Monday, April 25, 2011

மலர் 3 இணைய இதழ் 9 11 ஏப்ரல் 2011

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்தில் த்யான் சித்தார்த், ஓஷோ தரிசனம் எனும் மூன்று நாள் பட்டறையை இந்த மாதம் 22,23,24, தேதிகளில் நடத்துகிறார். 15 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. ஒரு நபருக்கு உணவு உறைவிடம் உள்பட கட்டணம் 1500. விரைந்து முன்பதிவு செய்துகொள்ளவும்.

திருப்பூரில் உள்ள ஓஷோ சாஸ்வதம் தியானமையத்தில் (கிளை) விரும்பும் அன்பர்கள் வந்திருந்து தியானம் செய்யலாம்.

தலையங்கம்

நான் சென்னைக்கு ஒரு தியானப் பட்டறை நடத்தப் போயிருந்தேன். அப்போது ஓஷோவை நிறையப் படித்தவர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு ஓஷோ இனிக்கிறார். படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த இனிப்பை சாப்பாட்டுக்கு பயன்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. தங்கள் வாழ்க்கைக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை. கசப்பை மறக்க மட்டுமே பயன்படுவதாக, துயரங்களை, கஷ்டங்களை தாங்க மட்டுமே பயன் தருவதாக இருக்கிறது. அவர் சொல்லும், சுட்டிகாட்டும் நிலையை, வாழ்க்கையை பார்க்கத் தெரியவில்லை.

சாமியார்கள், தலைவர்கள், தன்னம்பிக்கைவாதிகள், ஆன்மீகவாதிகள், கவிஞர்கள், நடிகர்கள், கலைஞர்கள், பெண் விடுதலையாளர்கள், அறிவுஜீவிகள் ஆகிய எல்லோரையும் பொறுத்தவரை தியானம் என்பது மிக அவசியமான ஒன்று என்பது ஓஷோவிற்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மறுக்கமுடியாத விஷயமாகிவிட்டது. ஆனாலும் எல்லோரும் வாழ்க்கைக்கு, தங்கள் வாழ்க்கைக்கு, தாங்கள் வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கு – தியானம் உதவும், உதவுகிறது, எப்படியெல்லாம் உதவமுடியும் என்று ஆராய்ந்து பயன்படுத்துகிறவர்களாகவும், அடுத்தவர்களுக்கு பாடம் எடுப்பவர்களாகவும், அதை வைத்து வியாபாரம் செய்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

ஆனால் ஓஷோவிற்கு அப்படியல்ல. ஓஷோ சொல்வதும் அது அல்ல. வாழ்க்கைக்கு பயனுறும் பயிற்சி அல்ல தியானம். உடல் நோயைத் தீர்க்கவும், ஆயுளை அதிகப்படுத்தவும், இளமையை காத்துக்கொள்ளவும், திறமையை வளர்த்துகொள்ளவும்,டென்ஷனை குறைத்துக்கொள்ளவும், மன அழுத்தத்தை, உளைச்சலை விரட்டவும், ஞாபக சக்தியை வளர்த்துகொள்ளவும், கோபத்தை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்திக்கொள்ளவும், அன்பை அதிகப்படுத்திக் கொள்ளவும், உலக சமாதானத்திற்கு உதவவும், போர், சண்டை, மத நல்லிணக்கமின்மை ஆகியன நீங்கவும் செய்வதல்ல தியானம். வறுமை ஒழிப்பு, கல்வி புகட்டுதல், மரம் நடுதல் ஆகியன செய்யத் தூண்டுவதோ, இது போன்ற அரசியல் நடத்தி கூட்டம் கூட்டி வியாபாரம் பெருக்குவதோ தியானத்தோடு தொடர்புடையது அல்ல. குடும்ப அமைதி, குடும்ப நல்லிணக்கம், தாய் தந்தையர் பேணல், குழந்தை வளர்ப்பு, மனைவி நலம் ஆகியன செய்ய தூண்டுவதல்ல ஓஷோவின் தியான நோக்கம். சமூக ஏற்றதாழ்வு, சுரண்டல் சமூக அமைப்பு, சாதிக்கொடுமை ஆகியனவற்றை அழிக்கும் முயற்சியும், சுயமரியாதையை தோற்றுவிக்கும் குறிக்கோளும் கொண்டதல்ல ஓஷோ கூறும் தியானம்.

ஓஷோ கூறும் தியானம் உன் வாழ்க்கையோடு சம்பந்தபட்டதல்ல. அவர் வாழும் வாழ்க்கையோடு சம்பந்தபட்டது. ஓஷோவிற்கு இயற்கையின் இணைப்புணர்வே தியானம். அது மூச்சுப் போன்று இயல்பாக இயற்கையோடு இணைந்துள்ள உணர்வு நிகழ்வு. அதில் நீ இறந்துகொண்டேயிருக்கிறாய், பிறந்துகொண்டேயிருக்கிறாய், வானத்தில் பறக்கும் பறவை பறந்த தடத்தை பதிய விட்டுச் செல்லாமல் பறப்பது போல இயற்கையோடு இயைந்துள்ளது உன் வாழ்வு. நீ நீயல்ல. நகரும் வாழ்வின் ஓர் முனை. புவிஈர்ப்பை கடந்துவிட்ட வாழ்வெனும் அதிவேக ராக்கெட்டின் ஓர் கண வாழ்வனுபவம் நீ. நீ என்பது ஒரு குறிப்பிட்ட மன பிம்பமோ, உடலோ அல்ல. நீ செய்யும் செய்ய விரும்பும் செயல்கள் அல்ல. நீ சக்தியின் வெளிப்பாடு. சக்தியின் லீலை, சக்தியின் நடனம், நடனமற்றவன் இல்லாத நடனம். நடனம் ஆடும் ஆனந்தம், அழகு, அனுபவிக்கும் சாட்சிபாவம், ஆகிய குணங்கள் அங்கே உள்ளன. ஆனால் அவை உன் குணங்கள் அல்ல. இயற்கையின் குணங்கள். பிரபஞ்சத்தின் குணங்கள். அவை நான் என்ற வரையறைக்குள் உணரப்படும்போது அது பொய்யானதாகவே, உனது துன்பத்தின் பின்புலத்தைச் சேர்ந்ததாகவே இருக்கும்.

ஆகவே ஓஷோவின் தியானம், இயற்கையோடு உள்ள மறந்துவிட்ட இணைப்புணர்வை கண்டெடுக்கும் அனுபவம், அதன்பின் அங்கு நீ, நான் என்பதில்லை. பிரபஞ்ச சக்தியே இருக்கிறது. அங்கு பிரபஞ்சத்தின் மர்மம் இருக்கிறது. சமநிலை இருக்கிறது. லீலை இருக்கிறது. மெளனம் இருக்கிறது. புயல் இருக்கிறது. ஆழமும் இருக்கிறது. மேலே அலையும் இருக்கிறது.

ஆகவே ஓஷோ உனது தற்போதைய வாழ்வுக்கு உதவ தியானம் பற்றிக் கூறுவதில்லை. உனது தற்போதைய வாழ்வு விலங்குணர்ச்சிகளையும், சமூக பாதிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டது.

நீ பிறக்கும்போது உனக்கிருந்தது விலங்குணர்ச்சிகள். இது தவறோ, மோசமோ, தாழ்ந்ததோ அல்ல. இது வெறும் ஒரு நிதர்சன உண்மை. மனிதன் மிருக உணர்ச்சிகளுடனேயே பிறக்கிறான். ஆனால் அவன் முழு வளர்ச்சியடையாமல் பிறக்கிறான். ஆகவே தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, தன்னை வளர்த்திக்கொள்ளும் பொருட்டு அவன் தன்ணுணர்வு கொண்டவனாகப் பிறக்கிறான். அந்த தன்ணுணர்வால் அவன் வெளி அனுபவங்களின் தாக்கத்தை பொறுத்து ஒரு நான் என்ற சுய கற்பனை பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறான்.

அடியில் விலங்குணர்ச்சிகளான வாழும் வேட்கை, சாவுக்கெதிரான போராட்டம்,பொறாமை, பேராசை, வன்முறை, கோபம், தந்திரம், போன்ற உணர்ச்சிகள். அதன்மேல் முகமூடியாக சமூக பாதிப்பால் விளைந்த நான் எனும் சுய கற்பனை பிம்பம். நமது எல்லா விலங்குணர்ச்சிகளும் இந்த நான் என்பதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு அடக்கி வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவில், அனுமதிக்கப்பட்ட விதத்தில் மட்டுமே வெளிப்படுகின்றன. இந்த விலங்கின, சமூக பின்புலத்திலிருந்து செயல்படும் இயந்திரங்களாக இருக்கிறான் மனிதன். ஏனெனில் சமூக பின்புலத்தால் உருவான நான் என்பதை தொடர்ந்து அதனை கட்டிக்காப்பாற்ற ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டமே மனம்.

