரு கட்டம் வரலாம். அப்போது தலையங்கம் இருக்காது.

சரி, நேற்று ஒரு தலையங்கம் ஒரு நண்பரின் பகிர்ந்து கொள்ளுதலில் பிறந்துவிட்டது. இதோ எழுதிவிடுகிறேன்.

நமது ஓஷோ அன்பர்களுக்கும், சந்நியாசிகளுக்கும், தியானம் செய்பவர்களுக்கும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்குமான விஷயம் இது.

முதலில் இது எப்படி வந்தது என்றால், இந்த ஒருநாள் முகாம், மூன்று நாள் முகாம் நீங்கள் ஏன் நடத்தக் கூடாது, ஏன் நடத்துவதில்லை, அதற்கான வசதியும் வாய்ப்பும் இருந்தும் ஏன் செய்வதில்லை என்பதில் ஆரம்பித்தது.

ஒரு நாள் மூன்று நாள் தியான முகாம்கள் ஓரளவு நடத்தப்பட்டு வருகின்றன. நானும் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை, ஏறத்தாழ பதிமூன்று வருடங்கள் நடத்தியும் வந்தவன்தான்.

இப்போது நான் அதைச் செய்வதில்லை. செய்யத் தயாரில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஆறு அல்லது எட்டு ஒருநாள் தியான முகாம்கள் திருப்பூரில் எனது இடத்தில் நமது ஓஷோ சந்நியாசி ஒருவரால் நடத்தப்பட்டது. அவருக்கு வேறு வேலைகள் வந்து விட்டபோது நின்று விட்டது. ஆகவே தயவுசெய்து நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் அதற்கு எதிரானவன் அல்ல. தேவையற்றது என்ற கருத்துக் கொண்டவன் அல்ல. ஆதரிக்காதவன் அல்ல.

ஆனால் அது மட்டும் போதாது, அதோடு நின்றுவிடக் கூடாது, புதியவர்களுக்கு அது தேவை, அது ஒரு அறிமுகம், ஒரு முதல் தரிசனம் என்று கூறுகிறேன். இதுவேதான் தினமும் ஒருமணி நேரம் டைனமிக்கோ, குண்டலினியோ செய்ய வருபவர்களுக்கும் கூறுகிறேன். அந்த ஒரு மணிநேர தியானம் இடைவிடாது ஒரு பயிற்சியாகச் செய்வதால் மட்டும் எதுவும் நிகழ்ந்துவிடாது. மறுபடியும் நான் சொல்லவேண்டும். நான் அதற்கு எதிரானவன் அல்ல. ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது என்பவன்.

எந்த அனுபவத்தையும் மனம் தனதாக்கிக் கொள்ளும், தனது அகங்காரத்தில் சேர்த்துக் கொள்ளும். உடல் பழகி விடும், மனம் தயாராகி விடும். மேலும் தியானத்தைத் தொடர்ந்து பயிற்சியாக செய்வதனால் மனம் புத்துணர்ச்சி பெறலாம், உடலின் நோய் தீரலாம். பொறுமையும், அமைதியும் அதிகமாகலாம். கோபம் குறையலாம், திறன் அதிகமாகலாம், உணர்வுக் கூர்மையும் புத்திக் கூர்மையும் மேலும் கூர்மையடையலாம். சங்கடங்கள், பதட்டங்கள் குறையலாம். தெளிவும் தைரியமும் பிறக்கலாம். சுருக்கமாக மனமாற்றமும், ஏன், குண மாற்றமும் எளிதாக நடக்கலாம்.

ஆனால் ஓஷோவின் கனவு, ஜோர்புத்தா - ஒரு நிலைமாற்றம். ஓஷோவின் கனவு இயல்பான வாழ்விலிருந்து வலுக்கட்டாயமாக எதையும் மாற்றாமல் விழிப்புணர்வின் மூலம் புத்தாவாதல். ஜோர்பாவாக இரு, இயல்போடு இரு. ஆனால் உனது கவனம் புத்தாவினுடையதாக இருக்கட்டும். வேர் விடுவது ஜோர்பா வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை. கிளை விட்டு மலராய் பூப்பது புத்தத் தன்மை. இவை ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருப்பவர் ஓஷோ.

ஆகவே உங்களது தியானத்தை இந்த உலகத்தோடு, இந்த உடலோடு, உங்கள் ஆசைகள், உங்கள் நோக்கங்கள், உங்கள் எதிர்பார்ப்புகளோடு பொருத்தி விடாதீர்கள். அவை நிறைவேற பயன்படுத்திக் கொள்வதே நோக்கமாக்கிக் கொண்டு விடாதீர்கள். ஏனெனில் அப்போது நீங்கள் தியானம் செய்வதுகூட உங்கள் பேராசையாக, உங்கள் இவ்வுலக குறிக்கோளுக்கான முயற்சியாக ஆகிப் போகிறது. அப்போது நீங்கள் இன்னும் இந்த உலக வாழ்க்கை ஒரு கனவு, உங்கள் மனதின் பிரதிபலிப்பு என்பதை மறந்தவர்களாய் ஆகிவிடுகிறீர்கள். ஓஷோவின் மலர்வதற்காக வேர்விடும் மரத்தைப் போன்ற ஜோர்புத்தாவை மறந்துவிடுகிறோம். இன்னும் உள்முகமாய் திரும்பாமலேதான் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் புறவாழ்க்கையின் மேலேயே நமது கண்கள் பதிந்துள்ளன.

இப்படித்தான் எல்லா சாமியார்களின் எல்லா ஆசிரமங்களும் உள்ளன. இதுதான் அடிப்படை வேறுபாடு. உனது இப்போது வாழும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள தியானத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள் எல்லா இடத்திலும்.

ஆனால் ஓஷோ தியானத்திற்காக உனது இப்போது வாழும் வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று சொல்கிறார். தியானத்தை மேம்படுத்திக்கொள்ளும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறார் ஓஷோ. தியானத்தின் மூலமாக சக்தியை, பலனைத் திரும்ப தியானத்தில் இன்னும் ஆழமாகப் போகவே உபயோகப்படுத்தச் சொல்கிறார் ஓஷோ. வாழ்வில் உன்னிடம் பணம் இருக்கிறதா, படிப்பு இருக்கிறதா, கலைத்திறன் இருக்கிறதா, படைப்பாற்றல் இருக்கிறதா, எல்லாவற்றையும் தியானத்தில் குதிக்க, தியானத்தில் மூழ்கப் பயன்படுத்து என்பவர் ஓஷோ. நல்ல மனைவி என்றால் அவளுடன் சேர்ந்து தியானி. மோசமான மனைவி என்றால் கிடைக்கும் தனிமையை தியானிக்கப் பயன்படுத்து. புகைப்பதை விடமுடியவில்லையா, அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்காதே, அதை தியானமாக மாற்றி அதன்மூலமும் தியானத்திற்கு வழி சொல்கிறேன் என்பவர் ஓஷோ. நல்ல குணமோ, கெட்ட குணமோ, பணக்காரனோ ஏழையோ, உழைப்பாளியோ சோம்பேறியோ எந்தவித வாழ்க்கை உனக்கு அமைந்திருந்தாலும், நீ வாழ்ந்தாலும் நீ செய்ய வேண்டியது ஒன்றுதான்.

அது, இதைப் பெரிதுபடுத்துவதை நிறுத்திவிட்டு, இதிலுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதை விட்டுவிட்டு, இதில் போட்டிபோடாமல், இதில் வெற்றியைத் தேடாமல் உள்நோக்கித் திரும்பு. உனது வாழ்வு எதுவாய் இருந்தாலும் அதிலுள்ள ஆதரவுக் கணங்களை, மகிழ்ச்சிக் கணங்களை, அது ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளை, அதனால் உனக்கு தெரியவந்துள்ள உண்மைகளைப் பயன்படுத்தி தியானத்தில் குதி.

உடல்நிலை சரியில்லையா, அதுவும் நல்லதுதான். எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது, இதைவிட அருமையான எந்தப் பரிசை பிரபஞ்ச இருப்பு உனக்கு கொடுக்கமுடியும். சாவு தெரிந்துவிட்டது, இனி வீணடிக்க நேரமில்லை, பயமில்லை, வறட்டு கௌரவமும், போலித்தனமும் தேவையில்லை. வாழ்ந்து பார்த்துவிடலாம் முழுமையாக என்கிறார் ஓஷோ. அது போல எதையும் தியானத்திற்குப் பயன்படுத்தச் சொன்னார் ஓஷோ. மாறாக மற்றவர்கள் தியானத்தை எதற்கும் பயன்படுத்தச் சொல்லித் தருகிறார்கள். அதனால் என்ன பயன். அலையில் ஆடும் படகை அசையாமல் நிறுத்தும் முயற்சி இது.

மேலும் மாதத்திற்கு ஒருநாள், ஒருநாளில் ஒருமணி நேரம் தியானம் செய்வது எதற்கு. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அனுபவத்தைச் சுமந்துகொண்டு தினசரி வாழ்க்கையில் அதைத் தேட வேண்டும் என்பதுதான் சரியான வழி. அதை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, மறந்துவிட்டு, சராசரி வாழ்க்கைக்கு வந்துவிட்டால் அது பயனளிக்காது. கண்டிப்பாக நிலைமாற்றமோ, ஜோர்புத்தாவோ நடக்காது. மனமாற்றமும் குணமாற்றமும் பற்றி நான் பேசவில்லை. ஒருமணி நேரம் தியானம் புரிந்துவிட்டு 23 மணிநேரம் அதற்கு எதிரிடையாக செயல்பட்டால் அதில் என்னபயன், அது பயித்தியக்காரத்தனம், வெறும் அகங்காரத் தீனிதான், என்கிறார் ஓஷோ.

ஆகவே ஒருநாளில் ஒருமணிநேரம், ஒரு மாதத்தில் ஒருநாள் ஆழமான அனுபவம் பெற்று, அதை மீதமுள்ள நேரம் முழுவதுமான வாழ்வில் புகுத்துங்கள். அதுதான் என் விருப்பம்.

வாழ்வில் வசதியும், வாய்ப்பும் எப்படிக் கிடைக்கிறதோ அதை தியானத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதை எப்படி தியானத்திற்கு பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள். தோல்வியில் கிடைக்கும் அமைதியும், தனிமையும் அருமையான வாய்ப்புத்தானே. அவமானத்தில் ஏற்படும் அகங்காரத்தின் இறப்பு மனதைக் கடக்கும் ஒரு சந்தர்ப்பம் தானே. நோய்வாய்படுவது உடலின் இறப்பை உணர்த்தும் உபயோகமுள்ளதுதானே.

ஓஷோ சமுதாய வாழ்வில் எதையும் சாதிக்கச் சொல்லவில்லை. பாதுகாப்பையும் உறவையும் பலப்படுத்திக் கொள்ள சொல்லவில்லை. காமத்தையும், கோபத்தையும், பேராசையும், அகங்காரத்தையும் நியாயப்படுத்திக்கொள்ள சொல்லவில்லை. அறிவாய் அவரை பயன்படுத்தச் சொல்லவில்லை. நல்லவனாய், வல்லவனாய் இரு என்றோ, எதற்கும் எதிரியாய், புரட்சியாளனாய் இரு என்றோ ஓஷோ சொல்லவில்லை. கெட்ட குணங்களை விட வேண்டாம் என்றோ, நல்ல குணங்கள் கூடாது என்றோ ஓஷோ சொல்லவில்லை. ஓஷோ சொல்வதெல்லாம் எனக்கு இந்த கனவுலக வாழ்வில் அக்கறை கிடையாது நீயும் அதைப் பொருட்படுத்தாதே. உண்மை உலகம் தியானத்திற்குப் பின்தான் தெரியும். ஆகவே தியானம் செய். அதற்கு இந்த உலகத்தை, கனவுலகத்தை பயன்படுத்த முடிந்த அளவு பயன்படுத்திக் கொள். பயணம் இனிதாக இருக்கும். சண்டையிடும் சக்தியும் மிச்சமாகும். அவ்வளவுதான். இருப்பது கனவுலகில் எனும்போது இதுவே சிறந்த உபாயம். அவ்வளவுதான்.

ஆகவே நம்பர்களே விழிப்புணர்வோடு இயல்பாயிரு அதுதான் ஜோர்புத்தா ஜோர்பா எனும் புத்தர். அதற்கு அப்படி முழு வாழ்வையும் முழுநேரத்தையும் விழிப்புணர்வோடிருக்க பணயம் வைக்கும் தைரியத்திற்கு, அந்த தைரியத்தைப் பெறுவதற்கு, அந்த துணிச்சலை, உள்முகமாய் திருப்புதலே வாழ்வு என்று முடிவெடுப்பதற்கு ஒரு ஆரம்பமாக, ஒரு உதவியாக, ஒரு தரிசனமாக மட்டுமே தியானப் பயிற்சிகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அவை சமுதாய வாழ்விற்கு உதவும்பொருட்டு ஏற்படுத்தப்பட்டவை அல்ல. உடல் உபாதைகளைக் குறைத்துக் கொள்வதற்கான உபாயங்கள் அல்ல. அவை உண்மையின் தரிசனங்கள். எவரெஸ்ட் சிகரத்தை தரிசிப்பது வேறு. அங்கு ஏறி அதன் உச்சியை அடைவது வேறு. ஆகவே முழு வாழ்க்கையையும் தியானத்தை நோக்கியதாக, தியானத்திற்கு உதவுவதாக, அமைத்துக் கொள்ள முடிவு எடுங்கள்.

எல்லாவற்றையும் தியானமாக மாற்றும் மந்திரக்கோல் விழிப்புணர்வை விட்டுவிடாதிருங்கள். பிறகு இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் என்கிறார் ஓஷோ. அதேபோல பலரும் என்னிடம் கேட்கின்றனர், ஏன் நீங்கள் 5 பேர் மட்டும்தான் ஒரே நேரத்தில் தியானம் செய்ய இருக்கவேண்டும், அதிகம்பேர் வேண்டாம் என்கிறீர்கள் என்று.

கூட்டத்தில் நாம் ஏற்கனவே சிக்குண்டு கிடக்கிறோம். கூட்ட மனப்பான்மை ஏற்கனவே நம்மை ஆட்டிப் படைக்கிறது. மேலும் அகங்காரம் கூட்டத்தில் வெளியே முண்டியடித்து வருவதற்குத் துடிக்கும். ஆகவே கூட்டத்தைத் தவிர்த்தால் கூட்டமனப்பான்மை இல்லாமல், அகங்காரத்தின் வெளிப்பாடு குறைவாயிருக்கும்படியாக நாம் இருக்கமுடியும். அதோடு கூட்டத்தில் குளிர்காயும் உணர்வைத் தவிர்ப்பது தியானத்திற்கு மிகவும் அவசியம். தியானம் தனிமனிதனுக்கானது, தனக்குள் செல்லும் விஷயம். இதில் கூட்டத்தின் பங்கு ஒன்றுமேயில்லை. திருவிழாவும், கொண்டாட்டமும் தனிமையிலேயே உள்ளிருந்து பொங்கி எழுவதே சிறப்பு. வெளித்திருவிழாவும், கொண்டாட்டமும் நமது விழிப்புணர்வை குறைத்து, உணர்வற்ற மனம் வெளிவரவே உதவும்.

நான் இதற்கு எதிரானவன் அல்ல. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். அதிக நபர்கள் கொண்ட தியானமுகாம்கள் நடத்துவதை எதிர்ப்பவன் அல்ல நான். அதுவும்கூட இன்றைய மனிதனின் ஆரம்பக் கட்டத்திற்கு தேவைப்படலாம், உதவலாம். உதவி புரிகிறது. ஆனால் திரும்பவும் அறிமுகத்திற்கு மட்டுமே அது. ஆழமாகச் செல்ல கூட்டம் நிச்சயமாக ஒரு தடை. எனவே நான் அதைச் செய்வதில்லை. அவ்வளவுதான்.