இந்த மனம் சமூக கருத்துகளும், தாக்கலும், எதிர்பார்ப்பும் அதிகமானதைத் தொடர்ந்து அதிக வேகம் கொண்ட எண்ண ஓட்டமாகவும், இடைவிடாது 24 மணி நேரமும் ஓடுவதாகவும் மாறிவிட்டது. அதுவே பெரும்பான்மை சக்தியை எடுத்துக் கொண்டு எஜமானனாக ஆகிவிட்டது.

முற்றிலும் வளராத உடலைப் பாதுகாத்துக்கொள்ள, தன்ணுணர்வு கொண்ட குழந்தைக்கு நான் என்பதும் அந்த நானை காப்பாற்றும் மனம் என்பதும் ஒரு அவசியம். ஆனால் உடல் வளர்ந்தபின் மனிதன் தன்ணுணர்வோடு விலங்கின உணர்ச்சிகளை வாழ்ந்து பார்க்கும் ஒரு வாழ்வே இயல்பானது, இயற்கையானது. இதற்கு மாறாக சமூகம் நானை பெரிதும் வளர்த்துவிடுகிறது. அந்த நான் என்பதை வாழ்ந்து காட்டும் வாழ்வே திணிக்கப்படுகிறது. இந்த சமூக பாதிப்பால், அடக்குமுறையால், தவறான கட்டுகோப்பால், மனம் எஜமானனாகிவிடுகிறது.
உண்மையான விலங்கியல் உணர்ச்சிச் சந்தோஷங்கள் சமூகத்தால் மறக்கடிக்கப்பட்டு போலியான புகழ், பாராட்டு, அந்தஸ்து, மரியாதை போன்றவற்றிற்கான வாழ்க்கை போதிக்கப்படுகிறது.

தன்ணுணர்வோடு மனிதன் விலங்கின உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போதுதான் காமம் அன்பாகிறது. உழைப்பு படைப்பாகிறது. இறப்பின் உண்மை உரைப்பதால் உடலின் மீது பற்று குறைகிறது, வெற்றியும் தோல்வியும் கடந்த மனித நேயம் பிறக்கிறது, அழகைச் சுவைக்கத் தோன்றுகிறது. தியான அனுபவம் கிடைக்கிறது.
அந்த தியான அனுபவத்திற்குப் பின் வாழ்வின் தன்மை மாறிவிடுகிறது. கருணையும், அந்பும், சாந்தமும், அமைதியும், அருளும், அழகும், மெளனமும், கனிவும், பரிவும், கொண்ட வாழ்க்கை துவங்குகிறது.

ஆகவே ஓஷோவின் தியானம் ஒரு அடுத்த பரிணாம வாழ்க்கை முறை. இந்த வாழ்வின் எல்லா வசதிகளையும் தியானத்திற்கு பயன்படுத்து, அது உன்னை அடுத்த உயர்மட்ட வாழ்வுக்கு எடுத்து செல்லும் என்பதே ஒஷோ கூறுவது.

உனது இன்றைய வாழ்க்கை மேம்போக்கானது, பொய்யானது, போலியானது, இயந்திரத்தனமானது, கட்டுப்படுத்தப்பட்டது, அடிமைத்தனமானது, மனப்பேயின் ஆட்டமாய் இருப்பது, தனிமை கண்டு அஞ்சுவது, மரணத்தை வாழமுடியாதது, கூட்டத்தைத் தேடுவது, சமுதாய பாகமாய் இருப்பது, இயற்கையின் இணைப்பை உணராதது, ஆழத்தை உணராதது, அகம்பாவத்திற்குப் போராடுவது, அழகற்றது, தெளிவற்றது, பெருமைக்கு வாழ்வது, தூக்கமும் சோர்வும் கொண்டது, கடந்த கால சுமையின் பாரம், எதிர்கால கனவின் பாதிப்பு, இக்கணத்தை உணரமுடியாதது. இதை விடுத்து இயற்கையின் இணைப்புணர்வில் வேர் கொண்டவனாய் முளைத்து தழைத்து கிளைவிட்டு பூப்பூத்து மணம் பரப்புபவனாய், தனிமை விட்டு இயற்கையோடு மீண்டும் மீண்டும் இணையும் ஆனந்த அனுபவத்தில் திளைப்பவனாய் வாழச் சொல்வது ஓஷோவின் தியானம்.

நண்பர்களே வாருங்கள் !
இந்த வாழ்வை பணயம் வைப்போம்
இயற்கை இணைந்த வாழ்வுக்காக தியானம் புரிவோம் !

அன்பு,
சித்.


கவிதைப் பகுதி

அன்பு ஒரு சந்திப்பு

கோபம், பொறாமை, பேராசை
பயம், அடிமைத்தனம், பதுங்கல்,
அதிகாரம், ஆணவம், சூழ்ச்சி

இவை விலங்குகள் தம்தம் நிலையில்
தப்பித்து உயிர் பிழைக்க
தழைத்திருக்கும் உபாயங்கள்.

தானாய் புலன்வழி இயங்கி
தகவல் பெற்று தன்னை மேலும்
மெருகேற்றிக் கொண்டிருக்கும்
இந்த மனம் விலங்கு மனம் இது ஒரு புறம்

சக்திமயமாய் ஊற்றெடுத்து
சலனங்களில் உலகம் படைத்து
சர்வத்திலும் வியாபித்திருக்கும்
சாட்சிபாவ கடவுள் நிலை மறுபுறம்.

இரண்டும் சந்திக்கிறது
சிந்திக்கிறது
சாதிக்கிறது
அது அன்பில்
மனிதனில்
ஆம். மனிதனில் நேயத்தை எடுத்துவிட்டால் விலங்கு.
ஆம். மனிதனில் விலங்கை விலக்கிவிட்டால் கடவுள்.



. மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ


 ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம், ஆனால் அதற்குக ஒரே ஒரு பதில்தான். உனது விழிப்புணர்வு.

 வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல. மனித மனங்களை தவிர.

 வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள். வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே.

 நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை.

 வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால் இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்.

 வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை ஒரு வாய்ப்புதான், ஒரு வாசல்தான்.

 கொடுப்பவனாக இரு. உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்.

 அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும். வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும், பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.

 இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டுவிடமுடியும் ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்.

 தேடுதல் அழிவற்றதை நோக்கியதாக இருக்கவேண்டும் மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது.

 ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும். அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல.

 எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை ஏற்றுக் கொள்வதே தைரியம். பயம் அங்கிருக்கும், ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை ஏற்றுக்கொண்டால் மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்துவிடும்.

 உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக பார். நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்.

 நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல. நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை.

 இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது, இந்த கணம் மட்டுமே உள்ளது நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்.

 ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது.

 உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதை கவனி.



ஓஷோ வீடியோ

1. OSHO : ALLOW THE SILENCE TO GROW




2.OSHO : I DON’T WANT TO BE RESPECTABLE



3. OSHO : NO TIME FOR MEDITATION




தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

உனது சொந்த குரலை கண்டுபிடித்தல்

நீ உனது சொந்த விருப்பத்தின் மூலமாக செயல்பட முடிந்தால், உனது உள்ளுணர்வு சொல்வதை தேர்ந்தெடுக்கமுடிந்தால். . . . ! உனது உள்ளுணர்வு குழந்தை பருவத்தில் மிகவும் வலிமையானதாக இருக்கும். ஆனால் வளர வளர மெதுமெதுவாக அது வலிமையிழந்துவிடுகிறது. பெற்றோர்களின், ஆசிரியர்களின், சமுதாயத்தின், குருமார்களின் குரல் வலுத்து ஒலிக்க ஆரம்பித்துவிடுகிறது. நீ உனது குரலை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அந்த கூட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும்.

முதல் படி:
உள்ளே கவனி – இது யாருடைய குரல் ? சில நேரங்களில் அது உனது தந்தையினுடையதாக சில சமயங்களில் அது உனது தாயினுடையதாக, சில நேரங்களில் தாத்தாவினுடையதாக, சில நேரங்களில் உனது ஆசிரியருடையதாக இருக்கலாம். இவையனைத்தும் வேறு வேறு விதமாக இருக்கும். அவ்வளவு சுலபமாக அடையாளம் காண முடியாத ஒரே விஷயம்- உனது சொந்த குரல். அது எப்போதும் அடக்கி வைக்கபட்டிருக்கும். பெரியவர்கள் சொல்வதை, குருமார்கள் சொல்வதை, ஆசிரியர்கள் சொல்வதை, கேட்கவேண்டும் என்று உனக்கு சொல்லப்பட்டிருக்கும். ஆனால் உன்னுடைய சொந்த குரலை கவனி, அது கூறுவதை கேள் என்று உனக்கு சொல்லப்பட்டிருக்காது.

உன்னுடைய சொந்த குரல் மெலிதானதாக, கேட்கப்படாமல், இந்த கூட்ட நெரிசலில் கேட்க முடியாதபடி அழுந்தி இருக்கும். அதை கேட்பது கிட்டதட்ட இயலாத செயல். முதலில் நீ இந்த குரல்களிலிருந்து வெளியேற வேண்டும், ஒரு விதமான அமைதியை, மெளனத்தை, நிசப்த்த்தை அடையவேண்டும். அப்போதுதான் அது கேட்கும், உனக்கே சொந்தமான குரல் உண்டு என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக உனக்கு தெரியும். அது அங்கே ஒரு ஆழ்நீரோட்டமாக, அடி நீரோட்டமாக இருந்துகொண்டேயிருக்கும்.
நீ உனது சொந்த விருப்பத்தை காணமுடியாவிடில், உனது வாழ்க்கை கருவறையிலிருந்து கல்லறை வரை மிக நீண்ட ஒரு சோகமாகத் தான் இருக்கும். தன்மீது பிறர் திணிக்கும் அவர்களது கருத்துகளை எதிர்த்து புரட்சி செய்து தங்களது விருப்பத்தின்படி வாழும் மக்களே இந்த உலகில் ஆனந்தமாக வாழும் மக்கள். மற்றவர்களது கருத்துகள் எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் அவை உன்னுடையதாக இல்லாதபோது அவை பயனற்றவையே. உன்னுள் உதயமாகும், உன்னுள் வளரும், உன்னுள் மலரும் கருத்துகளே அர்த்தமுள்ள கருத்துகளாகும்.

இரண்டாம் படி:
யார் பேசுவது என கவனிப்பது !
நீ என்ன பேசினாலும் செய்தாலும் நினைத்தாலும் முடிவு செய்தாலும் உன்னை நீயே கேட்டுக்கொள் : இது உன்னிடமிருந்து வருகிறதா அல்லது வேறு யாராவது பேசுகிறார்களா ?
உன்னுடைய சொந்த குரலை கண்டுபிடித்துவிட்டால் நீ ஆச்சர்யபடுவாய். உன்னுடைய தாயின் குரலை நீ திரும்பவும் கேட்பாய். தந்தையின் குரலை திரும்பவும் கேட்பாய்- அதை கண்டுபிடிப்பது கடினமானதல்ல. முதன்முறை உனக்கு கொடுக்கப்பட்ட சமயத்தில் எப்படி சொல்லப்பட்டதோ அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த அறிவுரை, கட்டளை, ஒழுக்கம், ஆகிய எல்லாமும் – நீ குருமார்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சொந்தகாரர்கள், மற்றும் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆகிய பலரையும் நீ அங்கே காணலாம். சண்டையிட வேண்டிய அவசியமில்லை. அது உன்னுடைய குரலல்ல, வேறு யாருடையதோ – யாராயிருந்தாலும் சரி, வேறு யாரோ தான்- என்று தெரிந்துகொள், அதுவே போதும். நீ அதை பின்பற்றமாட்டாய். அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, நன்மையோ, தீமையோ- நீ இப்போது உன் வழியே செல்ல முடிவெடுத்துவிடுவாய். நீ பக்குவப்பட, பண்பட ஆரம்பித்துவிடுவாய்.நீ குழந்தையாக இருந்தது போதும், நீ சார்ந்திருப்பவனாக இருந்தது போதும். நீ இந்த குரல்களை கேட்டு கேட்டு அதை பின்பற்றுபவனாக இருந்தது போதும்.அவா உனக்கு கொடுத்தது என்ன ? குழப்பம்தான்.

மூன்றாம் படி:
நன்றி. . . . வணக்கம்.
ஒருமுறை அது யாருடைய குரல் என்பதை நீ கண்டு கொண்டு விட்டால் அந்த குரலுக்குரியவருக்கு நன்றி சொல், பின் உன்னை விட்டு போகச் சொல், பின் அந்த குரலுக்கு, அந்த குரல் சொல்லும் விஷயத்திற்கு வணக்கம் சொல். உனக்கு அந்த குரலை கொடுத்த நபர் உனது விரோதியல்ல. அவருடைய குறிக்கோள் தீமை செய்வதல்ல, ஆனால் அவரது குறிக்கோள் என்ன என்பதல்ல கேள்வி. உனது உள் மையத்திலிருந்து வராத ஏதோ ஒன்றை அவர் உன்னிடம் பதிய வைக்கிறார் என்பதுதான் பிரச்சனை, மேலும் வெளியிலிருந்து வந்து பதியும் எதுவுமே உன்னை மனரீதியாக அடிமைப்படுத்தும்.

ஒருமுறை அந்த குரலிடம் என்னை விட்டுவிடு என்று உறுதியாக கூறிவிட்டால், பின் நீ அதனுடன் கொண்டுள்ள தொடர்பு, நீ அதனுடன் கொண்டுள்ள அடையாளம் உடைந்துவிடும். அது உன்னுடைய குரல் என்று நீ நினைத்துக்கொண்டிருக்கும் வரைதான் அது உன்னை கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருக்கும். அந்த அடையாளம் தான் முழு பிரச்சனையே. அது உனது எண்ணமல்ல, உனது குரலல்ல, என இப்போது உனக்கு தெரியும். அது உனது இயல்புக்கு அன்னியமானது. அதை தெரிந்துகொள்வதே போதுமானது. உன்னுள் உள்ள அந்த குரல்களிலிருந்து நீ விடுபட்டவுடன் நீ இதுவரை கேட்டிராத மெலிதான, சிறிய குரலை கேட்கும்போது வியப்படைவாய். . . . பின் நீ அதுதான் உனது குரல் என்று தெளிவாக அறிந்துகொள்வாய்.

அது எப்போதுமே அங்கிருக்கிறது, ஆனால் மெலியதாக, சன்னமாக கேட்கும் ஏனெனில் அது அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நீ குழந்தையாக இருக்கும்போது அந்த குரல் மெல்லியதாக இருக்கும், ஒரு விதை முளைவிட்டதைபோல, ஆனால் மற்ற செடிகள் அதை மறைத்து மூடிவிட்டன. நீ இப்போது அந்த செடிகளை பார்த்து கவனித்துகொண்டிருக்கிறாய், அந்த சிறிய முளைதான் உனது வாழ்க்கை, அது இன்னும் உயிரோடு இருக்கிறது, நீ அதை கண்டுபிடிப்பதற்காக அது காத்திருக்கிறது என்பதை நீ முற்றிலுமாக மறந்துவிட்டாய். உனது சொந்த குரலை கண்டுபிடி, பின் எந்தவித பயமும் இல்லாமல் அதை பின்பற்று.

அது உன்னை எங்கே வழிகாட்டி கூட்டி சென்றாலும் அதுதான் உன் வாழ்வின் இலட்சியம், அதுதான் உனது இறுதிப்பாடு. அங்கே மட்டுமே நீ நிறைவடையமுடியும், திருப்தியடையமுடியும். அங்கேதான் நீ மலர்ச்சியடைவாய்- அந்த மலர்தலில்தான் அறிதல் நிகழும்.

Source: THE REBEL

தியான யுக்தி - 2
தலையாய குணங்கள்

முதல்படி :
உனது சக்தியை எடுத்துகொள்வது எது உனது விசேஷ குணாதிசயம் எது என கண்டுபிடிப்பது மிக எளிது – சில தினங்களுக்கு உனது மனதை கவனித்துக் கொண்டிரு- ஒரு டைரி எடுத்து விஷயங்களை குறித்து வைக்கலாம் – உனது சக்தியை, அதிகபட்சமாக எடுத்துக் கொள்வது எது ? உனது கற்பனையை செலுத்துவது எது ?