சேர்ந்து செய்கையில் சக்தி கிடைக்கிறது, உற்சாகம் பிறக்கிறது, மகிழ்ச்சி அடைகிறேன் என்பது உண்மைதான். ஆனால் அது ஆழமற்றது. வந்தது போலவே கூட்டம் கொண்டு போய்விடும். ஆகவே அது உன்னுடையதல்ல. அது தியானமல்ல, அது விழிப்புணர்வின் விளைவு அல்ல. அது நமது கூட்ட மனபான்மையின் விளைவுதான். அங்கு சக்தி அதிகம் இருப்பது உண்மைதான். அதைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறு ஏதும் இருப்பதாக நான் சொல்லவில்லை. முதல் அனுபவத்திற்கு அது உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது விழிப்புணர்வற்றது. ஆழமற்றது. அவ்வளவுதான். ஆகவே அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது விழிப்புணர்வு வளர்ச்சிக்கு உதவாது. விழிப்புணர்வு வளர்ச்சிக்கு இடையூறு கூட ஏற்படுத்தும். ஆகவே நான் ஒருமையில் தியானம் செய்ய ஒரு வாய்ப்பை உருவாக்க முயல்கிறேன். அவ்வளவுதான்.

நான் முடிந்தவரை ஒருவராகக் கூட தியானம் செய்யச் செல்கிறேன். 2 பேர் டைனமிக் செய்ய இருந்தால் தனிதனியாக்க் கூட செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். ஏனெனில் தியானம் மிகவும் அந்தரங்கமானது என்கிறார் ஓஷோ.

மேலும் கூட தியானம் செய்யும் முறை ஒரு ஆலோசனை, ஒரு வழிகாட்டுதல் தானே தவிர விதி அல்ல என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறுகிறேன். டைனமிக் என்றால் சில ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் ஓஷோ கொடுத்திருக்கிறார். ஆனால் எப்படிச் செய்வது என்பதையும், எப்படி அந்த ஆலோசனைகளை முழுமையாகப் பயன்படுத்துவது என்பதையும் எப்படி அந்த ஆலோசனைகளின் பயனை நாம் முழுமையாக அடையும்படி மாறுவது என்பதையும் நீதான் வகுத்துக் கொள்ளவேண்டும். உனது உடல் மற்றும் மனதிற்கு இசைந்தபடி, அவற்றோடு சண்டையிடாமல், எப்படிச் செய்வது – நமது மனதை தளர்த்தி அது கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, அடக்கி வைத்துள்ளவைகளை அனுமதிக்க உன் மனதை எப்படி அணுக வேண்டும் என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும். ஒரு விளையாட்டில் ஈடுபடும் மனநிலையை நீதான் தியானம் செய்யுமுன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னுடன் சண்டை போடாமல், நீ செய்வதை மகிழ்வோடு அனுபவிக்கும் மனநிலையை நீதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி உன்னை நீ தயார்செய்து கொண்டு ஓஷோவின் தியான முறைகளில் ஈடுபட்டால்தான் அவரது ஆலோசனைகளும் வழிமுறைகளும் உனக்கு ஆழம்வரை செல்லவும், நிலைமாற்ற அனுபவத்தை தொட்டுக் காட்டவும் உதவும்.

எனவே நான் தனிமனிதன் பலவிதங்களிலும் தனக்கே உரிய விதத்தில், வேகத்தில், தனது பின்புலத்தில், ஓஷோவைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புத் தர விரும்புகிறேன். அவ்வளவுதான்.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

அடிப்படைத்தேவை

தாய்........
குழந்தையைக் கொஞ்சினாள்,
அது குதூகலித்தது!
குழந்தையை அணைத்தாள்,
அது நிறைவாய் உணர்ந்தது!
குழந்தையைத் திட்டினாள்,
அது முறைத்தது!
குழந்தைக்கு மருந்து கொடுத்தாள்,
அது அடம் பிடித்தது!
குழந்தையை அடித்தாள்,
அது அழுதது!

அனைத்திலும்........
சக்தி இருந்தது,
உயிர் இருந்தது,
துடிப்பு இருந்தது,!

தாய் ஒருநாள்.........
அலட்சிய நாடகம் ஆடினாள்........
வேலையாள் உணவு கொடுத்தான்,
உடை கொடுத்தான்,

ஆனால்......
குழந்தை வாடியது,!
சக்தி இழந்தது,
துடிப்பை மறந்தது!!

ஏன்
அன்பு.....அன்பு......அன்பு
ஆம், மனித ஆன்மாவின்
அடிப்படைத் தேவையது!!!

ஓஷோ வீடியோ

1. Osho : Crimes Against Humanity, Nature, Environment and Ecology

2. Osho : The Compulsion to Reach Power and Prestige

3. Osho : Something which Never Dies


தியான யுக்திகள்

இடைவெளியை உணர்ந்து பார்

பிரபஞ்சம், தெய்வீகம், இடைவெளியில்தான் உள்ளது. இரண்டு வார்த்தைகளுக்கிடையில், இரண்டு எண்ணங்களுக்கிடையில், இரண்டு ஆசைகளுக்கிடையில், இரண்டு உணர்ச்சிகளுக்கிடையில், இரண்டு உணர்வுகளுக்கிடையில் உள்ள இடைவேளைகளில்தான் உள்ளது. தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையே, அல்லது விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே உள்ள இடைபட்டவேளையில் உள்ளது. உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள இடைவெளியில் உள்ளது. அன்பு வெறுப்பாக மாறும்போது இங்கே அன்பு போயிருக்கும், இன்னும் வெறுப்பு வந்திருக்காது, அது அன்பாக இருக்காது, ஆனால் அது இன்னும் வெறுப்பாகவில்லை அந்த இடைப்பட்ட நேரம் – கடந்தகாலம் எதிர்காலமாக மாறும்போது இடைவெளி – அது அன்பாக இல்லை, ஆனால் எதிர்காலம் இன்னும் வரவில்லை, அந்த இடைவெளி, மிகச் சிறிய இடைவெளி அதுதான் நிகழ்காலம் அதுதான் இப்போது. அது மிகச் சிறியது எனவே நீ அதை ஒரு காலத்தின் நேரமாக அழைக்க முடியாது. அது பார்க்க முடியாத அளவு சிறியது. அதை பிரிக்கமுடியாது. அந்த கணநேரம் காணமுடியாதது. அது ஒவ்வொரு கணமும் ஆயிரத்தோரு வழிகளில் வருகிறது.

உனது மனநிலை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகிறது, நீ அவற்றின் ஊடே செல்கிறாய். இருபத்தி நான்கு மணி நேரத்தில் நீ பலமுறை தெய்வீகத்தை கடந்து வருகிறாய், ஆனாலும் எப்படி நீ தொடர்ந்து தவற விடுகிறாய் என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் நாம் இடைவெளியை பார்ப்பதேயில்லை, இடைவெளியை பார்க்காமல் இருக்கும் தந்திரத்தை நாம் கற்று வைத்திருக்கிறோம். அது மிகச் சிறியது, ஆகவே அது வந்து போவதே நமக்கு தெரிவதில்லை. அதைப் பற்றிய உணர்வே நமக்கு இல்லை. ஏதாவது ஒரு விஷயம் நம்மிடமிருந்து போய், அது கடந்தகாலம் என ஆன பின் அல்லது எதிர்காலமாக இருக்கிறது இன்னும் வந்து சேரவில்லை எனும் போது நமக்கு அதைப்பற்றிய உணர்வு வருகிறது. ஆனால் அது நம்மிடம் இங்கிருக்கும்போது எப்படியோ அதை பார்க்காமல் நாம் சமாளித்துக் கொள்கிறோம்.

நீ கோபமாக இருக்கும்போது நீ அதைப் பார்ப்பதேயில்லை, பின் செய்த பிழைக்காக வருந்துகிறாய். பின் அதுவே திரும்பவும் நடக்கிறது, பின் திரும்பவும் நீ வருத்தப்படுகிறாய், மேலும் அது திரும்ப திரும்ப நடப்பதால் நீ சஞ்சலப்படுகிறாய். ஆனால் அது வரும்போது நீ குருடாக, செவிடாக, தன்னுணர்வற்றவனாக, விழிப்புணர்வின்றி திடீரென ஆகி விடுகிறாய். அந்த இடைநேரம் மிகச் சிறியதாக இருப்பதால் அதை தவற விடும் கவனம் உனக்கு இருப்பதில்லை. அது நுண்ணியது, அதை முழுமையான விழிப்புணர்வினால் மட்டுமே கைப்பற்ற முடியும். முழுமையாக இருக்கும் போது மட்டுமே உன்னால் அதை பார்க்க முடியும். உயிர்ப்பிலிருந்து ஒரு எண்ணம் வெளியேறும், வேறொரு எண்ணம் உயிர்ப்புக்குள் வரும், இந்த இரண்டு செயல்களுக்கு நடுவே ஒரு எண்ணமற்ற இடைநேரம் இருக்கும். இதுதான் தெய்வீகம்.
.............நான் உனக்கு திறவுகோலை முழுமையாக கொடுத்து விட்டேன். இப்போது நீ இந்த திறவுகோலினால் உனது இருப்பினுள் செயல்பட ஆரம்பிக்கலாம்.

தியான யுக்தி – 1

இடைநேரத்தை பார்.

தூங்கப் போகும் நேரம் விழிப்புமல்லாத ஆனால் இன்னும் தூக்கம் வராத அந்த இடைநேரத்தை பார்க்க முயற்சி செய். ஒரு கணம், மிக நுண்ணிய கணம் வரும். ஆனால் அது அதிக நேரம் இருக்காது. அது ஒரு தென்றல் போல, சின்ன காற்றுப் போல வரும். அது அங்கிருக்கும், பார்க்கும்முன் போய்விடும். ஆனால் உன்னால் அதை பிடிக்க முடிந்தால் நீ மிகவும் ஆச்சரியமடைவாய். வாழ்க்கையின் மிகச் சிறந்த பொக்கிஷத்தின் மீது மோதிக் கொண்டதை நீ உணர்வாய்.

............இந்த இடைநேரத்தை விழிப்புணர்வின்றி கடந்தால்கூட நீ பலனடைவாய். அதன் மணத்தின் ஏதோ சில பகுதி, ஏதோ கொஞ்சம், நீ அறியாமலேயே உனது இருப்பினுள் சென்று விட்டால்கூட அது அங்கே நெடுநேரமிருக்கும். ஆனால் அந்த கணத்தில் இருந்து எச்சரிக்கையாக இரு. மெது மெதுவாக அந்த சாமர்த்தியம் வந்துவிடும்.

Source: LET GO

தியான யுக்தி - 2

இயல்பாயிருக்கும் கலை

எப்போது – ஒவ்வொரு நாள் இரவும்

முதல் படி – உடலிலிருந்து ஆரம்பி
உடல்தான் ஆரம்பமாயிருக்க வேண்டும். படுக்கையில் படுத்துக் கொள்.....தூக்கம் வருவதற்கு முன், மூடிய கண்களுடன் காலிலிருந்து கவனிக்க தொடங்கு. அங்கிருந்து ஆரம்பி – உள்ளே கவனி, ஏதாவது பதட்டம் எங்காவது இருக்கிறதா, காலில், தொடையில், வயிற்றில் பதட்டம் இருக்கிறதா எங்காவது இடையூறு, ஏதாவது பதட்டம் உள்ளதா

இரண்டாவது படி – அந்த பதட்ட முடிச்சை தளர்வடையச் செய்
எங்காவது பதட்டமாக ஏதாவது இருப்பின், அதை தளர்வடையச் செய். அங்கே தளர்வை நீ உணரும்வரை அந்த இடத்திலிருந்து நீ நகராதே.

மூன்றாவது படி – கைகளிலிருந்து தொடங்கு
கைகள் முழுவதையும் உணரு. – ஏனெனில் உனது கைகள்தான் உனது மனம். அவை உனது மனதுடன் இணைந்துள்ளன. உனது வலது கரம் பதட்டமாக இருந்தால் உனது இடது மூளை பதட்டமாக இருக்கும். உனது இடது கரம் பதட்டமாக இருந்தால் உனது வலது மூளை பதட்டமாக இருக்கும். அதனால் முதலில் உனது கைகளை உணரு. அவை கிட்டத்தட்ட உனது மூளையின் கிளைகள் போன்றவை. பின் கடைசியாக மனதை சென்றடை.

நான்காவது படி – கடைசியாக மனம்
முழு உடலும் தளர்வாக இருக்கும்போது உனது மனம் கிட்டத்தட்ட 90 சதவீதம் தளர்வாக இருக்கும், ஏனெனில் உடல் என்பது மனதின் ஒரு நீட்டிப்புதான். இப்போது ஒரு 10 சதவீத பதட்டம் உனது மனதில் இருக்கும் – வெறுமனே அதை கவனி. அதை கவனிப்பதாலே அந்த மேகம் மறைந்துபோகும்.

இதற்கு சில நாட்கள் பிடிக்கும், இது ஒரு உபாயம். நீ மிகவும் தளர்வாக இருப்பது உனது குழந்தைபருவ அனுபவத்தை திரும்ப கொண்டுவரும். எப்படி ஓய்வாக இருப்பது என்ற ரகசியத்தை யாரும் உனக்கு கற்றுக் கொடுக்கமுடியாது, நீயேதான் அதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் ஒரு முறை தெரிந்துகொண்டு விட்டால் பின் பகலில்கூட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீ உன்னை தளர்த்திக் கொள்ளலாம். தளர்த்திக் கொள்வதில் ஆற்றல் படைத்தவனாக இருப்பது இந்த உலகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்த அனுபவங்களில் ஒன்றானதாகும்.

Source : SATYAM, SIVAM, SUNDERAM

கேள்வி – பதில்

முயற்சிப்பதா அல்லது இயல்பாயிருப்பதா

நான் வாழ்க்கையை வாழும்போது அதில் மிகவும் ஈடுபட்டு அதை அனுபவிப்பதால் பல சமயங்களில் தன்னுணர்வின்றி இருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன். தன்னுணர்வோடு இருப்பதற்கு எனக்கு தீவிரமான முயற்சி தேவைப்படுகிறது என்றாலும்கூட நான் ஒவ்வொரு கணமும் முயற்சி செய்து தன்னுணர்வை கொண்டுவர வேண்டுமா?

மக்கள் பல வழிகளில் பல விதமாக இருக்கின்றனர். இரண்டு பேர் ஒரேவிதமாக இருக்க உறுதியாக வாய்ப்பே இல்லை. உனக்கு பொருந்தாத ஏதோ ஒன்றை நீ செய்ய ஆரம்பிக்கும் போதுதான் பிரச்னையே.

ஒரு சிறிய நிபந்தனையை நினைவில் கொள்ள வேண்டும். எது உனக்கு நல்ல உணர்வை தருகிறதோ – தன்னிச்சையாக அமைதியை, ஆனந்தத்தை தானாகவே அளிக்கிறதோ – அதுவே உனது வழி.

ஆனால் யார் தன்னிச்சையாக இல்லையோ, யாருக்கு தளர்வடைவது மிகவும் கடினமான செயலோ, யாருக்கு எதுவும் செய்யாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பது சாத்தியமில்லாததோ, அவர்களுக்காகவும் நான் பேசியாக வேண்டும்.

அவர்களுக்குத்தான் நான், முழுமையான தீவிரத்தோடு வாழு, முழு முயற்சியோடு இரு என்று சொல்கிறேன். ஏனெனில் அதுதான் அவர்களுக்கு சுலபம். யாருக்கு எது சுலபமோ அதுதான் அவர்களை உண்மைக்கு அருகே கொண்டு வரும்.

உன்னைப் பொறுத்தவரை, அது சுலபமான விஷயமல்ல. நீ உனக்கு எதிராகவே பெருமுயற்சி செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வது நீ ஏற்கனவே உணர்ந்திருக்கும் அமைதி மற்றும் மௌனத்தின் முழு அழகையும் கெடுத்து விடும்.