பொறாமை ? அதிகாரத்திற்கான ஆவல் ? ஆணவம் ? இவைதான் உனது முதல் எதிரி.
ஒவ்வொருவரும் வேறு வேறு விதமான விஷயங்களை கண்டுபிடிப்பர் – கோபம், பாலுணர்வை அடக்கி வைத்தல் – இதுபோல. அது என்ன என்று கண்டுபிடித்தலே பாதி வெற்றியடைந்தது போலத் தான். ஏனெனில் நீ மட்டும்தான் கண்டுபிடிக்கமுடியும்.
குருட்ஜிப் தனது சீடர்கள் இதை கண்டுபிடிக்க பலவேறு விதமான வழிகள் வைத்திருந்தார். ஒரு மன நல மருத்துவர் உன்னுடைய கனவுகள் மூலமாக இதை கண்டுபிடித்துவிடுவார். ஆனால் அவர் எந்த பள்ளியில் இருந்து கற்றுக்கொண்டு வந்தாரோ அந்த வழிமுறை மூலமாக அதை பொருள் கொண்டுவிடுவார்.

இரண்டாவது படி:
எதிர்வினை புரியாதே. அதைப் பற்றிய விழிப்புணர்வு கொள். அந்த எதிரி வரும்போது எதிர்வினை புரியாதே. அமைதியாக இருந்து அது திரையில் கடந்து செல்வதை கவனிப்பதுபோல கவனி. நீ அதனுடன் பிணைப்பு கொள்ளாவிடில் திடீரென உனது எதிரி எடுத்துக் கொண்டிருந்த ஒரு அளவற்ற சக்தி விடுதலை பெறும். நீ புத்துணர்வடைவாய். உநது முழு இருப்பும் திடீரென புதுமையாக இளமையாக மாறும்.

மூன்றாவது படி:
மற்றவைகளையும் கண்டுபிடி. பின் இரண்டாவது மூன்றாவது எதிரிகளை கண்டுபிடி. உனக்கு உன்னிடம் உனது சக்தியை எடுத்துக் கொள்ளும் எதிரிகளே இல்லாத போது உன்னிடம் ஒரு அழகு, சாந்தம், அளவற்ற சக்தி ஆயிரம் தாமரை மலர்களாக உன்னிடம் மலரும்.

Source: THE TRANSMISSION OF THE LAMP

ஓஷோவின் விளக்கம் - ஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 3

ஓஷோ மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதன் 3-வது மாதத் தொடர்ச்சி.

மூன்றாவது பள்ளத்தாக்கு தடுப்பு சுவர் தடை பள்ளதாக்கு என அழைக்கப்படுகிறது. ஒருமுறை மனசாட்சி எழுந்துவிட்டால் இப்போது உன்னால் அங்கே எத்தனை தடுப்புகள் இருக்கின்றன என்பதை பார்க்க இயலும். எத்தனை தடைகள் இருக்கின்றன என்பதை பார்க்க உன்னிடம் இப்போது பார்வை உள்ளது. சுவர்களுக்கு அப்பால் சுவர்களாக உள்ளன. கதவுகளும் இருக்கின்றன, ஆனால் அவை வெகு சிலவே உள்ளன. அவையும் எங்கோ தொலைவில் இருக்கின்றன. உன்னால் எல்லா விதமான தடுப்பு சுவர் தடைகளையும் பார்க்க இயலும். அல்ஹசலாலி நான்கு இருப்பதாக கூறுகிறார்.

முதலாவது தூண்டும் இந்த உலகம் – பொருட்களின் உலகம் – இது கவர்ச்சிகரமானது. காமமே உருவாகிறது. ஏன் உலகிலுள்ள அனைத்து மதங்களும் தூண்டும் இந்த உலகத்தை கடந்து போக வேண்டுமென்று கூறுகின்றன.? ஏனெனில் நீ இந்த உலகத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டால், நீ இந்த உலகத்திலுள்ள பொருட்களுக்காக மிகவும் ஆசைப்பட்டால், நீ கடவுளை அடைவதற்கு ஆசைப்படுவதற்கு போதுமான அளவு சக்தி இருக்காது. உனது ஆசை பொருட்களின் மீது வீணடிக்கப்படுகிறது. ஒரு பெரிய வீடு வேண்டும், வங்கியில் அதிக பணம் இருப்பு இருக்கவேண்டும், உலகில் அதிகார பலம் வேண்டும், கெளரவம் வேண்டும் என ஆசைப்படும் ஒரு மனிதன் தனது எல்லா ஆசைகளையும் இந்த உலகத்திலேயே முதலீடு செய்கிறான், இந்த உலகின் மீது ஆசைப்படுகிறான். கடவுளை தேட ஆசை எதுவும் அவனிடம் மிச்சமில்லை. பொருட்கள் அவையளவில் எதுவும் மோசமானவையல்ல. சூபிகள் பொருட்களுக்கு எதிரியல்ல. அவர்கள் பொருட்கள் அவையளவில் நல்லவை என்றும் ஆனால் கடவுளை தேடும் ஒருவருக்கு அறுதி உண்மை, சத்தியம் கிடைக்காமல் போகக்கூடும், அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தி தேவைப்படும், உன்னிடம் குறிப்பிட்ட விதமான குணாதிசயம் இருக்கவேண்டும் என கூறுகின்றனர். முழு சக்தியும் ஒரே ஆசையில் செலுத்தப்படவேண்டும். எல்லா ஆசைகளும் ஒரே ஆசையாக வேண்டும்,

அப்போதுதான் கடவுளை அடையும் பாதை வழி செல்லமுடியும், அப்போதுதான் நீ இந்த மூன்றாவது பள்ளதாக்கை கடக்கமுடியும். சாதாரணமாக நம்மிடம் பல ஆசைகள் உண்டு. பல சிற்றாறுகள், ஓடைகள், நதிகள், ஒன்றிணைந்து பெரிய கங்கை நதியாக மாறுவது போல எவனுடைய மற்ற எல்லா ஆசைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரே ஆசையாக மாறுகிறதோ, எவனிடம் ஒரே ஒரு ஆசை- கடவுளை சேரும் ஆசை மட்டுமே இருக்கிறதோ அவன்தான் ஆன்மீக வாதி. ஆன்மீக வாதியின் அனைத்து ஆசைகளும் ஒரே ஆசையாக மாறிவிடுகின்றன. அவன் கடவுளுக்கு ஆசைப்படுகிறான், அவன் கடந்து செல்ல ஆசைப்படுகிறான். அதனால் முதலாவது கவர்ந்திழுக்கும் இந்த உலகம்,

இரண்டாவது மனிதர்கள் – மனிதர்களுடன் ஏற்படும் பாசம். சூபிகள் மனிதர்களுக்கு எதிரானவர்களல்ல என்று மறுபடியும் கூறுகிறேன். அவர்கள் மனிதர்கள் மீது பாசம் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள். இல்லாவிடில் அந்த பாசமே ஒரு தடையாக, கடவுளை தேட ஒரு தடுப்பு சுவராக மாறிவிடும். உனது கணவனுடனோ, மனைவியுடனோ, இரு, உனது குழந்தைகளுடன் இரு, உனது நண்பர்களுடன் இரு,

ஆனால் நாம் அனைவரும் இங்கே அன்னியர்கள்தான் என்பதை நினைவில் கொள். நாம் சேர்ந்திருப்பது தற்செயலாக நடந்த ஒரு செயல்தான் விபத்துதான் நாம் பயணிகள், நாம் செல்லும் பாதையில் சந்திக்கிறோம். சில நாட்களுக்கு நாம் சேர்ந்திருப்போம். அதற்காக நன்றியுணர்வு கொள். ஆனால் கூடிய விரைவில் பாதைகள் பிரியும். உனது மனைவி இறந்துவிடுவாள், அவள் அவள் வழியே சென்றுவிடுவாள், அது எங்கே என்றே உனக்கு தெரியாது, அல்லது உனது மனைவி வேறு யாருடனாவது காதலில் விழுந்துவிடுவாள், உங்களது பாதைகள் வேறாகிவிடும். அல்லது நீ வேறு யார் மீதாவது காதல் கொண்டுவிடுவாய் அல்லது உனது மகன் வளர்ந்துவிடுவான் அவன் தனது வாழ்வை முடிவு செய்யும் உரிமையை தன் கையில் எடுத்துகொண்டு உன்னிடமிருந்து விலகி சென்றுவிடுவான். ஒவ்வொரு மகனும் பெற்றோரிடமிருந்து சென்றே ஆக வேண்டும். நாம் இந்த பாதையில் சில தினங்களுக்கு மட்டுமே சேர்ந்து இருப்போம். நாம் சேர்ந்திருப்பது ஒரு விபத்து போல தற்செயலானது. அது எப்போதும் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. அதனால் மனிதர்களுடன் இரு, அன்பாக இரு, கருணையோடு இரு ஆனால் பாசம் கொண்டுவிடாதே.- இல்லாவிடில் உனது பாசம் நீ கடந்து செல்ல உன்னை அனுமதிக்காது. அதனால் இரண்டாவது விஷயம் பாசம், மனிதர்களுக்கிடையேயான பாசம்.