நீ தன்னிச்சையாக இருப்பதன் மூலமாக, தளர்வாக இருப்பதன் மூலமாக, இயல்பாக இருப்பதன் மூலமாக அமைதியையும், மௌனத்தையும், சக்தியையும் உணர்ந்தால் அப்போது அதுதான் உனது வழி. ஒவ்வொருவரும் தங்களது இதயத்துக்கு நெருங்கியது எது என்பதை அவர்களேதான் கண்டுபிடிக்க வேண்டும். எது உனக்கு சரியானது என்பதை நீதான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.

ஆகவே எதனுடன் உனது இதயம் லேசானதாக உணர்ந்தாலும் அதன் அடிஆழம் வரை செல், அதனுடன் செல், அதுஎன்னவென்று உணர்ந்து கொள். பிறகு திரும்பி பார்க்காதே, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதே.

Source : BEYOND ENLIGHTMENT

தேடல் – ஓஷோவின் கதை - 27

ஒரு இளைஞன் உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும் எனும் தீராத ஆவலால் தனது குடும்பம், தனது சுற்றம் எல்லோரையும் துறந்து தனக்கு ஒரு குருவைத் தேடி புறப்பட்டான். அப்படி அவன் தனது நகரத்தை விட்டு புறப்பட்டுச் செல்லும்போது ஒரு அறுபது வயது குறிப்பிடத்தக்க ஒருவர் ஒரு மரத்தடியில் மிகவும் அமைதியாகவும், மிகவும் வசீகரத்தோடும் அமர்ந்திருப்பதை பார்த்தான். அவர் எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியவராகவும், மிகவும் காந்த சக்தியுடையவராகவும் இருந்தார். அவனையறியாமலேயே தற்செயலாக அவன் அவரிடம் சென்று தான் ஒரு குருவைத் தேடி புறப்பட்டு இருப்பதை கூறினான். “நீங்கள் ஒரு மூதறிஞர், உங்களுடைய ஞானத்தை என்னால் உணர முடிகிறது. உங்களைச் சுற்றியுள்ள உயிர்துடிப்பை என்னால் உணர முடிகிறது. நான் எங்கே போவது? இவர்தான் என்னுடைய குரு என்பதை நான் எப்படி கண்டு பிடிப்பது? அதன் அறிகுறி என்ன? இங்கே பலகுருமார்கள் இருக்கின்றனர், ஆனால் யார் எனக்கு முடிவற்றதற்கு வழி காட்டக் கூடியவர் என்பதை நான் எப்படி உணர்ந்து கொள்வது? என்று எனக்கு கூற முடியுமா?” என்று கேட்டான்.

அந்த வயதானவன், “அது மிகவும் சுலபம்” என்று கூறிவிட்டு, “அந்த குரு எப்படி இருப்பார், அவரைச் சுற்றி எந்த விதமான சூழ்நிலை இருக்கும், அவருக்கு எவ்வளவு வயதிருக்கும்,” எனறெல்லாம் கூறிவிட்டு ‘அவர் எந்த மரத்தடியில் அமர்ந்திருப்பார்’ என்பதைக் கூட கூறினார்.

இளைஞன் அவருக்கு நன்றி கூறினான். அப்போது அவர், “நீ எனக்கு நன்றி கூறும் நேரம் இன்னும் வரவில்லை, நான் காத்திருக்கிறேன்” என்றார். “ஏன் அவர் இப்படி கூறுகிறார், எதற்காக அவர் காத்திருக்கிறேன் என்கிறார்” என்பது இளைஞனுக்கு புரியவில்லை.

சுமார் முப்பது வருடங்கள் அவன் குருவைத் தேடி காடு, மலை, வனம், வனாந்திரம், பாலைவனமெல்லாம் அலைந்தான். ஆனால் எல்லா விதத்திலும் பொருந்தக் கூடியவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தோல்வியடைந்தவனாய், விரக்தியுற்று, சோர்வாக அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் இப்போது இளைஞன் அல்ல. அவன் கிளம்பும்போது அவனுக்கு வயது முப்பது, இப்போது அவனுக்கு வயது அறுபது.

ஆனால் அவன் தன்னுடைய நகரத்தினுள் நுழையும் சமயம் அவன் அந்த வயதானவன் இன்னும் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்தான். அவனால் தனது கண்களையே நம்ப முடிய வில்லை. “அடக் கடவுளே இவர்தானா அவர் குறிப்பிட்ட மனிதர்! – அவருக்கு 90 வயதிருக்கும் என்று கூட குறிப்பிட்டாரே...... மேலும் மரத்தைப் பற்றி கூட சொன்னார். அவர் அமர்ந்திருந்த மரம் என்ன என்பதைக் கூட பார்க்க முடியாத அளவு முழுமையாக தன்னுணர்வின்றி இருந்திருக்கின்றேனே. அவர் குறிப்பிட்ட அந்த மணம் - அந்த பிரகாசம், அந்த இருப்பு, அவரைச்சுற்றியுள்ள அந்த உயிர் துடிப்பு.........”

அவன் அவர் காலடியில் விழுந்தான். “என்ன விதமான வேடிக்கை இது,! முப்பது வருடங்களாக நான் பாலைவனத்திலும், மலைகளிலும் தேடி அலைந்தேன். இது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்படி என்னை தேடி அலைய விட்டு விட்டீர்களே” என்று கேட்டான்.

அவர் கூறினார், “எனக்கு தெரிந்திருப்பது ஒரு பொருட்டே அல்ல. உன்னால் தெரிந்துகொள்ள முடிகிறதா என்பதுதான் கேள்வி. நான் முழுமையாக தெளிவாக விளக்கிக் கூறினேன். ஆனால் நீ இந்த முப்பது வருடங்கள் தேடி திரிய வேண்டும். இந்த முப்பது வருடங்கள் அலைச்சலுக்குப் பிறகுதான் உனக்கு ஒரு சிறிதளவு கவனம் வந்திருக்கிறது. அன்று நீ எனக்கு நன்றி கூறியபோது, நான் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை, ஒருநாள் அந்த நேரம் வரும் எனக் கூறினேன் அல்லவா?
நீ உன்னுடைய முப்பது வருடங்கள் தேடி அலைந்ததைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறாய், ஆனால் நான் இங்கே முப்பது வருடங்களாக உனக்காக உட்கார்ந்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய சொந்த வேலை எப்போதோ முடிந்து விட்டது. என்னுடைய படகு வந்து எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நான் ஒத்திப் போட்டு, ஒத்திப்போட்டுகொண்டே வந்திருக்கிறேன். முட்டாளே முப்பது வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறாயே! – நான் மரத்தைப் பற்றிக்கூட விவரித்தேனே, என்னுடைய ஒவ்வொன்றையும் பற்றியும் விவரமாக கூறினேனே – என்னுடைய மூக்கு, என்னுடைய தாடி, என்னுடைய கண்கள்!. நான் விரிவாக விளக்கமாக எல்லாவற்றையும் கூறினேன். நீ என்னைத் தேடி அவசரமாக ஓடினாய்.

ஆனால் இன்னும் தாமதமாகி விடவில்லை. நான் இறந்து போய்விட்டால் எனது வார்த்தை, எனது வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் போய்விடுமே என்று அஞ்சினேன். கூடிய விரைவில் இந்த முட்டாள் வந்துவிடுவான், ஆனால் நான் இங்கே இல்லையென்றால் எனது வர்ணனை, என்னைப்பற்றிய எனது குறிப்பு, எல்லாமே வீணாகிப் போய்விடுமே, எல்லாம் பொய்யென்று ஆகிவிடுமே என்று கவலைப்பட்டேன். அதை நிரூபிப்பதற்காக, நான் இந்த மரத்தடியில் முப்பது வருடங்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னை அன்றே தேர்ந்தெடுத்துவிட்டாய், ஆனால் நீ அதை உணர முடியாது, உனக்கு அந்த கண்கள் அன்று இல்லை. நீ என் வார்த்தைகளை கேட்டாய், ஆனால் அதன் பொருளை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உன் முன்னால் இருந்தேன், என்னை நானே விவரித்துக் கூறினேன், ஆனால் நீ என்னை எங்கோ தேடும் எண்ணத்தில் இருந்தாய்” என்று கூறினார்.

The Osho Upanishad, che – 20

மலர் 3 இணைய இதழ் 2 11 செப்டம்பர் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

ஓஷோ சாஸ்வதம் மையத்தில் செப்டம்பர் 25,26 சனி, ஞாயிறு தேதிகளில் – நீயும் நீயும் – என்ற தியான பயிற்சிசாலை நடைபெற உள்ளது. 5 நபர்களுக்கே இடமிருக்கிறது.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். எப்போதும் வந்து தங்கி தியானம் செய்யலாம்.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.
ஒரு பெண் முடிந்த அளவு அதிக பெண்மை கொண்டவளாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் அவள் மலர முடியும். ஓர் ஆண் முடிந்த அளவு அதிக ஆண்மை கொண்டவனாக இருக்க வேண்டும், அப்போதுதான் அவன் மலர முடியும். இவர்கள் இப்படி எதிர்நிலை துருவங்களாக மாறும் பொழுது, ஒரு பெரும் கவர்ச்சி, ஒரு பெரும் ஈர்ப்பு அவர்களுக்குள் எழும்புகிறது.

2.
தியானம் என்பது இடத்திலோ காலத்திலோ செய்யும் பயணமன்று, மாறாகச் சட்டென விழித்துக்கொள்வது. இங்கு இப்போது நீங்கள் மௌனமாக இருக்க முடிந்தால், இதுவே மறுகரை. உங்களால் மனம் நின்று விடுவதை, செயலற்று விடுவதை அனுமதிக்க முடிந்தால், இதுவே மறுகரை.

3.
நீங்கள் மனத்திலிருந்து இதயத்தை நோக்கிச் சாயுங்கள். அதுவே முதல் மாற்றம். குறைவாக எண்ணுங்கள், அதிகம் உணருங்கள். அறிவுபூர்வமாக இருப்பதைக் குறையுங்கள், உள்ளுணர்வை அதிகப்படுத்துங்கள். எண்ணிக் கொள்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை, அது நீங்கள் மாபெரும் காரியங்களைச் செய்வதாக உணரச் செய்யும். ஆனால் உண்மையில் நீங்கள் ஆகாயக் கோட்டைகள்தான் கட்டுவீர்கள். எண்ணங்கள் வெறும் ஆகாயக் கோட்டைகள் அல்லாமல் வேறொன்றும் இல்லை.

தலையங்கம்
அன்பு நண்பர்களே,

இந்த மாதமும் கூட்ட மனப்பான்மை பற்றி திரும்ப விளக்கப் போகிறேன். ஏனெனில், நான் நல்லவன், நல்லவனாய் இருக்கப் பாடுபடுகிறேன், எல்லோரிடமும் அன்பு காட்ட விரும்புகிறேன், முயற்சிக்கிறேன், வயதானவர்களிடம் மரியாதை கொள்கிறேன், என்னை விட உயர்ந்தவர்களிடம் பணிவோடு நடந்து கொள்கிறேன், நடந்து கொள்ள முயல்கிறேன், என்னை விட எளியவர்களிடம் இரக்கம் கொள்கிறேன், தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், சுற்றம் எல்லோரிடமும் பாசத்துடன் இருக்க விரும்புகிறேன், என் கடமையை சரிவர செய்ய விரும்புகிறேன், பெயரும் புகழும் பெற்று சிறந்த வாழ்க்கை வாழ விரும்புகிறேன், இவையெல்லாம் தவறா, போலியா என்ற கேள்வியை பலர் பலவிதமாக எழுப்பியுள்ளனர்.

இதற்கு நான் ஆரம்பத்திலிருந்து வருகிறேன். மனித நிலை என்பது ஒரு சந்திப்பு. மிருக நிலை பிறகு மனித நிலை பிறகு தெய்வ நிலை. ஆகவே மனித நிலை ஒரு சந்திப்பாக இருக்கிறது. நமக்கு மிருக உணர்வுகள் உள்ளன. அதிகம் அவையே உள்ளன. அவையே நம்மை ஆட்டிப்படைக்கும் உணர்வற்ற மனமாய் உள்ளன. மனிதனின் தன்னுணர்வு சிறிய அளவில் பிறக்கும்போதே இருக்கிறது. இதுதான் மனிதனின் ஆறாவது அறிவு. இதைப் பயன்படுத்தி வாழும் வாழ்க்கை மனித வாழ்க்கை. ஆனால் இதன் சக்தி மிகக் குறைவாகவே பிறக்கையில் உள்ளது.

இந்தத் தன்னுணர்வுக்கு உணர்வற்ற மனத்தில் அடங்கியுள்ள சக்தியை திருப்பி விடும் விதமாய் வாழ்வை அமைத்துக் கொள்ளுதலே வாழ்வியல் நெறி. இந்த வாழ்வியல் நெறி சிறிது காலத்திற்கு ஒரு முறை சரிபார்க்கப்பட்டு, உண்மையிலேயே தன்னுணர்வு வளர உதவுகிறதா என்று பார்த்து அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு ஞானியும் புதுப்பிக்கும் வாழ்வியல் முறைகள் அவர்களுக்குப்பின் சுயநலக் கும்பல் வியாபாரிகள், அரசியல்வாதிகள், மற்றும் பூசாரிகளால் சடங்குகளாக மாற்றப்பட்டு மக்களை ஏமாற்றவும், அடிமைப்படுத்தவுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தன்னுணர்வு வளர்ந்து பிரபஞ்சத் தொடர்பை உணர்ந்து அதில் மூழ்கி பேரானந்தமாய் வாழ்வது தெய்வ நிலை.

இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் கேள்வி கேட்டவர் சொன்ன நிலையிலே இருக்கிறோம். கேள்வி சரியானதுதான், எந்த விதத்தில் என்றால் அது நாம் இன்றிருக்கும் நிலையைத் தெளிவாக விளக்கி விட்டது.
நாம் நல்லவனாய், தியாகியாய், அன்பு காட்டுபவனாய், பாசமுள்ளவனாய், கடமை தவறாதவனாய், நாட்டுப்பற்றும், இனப்பற்றும், மொழிப்பற்றும் உள்ளவனாய் இருக்கிறோம். இந்த நமது உணர்வுகள் எல்லாமே கூட்ட மனப்பான்மை உணர்வுகள் அல்லது சமூக உணர்வுகள் அல்லது சமூக முகங்கள். இவற்றிற்க்கான சமூகக் கருத்துக்கள் நமக்கு குழந்தை பிராயத்திலேயே கொடுக்கப்பட்டு விட்டன. ஆனால் நம்மில் உள்ளது என்ன நம்மில் 90 சதவீதம் விலங்கு மனம்தான். அதன் உணர்வுகளான பேராசை, கோபம், செக்ஸ், வன்முறை, பொறாமை, பயம், பசி இவை போன்றவையே நம்மை ஆட்டுவிக்கின்றன. இதைக் கடந்து நம்மிடமுள்ள சிறிய தன்னுணர்வு வெளிச்சத்தில் அறியும் குணங்களைக் கடைபிடித்து ஒரு மனிதனாய் வாழும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அப்படி மனிதனாய் வாழ கடந்த காலத்தில் காட்டப்பட்ட வாழ்வியல் நெறிகள் இன்று போலித்தனமாய், வியாபாரமாய், சமூக முகமூடிகளாய் மாறிக் கிடக்கின்றன.