அல்ஹசலிலா மூன்றாவதாக கூறுவது சைத்தான், நான்காவது அகங்காரம். சைத்தான் என அவர் குறிப்பிடுவது மனதைதான் – நீ கடந்த காலத்தை பதிவு செய்து சேர்த்து வைத்திருப்பதுதான் மனது எனப்படுவது. மனசாட்சி பிறந்துவிட்டாலும், முன்னெப்போதையும் விட அதிக மனத்தெளிவுடன் நீ இருந்தாலும், மனதின் இயந்திரத்தனமான செயல்பாடு அங்கே அருகிலேயே காத்துகொண்டிருக்கும். அது இன்னும் சிறிது காலம் அங்கே இருக்கும். அது உன்னுடன் அதிக நாட்கள் இருந்துவிட்டதால் திடீரென அது உன்னை விட்டு போய்விடமுடியாது. அதற்கு காலமெடுக்கும். அது அங்கே காத்திருக்கும், கவனித்துகொண்டிருக்கும்- வாய்ப்பு ஏற்பட்டால் அது உடனே உன்மேல் குதித்து உன்னை தன்வசப்படுத்திக்கொண்டுவிடும். அது உன் எஜமான்னாக இருந்திருக்கிறது, நீ அதன் அடிமை போல செயல்பட்டுகொண்டிருந்திருக்கிறாய். திடீரென நீ எஜமானனாகிவிட்டதை மனதால் ஒத்துகொள்ள முடியாது, அதற்கு காலமெடுக்கும். மனம் ஒரு இயந்திரம். அது எப்போதும் அங்கிருக்கும். ஒரு தேடுபவனுக்கு மனம் ஒரு சைத்தான். சைத்தானை பற்றிய கதைகள் அனைத்துமே மனதைப்பற்றிய கதைகள்தான். டெவில் அல்லது சைத்தான் – சுபிகள் டெவில் என்று அழைத்தனர்- டெவில் என்பது மனதின் உருவக பெயர்தான்.

சைத்தான் ஜீஸஸை ஆசை காட்டியது எனும்போது ஏதாவது அங்கே வெளியே நின்றுகொண்டிருந்தது என்றா நினைக்கிறாய்.? மடையனாக இருக்காதே. அங்கே எதுவும் வெளியே இல்லை. அந்த தூண்டுதல் ஜீஸஸின் சொந்த மனதிலிருந்துதான் வந்தது. இப்போது உனக்கு அளவிடற்கரிய சக்தி வந்துவிட்டது நீ ஏன் மற்ற விஷயங்களை பற்றி கவலைப்படுகிறாய்.? நீ ஏன் இந்த முழு உலகத்தின் அரசனாக கூடாது.? நீ அதை அடையலாம். அதற்கு உனக்கு சக்தியிருக்கிறது. நீ இந்த முழு உலகத்தையும் உனதாக்கிக் கொள்ளலாம், உனக்கு ஏகப்பட்ட சக்தி இருக்கிறது. நீ ஆன்மீக ரீதியாக உயர்ந்து நிற்கிறாய். உனக்கு அஷ்டமா சித்திகளும் கைவரப்பெற்றுவிட்டன. நீ ஆசைப்படும் பொருள், புகழ், கெளரவம் அனைத்தையும் நீ அடையலாம். ஏன் கடவுளைப்பற்றியும் மததைப்பற்றியும் கவலைப்படுகிறாய்.? இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள் என்று மனம் தூண்டுகிறது. ஜீஸஸ் எனது வழிக்கு வராதே போய்விடு என்று கூறுகிறார். அவர் வெளியே எங்கோ உள்ள டெவிலிடம் பேசவில்லை. அவர் தனது மனதிடம்தான் தயவுசெய்து என் வழியில் குறுக்கே வராதே. நீ கொண்டுள்ள ஆசைகளை பற்றி எனக்கு கவலையில்லை, நீ வைத்துள்ள கனவுத் திட்டங்களைப் பற்றி எனக்கு அக்கறை கிடையாது, நான் முற்றிலும் வேறுவிதமான பாதையில் பயணம் சென்றுகொண்டிருக்கிறேன். உனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது, நீ பேசாமல் இரு, என்று கூறுகிறார்.

நான்காவது அகங்காரம். தேடும் பாதையில் செல்பவனுக்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய தடுப்புச் சுவர். சிறிதளவு தன்ணுனர்வு பெறும்போது, உனது மனசாட்சி எழும்போது, தடுப்பு சுவர் தடைகளை உன்னால் பார்க்க முடியும் போது எங்கிருந்தோ ஒரு ஆணவம் எழுந்து, உன்னை தன்வசப்படுத்திகொள்கிறது. நான் ஒரு துறவியாக, ஒரு சித்தராகிவிட்டேன். நான் இனிமேலும் சாதாரணமானவன் அல்ல, நான் சிறப்பானவன் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது- அங்கே நான் சிறப்பானவன் என்பதுதான் பிரச்சனை. அது உண்மைதான். அதனால் ஆணவம் அதை உறுதி செய்கிறது. இதுதான் மிகப்பெரிய பிரச்சனை, ஏனெனில் ஆணவம் முட்டாள்தனமாக எதையும் பேசவில்லை. அது தெரிந்தே சொல்கிறது. அது அப்படித்தான் என்று நீயும் எடுத்துக்கொள்கிறாய், ஆனால் நீ ஆணவத்துடன் உன்னை அடையாளப்படுத்திகொண்டுவிட்டால், நான் சிறப்பானவன் என்பதுடன் உன்னை கோர்த்துக் கொண்டுவிட்டால், பின் நீ எப்போதும் மூன்றாவது பள்ளத்தாக்கிலேயே இருக்கவேண்டியிருக்கும் என்பதால் அதில் நீ கவனமாக இருக்கவேண்டும். நீ நான்காவது பள்ளத்தாக்கை சென்றடையவே முடியாது,

மேலும் நான்காவது பள்ளத்தாக்கு அதிகமான சிகரங்களையும் மேலும் அதிகமான மலர்களையும் அதிக சந்தோஷங்களையும் தர வல்லது.- நீ இந்தப் பள்ளத்தாக்கை தவறவிட்டுவிடுவாய். இதுதான் சித்திகள்- ஆன்மீக சக்திகள்- மிகவும் தடையான விஷயங்களாக மாறக்கூடிய இடம். இந்த்த் தடைகளோடு சண்டையிட ஆரம்பிப்பது இதன் எதிர்மறையான பாகமாகும். நீ சண்டையிட ஆரம்பித்தால் நீ பள்ளத்தாக்கிலேயே தொலைந்துபோய்விடுவாய். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை. எதிரிடையானதை உருவாக்காதே. புரிந்துகொள்ளுதலே போதுமானது. சண்டையிடுதல் என்றாலே அமுக்கி வைத்தல்தான்.

நீ உனது ஆணவத்தை, மக்களுடன் உனக்கிருக்கும் பாசத்தை, பொருட்கள் மீது உனக்கிருக்கும் காதலை, உனது மனதை, உனது சைத்தானை, அடக்கி அமுக்கி வைக்கலாம், ஆனால் அந்த அடக்கி வைத்தல் எப்போதுமே அங்கிருக்கும். உன்னால் நான்காவது பள்ளதாக்கிற்க்குள் நுழையவே முடியாது. அடக்கி வைத்திருப்பது என்பது யாரிடம் இல்லையோ அவர்கள் மட்டுமே நான்காவது பள்ளதாக்கினுள் நுழையமுடியும். அதனால் அடக்கி வைக்கவோ, அமுக்கி வைக்கவோ செய்யாதே. நேர்மறையானது என்னவென்றால் சவாலை சந்தி – ஆணவம் உனக்கு சவால் விடுகிறது. அதை உனது எதிரியாக பாவிக்காதே. அதற்கு பதிலாக கடந்து செல்வதற்கு ஏற்படும் ஒரு சவாலாக எடுத்துக் கொள். அதனுடன் சண்டையிடாதே. அதை புரிந்துகொள். அதனுள் ஆழ்ந்து பார். அதன் நுட்பம் என்னவென்று பார். எப்படி அது செயல்படுகிறது, எப்படி இந்த புதுவிதமான ஆணவம் உன்னுள் வந்தது.? எப்படி மனம் உன்னுடன் விளையாடிக் கொண்டே இருக்கிறது ? நீ எப்படி மனிதர்களுடன் பாசம் கொள்கிறாய்.? எப்படி பொருட்கள் மீது பிணைப்பு கொள்கிறாய் ? என்று பார்.

ஆத்திரப்படாமல் பொறுமையாக அது எப்படி வேலை செய்கிறது என்று பார். எந்த வகையிலாவது நீ ஆத்திரப்பட்டால் நீ சிக்கிகொண்டாய். எந்த வகையிலாவது உணர்ச்சிவசப்பட்டால் நீ சிக்கிக்கொண்டாய். இந்த இரண்டு விஷயங்களும் மிக எளிதாக நடக்ககூடியவை. மக்களுக்கு இரண்டே விஷயங்கள் தான் தெரியும். நண்பர்களாக இருப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும், அல்லது எதிரிகளாக இருக்க தெரியும். சாதாரணமாக இப்படித்தான் புரிந்துகொள்ளமுடியும். மூன்றாவது விஷயம்தான் உதவும். கவனமாக இரு, சாட்சியாக இரு. எதிரிடையாகவோ நட்பாகவோ இருக்காதே. விலகி இரு, தொட்டும் தொடாமலும் இரு. அது அங்கிருப்பதை மட்டும் பார், ஆதரவாகவோ எதிராகவோ எந்த உணர்வுபூர்வ அணுகுமுறையை நீ எடுத்தாலும் அந்த உணர்வே ஒரு தளையாக மாறிவிடும். உணர்வானது என்றாலே நீ பிணைக்கபட்டிருக்கிறாய். நினைவில் கொள். நீ எந்த அளவு நண்பர்களுடன் பிணைக்கப்பட்டிருக்கிறாயோ அந்த அளவு எதிரிகளுடனும் பிணைக்கப்பட்டிருக்கிறாய். உனது எதிரி இறந்துவிட்டால் உனது நண்பன் இறந்துவிட்டால் இழப்பை உணரும் அதே அளவு இழப்பை அங்கேயும் உணர்வாய். – சில நேரங்களில் அதைவிட அதிகமாக கூட. ஏனெனில் எதிரி உனது வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்தான். அவனுடன் சண்டையிடுவதன் மூலம் நீ ஒரு விஷயத்தை அனுபவித்தாய். இப்போது அவன் அங்கில்லை. அவனுடன் சண்டையிடுவதன் மூலம் திருப்தியை அனுபவித்த உனது ஆணவம் திரும்பவும் திருப்தியை அனுபவிக்கப் போவதேயில்லை. நீ ஒரு புது எதிரியை தேடி அடையவேண்டும். அதனால் நண்பர்களையோ பகைவர்களையோ உருவாக்காதே. வெறுமனே பார். விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையோடு இரு. அதுதான் நேர்மறையான விஷயம். ஆணவம் என்பது என்னவென்று ஆழமாக அறிந்து புரிந்து கொள், சந்தோஷத்தை அறிந்துகொள், காமம் என்றால் என்னவென்று புரிந்துகொள், மகிழ்ச்சியை அறிந்துகொள்.

Source - The Secret of Secrets Vol 2 che #1

தனிமை பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓஷோவின் பதில்

கேள்வி :
நீங்கள் அன்றொரு நாள் நாம் தனியாகவேதான் பிறக்கிறோம், தனியாகவேதான் வாழ்கிறோம், தனியாகவேதான் இறக்கிறோம் என்று கூறினீர்கள். இருப்பினும் நாம் பிறந்ததிலிருந்து நாம் என்ன செய்தாலும், யாராக இருந்தாலும் நாம் அடுத்தவருடன் தொடர்பு கொள்ளுதலையே தேடுகிறோம். மேலும் குறிப்பிட்ட ஒருவருடன் அன்யோன்யமாக இருப்பதற்கு, நெருக்கமாக இருத்தலையே விரும்புகிறோம், அதில் ஈடுபாடு கொள்கிறோம். நீங்கள் இதைப்பற்றி ஏதாவது கருத்து சொல்ல முடியுமா ?


தியான் அமியோ,
நீ கேட்டிருக்கும் இந்த கேள்வி ஒவ்வொரு மனிதனுக்கும் வருகிறது. நாம் ஒருவனாகத்தான் பிறக்கிறோம், ஒருவனாகத்தான் வாழ்கிறோம், ஒருவனாகத்தான் இறக்கிறோம். ஏகாந்தம்தான் நமது உண்மைநிலை. ஆனால் நமக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. நமக்கு அதைப்பற்றிய உணர்வு இல்லாத்தால் நாமே நமக்கு அன்னியர்களாக தெரிகிறோம். நமது ஒருமையை ஒரு அற்புதமான வரமாக, அழகாக, மௌனமானதாக, அமைதியானதாக, பிரபஞ்சத்துடன் ஒன்றி இருப்பதாக எடுத்துக் கொள்ளாமல் நாம் அதை தனிமையைக தவறாக புரிந்துகொள்கிறோம்.
ஒருமை தனிமை என தவறாக புரிந்து கொள்ளப் படுகிறது. நீ ஒருமுறை உனது ஒருமையை தனிமை என தவறாக புரிந்துகொண்டுவிட்டால் முழு பொருளும் மாறிவிடும். ஒருமை அழகானது, நேர்மறையானது, சிறப்பானது. தனிமை வறுமையானது, எதிர்மறையானது, இருண்டது, இருட்டானது.

தனிமையிலிருந்து எல்லோரும் தப்பித்து ஓடுகின்றனர். அது காயம் போன்றது, அது வலி தருவது. அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி கூட்டத்தினிடையே இருப்பது சமுதாயத்தின் பாகமாகி விடுவது, மனைவி அல்லது கணவனை தேடிக் கொள்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஆகியன. இந்த கூட்டத்தில் நீ உனது தனிமையை மறந்து விட முடியும்.



ஆனால் அதை மறப்பதில் இதுவரை யாரும் வெற்றியடைய வில்லை. அது உனது இயல்பு, நீ அதை புறக்கணிக்கலாம் – ஆனால் நீ அதை அதாகவே பார்க்காததால் அந்த பிரச்னை மேலும் சிக்கலானதாகிறது. நீ ஒருமையாக பிறந்திருக்கிறாய் என்பதை நீ சலுகையாக எடுத்துக் கொண்டு மறந்துவிட்டாய்.

அகராதி அடிப்படையில் அவற்றிற்க்கு ஒரே அர்த்தம்தான். இது அந்த அகராதியை உருவாக்கிய மனிதர்களின் மனங்களை காட்டுகிறது. அவர்கள் தனிமைக்கும் ஒருமைக்கும் இருக்கும் அளவற்ற வித்தியாசத்தை புரிந்துகொள்ளவில்லை. தனிமை ஒரு பிளவு. ஏதோ ஒன்று விடுபட்டுவிட்டது. அதை நிரப்ப ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அதை எதனாலும் நிரப்பமுடியாது. ஏனெனில் முதலாவதாக அது ஒரு தவறான புரிதல். நீ வயதில் வளர வளர அந்த பிளவும் பெரிதாகிறது. மக்கள் தங்களுடன் இருப்பதற்கு பயந்து கொண்டு மிகவும் முட்டாள்தனமான செயல்களை செய்கின்றனர். சீட்டுக்கட்டு தனியாக விளையாடுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். மற்றவர் அங்கே இருக்க மாட்டார். ஒரே ஆள் இரண்டு பக்கத்திலிருந்தும் ஆடக்கூடிய விளையாட்டை அவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

எப்படியோ எதிலோ ஈடுபட்டிருக்க வேண்டும். அந்த ஈடுபடுதல் வேலையில் அல்லது மனிதர்களில் இருக்கலாம். வேலையில் ஈடுபடுவர்கள் வேலைபிசாசுகள். அவர்கள் வார இறுதி நாள் நெருங்க நெருங்க பயபடுவார்கள் – என்ன செய்யப் போகிறேமோ என்று. அவர்கள் எதுவும் செய்ய வில்லை, செய்ய முடிய வில்லை என்றால் அவர்களை அவர்களிடமே விட்டு விட்டால், அதுதான் மிகவும் வேதனையான அனுபவம் அவர்களுக்கு.