ஒரு மனிதனாய் நாம் மாற நாம் விலங்கு உணர்ச்சிகளிலிருந்து விடுபட வேண்டும் என்பது ஒரு புறம். மறுபுறம் மனித உணர்ச்சிகளுடன் வாழ தலைப்பட வேண்டும். அப்படித் தனிமனித உணர்ச்சிகளுடன் வாழ உதவுவதாக நமது சமுதாயம் அமைய வேண்டும். ஆனால் இன்று வரை அந்த முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு சில சுயநல வாதிகளுக்காக பெரும்பாலோர் சுரண்டப்படும் சமூகமாகவே நமது சமூகம் இருந்து வருகிறது. முன்னாளில் அரசனுக்கு சேவகம் செய்யும் சமூகம். அரசனின் அதிகாரத்தையும், ஆணவத்தையும், அறியாமையையும், அவன் போடும் ஆட்டங்களையும் நியாயப்படுத்த, அவனுக்கு எதிராக மக்கள் உண்மையைப் புரிந்து உணர்வு கொள்ளாமலிருக்க, உருவாக்கப்பட்ட கருத்துக்கள் - மதவாதிகளால் உருவாக்கப்பட்டன – பூசாரிகளால் பரப்பப்பட்டன. எப்போதோ தோன்றும் ஒரு சில ஞானிகளின் கருத்துகளும் மதவாதிகளால் சுவீகரீக்கப்பட்டு மக்கள் ஏமாற்றத்திலேயே ஆழ்த்தப்பட்டனர்.

ஞானிகள் எல்லோரும் மக்களுக்கு உண்மை நிலையை, உணர்வை ஊட்டவே முனைந்தனர். உதாரணமாக புத்தர் ஒரு புரட்சியாளர். கடவுள் பாஷையான சமஸ்கிருதத்தை மறுத்து மக்கள் மொழியான பாலியில் உண்மைகளை உரைத்தார். அப்போது வைதீக மதம் என்று அழைக்கப்பட்ட இன்றைய இந்து மதம் யாகத்துக்கு உயிர் பலி கொடுத்து வந்தது. மனுவின் சாதிமுறையை கடைபிடித்து வந்தது. முனிவர்களும் குருக்களும் குடும்பத்தோடு இருப்பது மட்டுமின்றி இராஜாக்களுக்கும் குழந்தை கொடுத்து வந்தனர். இதையெல்லாம் எதிர்த்தவர் புத்தர். உண்மையைக் கண்டறிய தன்னை வருத்தும் தவமும், படாடோபமான யாகங்களும் தேவையில்லை, அமைதியும், சாந்தமும், கொண்டவனாய் சாட்சி பாவத்துடன் தன்னை நோக்குதலே போதும் என்றார் புத்தர். உருவ வழிபாட்டின் சீர்கேட்டை 2500 வருடங்களுக்கு முன்பே விளக்கிப் பேசி கடைபிடித்தவர் புத்தர். தன்னையும் உருவ வழிபாடு செய்யக்கூடாது என்று கூறியவர் புத்தர். அதனால்தான் அவர் மறைந்த பின் முதல் 500 வருடங்களுக்கு அவர் ஞானமடைந்த அரச மரம் வழிபடப் பட்டது. அவர் நாயகர்களுடன், கடவுள்களுடன் சேராது எதிர்த்தவர் என்பதால் உன்டான பெயரான விநாயகர் என்ற பெயரில், அவரது முற்பிறவிகளில் ஒன்றில் அவர் யானையாய் இருந்து, காடு தீப்பிடித்துக் கொண்டபோது, தன் காலடியில் அடைக்கலம் புகுந்த ஒரு காட்டு எலியைக் காப்பாற்ற தன் உயிரையே விட்டவர் என்ற அடிப்படையில் உருவம் அமைத்து, அரசமரத்து விநாயகராக வழிபடப் பட்டார். அவரது தியானத்தில் உணர்வோடு நடப்பது என்பது மிக முக்கிய ஒன்று. அதனால்தான் நாம் அரசமரத்தை சுற்றி வருகிறோம்.

பண்டைய தீர்த்தங்கரர்களின் சமணக் கோயில்களே இன்றைய முருகக் கோயில்களும், திருப்பதிக் கோயிலுமாய் இருக்கலாம், ஏனெனில் சித்தர்கள் எல்லாம் இந்து மதமாற்றத்தை ஏற்காமல் மறைந்து வாழ்ந்த சமணத்துறவிகளே. ஆனால் எதையும் ஆராய்வதில்லை நாம். புத்தர் அவரது பேச்சுக்களைக் குறிப்பெடுப்பதைக் கூட அனுமதித்ததில்லை. அவர் மறைவிற்குப் பின்னரே அவரது கருத்துக்கள் தொகுக்கப்பட்டன. எந்த கருத்தும் திணிக்கும் முறை கூடாது, தனிமனிதன் தன்னுணர்வின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதாலேயே புத்தர் தன் பேச்சை எழுத அனுமதிக்காமல் இருந்தார்.

இதே நோக்கத்திற்க்காகவே ஓஷோ தனது அனைத்துப் பேச்சுக்களையும் ஒலி வடிவத்தில் பதிவு செய்வதை வற்புறுத்தி வந்தார். ஏனெனில் வரி வடிவத்தில் இடைச் செருகல் சாத்தியம். ஒலி வடிவத்தில் செய்வது இயலாது என்பதே காரணம்.

சரி, தனி மனித உணர்வுகள், அல்லது தன்னுணர்வு கொண்ட தனிமனிதனாய் நமக்கு சாத்தியப்படும் உணர்வுகள் எவை எவை – அவைதான் அன்பு, படைப்பு, நிறைவு, அழகு, சிரிப்பு, இசை, நடனம், விளையாட்டு, மகிழ்ச்சி, துணிவு, புத்திகூர்மை, நட்பு, தேடல், வைராக்கியம், சவால், பகிர்வுதன்மை, இப்படி நிறைய உள்ளன. இவற்றில் வாழ்ந்தால்தான் அடுத்த நிலையான தெய்வநிலை என்ற அடுத்த பரிணாமம் மனிதனுக்குச் சாத்தியம். அதே போல் தனிமனிதனாய் தன்னுணர்வு சிறிதே கொண்டு பிறக்கும் மனிதனுக்கு விலங்கைவிட கீழாக, மோசமாக போகும் வாய்ப்பும் உள்ளது. விலங்கு குணங்களை விட மோசமான குணங்கள்தான் துரோகம், வஞ்சகம், ஏமாற்றல், சுரண்டல், பொய், இப்படி உள்ளவை. இவையே இன்று நம் சமூகத்தை ஆள்கிறது.
இதில் நல்ல தனிமனித உணர்வுகளில் வாழும் வாய்ப்பை இன்றைய சமூகம் நமக்கு அளிப்பதில்லை. அதே சமயம் விலங்குணர்வை ஒரு குழந்தை வெளிப்படுத்துவதையும் நாம் அனுமதிக்க தயாராய் இல்லை. இந்த நிலையில் நாம் குழந்தைக்கு போலித்தனமான சமூக முகங்களை உருவாக்குகிறோம். நமது தேவைக்கு ஏற்றபடி, நமது பேராசைபடி, ஒரு குழந்தை அடிமையாகவே, இயந்திரமாகவே வாழ்நாள் முழுவதும் இருக்கும்படியாக சமூக முகத்தை, போலி முகத்தை, முகமூடியை, பொய்யான கருத்துக்களை, அதன் அடிப்படையில் உணர்வுகளை, ஏற்படுத்துகிறோம். இப்படி ஏற்படுத்தப்பட்டவைகளில் வாழும் வாழ்க்கைதான் இன்றைய உலகம். இன்றைய நமது கேள்வி கேட்பவர்கள் வாழ்வது. அங்கீகாரம், பணிவு, மரியாதை, அன்பு காட்டல், வெற்றி, நியாயம், இரக்கம், பல்வேறு பற்றுகள், தியாகம், பாராட்டு இப்படி. இதில் சிக்கி இதற்காகப் போராடி, உழைத்து, இதன்மூலம் அடிமையாய், ஒரு சில சுயநலவாதிகள் இஷ்டம்போல, அடிமை விலங்கு போல, சேவகம் செய்பவர்களாய் உள்ளோம். இப்போது நமக்குள்ள உணர்வுகள் சமூக முகங்களின் வெளிப்பாடு. இவை எந்த உள் வளர்ச்சியையும், உள்நிலை மாற்றத்தையும் கொடுக்க முடியாது.

தெய்வ நிலை குணங்களான கருணை, பிரபஞ்ச உணர்வு, விழிப்புணர்வு, பரவசம், சாட்சிபாவம், அழிவற்ற நிலை, உருக்கடந்த நிலை இப்படி எதற்கும் கூட்டிச்செல்ல முடியாது. மேலும் நாம் இந்த சமூக முகங்களைக் கட்டிக் காக்க நமது விலங்குணர்வுகளை உள்ளே அமுக்கி வைக்கிறோம். இதுவே மேலும் கெட்டு விலங்கை விடக் கீழானதாக மாறி வெளிப்படுகிறது. நமது குற்றவாளிகள், கொலையாளிகள், நக்சலைட்டுகள், எல்லோரின் கதையும் இதுதான்.

இதற்கு பதிலாக குழந்தையின் விலங்குணர்ச்சியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும். குழந்தை குற்றஉணர்ச்சி அடையாமல் அது அதையும் ஏற்க, பார்க்க. சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். இது ஒருபுறம், மறுபுறம் சிறு தன்னுணர்வால் காணக்கூடிய மனித குணங்களை வாழ்ந்து காட்ட வேண்டும். அது வாழ ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்கு உகந்த சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போது ஒருவன் சிறிது சிறிதாக விலங்குணர்விலிருந்து விடுபட்டு மனித குணங்களில் மேம்படுவான். பிறகு தெய்வ குணங்களில் தாகம் இயல்பாகவே அங்கு எழும். இதற்கு மாறாக நாம் சமூக முகங்களை திணிப்பதன் மூலம் சமூகத்திற்கு ஒரு நல்ல அடிமை கிடைப்பான். அவன் உள்ளே புழுங்கிக் கொண்டிருப்பவனாகவே, நிறைவு பெறாதவனாகவே, மகிழ்ச்சி கொள்ளாதவனாகவே இருப்பான். அவனிடம் இனந்தெரியாத பதட்டமும், அவசரமும், இறுக்கமும், படபடப்புமே இருக்கும். வேர் இன்றி உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் மரமாகவே இருப்பான். உயிர் இருக்காது. ஆழம் இருக்காது. சமூக முகங்களை முற்றிலும் கடைபிடிக்க முடியாத குற்றவுணர்வும், முடியாத போதும் முடிந்தாத காட்டிக் கொள்ளும் போலித்தனமுமே அவனுள் இருக்கும்.

ஆகவே நண்பர்களே, நம் சமூக வாழ்க்கை என்ற மாயையில் நீங்கள் சிக்கியிருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த உலகம் உண்மை. நீங்கள் உயிரோடிருப்பது உண்மை. ஆனால் தலைக்குள் நாம் கற்பித்துக் கொள்ளும் நம் வீடு, நம் உறவு, நம்நாடு, நம் சொந்தம், நம் சமூகம், என்ற நம் சேர்ந்த உலகம் ஒரு மாயை. மாயை என்றால் உண்மையை உண்மையாக பார்க்க முடியாமல் வேறென்றாகத் திரித்துப் பார்ப்பது. இதில் உங்கள் வாழ்வும், சக்தியும், காலமும், உடலும் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

ஆகவே மாயையை விடுங்கள். உண்மை உலகில் தனிமனிதனாக வாழுங்கள். மனைவியும் குடும்பமும் தொழிலும் தவறல்ல. தனிமனிதனாய், மாயை இன்றி செயல்படுங்கள். தனிமனிதப் பண்பை வளர்க்க எல்லோரும் ஒருவருகொருவர் உதவிக் கொள்வோம்.
இயல்பாக வாழ்தல் மனித வாழ்வு. இதுதான் ஓஷோவின் ஜோர்பா. அதாவது உணர்வற்ற விலங்கு மனதையும் தன்ணுணர்வுள்ள மனதையும் கொண்டு மனிதனாக வாழ்பவன். இதோடு புத்தா இணையட்டும், விழிப்புணர்வு இணையட்டும். இதுதான் ஜோர்புத்தா. இயல்பாக விழிப்புணர்வோடிரு – ஜோர்பா தி புத்தா இதுதான்.

நாம் மனிதன்தான், அதை ஏற்போம்,
நமக்குள் உள்ள விலங்குணர்வுகளை ஏற்போம்.
தனி மனித உணர்வுகளை வளர்ப்போம்.
தனிமனிதர்கள் வளர உதவும் நல்லதொரு சமூகம் அமைப்போம்.
விழிப்புணர்வோடு வாழ்ந்து தெய்வ நிலை பெறுவோம்.

இதுதான் ஓஷோவின் ‘ இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் ’ என்ற அறிக்கையின் வெளிப்பாடு.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

அன்புப் பாலம்

நண்பா!

அன்பு ஒரு பாலம்,
இதயத்திலிருந்து இதயத்துக்கு

இது........
இரு உயிர்களை இணைப்பது,
இரு உணர்வுகளை ஒருமிப்பது,
இரு உடல்கள் சங்கமிப்பது,
இப்படி எப்படியும் இருக்கலாம்!
ஆனால்......
இந்த அன்பு பாலம்
அழியாமல் இருக்க
தேவை இரண்டு......
“ உறுதியான தனித்தன்மை,
போதிய இடைவெளி. ”

ஆம்....
தனிதன்மையே தாங்கிப்பிடிப்பது,
தனித்தன்மையே கவருவது,
இடைவெளியே ஏங்கச் செய்வது,
இடைவெளியே பாலம் அமைப்பது.

நிறைவேறாத காதல்.....
என்றுமே இன்பம் தருவது எதனால் தெரியுமா?

தனித்தன்மை இழக்காமல்
ஒருவரையொருவர் ருசித்தது,
இடைவெளி உடையாமல்
நெருக்கத்தை ரசித்தது,
அன்புப்பாலம் கட்டி
அதன் மேல் சந்தித்தது.
இடைவெளி உடைந்து
இருவரும் இணைந்திருந்தால்
எதிர்பார்ப்பே மிஞ்சியிருக்கும்!

ஆகவே.....
தனித்தன்மையோடு இருப்போம்,
இடைவெளியோடு உறவு கொள்வோம்.

இது.....
சுதந்திரம் காக்கும் அன்பு!
உதவிக் கொள்ளும் அன்பு!
அடிமைத்தனமும் கடமையுணர்வும் கடந்த அன்பு!


ஓஷோ வீடியோ

1. Osho : The Fear of Knowing Oneself

2. Osho : Meditation: The most valuable Contribution the East has made to Humanity

3. Osho : My Teaching is not for Pleasure


கேள்வி – பதில் பகுதி


ஓஷோ உணவருந்துதல் பற்றி கூறியிருப்பது என்ன என்று ஒருவர் கேட்டிருந்தார், அதற்கான பதில் இந்த வார கேள்வி பதிலில் வருகிறது.

1.
ஒரு குழந்தையின் உணவுக்கான முதல் அனுபவமும் அன்புக்கான முதல் அனுபவமும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை, அதனால்தான் இந்த பிரச்னை எழுகிறது. அவன் தாயின் மார்பகத்திலிருந்துதான் உணவையும் அன்பையும் பெறுகிறான். ஒரு குழந்தை அன்பை பெறும்போது அவன் பால் குடிப்பதைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை, தாய் அவனை குடிக்கச் செய்கிறாள்.

ஆனால் குழந்தை அன்பை பெறாத போது அவன் மார்பகத்தை விட்டு நகருவதில்லை, ஏனெனில் அவன் எதிர்காலத்தைக் கண்டு பயப்படுகிறான். அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கிறான், ஏனெனில் நாளை அம்மா கிடைப்பாள் என்பது நிச்சயமில்லை.