இந்த உலகில் வார இறுதி நாட்களில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன என்பதை அறிந்தால் நீ ஆச்சரியப்படுவாய். மக்கள் தங்களது கார்களில் ஏறி ரிசார்ட்டுகளுக்கோ, மலைபிரதேசங்களுக்கோ, கடற்கரைக்கோ காரின் பின் முனையும் அடுத்த காரின் முன்முனையும் ஒட்டிக் கொண்டிருக்கும்படி போகிறார்கள். போய் சேர எட்டு மணி நேரமோ, பத்து மணி நேரமோ ஆகலாம், அங்கேயும் அவர்களுக்கு செய்ய எதுவோ கிடைத்து விட்டது. ஆனால் இப்போது அவர்களது வீடும், அவர்களது இடமும் இந்த கடற்கரை ரிசார்ட்டை விட அதிக அமைதியாக இருக்கும். எல்லோரும் இங்கு வந்து விட்டனர். ஆனால் ஏதோ ஈடுபாடு........

மக்கள் சீட்டுக்கட்டு, செஸ் விளையாடுகின்றனர். மணிக்கணக்காக டிவி பார்க்கின்றனர். ஒரு அமெரிக்கன் சராசரியாக 5 மணி நேரம் டிவி பார்க்கிறான். மக்கள் ரேடியோ கேட்கின்றனர். தங்களை தவிர்த்துக்கொள்வதற்காக மட்டுமே. அவர்களது எல்லா செயல்பாட்டிற்க்கும் காரணம் ஒன்றே. – தனிமையில் இருக்கக் கூடாது. அது மிகவும் அச்சமூட்டுவது. இந்த கருத்து மற்றவர்களிடம் இருந்து பெறப்பட்டது. ஒருமையில் இருப்பது அச்சமூட்டும் நிலை என்று உனக்கு யார் சொன்னது

ஒருமையை பற்றி தெரிந்த, அறிந்த யாராவது அதைப்பற்றி சொன்னால் அது முற்றிலும் வேறானது. ஒருமையாய் இருப்பதை விட அழகானது, அருமையானது, சந்தோஷமானது, அமைதியானது எதுவுமே இல்லை என்றே சொல்வார்கள். ஆனால் நீ கூட்டம் செல்வதை கேட்கிறாய். தவறாக புரிந்து கொண்டிருக்கும் மக்களே பெரும்பான்மையானவர்கள். அப்படி இருக்கும் போது யார் ஜராதுஸ்த்ராவைப் பற்றியோ, கௌதம புத்தரைப் பற்றியோ கவலைப்படுவார்கள் இந்த தனித்துவமான அரியவர் தவறாக இருக்கக் கூடும், அவர்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கலாம், தங்களையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக் கூடும். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் தவறாக இருக்க முடியாது அல்லவா மேலும் கோடிக்கணக்கான மக்கள், தனிமையில் விடப்படுவது வாழ்வில் மிக மோசமான அனுபவம், அது நரகம் என்று ஒத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் தனிமையில் விடப்படுவது நரகம் என்ற காரணத்தாலோ, தனிமையை பற்றிய பயத்தினாலோ உருவாக்கப்படும் எந்த உறவும் நிறைவை தராது. அதன் அடிப்படை வேரே விஷம். நீ உனது துணைவியை நேசிக்க முடியாது, நீ தனிமையில் இருக்க முடியாது என்று அவளை உபயோகிக்கிறாய். அவளும் அதே போலத்தான், அவளாலும் உன்னை நேசிக்க முடியாது. அவளும் தனிமையை தவிர்க்கத்தான் உன்னை உபயோகிக்கிறாள்.

இயல்பாகவே அன்பு என்ற பெயரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் – அன்பைத் தவிர. சண்டைகள் வரலாம், வாக்குவாதங்கள் வரலாம், இருப்பினும் அவர்கள் தனிமையாய் இருப்பதை தேர்ந்தெடுப்பதில்லை. யாராவது ஒருவர் அங்கே இருக்கிறார், நீ ஏதோ ஒன்றில் ஈடுபட்டிருக்கிறாய். நீ உனது தனிமையை மறந்து விடலாம். ஆனால் அன்பு அங்கே சாத்தியமில்லை. ஏனெனில் அன்பிற்க்கான அடிப்படையே அங்கில்லை. அன்பு பயத்தின் மூலம் வராது, வளராது.

நீ கேட்கிறாய், நீங்கள் அன்றொரு நாள் நாம் தனியாகவே பிறக்கிறோம், தனியாகவே வாழ்கிறோம், தனியாகவே இறக்கிறோம் என்று கூறினீர்கள். ஆனாலும் நாம் பிறந்த அன்றிலிருந்து நாம் என்ன செய்தாலும், நாம் யாராகயிருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள மற்றவரை தேடுகிறோம் என்பது போல தோன்றுகிறது.

இப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள மற்றவரை தேடுவது தப்பிப்பதைத் தவிர வேறெதுவும் அல்ல. ஒரு சிறு குழந்தை கூட செய்ய எதையாவது கண்டு பிடிக்கிறது. எதுவும் கிடைக்காவிடில் தனது கால் கட்டை விரலை தனது வாய்க்குள் வைத்து சூப்ப ஆரம்பிக்கிறது. அது முற்றிலும் பொய்மையான ஒரு செயல், அதிலிருந்து எதுவும் கிடைக்க போவதில்லை, ஆனால் ஏதோ ஒன்றில் ஈடுபட்டிருக்கிறாய். அவன் எதையோ செய்து கொண்டிருக்கிறான். ரயில் நிலையங்களில், விமான நிலையத்தில் சிறிய குழந்தைகள் தங்களது கரடி பொம்மையை தூக்கி கொண்டிருப்பதை நீ பார்க்கலாம். அவர்களால் அது இல்லாமல் தூங்க முடியாது. இருட்டு அவர்களது தனிமையை மேலும் அபாயகரமானதாக்குகிறது. கரடிபொம்மை ஒரு சிறந்த பாதுகாப்பு. யாரோ அவர்களுடன் இருக்கிறார்.

மேலும் உங்களது கடவுள் என்பவர் வளர்ந்தவர்களுக்கான கரடி பொம்மை மட்டுமே.
நீ எப்படியோ அப்படியே உன்னால் வாழ முடியாது. உனது உறவுகள் உண்மையான உறவுகளல்ல. அவை அவலஷ்சணமானவை. நீ அடுத்தவரை உபயோகிக்கிறாய், மேலும் உனக்கு மிக நன்றாக தெரியும். அடுத்தவரும் உன்னை உபயோகிப்பது. மேலும் மற்றவரை உபயோகிப்பது அவரை ஒரு பொருளாக, ஒரு சந்தைசாமானாக குறைத்து மதிப்பிடுவதாகும். அந்த நபரிடம் உனக்கு எந்த மரியாதையும் கிடையாது.
நீ மேலும் நாம் சாதாரணமாக குறிப்பிட்ட ஒரு நபரிடம் அன்யோன்யப்படுகிறோம். என்றும் கேட்கிறாய்.

இதற்கு உடல்ரீதியான காரணம் இருக்கிறது. நீ ஒரு தாயால், ஒரு தந்தையால் வளர்க்கப்படுகிறாய், நீ ஒரு பையன் எனில் நீ உனது தாயை நேசிக்க ஆரம்பித்துவிடுகிறாய். உனது தந்தையை ஒரு போட்டியாளனாக பார்த்து அவரிடம் பொறாமை கொள்கிறாய். நீ ஒரு பெண்ணாக இருந்தால் உனது தந்தையை நேசிக்க ஆரம்பிக்கிறாய். உனது தாயை வெறுக்க ஆரம்பிக்கிறாய். ஏனெனில் அவள் உனது போட்டியாளராக இருக்கிறாள். இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள். மேம்போக்காக கூறப்படுபவை அல்ல. இதனுடைய விளைவாக உனது முழு வாழ்க்கையும் ஒரு துயரமாக மாறி விடுகிறது.