குழந்தைக்கு அன்பு கிடைக்கும்போது அவன் பாதுகாப்பாக உணர்கிறான். அவன் கவலைப்படுவதில்லை. எப்போதெல்லாம் தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் அங்கே அம்மா இருப்பாள். அவன் அவளது அன்பை நம்பலாம். ஆனால் தாய் அன்பு செய்யாதபோது குழந்தையால் நம்பிக்கையுணர்வு கொள்ள முடிவதில்லை. அப்போது அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கிறான்.

அவன் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறான்.

மேலும் இதுதான் சூழ்நிலை..... ஏழை குடும்பத்தில் உள்ள குழந்தைகள் வயிறு பெரிதாக இருப்பதை நீ காணலாம், ஏனெனில் அங்கே உணவு பற்றாக்குறை அதனால் எப்போதெல்லாம் உணவு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வர். செல்வந்தர் குடும்பத்தில் உள்ள குழந்தைக்கு வயிறு சிறிதாக இருப்பதை நீ காணலாம். இது நம்ப முடியாததாக தோன்றும், ஏனெனில் வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு அவர்களது முழு உடலும் மெலிந்து இருந்தாலும் அவர்களது வயிறு மட்டும் பெரிதாக இருக்கும். அது சரியாக தோன்ற வில்லை, கணக்குப்படி சரியாக தோன்றவில்லை.

அவர்கள் வறுமையில் வாடும்போது எப்படி அவர்களுக்கு வயிறு அவ்வளவு பெரிது இருக்கும் ஏனெனில் அவர்கள் பட்டினி கிடப்பதால் நாளையை பற்றி அவர்களால் நம்ப முடியாது. அதனால் என்ன கிடைத்தாலும், கிடைப்பது எதுவாக இருந்தாலும் அவர்கள் வயிற்றில் அடைத்துக் கொள்கின்றனர். அவர்களது வயிறுதான் அவர்களது சேமிப்புகிடங்கு.

மேலும் ஒரு குழந்தைக்கு அன்பு கிடைக்க வில்லையென்றால் அது உணவில் நாட்டம் கொள்கிறது. அதற்கு அன்பு கிடைக்கும்போது அதற்கு உணவில் ஆர்வம் இருக்காது அல்லது இயல்பாக எவ்வளவு ஆர்வம் இருக்குமோ – உடலுக்கு தேவையான அளவு உணவு பெறுவதில் – அவ்வளவுதான் இருக்கும்.

இதுதான் உனக்கும் நிகழ்ந்துள்ளது. நீ உனது அன்பு சக்தியை எந்த விதத்திலோ அடைத்துவிட்டாய். அந்த அடைக்கப்பட்ட அன்பு சக்திதான் உணவில் ஆர்வமாக வெளிப்படுகிறது. நீ இதை மாற்ற விரும்பினால் ஒரு சிறிதளவு அன்பில் தளர வேண்டும். நீ இன்னும் சிறிதளவு அன்பானவனாக மாற வேண்டும். உனது உடலை அன்பு செய் – அதிலிருந்து தொடங்கு. உன் உடலை நீ அனுபவி. அது ஒரு அழகான விஷயம், அது ஒரு பரிசு. ஆடு, பாடு, உனது உடலை தொடு, உனது உடலை உணரு.
பிரச்னை என்னவென்றால் நீ உனது உடலை விரும்ப வில்லையென்றால் வேறு யாரும் உடலை விரும்புவதை நீ அனுமதிக்கமாட்டாய். உன்னை விரும்பும் ஒருவர் உனக்கு முட்டாளாக, மடையனாக, கிறுக்கனாக தோன்றுவார். ஏனெனில் நீயே உனது உடலை நேசிக்காதபோது அவர் எதைக் கண்டார் என்றே உனக்குத் தோன்றும். நீ எதையும் காணமாட்டாய். உனது உடலின் அழகை நீ காணாதவரை நீ வேறுயாருடைய நேசிப்பையும் நீ ஏற்றுக் கொள்ளமாட்டாய். அவர் உன்னை நேசிப்பதே உனக்கு அவர் மடையன் என்பதைக் காட்டுவதாகத் தோன்றும், வேறு எதுவும் தெரியாது. அதனால் உனது உடலை நேசி.

கைகளை கோர்த்துக் கொள்ளவும், அணைத்துக் கொள்ளவும், அன்பாய் இருக்கவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவற்றை தவற விடாதே. நீ அன்பாய் இருக்க ஆரம்பித்தவுடன் உன் உணவு பிரச்னை தானாகவே தீர்வதை கண்டு நீ ஆச்சரியப்படுவாய். அன்பினுள் இருப்பது மிகவும் அருமையான அனுபவம், உணவை அடைத்துக் கொள்வது மிக மோசமான அனுபவம். உணவு அருமையானதல்ல என்பதல்ல, உன்னால் எவ்வளவு எடுத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு மட்டும் எடுத்துக் கொண்டால் அது மிகவும் அருமையானது. அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பின் வாந்தி வந்துவிடும்.

அன்பைப் பற்றிய ஒரு விஷயம் மிகவும் சிறப்பானது, அது அன்பு ஒருபோதும் அளவுக்கு அதிகமாக என்றாகாது. யாராலும் அளவுக்கு அதிகமாக அன்பு செய்ய முடியாது, யாராலும். அதற்கு எல்லையே இல்லை. ஏனெனில் நீ சாப்பிடும்போது, நீ விஷயங்களை உள்ளே திணிக்கிறாய். நீ அன்பு செய்யும்போது, நீ பகிர்ந்து கொள்கிறாய், நீ கொடுக்கிறாய், அது சுமையை குறைக்கும் ஒரு செயல். மேலும் நீ கொடுக்கும் அளவு உனது சக்தி பாய்ந்தோட ஆரம்பிக்கிறது. நீ ஒரு நதியாகிறாய், ஒரு தேங்கிய குளமாக இருப்பதில்லை.

God’s Got a thing About You

Che # 14

2.
நீ மேற்புறத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் கீழே வேர்கள் மாற்றமடையாத வரை எதுவும் மாறாது. அதனால் வெளிப்புறத்தை பொறுத்தவரை நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அதை பற்றிய விழிப்புணர்வு கொள்வது மட்டுமே. மேற்புறத்திலிருந்து வேர்களுக்கு நகரு, வேர்களை கண்டுபிடி – ஏன் பதட்டமாயிருக்கிறாய், ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுகிறார். அதை நிறுத்தமுடியும். அதிகமாக சாப்பிடாமல் இருக்குமாறு நீ உன்னை கட்டாயப்படுத்தமுடியும். ஆனால் ஏன் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுகிறாய், ஏன், ஏனெனில் அது உடலின் தேவை அல்ல, எங்கோ மனது அதில் தலையிடுகிறது. மனதைதான் சீர் செய்ய வேண்டும், அது உடலின் பிரச்னை அல்ல. நீ ஏன் உனக்குள் திணித்துக் கொள்கிறாய்.

உணவின் மீது உள்ள அதீத ஈடுபாடு அன்பு தேவை என்பதையே காட்டுகிறது. நீ நேசிக்கப்பட வில்லையென்றால் நீ அதிகம் சாப்பிடுவாய். நீ நேசிக்கப்பட்டால், நீ நேசித்தால் நீ குறைவாகவே சாப்பிடுவாய். யாராவது உன்னை நேசிக்கும் சமயத்தில் உன்னால் அதிகமாக சாப்பிடமுடியாது. அன்பு உன்னை நிறைவு செய்கிறது, நீ வெறுமையாக உணர்வதில்லை. அன்பு இல்லையென்றால் நீ வெறுமையாக உணர்கிறாய், ஏதாவது இட்டு அதை நிரப்ப வேண்டும், எனவே நீ உணவை திணிக்கிறாய்.

இதற்கு காரணங்கள், அடிப்படையான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் ஒரு குழந்தை அன்பையும் உணவையும் சேர்த்தே எதிர் கொள்கிறது. அதே மார்பகத்திலிருந்துதான், அதே தாயிடமிருந்துதான் அன்பு உணவு இரண்டையும் பெறுகிறது – உணவும் அன்பும் இணைகிறது. தாய் நேசிக்கும்போது குழந்தை ஒருபோதும் அதிக அளவு பால் குடிப்பதில்லை. அதற்கு தேவையுமில்லை. அவன் அனபினால் பாதுகாக்கப்படுகிறான். எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அம்மா அங்கிருப்பாள், பால் கிடைக்கும், உணவு கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும். அவன் பாதுகாப்பாய் உணர்கிறான். ஆனால் தாய் நேசிக்காதபோது அவன் பாதுகாப்பற்று உணர்கிறான். அவனுக்கு பசிக்கும்போது பால் கிடைக்குமா கிடைக்காதா, உணவு கிடைக்குமா கிடைக்காதா என்று அவனுக்கு தெரியாது. ஏனெனில் அங்கு அன்பில்லை. அதனால் அவன் அதிகம் சாப்பிடுகிறான். இது தொடர்கிறது. இது தன்னுணர்வற்றதாக வேரினுள் பதிகிறது.

அதனால் நீ உனது உணவை மாற்றிக் கொண்டே போகலாம், - இதை சாப்பிடலாம், அதை சாப்பிடலாம், இதை சாப்பிடாமல் இருக்கலாம் – ஆனால் இது எந்த மாற்றத்தையும் உண்டாக்கப்போவதில்லை. ஏனெனில் இது வேரில் ஆழமாக உள்ளதொரு விஷயம். பின் நீ உணவை திணித்துக் கொள்வதை நிறுத்திவிட்டு, வேறு எதையோ திணித்துக் கொள்ள ஆரம்பிக்கிறாய். இதில் பல வழிகள் உள்ளன. நீ சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பணத்தை சேர்க்க ஆரம்பிக்கிறாய். இப்போது மறுபடியும் நீ வேறு ஏதோ ஒன்றால் நிரப்பப்படுகிறாய். பின் நீ பணத்தை சேகரிக்க ஆரம்பிக்கிறாய்.


Vigyan Bhairav Tantra, Vol 2

Che # 10


தியான யுக்தி – 1

பிறப்பிடத்திற்குத் திரும்புதல்

நமக்கு யார் மீதாவது அல்லது எதன் மீதாவது கோபமோ, வெறுப்போ, அல்லது வேறு உணர்வோ அல்லது வேறுபட்ட மனநிலையோ ஏற்படும்போது நாம் அதை மனிதர்கள் மீதோ அல்லது பொருட்கள் மீதோ பிரதிபலிக்கிறோம். ஆனால் தியானத்தின் போது மனநிலையை மற்றவர்கள் மீது பிரதிபலிப்பதற்கு பதிலாக நீதான் அதன் பிறப்பிடம் என்பதை நினைவு கூறுகிறாய். உதாரணமாக, அன்பு எழும் போது, இந்த உணர்வு பிரதிபலிக்கும் ஒரு திரைதான் மற்றவர். அவர்தான் இந்த அன்பின் காரணம் என்ற நினைப்பு எழுகிறது, ஆனால் உண்மை அதுவல்ல. அன்பு சக்தி உள்ளிருந்து எழுகிறது, அது வெளியே பிரதிபலிக்கிறது. அதனால்தான் யார்மீது அன்பாக உணர்கிறாயோ அவர் மிகவும் அன்பானவராக தோன்றுகிறார். ஆனால் வேறு யாராவது இவர்மீது கோபமாக உணரும்போது இவர் அவருக்கு மிகவும் அசிங்கமானவராக தோன்றுவார். இதை நினைவில் கொள்.


எப்போது – ஒரு உணர்வை பற்றியோ அல்லது ஒரு மனநிலை குறித்து
விழிப்படையும்போது

செய்முறை - மையத்தில் இரு, பிறப்பிடத்திற்குச் செல். உன்னுடைய கோபம், வெறுப்பு, அல்லது வேறு எதுவாக இருந்தாலும் உன்னுடைய உள் மையத்திற்குச் செல்லும் பயணத்திற்கு அதை பயன்படுத்து.
நீ அன்பாகவோ வெறுப்பாகவோ கோபமாகவோ இருக்கும் சமயத்தில் பிறப்பிடத்திற்குச் செல்வது எளிதாக இருக்கும் ஏனெனில் அப்போது நீ சூடாக இருப்பாய். அப்போது நகர்வது எளிது. இணைப்பு சூடாக இருக்கும் ஆகவே இந்த சூட்டுடன் உள்ளே நகர முடியும். உள்ளே உள்ள குளிர்ந்த பகுதியை நீ சென்றடைந்தவுடன், திடீரென ஒரு மாறுபட்ட பரிமாணத்தை உணர்வாய். ஒரு மாறுபட்ட உலகம் உன்முன் திறக்கும்.

மூலம்: Vigyan Bhairav Tantra

தியான யுக்தி – 2

மனோநிலைகளின் பதிவு

முதல் படி – உனது மனோநிலைகளை கண்டு வரிசை படுத்து.

உனது நிலைகளை புரிந்துகொள், அதனால் உனது நல்ல மற்றும் மோசமான மனோநிலைகளை குறிப்பெடுக்க ஆரம்பி. ஒவ்வொரு நாளும் காலை, மதியம், மாலை, இரவு ஆகிய 4 தடவை உனது மனேநிலை எப்படி இருக்கிறதென்று குறித்து வை. 3 - 4 மாதங்களுக்குள் நீ ஒருவித லயத்தை காணலாம். உதாரணமாக, நிலவைப் பொறுத்து உன் மனநிலை மாறும்.

இரண்டாவது படி – உனது மனநிலையை சந்திக்க தயாராகு

ஒருமுறை உனது வரைபதிவு எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால் நீ அதற்கேற்ப தயாராகலாம். சோகமாக இருப்பாயானால் சோகத்தை கொண்டாடு. போராட தேவையில்லை.

பிரச்னை எழுவது எங்கென்றால் நாம் மனநிலையை எதிர்க்கிறோம், நாம் அதனுள்ளேயே அமிழ்ந்து விடுகிறோம், இதுதான் போராட்டத்தை உருவாக்குகிறது – ஆனால் எல்லா மனநிலைகளும் அநுபவிக்க கூடியவையே.

மூன்றாவது படி – கவனி, நீ கடந்து போவாய்

உனக்கு நல்ல மனநிலை வரும் என உனக்கு தெரியும்போது நீ மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளலாம், மக்களை சந்திக்கலாம், உருவாக்குபவனாக இருக்கலாம்.
இதேபோல கவனித்து வந்தால் 6 – 8 மாதங்களுக்குள் நீ ஒரு சாட்சியாளனாக மாறி விடுவாய், பின் அப்போது எதுவும் உன்னை பாதிக்க முடியாது. அது இயற்கையின் ஒரு பாகம்தான், உன்னை பொறுத்ததல்ல என்பது உனக்குத் தெரியும். அதை கவனித்தல் மூலமாக நீ கடந்து செல்ல ஆரம்பிப்பாய்.

மூலம்:Just Don’t Do Something, Sit There

நீ யார் ? – ஓஷோவின் கதை 26

நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா, தலையா அல்லது இது வெறும் அகங்காரமா?
எது உன்னுடைய ‘ நான் ‘? எங்கே உன்னுடைய ‘ நான் ‘? உன்னுடைய ஆணவமா?
அது அங்கிருத்தலின் உணர்வு இருக்கிறது, ஆனாலும் அதை குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. மௌனமாக ஒரு நிமிடம் அமர்ந்து அந்த ‘ நானை ’ தேடிப் பார். நீ ஆச்சரியமடைவாய். எவ்வளவு ஆழமாக தேடினாலும் உன்னை எங்கும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் ஆழமாக தேடும்போது ‘ நான் ‘ என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். அது போல ஆணவம் என்பதும் கிடையாது. சுயத்தின் உண்மை அங்கிருக்கும்போது ‘ நான் ‘ அங்கிருக்காது.

எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான்.
தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென் அவர்களே, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்.” என்றான்.

நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.

தூதுவன் அரசரிடம் சென்று நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.
நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப் பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான்.

இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான் உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை.” என்றார்.

அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள், நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான்.
நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம் அதுதானே?”

“ஆம், அதுவேதான். இதுதான்”

“தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார்.
அது செய்யப்பட்டது.

குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென்.
அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார்.

துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது.

“அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார்.

“அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல.”

துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது.

கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.

துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.

அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.

துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது ‘ நான் ‘?.

நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டு பிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும்.

மூலம்-FROM SEX TO SUPERCONSCIOUSNESS CHE # 1

மலர் 3 இணைய இதழ் 1 11 ஆகஸ்ட் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்திற்கு சென்ற மாதம் கிருஷ்ணகிரியிலிருந்தும், மேட்டுப்பாளையத்திலிருந்தும், மேட்டூரிலிருந்தும், வந்து தங்கி தியானம் கற்றுச் சென்ற அன்பர்கள் பலரும், பலநாள் தியானமுகாம் நடத்தமாறு கோரினர். அதற்கிணங்கி செப்டம்பர் மாதத்தில் பலநாள் முகாம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரும்பும் அன்பர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும். தனிநபர் அகநலபகுத்தாய்வும் நடைபெறுகிறது.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். தங்கி தியானம் செய்யலாம்.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.
நீங்கள் உண்மையிலேயே உங்களுக்குச் சத்திய தரிசனம் நிகழ விரும்பினால், தனி மனிதனாய் இருங்கள். தனிமனிதனாய் இருப்பதற்குத் தேவைப்படும் எல்லா ஆபத்துகளையும் எதிர்கொள்ளுங்கள். அதற்கான அறைகூவல்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்மூலம் அவை உங்களைக் கூர்மையடையச் செய்யும். உங்களுக்கு நுண்ணறிவையும்,ஜொலிப்பையும் கொடுக்கும்.

2.
சமரசம் செய்துகொண்ட வாழ்வை வாழ்வது இறப்பைவிட மோசமானது. சத்தியமான வாழ்வை வாழ்வது, அது ஒரு கண நேரமேயானாலும்கூட, பொய்யில் நிரந்தரமாக வாழ்வதை விட மிகமிக மதிப்பு மிக்கது. பொய்யில் வாழ்வதைவிடச் சத்தியத்திற்காக இறப்பது மிகவும் மதிப்பு மிக்கது.

3.
வாழ்வு ஒன்றையொன்று சார்ந்தது. ஒருவரும் தனித்தவரல்ல. ஒரு கண நேரம் கூட உங்களால் தனியாக இருக்கமுடியாது. உங்களுக்கு இந்த முழு பிரபஞ்ச இருப்பின் உதவியும் வேண்டும். ஒவ்வொரு கணமும் அதை நீங்கள் சுவாசிக்கிறீர்கள். இது ஓர் உறவல்ல. இது சுத்தமான ஒன்றோடொன்று சார்ந்த நிலை.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

கூட்ட மனப்பான்மை பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும் தனிமனிதனாதல் பற்றியும் எழுதுங்கள், அது என்னைப் போன்று பலருக்கும் உதவியாய் இருக்கும் என்று ஒரு அன்பர் அவரது பிரச்னையை விளக்கும்போது கூறினார்.

அது உண்மைதான். ஓஷோவிடம் வருவதற்கு முதலில் ஒரு தனிமனிதனாய் இருக்க வேண்டும் என்று நான் எப்போதுமே கூறுவேன். ஆன்மீக வளர்ச்சிக்கு இது மிக மிக அவசியம். மேலும் இதுதான் இந்தியர்களிடம் இல்லாத, இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய ஒரு பண்பாக இருக்கிறது.

நாம் இன்னும் ஒரு கூட்டமாகத்தான், அதாவது கூட்டத்தில் ஒருவராகத்தான், கூட்டத்தின் பகுதியாகத்தான் இருக்கிறோம். இதை நான் பூனாவில் இருந்தபோது அங்கு வரும் நண்பர்கள் அனைவரிடமும் சுட்டிக்காட்டுவேன். வருபவர்கள் தங்களது ஊரைப்பற்றி சிறப்பாகப் பேசுவார்கள். அங்குள்ள சிறப்பைப் பற்றி பேசுவதில் தவறில்லை. ஆனால் நான் அவர்கள் ஊரைக் குறை சொன்னால் அவர்கள் முகம் வாடிவிடும். ஒரு சங்கடம் வரும். இது தவறு. இப்படி நமது ஊரோடு ஒரு உணர்ச்சிப் பிணைப்பு நமக்குள் இருக்கிறது. நாம் ஊரின் ஒரு பகுதியாக நம்மை உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

என்னைக் கேட்பார்கள், நீங்கள் எந்த ஊர் என்று – நான் திருப்பூர் என்றால், அதுதான் சொந்த ஊரா என்று கேட்பார்கள். எனக்குச் சொந்தமான ஊர் எதுவும் இல்லை, அது நான் இருக்குமிடத்தின் பெயர் மட்டுமே என்று சொல்வேன். ஊரில் என்ன இருக்கிறது, இது நம் அறிவுக்குப் புரியலாம். ஆனால் நாம் உணர்ச்சி பூர்வமாக ஒரு பிணைப்பு கொண்டிருக்கிறோம். இப்படி நமது ஊரோடு மட்டுமல்ல, நமது நாடு, நமது மொழி, ஏன் நமது பூமி தொடங்கி நமது ஊர், நமது வீதி, நான் படித்த பள்ளிக்கூடம், எனது இனம், எனது ஜாதி, எனது மதம், பிறகு எனது குடும்பம், என் சுற்றத்தார் என்று எவ்வளவாய் நாம் வாழ்கிறோம் என்று பாருங்கள். இந்த உணர்ச்சிப் பிடிப்புதான் கூட்ட மனப்பான்மை.

கூட்டம் கூட்டமாய் விலங்குகள் வாழ்கின்றன. தனது இடம், ஜாதி, சொந்தம் என்று கூட்ட உணர்வில்தான் அவை இருக்கின்றன. இந்த கூட்ட மனப்பான்மை நம்மிடமும் இருக்கிறது. இதன் அடிப்படை பாதுகாப்பு. இந்த சமூகம்தான் நமக்கு பாதுகாப்பு என்ற உணர்வு. நாம் எந்த சமூகக் கூட்டத்தில் பிறக்கிறோமோ அதன் அங்கமாக ஆகிப் போகிறோம். இது நமது உள்ளே அடி ஆழத்தில் குழந்தை பருவத்திலேயே பதிந்து போய் விடுகிறது. வளர வளர நாமும் நமது சமூகத்தைப் பார்த்து அவர்களைப் போலவே நமது சமூக கூட்டத்தில் மேலும் மேலும் அடையாளங்களை, பிணைப்பை வளர்த்துக் கொள்கிறோம். இதனால் நமக்குள் ஏற்படும் உளமனப்பான்மை, மனப்பாங்கு, பார்வை, அணுகுமுறைதான் கூட்ட மனப்பான்மை.

இதன்பின் நமது வாழ்வின் போராட்டம் முழுவதுமே நமது கூட்டத்தால் மதிக்கப்படும், போற்றப்படும், பாராட்டப்படும், அங்கீகரிக்கப்படும் ஒருவனாக ஆவதுதான். உங்களது போராட்டங்களை, முயற்சிகளை, ஈடுபாடுகளை, இலக்குகளை லட்சியங்களை, செயல்பாடுகளை கூர்ந்து பாருங்கள். அனைத்தும் எதை நோக்கி எதன் விளைவு கூட்ட மனப்பான்மையின் விளைவு, கூட்டத்தின் அங்கீகாரம் தேடல்.

ஓஷோவிடம் அவரது பேச்சால், பேச்சைப் படிப்பதால் ஈர்க்கப்பட்டு வருபவர்களுக்கு முதலில் பிடிபடாமல் போவது இதுதான். அவர்களுக்கு ஓஷோ சொல்வதெல்லாம் பிடிக்கிறது. தான் இன்னும் உயர, வளர, ஓஷோ சொல்வதெல்லாம் சரியாகவே படுகிறது. ஆனால் வந்து பார்த்தால் ஓஷோவின் படி வாழ்பவர்களுடன் சேர்ந்து இருக்க முடிவதில்லை, அவரது தியானம் நடக்கும் இடங்களில் அவர்களால் பொருந்த முடிவதில்லை. ஓஷோவின் பேச்சு ஈர்த்த அளவு அவரது வாழ்க்கைமுறை ஈர்ப்பதில்லை, மாறாக பயமாகத் தெரிகிறது, தவறாகத் தெரிகிறது. மேலும் ஓஷோ தவிர மற்ற எல்லா சாமியார் கூட்டம் நடத்தும் ஆசிரமங்களுக்கும் அவர்கள் செல்லும்போது மிக நன்றாக உணர்கிறார்கள். பொருத்தமாக இருக்கிறது. சரியாகப் படுகிறது. அந்த சாமியார்கள் பேச்சு ஓஷோ அளவு உண்மையில்லாமல், தெளிவும் ஆழமும் இல்லாமல் இருப்பது அவர்களுக்குத் தெரிகிறது. ஆனால் அவர்களது வாழ்க்கை முறை பிடித்திருக்கிறது.

ஏகப்பட்ட நண்பர்கள் இப்படி இருக்கிறார்கள். படிப்பது ஓஷோ. எண்ணங்களாலும், கருத்தாலும், ஓஷோவால் ஈர்க்கப்படுகிறார்கள். அவரையே படிக்கிறார்கள், அவரது பேச்சையே கேட்கிறார்கள். அவரையே மேற்கோள் காட்டிப் பேசுகிறார்கள். ஆனால் போவது ஏதோ ஒரு ஆசிரமத்துக்கு, ஏதோ ஒரு கோவிலுக்கு, ஏதோ ஒரு சர்ச்சுக்கு. இது ஏன், கூட்ட மனப்பான்மைதான் காரணம். எல்லா கோயில்களும் ஆசிரமங்களும் பேசுவது எதுவாக இருந்த போதிலும் நடைமுறையில் உன் கூட்டமனப்பான்மைக்கு எதிரான வாழ்வியலை கொண்டதாக இருப்பதில்லை. உனது கூட்ட மனப்பான்மை ஏற்றுக்கொள்ளப் படுகிறது. கூட்டத்தில் அங்கீகாரம் எனும் உனது இலக்கு முயற்சிக்கு உதவி செய்வதாகவே அவர்களது நடைமுறை இருக்கிறது. அங்கும் உனக்கு ஒரு அங்கீகாரம். எங்கள் கூட்டத்தில் இணைந்தவன், சிறப்பானவன் என்ற வரவேற்பு. மேலும் மேலும் அந்த கூட்டத்தில் இணைந்தவனாய் செயல்பட ஊக்கம். கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் பொறுப்பு, இப்படி உன் கூட்ட மனப்பான்மை வலுப்படுத்தவே படுகிறது. இது வேறு கூட்டமாக இருக்கலாம். ஆனால் உனது கூட்ட மனப்பான்மை உடைக்கப்படுவதில்லை, சிதறடிக்கப்படுவதில்லை. தனிமனிதனாய் வாழும் பொறுப்பு உனக்கு கொடுக்கப்படுவதில்லை.

ஆனால் ஓஷோ பேச்சு உங்கள் கூட்டமனப்பான்மையை பாதிப்பதில்லை. ஏனெனில் கூட்ட மனப்பான்மைப்படியே நீங்கள் அவரைப் புரிந்து கொள்கிறீர்கள். பாதித்தாலும் அது வெறும் எண்ணங்களை பாதிப்பதாகவே உள்ளது. ஆனால் அவரது வாழ்வியலைப் பார்க்கும்போது உங்களால் ஏற்க முடிவதில்லை. ஏனெனில் ஓஷோ கூட்ட மனப்பான்மையை உடைத்துவிட்டு தனிமனிதனாய் வாழ சொல்கிறார். அப்படி தனிமனிதனாய் வாழ ஆரம்பிக்கும்பொழுதுதான் நமக்கு உள்ளே உள்ள பிரச்னைகளைப் பார்க்க முடியும். கூட்ட மனப்பான்மையின் வாழ்க்கையில் பிரச்சனை எப்போதும் வெளியேதான். வெளியேதான் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் தனிமனிதப் பண்போடு வாழ ஆரம்பிக்கையில் பொறுப்பு நம்மிடம் வருகிறது. நமது பங்களிப்பை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம். நமது நோயை, நமது தன்னுணர்வற்ற நிலையை உணர ஆரம்பிக்கிறோம். இங்கிருந்துதான் ஆன்மீக வளர்ச்சி சாத்தியம்.

அதற்காக ஓஷோ கூட்டத்திற்கு, சமூகத்திற்கு எதிராக இருக்கச் சொல்வதில்லை. மாறாக சமூகத்தைப் பயன்படுத்திக்கொள். கூட்டமாக வாழ்வதன் வசதிகளை பயன்படுத்து. ஆனால் உனக்குள் தனிமனிதனாய் இரு. உள்ளே கூட்ட மனப்பான்மையுடன் இருக்காதே. உள்ளே ஒரு கூட்டமாய், ஒரு கும்பலாய், பலராய் இருந்தால் ஆன்மீகவளர்ச்சி சாத்தியமில்லை. நாம் சேர்ந்து கூட்டமாய் இருப்பது நமது நன்மைக்கே, நமது வளர்ச்சிக்கே. அது ஒரு ஏற்பாடு. ஆனால் அதை மறந்து அதன் பாகமாய் நாம் ஆகிவிட்டால் அப்போது நாமே அங்கு இல்லாமல் போய்விடுகிறோம். அப்போது அங்கு வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது.

இங்குதான் ஓஷோ கம்யூனிஸத்தைக் கண்டிக்கிறார். பொதுவுடமை நல்லதுதான். ஆனால் தனிமனிதனை அழிக்கும் பொதுவுடைமை நல்லதல்ல. தனிமனிதனை வளர்க்கும் பொதுவுடைமையை தான் நான் கூறுகிறேன் என்கிறார். தனிமனிதன் என்பவன் இல்லை, வெறும் சமூகமே இருக்கிறது என்பது தவறு. தனிமனிதன்தான் உண்மையில் இருப்பவன், உயிரோடு இருப்பவன். சமூகம் என்பது வெறும் ஒரு ஏற்பாடு. தனிமனிதர்களாகிய நாம் கூடி திட்டமிட்டுக் செய்துகொள்ளும் ஒரு நடைமுறை ஏற்பாடு, அது நம் வளர்ச்சிக்கு, நம் வசதிக்குத்தான். ஆனால் மாறாக இன்று மனிதன் தன்னை இழந்து கூட்ட மனப்பான்மைக்கு அடிமையாய் வாழ்கிறான்.

இதற்கு வறுமையும், பயமும் ஒரு காரணம்தான். அதனால்தான் இந்தியாவில் இது அதிகமிருக்கிறது. செல்வச் செழிப்படைந்த நாடுகளில் குறைகிறது. செல்வசெழிப்பில் உன் பயம் போகிறது. அப்போது கூட்ட மனப்பான்மையை உதறித்தள்ளிவிட்டு தனிமனிதனாய் வாழ்ந்து பார்க்கும் தைரியம் வர வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆனால் இந்தியாவில் பணமுள்ளவர்களும் தன்னைச் சுற்றி பணமில்லாத ஏராளமானபேரைப் பார்த்து பயம் கொள்வதால், பணத்தை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றனர். வாழ்ந்து பார்ப்பதில் செலவாகி நாமும் மற்றவர்கள் போல ஆகிவிடுவோமோ என்ற பயம் வந்துவிடுகிறது. அதற்கு பதிலாக கூட்டத்தில் கிடைக்கும் போலி மரியாதை என்ற போதையில் வாழ்வதையே தேர்ந்தெடுக்கின்றனர்.

ஓஷோ வாழ்முறையில் முதலில் நீ தனிமனிதன். தனிமனிதனாய்தான் பிறக்கிறாய், இறக்கப்போகிறாய், வலியும் மகிழ்ச்சியும் பசியும் தனியாகத்தான் உனக்குள் வருகிறது. ஆகவே இந்தப் பிரச்னைகளை உள்ளேதான், தனியாகத்தான் சந்திக்க வேண்டும். அதற்குரிய சூழலை ஏற்படுத்த, உதவிகரமான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ஒருவருக்கொருவர் உதவும் ஒரு கூட்டம் நல்லதுதான். ஆனால் அது தனிமனிதர்கள், தனிமனிதர்களாய் இருக்க சேர்ந்திருக்கும் கூட்டம். சமூகத்திலிருப்பதைப் போல கூட்ட மனப்பான்மையுடன், கூட்டத்திற்காக, கூட்டத்தின் அங்கமாய் இருக்கும் கூட்டமல்ல இது.

ஆகவே ஓஷோ தியானத்தில் ஆழமாகச் செல்பவர்கள், ஓஷோ வழி வாழ விரும்புபவர்களுக்கு மிகப் பெரும் குழப்பம் சமூகத்தில் வாழும்போது ஏற்படுகிறது. ஏனெனில் தியானம் செய்ய, செய்ய ஓஷோ வழியில் வாழ முற்பட, முற்பட அவர்களின் கூட்ட மனப்பான்மை உடைகிறது. தனிமனிதனாய் வாழ முற்படுகிறார்கள். அப்படி முற்படுகையில் சமூகத்திற்கு, அவர்களது சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு, ஊருக்கு, கோபம் வருகிறது. அவர்களை அறியாமலேயே கோபம் அல்லது பொறாமை வருகிறது. ஏனெனில் ஒருவன் தனிமனிதனாய் மாறி வாழ்வது அவர்களை இடித்துக் காட்டுகிறது. சமூகத்தில் சலசலப்பை, சங்கடத்தை ஏற்படுத்துகிறது. சமூகக் கட்டமைப்பை, கூட்ட மனப்பான்மையை அதனால் குளிர்காயும் சுயநலவாதிகளை பாதிக்கிறது. இது ஒருபுறம்.

தான் தனிமனிதனாய் உணர்வு பெற்று வாழும் ஒரு வாழ்க்கை, தான் கூட்ட மனப்பான்மையுடன் வாழும் ஒரு வாழ்க்கை என்று ஓஷோ அன்பர்கள் இரண்டுபட்டு இருப்பது மறுபுறம். இப்படி ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் என்பதுபோல, கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல, ஓஷோ வழி பிடிக்கிறது, ஆனால் சமூகத்தை விடுவது மிரட்டுகிறது என்ற நிலை ஓஷோ அன்பர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் சமூகம் கோபப்பட்டு மிரட்டுகையில் ஏராளமானோர் பாதுகாப்புக்கு பயந்து சமூகத்திடமே தஞ்சம் கொண்டுவிடுகின்றனர். ஓஷோவை மெதுவாக விலக்கி, ஆர்வக்கோளாறை அடக்கி, பெரும்பாலோர் பேச ஒரு நல்ல விஷயமாக மட்டும் ஓஷோவை ஆக்கிக் கொள்கின்றனர். நானும் ஒரு சிறிது காலம் ஓஷோ வழியை முயன்றேன் என்ற பெருமை மட்டும் வேறு சேர்ந்து கொள்ளும்.

இதற்கு மாற்றாகத்தான் ஓஷோ மிகச்சிறு குழுக்களாக, ஒரு 10 நபர்களுக்கு உட்பட்ட குழுக்களாக, சேர்ந்து சிறு சிறு கம்யூன்களாக வாழுங்கள் என்று அறிவுறுத்தினார்.

ஏனெனில் பெரிய கம்யூன்கள் சமூகத்தின் கோபத்தையும், பொறாமையையும் சந்தித்து சமூகத்தால் பயனடையும் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுவிடும். இது ஓஷோ அமெரிக்காவில் அனுபவித்தது.

அதேசமயம் தனிநபராய் இருந்தாலும் சமூகத்தை சந்திப்பது மிகவும் சிரமம். வசதிகள் எல்லாவற்றையும் இழந்து வாட வேண்டும்.

ஆகவேதான் சிறு கம்யூன் ஏற்பாடே இன்றைய நிலையில் உகந்தது என்கிறார் ஓஷோ.

நண்பர்களே, ஆன்மீக வளர்ச்சிக்கு, உருகடந்த உணர்வு நிலை அறிதலுக்கு, ஞானத்திற்கு செல்லும் வழி நடக்க விரும்பினால் வாழ்க்கை முறை மாறுதலுக்கு, மாற்று ஏற்பாட்டிற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். கூட்ட மனப்பான்மையினால் உள்ளே எழும் பயங்களை, தயக்கங்களை, சந்தேக உணர்வுகளை, பார்த்து, அவைகளை தன்னுணர்வோடு சந்தியுங்கள். அப்போது அவை போய்விடும். தன்னுணர்வின் முன் உண்மையான உணர்வுகள் மட்டுமே, தனிமனித உணர்வுகள் மட்டுமே நிலைத்திருக்கும். கூட்ட மனப்பான்மை உணர்வுகள் தானாகவே காணாமல் போய்விடும்.

வாருங்கள். வழி நடப்போம். வழி நடப்பதே புனிதப்பயணம். சேருமிடம் ஏதுமில்லை.


அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

எது வேண்டும் உனக்கு

நண்பா!

ஆயிரம் முறை அன்பில் விழுந்தேன்,
ஆயிரம் முறை அதை விலக்கி எழுந்தேன்.

ஆயிரம் முறை நெக்குருகி நின்றேன்,
ஆயிரம் முறை தப்பித்து ஓடினேன்.

ஆயிரம் முறை கருணையால் நனைந்தேன்,
ஆயிரம் முறை முகம் திருப்பி ஒதுங்கினேன்.

ஆயிரம் முறை என் இதயம் திறந்தது,
ஆயிரம் முறை கல்லாகி மூடிக்கொண்டேன்.

ஆனால்.......
ஆயிரம் முறை ஆணவம் பிறந்தபோது,
ஆயிரம் முறையும் அணைத்து தலைக்கனம் கொண்டேன்.

என் பிரிய நண்பா!
அதனால் விளைந்தது என்ன தெரியுமா

எல்லாம் தெரிந்தவனாய் கண்மூடிப் போனேன்,
எதுவும் முடியுமென்ற பித்துப் பிடித்தது,
கழுத்து வரை இழுத்துப் போட்டு சிக்கலில் சிக்கிக் கொண்டேன்,
காலை முதல் மாலை வரை கணக்குப் போட்டு வாழ வேண்டியதாயிற்று!

நல்லவேளை,
எங்கோ அடியில்......... இதயத்தின் ஆழத்தில்.......
பொங்கு பொங்கென்று உயிர்த்திருந்த உயிரின்குரலால்......

ஒரே தாவாய் திசை மாற்றிக்கொண்டேன்,
தலையிலிருந்து இதயத்தை நோக்கி பயணப்பட்டேன்.

ஆஹா!
எத்தனை நிறங்கள்!
எத்தனை விதங்கள்!
எத்தனை மணங்கள்!

எல்லையில்லா விளையாட்டு
காலமில்லா தொடர்நிகழ்வு!

இந்த இயற்கையின் கூத்தில்.......
எனக்கும் ஒரு பங்கு........
என்ற ஒரு ஆனந்தம்,
ரசிப்பு, அழகு, குதூகலம்,
ஏற்பு, படைப்பு, ஈடுபாடு,
இத்தனையும் கிடைத்தது!

ஆகவே நண்பா!
தலையின் ஆணவம் தருவது போராட்டம்,
இதயத்தின் வாழ்வில் பிறப்பது விளையாட்டு!
எது வேண்டும் உனக்கு?

ஓஷோ வீடியோ

1. Osho : The Fear of the unknown

2. Osho : Meditation a dancing silence

3. Osho : Make your belly your best friend

மூன்று தியான யுக்திகள்

தியான யுக்தி - 1

ஹராவில் செய்யும் இரவு நேர யுக்தி

ஓஷோ கூறுகிறார், “தொப்புளுக்கு இரண்டு இன்ச் கீழே உள்ள மையமான ஹரா எனப்படும் மையத்தில் சக்தியை குவி. இந்த மையம்தான் ஒருவர் வாழ்வில் நுழைவதற்கும் இறக்கும்போது வாழ்வை விட்டு போவதற்க்குமான மையம். அதனால் இந்த மையம்தான் உடலுக்கும் ஆன்மாவுக்குமான தொடர்பு மையம். இடமும் வலமுமாக நீ அலை பாய்ந்தால் அப்போது உனக்கு உன் மையம் எங்கு இருக்கிறதென்று தெரியாது என்று அர்த்தம். நீ உன் மையத்துடன் தொடர்பில் இல்லை என்று அர்த்தம். ஆகவே உன் மையத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்.”

எப்போது – இரவில் நீ தூங்கப் போகும் போது மற்றும் காலையில் எழுந்தவுடனேயே செய்யும் முதல் செயல்
நேரம் – 10 -15 நிமிடங்கள்.

முதல் படி – ஹராவை கண்டு பிடிப்பது
படுக்கையில் படுத்துக் கொண்டு உனது கரங்களை தொப்புளுக்கு இரண்டு இன்ச் கீழே வைத்து சிறிது அழுத்தம் கொடுக்கவும்.

இரண்டாவது படி – ஆழமான சுவாசம்
சுவாசிக்க ஆரம்பி, ஆழமாக சுவாசிக்கவும். உனது மையம் உனது சுவாசத்துடன் மேலும் கீழும் போய் வருவதை நீ உணரலாம். உனது முழு சக்தியையும் நீ அங்கே உணரு, நீ சுருங்கி சுருங்கி சுருங்கி அந்த சிறு மையமாக மட்டுமாக ஆவது போல உனது சக்தியை நீ அங்கே குவி.

மூன்றாவது படி – நீ தூங்கும் போது அங்கேயே மையம் கொள்.
இப்படி செய்துகொண்டிருக்கும் போதே தூங்கி விடு – அது உனக்கு உதவும். இரவு முழுவதும் அங்கேயே மையம் கொண்டிருப்பது தொடரும். தன்னுணர்வற்ற நிலை திரும்ப திரும்ப வந்தாலும் மையத்தில் நீ இருப்பது தொடரும். அதனால் முழு இரவும் உன்னை அறியாமலேயே பல வழிகளிலும் நீ மையத்துடன் ஆழ்ந்த தொடர்பு கொள்வாய்.

நான்காவது படி – ஹராவுடன் மறுபடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளல்
காலையில் தூக்கம் கலைந்ததாக நீ உணர்ந்தவுடன் கண்களை திறந்து விடாதே. மறுபடி உனது கரங்களை அங்கே வைத்து, ஒரு சிறிது அழுத்தம் கொடுத்து, சுவாசிக்க ஆரம்பி. மறுபடி ஹராவை உணர்ந்து பார். இதை 10 அல்லது 15 நிமிடங்களுக்கு செய். பின் எழுந்திரு.
இதை ஒவ்வொரு நாள் இரவும் காலையிலும் செய். மூன்று மாதங்களுக்குள் நீ மையப்பட்டு விட்டதை உணர்வாய்.

ஓஷோ கூறுகிறார், “மையம் கொள்ளுதல் ஒருவருக்கு மிகவும் முக்கியமானதாகும், இல்லாவிடில் அவர் துண்டாக உணர்வார். ஒன்றாக இருப்பதாக உணர மாட்டார். அவர் துண்டாடப்பட்ட புதிராக இருப்பார் – துண்டுகளாக இருப்பார், இணைந்து முழுமையானதாக, ஒன்று சேர்ந்த உருவமாக இருக்கமாட்டார். அது ஒரு மோசமான இணைப்பாக இருக்கும், மையமின்றி இருக்கும் மனிதனால் அன்பு செய்ய முடியாது, அவன் இழுத்துக் கொண்டு அலையலாம். மையமின்றி இருக்கும்போது நீ உன் வாழ்வில் தினசரி செயல்களை செய்யலாம், ஆனால் உன்னால் உருவாக்குபவனாக இருக்க முடியாது. நீ குறைந்த பட்சம் மட்டுமே வாழ முடியும். அதிக பட்சம் உனக்கு சாத்தியமே அல்லை. மையத்தின் மூலம் மட்டுமே ஒருவர் அதிக பட்சமாக, சிகரத்தில், உச்ச கட்டத்தில், முடிந்த வரை முழுமையாக வாழ முடியும். அதுதான் உண்மையான வாழ்க்கை, அதுதான் வாழ்வது.

A Rose is a Rose is a Rose

தியான யுக்தி - 2

உனது பாதங்கள் மூலமாக சுவாசி

“பாலுணர்வு மையத்தை தாண்டி கீழே செல்ல மக்கள் பயப்படுகிறார்கள். உண்மையில் பலர் தங்களது தலையில் வாழ்கிறார்கள், ஒரு சிறிது தைரியமுள்ள மக்கள் தங்களது உடலில் வாழ்கிறார்கள். அதிக பட்சமாக மக்கள் நாபிக்கமலம் வரை செல்கிறார்கள், அதை தாண்டி செல்வதில்லை, அதனால் உடலின் பாதி செயலற்றதாகி விடுகிறது, அதன் விளைவாக வாழ்வின் பாதி செயலற்றதாகிறது. பின் பல விஷயங்கள் சாத்தியமற்றதாகி விடுகிறது, ஏனெனில் உடலின் கீழ் பாகம் வேர் போன்றது. அவைதான் வேர். கால்கள்தான் வேர்கள், அவை உன்னை பூமியுடன் இணைக்கின்றன. கால்களை உணராத மக்கள் பூமியுடன் தொடர்பின்றி ஆவிகளைப் போல அலைகின்றனர். ஒருவர் பாதத்துக்கு திரும்ப வந்தாக வேண்டும்.

உனது சுவாசத்தின் எல்லைதான் உனது இருப்பின் எல்லை என்பது கிட்டதட்ட உண்மைதான். உனது எல்லை கால்கள் வரை அதிகரித்து விடும்போது உனது சுவாசமும் கால் வரை செல்கிறது. உடல் ரீதியாக அல்ல, ஆனால் மிக ஆழமான மனோரீதியாக செல்கிறது. பின் உனது முழு உடலையும் சொந்தம் கொண்டாடலாம், முதன் முறையாக நீ முழுமையானவனாக, ஒன்றாக, இணைந்திருப்பவனாக இருப்பாய்.

செய்முறை

பாதங்களை மேலும் மேலும் அதிகமாக உணர்ந்து பார், சில நேரங்களில் செருப்பின்றி பூமியின் மீது நின்று அதன் குளிர்ச்சியை, மிருது தன்மையை, கதகதப்பை உணர்ந்து பார். அந்த நேரத்தில் பூமி கொடுப்பது எதுவோ அதை உணர்ந்து அது உன் வழியே கடந்து செல்ல அனுமதி. பூமியுடன் தொடர்பு கொள்.

பூமியுடன் தொடர்பு கொண்டால், நீ வாழ்வுடன் தொடர்பு கொள்கிறாய். பூமியுடன் தொடர்பு கொண்டால் நீ உனது உடலுடன் தொடர்பு கொள்கிறாய், நீ பூமியுடன் தொடர்பு கொண்டால் நீ மையம் கொண்டவனாகவும் மிகுந்த உணர்வுள்ளவனாகவும் மாறிப் போவாய். அதுதான் தேவையானது.

A ROSE IS A ROSE IS A ROSE

தியான யுக்தி - 3

பாதத்திலிருந்து சிரி

எப்போது – இரவின் கடைசி செயலாகவும் காலையின் முதல் செயலாகவும்

முதல் படி – உட்கார்ந்து கொண்டு ஆரம்பி......
அறையின் நடுவில், கண்களை மூடிக் கொண்டு தரையில் உட்கார்.

இரண்டாவது படி – பிறகு...........
உனது பாதத்திலிருந்து சிரிப்பலைகள் கிளம்பி வருவதாக உணரு. அவை மிகவும் மெலிதானவை. பின் அவை உனது வயிற்றை அடையும் போது அவை தெரிய வரும், உனது வயிறு குலுங்கி அதிரும். இப்போது அந்த சிரிப்பை உனது இதயத்துக்கு கொண்டு வா. இதயம் நிரம்பி வழியும். பின் அதை உனது தொண்டைக்கும் பின் உதடுகளுக்கும் கொண்டு வா.
சிரிப்பு உனது பாதத்திலிருந்து ஆரம்பிக்க பட வேண்டும், பின் மேலெழ வேண்டும். சிரிப்பினால் உனது முழு உடலும் அதிர அனுமதி. ஆரம்பத்தில் நீ அதை ஒரு சிறிது மிகைப்படுத்தினால் கூட பரவாயில்லை, அது உதவும்.

THE GREAT NOTHING

கூட்டத்தின் பலம் – ஓஷோவின் கதை 25

உனது மனதின் உள்ள விஷயங்கள் அனைத்தும் கட்டுதிட்டத்தினாலும் திட்டமிடுதலாலும் உருவாக்கப்பட்டவைதான். சமுதாயம் இதைத்தான் செய்கிறது. நாம் கடந்த காலம் முழுவதும் இது போன்ற அசிங்கமான வகையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

அங்கு அப்படி எதுவும் இல்லாத போதும் மற்றவர்களால் அது உருவாக்கப்படுகிறது என்ற கருத்தை எனது பேராசிரியர்களில் ஒருவர் ஏற்றுக் கொள்ள வில்லை. நான் இதை நிருபிக்கிறேன் என்று நான் கூறினேன்.. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும், அவரது மனைவியும் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். நான் அவரது மனைவியிடம் சென்று, நாளை காலை பேராசிரியர் எழுந்தவுடன், நீங்கள் அதிர்ச்சியடைந்தது போல காட்டிக் கொண்டு அவரிடம் சென்று, என்னாயிற்று உங்களுக்கு? இரவு படுக்கைக்கு செல்லும்போது நன்றாகத்தானே இருந்தீர்கள்! இப்போது உங்களது முகம் வெளுத்தாற்ப்போல இருக்கிறதே, உடம்பு சரியில்லையா உங்களுக்கு? எனக் கேட்க வேண்டும் எனக் கூறினேன்.

அடுத்த நாள் காலை பேராசிரியர் இதை உடனே மறுத்து விட்டார். அவர் “என்ன உளருகிறாய்? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்”. என்று கூறி விட்டார்.

நான் அடுத்ததாக அவரது தோட்டக்காரரிடம், “அவர் தோட்டத்துக்கு வந்தவுடன் நீங்கள், என்னவாயிற்று? கடவுளே! என்ன நிகழ்ந்தது? உங்களால் நடக்க முடிய வில்லை, நீங்கள் நடுங்குகிறீர்கள். உங்களுக்கு என்னவோ நடந்து விட்டது, உள்ளே சென்று உட்கார்ந்து ஓய்வு எடுங்கள். நான் போய் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று கூற வேண்டும்.” என்று கூறினேன்.

மேலும் நான் இவர்கள் இருவரிடமும் அவர் என்ன கூறினாரோ அதை அப்படியே அவரது வார்த்தைகளிலேயே எழுதி வையுங்கள். நான் வந்து பெற்றுக் கொள்கிறேன். என்று கூறினேன்.

அவர் தோட்டக்காரரிடம், “ஆமாம், என்னவோ போல இருக்கிறது, நான் ஓய்வு எடுக்க வேண்டும், என்னால் பல்கலைகழகத்துக்கு போக முடியாது. ஆனால் டாக்டரை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை.” எனறார். அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார். எந்த பிரச்னையும் இல்லை. அதனால் அவர் பல்கலைகழகத்துக்கு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ போவதாக முடிவெடுத்தார்.

அவர் செல்லும் வழியில் நான் நம்பும் பலரிடமும் சொல்லி வைத்தேன்.... அடுத்ததாக வழியில் ஒரு போஸ்ட் மாஸ்டர் இருந்தார், நான் அவரிடம், “நீங்கள் மிகவும் வேலையாக இருந்தால் கூட தவற விட்டு விடாதீர்கள். பேராசிரியர் உங்களை கடந்து செல்லும் போது எங்கே செல்கிறீர்கள்?, என்ன செய்கிறீர்கள்?, உங்களுக்கு பயித்தியமா? உங்களுக்கு உடம்பு சரியில்லை, நீங்கள் என் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுங்கள், நான் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். அவர் கூறுவதை குறித்துக் கொள்ளுங்கள்.” என்றேன்.

நான் குறிப்புகளை சேகரித்து கொள்கிறேன் என்று கூறினேன்.
பேராசிரியர், “ஆமாம், நேற்று இரவிலிருந்து என்னவோ தவறாகிப் போனது போல ஒரு உணர்வு. என்ன தவறாகிப் போனது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் என்னவோ சரியில்லை. நான் இன்னும் நெடுநாள் வாழப் போவதில்லை என்பது போன்ற ஒரு அச்சம், ஒரு நடுக்கம் உள்ளே ஓடுகிறது.” என்றார்.

அவரது வீடும் பல்கலைகழகமும் கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவர் எப்போதும் நடந்துதான் போவார். ஆனால் அன்று அவர் வழியில் வந்த மற்றொரு பேராசிரியரின் காரை நிறுத்தி, “என்னால் நடந்து பல்கலைகழகத்தை வந்தடைய முடியுமா என்று தெரியவில்லை”. என்றார்.
பல்கலைகழகம் இருந்த இடம் மலைப்பகுதி, மேடும் பள்ளமுமானது. இவரது வீட்டிலிருந்து அவரது தத்துவ பிரிவு இருந்த இடம் மேடானது. அந்த பிரிவு மலைஉச்சியின் மீது அமைந்திருந்தது. அவரது வீடு கீழே பள்ளத்தில் இருந்தது.

பேராசிரியர், “எனக்கு மூச்சு வாங்குகிறது... உடம்பு நடுங்குகிறது. எனக்கு காய்ச்சல் என்று நான் நினைக்கிறேன். என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனக்கு என்னமோ போல் இருக்கிறது”. எனக் கூறி லிப்ட் கேட்டார்.

அவரை கடந்து போன பேராசிரியரும் என்னால் அனுப்பி வைக்கப்பட்டவரே. அவர் மிக மோசமான நிலையில் இருப்பதைப் போல நீங்கள் காரை நிறுத்தி, என்ன பிரச்னை என கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.. காருக்குள் இவர், “நீங்கள் வந்திருக்கக் கூடாது, நீங்கள் டாக்டரிடம் போயிருக்க வேண்டும். உங்களது கண்கள் பஞ்சடைத்துப் போயிருக்கிறது, உங்களது முகம் வெளுத்துப் போயிருக்கிறது, பழுதாகிப்போன ஓவியம் போல இருக்கிறீர்கள். ஒரே நாள் இரவு என்னவாயிற்று? இரவில் ஹார்ட் அட்டாக் வந்ததா என்ன? அது மிகவும் மோசமாக பாதித்திருக்கும் போலிருக்கிறதே.” என்று கூறினார்.
அதற்கு அவர், “நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்போல இருக்கிறது. அப்போது எனக்குத் தெரியவில்லை, இப்போது என்னால் உணர முடிகிறது. எல்லா விதமான அறிகுறிகளும் எனது வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது போல காட்டுகிறது”. என்றார்.
அவர், தத்துவ பிரிவுக்குள் நுழையும் போது அங்கு வாசலில் உட்கார்ந்திருக்கும் பியூனிடம் நான், அவர் வந்தவுடன் நீ உடனே எழுந்து அவரை தாங்கிப் பிடித்துக் கொள் என்று கூறியிருந்தேன்.
அவன், “ஆனால் அவர் மிகவும் கோபப்படுவாரே, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. நீங்கள் இதுபோல இதற்கு முன் கேட்டதே இல்லையே.” என்றான்.

அதற்கு நான், “நானும் பேராசிரியரும் ஒருவிதமான பரிட்சார்த்தமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். நீ, நான் சொல்வதை மட்டும் செய். குறுக்கிடாதே. நீ அவரை பிடித்துக் கொண்டு, நீங்கள் விழ இருந்தீர்கள் என்று சொல்.” என்றேன்.

அவனும் அப்படியே செய்தான். பேராசிரியர் அவனுக்கு நன்றி கூறினார். அநத பியூன் அவரிடம் நீங்கள் கீழே விழ இருந்தீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவரே அவனிடம், “நீ இங்கில்லையென்றால் நான் கீழே விழுந்திருப்பேன்!” என்று கூறினார்.
பிரிவினுள்ளே நான் அவருக்காக காத்துக் கொண்டிருந்தேன். நான் அவரைப் பார்த்தவுடன், “கடவுளே, நீங்கள் ஆவி போல காணப்படுகிறீர்கள், உங்களுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டேன். அவரைப் பிடித்து, ஒரு சாய்வான நாற்காலியில் உட்கார வைத்தேன்.

அவர், “ஒரு விஷயம் நான் உன்னிடம் சொல்ல வேண்டும். என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். – அவருக்கு இரண்டு குழந்தைகள் – என்னுடைய மனைவி அனுபவமற்ற சிறிய பெண். என் தாயும் தந்தையும் இறந்து விட்டனர். வேறு யாரும் எனக்கு கிடையாது. நான் போய் விட்டால் அவர்களை காப்பாற்ற கூடிய வேறு யாரையும் எனக்குத் தெரியாது. நான் உன்னைத்தான் நினைத்தேன்” என்றார்.
நான், “நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் மனைவி ஆகியோரை உங்களை விட நன்றாக வைத்துக் காப்பாற்றுவேன். ஆனால் நீங்கள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் நான் உங்களிடம் சில குறிப்புகளை காண்பிக்க விரும்புகிறேன்.” என்றேன்.
அவர், “சில குறிப்புகளா என்ன?” என்றார்.

“நான் போய் அவற்றை சேகரித்துக் கொண்டு வருகிறேன்” என்றேன்.

அவர், “யாரிடமிருந்து?” என்று கேட்டார்.

நான், “உங்கள் மனைவி, உங்கள் தோட்டக்காரர், போஸ்ட் மாஸ்டர், உங்களை இங்கே இறக்கி விட்ட பேராசிரியர், நீங்கள் விழாமல் உங்களை பிடித்த பியூன்.” என்றேன்.

அவர், “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டார்.
நான், “இதெல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். இல்லாத ஒன்றை வைத்து மனிதனை ஏமாற்ற முடியாது என நீங்கள் சொல்ல வில்லை?” என்றேன்.

நான் சென்று எல்லா குறிப்புகளையும் பெற்று வந்தேன். அதை ஒவ்வொன்றாக அவரிடம் காண்பித்தேன். மேலும் நான் அவரிடம், “எப்படி நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள் என்று நீங்களே பாருங்கள். ஒன்றுமில்லை என்பதை உங்கள் மனைவியிடம் முற்றிலுமாக மறுத்தீர்கள். தோட்டக்காரரிடம், ஒரு வேளை ஏதாவது இருக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் அது ஒருவேளை என்றுதான் இருக்கிறது. அதில் உங்களுக்கு உறுதி இல்லை. ஆனால் அந்த எண்ணம் வந்து விட்டது. போஸ்ட் மாஸ்டரிடம், ஆமாம், ஏதோ ஆகி விட்டது. காலையிலிருந்து ஏனோ நான் மிகவும் நன்றாக இல்லாமல்தான் இருக்கிறேன், மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறி இருக்கிறீர்கள். பேராசிரியரிடம் காரில் வரும்போது நீங்களே தூங்கும்போது ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாக ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறீர்கள் – அவர் மிகவும் வலிமையுள்ள மனிதர் – தத்துவ பிரிவு வரை நடந்து வர முடியாது என நீங்களே நினைத்தீர்கள். மேலும் அந்த பியூன் குதித்து உங்களை தாவிப் பிடித்துபோது, நீங்கள் நான் விழ இருந்தேன், பிடித்துவிட்டாய், மிகவும் நன்றி என்று கூறியிருக்கிறீர்கள். இது உங்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு கருத்து. அவ்வளவுதான்.” என்று கூறினேன்.
என்ன நிகழ்ந்தது பார்த்தீர்களா? இதை தொடர்ந்து நிகழ்த்தியிருந்தால் இந்த மனிதன் இறந்து போகக்கூடும். ஒரு தர்க்க வாதத்தில் அவர் ஒத்துக் கொள்ளாத ஒரு நிலையை நான் நிரூபிக்க முயன்றேன், அவ்வளவுதான். அவர் இறந்து போவதை நான் விரும்ப வில்லை. இல்லாவிடில் டாக்டரிடம் பேசி, அவர், “உனது நாட்கள் எண்ணப்படுகின்றன, அதனால் என்ன செய்ய விரும்புகிறாயோ – உயில் எழுதுவது மற்றும் வேறு ஏதாவது – அதை செய். நான் உதவக்கூடியது எதுவுமே இல்லை, உனது இதயத்தின் வாழ்நாள் முடிந்து விட்டது. அது எந்த நிமிடமும் ஓய்வெடுத்துக் கொள்ளக்கூடும்.” என்று அவரை சொல்ல சொல்லியிருக்கலாம். நான் அவரை ஒரு கருத்தின் மூலமாக கொன்றிருக்க முடியும். இந்த குறிப்புகளை பார்த்த உடனேயே அவர் சரியாகி விட்டார், மிகவும் ஆரோக்கியமாகி விட்டார். அவர் சிரித்துக் கொண்டே பியூனைப்பார்த்து, “அவர் சொல்வதை கேட்காதே, அவர் மிகவும் அபாயகரமான மனிதர், அவர் கிட்டதட்ட என்னை கொன்று விட்டார்,” என்றார், மேலும் அவர் அந்த மற்றொரு பேராசிரியரிடம், “இது சரியல்ல, நீ எனக்கு ஹார்ட் அட்டாக் என்று பரிந்துரை செய்தாய்” என்று கூறினார். போஸ்ட் மாஸ்டரிடம், “நீங்கள் எனது பக்கத்து வீட்டுக்காரர், என்னை இறப்பு வரை தள்ளுவது சரியா” என்று கேட்டார்,

அவர் மிகவும் கோபமடைந்தது தனது மனைவியிடம்தான். அவர், “அவன் மற்ற எல்லோரையும் சரி கட்டிவிட்டான். – அவர் எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருந்தார் – ஆனால் என்னுடைய மனைவியே என்னை ஏமாற்றி விட்டாள், அவன் பேச்சைக் கேட்டாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் ஒரு வாத போட்டியில் இருந்தோம், அது என்னுடைய மதிப்பு மரியாதை சம்பந்தப்பட்டது, நீ அதை கெடுத்துவிட்டாய்” எனக் குற்றஞ்சாட்டினார்.

ஆனால் அவரது மனைவி, “நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும், இல்லாத ஒன்றிற்காக மனிதனை கட்டுதிட்டம் செய்ய முடியும் என அவர் உங்களுக்கு நிரூபித்ததற்காக நீங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்.” என்றார்.

நீ கிறிஸ்துவன் என நீ உன்னை பற்றி நினைக்கிறாயா? அது உன் மேல் திணிக்கப்பட்டது. நீ உன்னை கடவுள் என நினைக்கிறாயா? ஒரு கருத்து உன்மேல் திணிக்கப்பட்டது. சொர்க்கம் நரகம் என்பது உண்டென்று நினைக்கிறாயா? அது வேறொன்றுமில்லை, திட்டமிட்டதுதான். உன்னுள் உள்ள அனைத்தும் திட்டமிட்டதுதான்.

From the False to the Truth che #19