பையன் தனது தாயின் உருவத்தை பெண்ணின் உதாரணமாக கொள்கிறான். அவன் தொடர்ந்து கட்டுதிட்டப்படுத்தப்படுகிறான். அவனுக்கு மிகவும் நெருக்கமாக, மிகவும் அன்யோன்யமாக ஒரே ஒரு பெண்ணைத்தான் தெரியும். அவளது முகம், அவளது தலைமுடி, அவளது அருகாமை எல்லாமும் பதிவாகி விடுகிறது. விஞ்ஞானரீதியாக இதற்கு உபயோகிக்கப்படும் வார்த்தை மிகச்சரியாக இதுதான். அது அவனது மனதில் அச்சாக பதிந்துவிடுகிறது. இதேதான் ஒரு பெண்ணிற்க்கு தனது தந்தையிடம் நடக்கிறது. நீ வளர்ந்தவுடன் யாரோ ஒரு பெண்ணிடமோ, ஆணிடமோ காதல் வயப்படும்போது, நீ நாம் ஒருவருக்கொருவர் உண்டானவர்கள் என்று நினைத்துக் கொள்கிறாய். யாரும் யாருக்காகவும் உண்டாக்கப்படவில்லை. ஆனால் உனக்கு ஏன் குறிப்பிட்ட ஒருவர் மேல் ஈர்ப்பு வருகிறது. ஏனெனில் அதற்கு காரணம் உனது பதிவுதான். அவன் உனது தந்தையை ஏதோ ஒரு வகையில் பிரபலித்திருக்க வேண்டும். அவள் ஏதோ ஒரு வகையில் உனது தாயை பிரதிபலித்திருக்க வேண்டும்.
எந்த பெண்ணும் அப்படியே உனது தாயை நகலெடுத்தாற்போல இருக்க முடியாது. மேலும் நீயும் ஒரு தாயை தோடவில்லை. ஒரு துணைவியைத்தான் தேடுகிறாய். ஆனால் உன்னுள் பதிவாகி உள்ள அச்சு உனக்கு தகுந்த பெண் யாரென்று முடிவு செய்கிறது. நீ அது போன்ற பெண்ணை பார்த்த கணமே அங்கே காரண காரியத்திற்க்கே இடமில்லை. நீ உடனடியாக ஈர்க்கப் படுகிறாய். உனது அச்சுப்பதிவு உடனே வேலை செய்ய துவங்கி விடுகிறது – இவள்தான் உன் துணைவி, அல்லது இவன்தான் உன் துணைவன்.

கடற்கரையில், சினிமா தியேட்டரில், பார்க்கில் அவ்வப்போது சந்திப்பது என்பது மிகவும் நல்லது. ஏனெனில் மற்றவரை பற்றி உனக்கு முழுமையாக தெரியப் போவது இல்லை. ஆனால் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்கள். திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறீர்கள், காதலிப்பவர்கள் எடுக்கக் கூடிய மிக அபாயமான முடிவுகளில் ஒன்று இது.

திருமணம் முடிந்த கணமே மற்றவரைப் பற்றி முழுமையாக உனக்கு தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது ஒவ்வொரு சிறு விஷயமும் உனக்கு அதிர்ச்சியூட்டுகிறது – ஏதோ தவறு நடந்துவிட்டது. இதுவல்ல அந்த பெண், இதுவல்ல அந்த ஆண் – ஏனெனில் நீ உனக்குள் சுமந்து கொண்டு இருக்கும் வடிவத்திற்க்கு அவர்கள் பொருந்தி வரவில்லை. பிரச்னை இன்னும் பெரிதாகும். ஏனெனில் அவள் தனது தந்தையின் வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாள், நீ அதற்கு பொருந்த வில்லை. நீ உனது தாயின் வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாய். அவள் அதற்கு பொருந்தவில்லை. நீ உனது தாயின் வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாய், அவள் அதற்கு பொருந்தவில்லை. இதனால்தான் அனைத்து திருமணங்களும் தோல்வியடைகின்றன.
மிக அரிதான திருமணங்கள்தான் தோல்வியடைவதில்லை. தோல்வியடையாத திருமணத்திலிருந்து கடவுள் உன்னை காப்பாற்றுவார் என நான் நம்புகிறேன். சிலர் குரூரமானவர்கள். மற்றவர்களை இம்சை படுத்துவதில் சந்தோஷப்படுவார்கள். சிலர் தங்களை தாங்களே இம்சை படுத்திக் கொள்வதில் சந்தோஷமடைவார்கள். ஒரு கணவனும் மனைவியும் இந்த இரண்டு வகைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையை சேர்ந்தவராக இருந்தால், அந்த திருமணம் ஒரு வெற்றி பெற்ற திருமணமாக இருக்கும். ஒருவர் இம்சை படுத்துவார், ஒருவர் இம்சை படுவார். – இது ஒரு பொருத்தமான திருமணம், ஏனெனில் ஒருவர் இம்சை படுத்துவதில் சந்தோஷப்படுவார், ஒருவர் இம்சை படுவதில் சந்தோஷம் கொள்வார்.

ஆனால் முதலில் நீ இம்சை படுத்துபவனா, இம்சை படுபவனா என கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். பின் உனது அடுத்த துருவ வகையை சேர்ந்தவரை கண்டு பிடிப்பது. மேலும் நீ புத்திசாலியாக இருந்தால் நீ ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சென்று நீ குரூரமானவனா, குரூரத்தை அனுபவிப்பவனா என கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உனக்கு பொருந்தக் கூடிய சில அறிகுறிகளை அவர் உனக்கு கொடுக்கக் கூடும்.
சில நேரங்களில் குரூரமானவரும் குரூரத்தை அனுபவிப்பவரும் திருமணம் நடந்து விடும். அவர்கள்தான் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள். ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்கின்றனர். ஆனால் என்ன வகையான தேவை இது. அவர்கள் இருவரும் பைத்தியங்கள். அவர்கள் இம்சை கொண்ட வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் மற்றபடி ஒவ்வொரு திருமணமும் தோல்வியடைப் போகிறது, ஒரே ஒரு காரணத்தால். அந்த அச்சுப் பதிவு தான் பிரச்னை.

திருமணத்தில் கூட நீ எந்த அடிப்படை காரணத்திற்காக உறவை ஏற்படுத்திக் கொள்கிறாயோ அது நிறைவேறுவதில்லை. நீ ஒருமையில் இருப்பதை விட உன் மனைவியுடன் இருக்கும்போது அதிக தனிமையாக உணர்கிறாய். ஒரு கணவனையும் மனைவியையும் ஒரு அறையில் தனியே விடுவது அவர்களை மேலும் அதிக துன்பமடைபவர்களாக ஆக்கும்.

எனது நண்பர்களில் ஒருவன் ஓய்வு பெற்றான். அவன் மிகப் பெரிய தொழிலதிபர். அவன் எனது அறிவுரையின் பேரில் ஓய்வு பெற்றான். நான் அவனிடம், உன்னிடம் ஏகப்பட்ட செல்வம் உள்ளது, உனக்கு மகன் இல்லை. இரண்டு பெண்கள் மட்டும்தான். அவர்களையும் பணக்கார இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டாய். இப்போது ஏன் தேவையில்லாமல் இந்த தொழில், வருமான வரி, இது அது என்று எல்லா கவலைகளையும் பட்டுக் கொண்டிருக்கிறாய். எல்லாவற்றையும் மூடிவிடு. உன்னிடம் போதுமான அளவு செல்வம் இருக்கிறது. நீ ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும் இது போதும். என்றேன்.


அவன் அது உண்மை தான். ஆனால் உண்மையான பிரச்னை தொழிலல்ல. நான் எனது மனைவியுடன் தனித்து விடப்படுவேன் என்பதுதான் உண்மையான பிரச்னை. நான் இப்போதே என் தொழிலிலிருந்து ஓய்வு பெற்று விடுவேன். ஆனால் நீங்கள் வந்து எங்களுடன் வசிக்க வேண்டும் என்றான்.

நான், இது வித்தியாசமாக இருக்கிறதே. நீ ஓய்வு பெறுகிறாயா அல்லது நான் ஓய்வு பெறுகிறேனா என்றேன்.

அவன் இதுதான் நிபந்தனை. நான் இந்த பிரச்னைகளை விரும்புகிறேன் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள் இதை என் மனைவியிடமிருந்து தப்பிக்கத்தான் செய்கிறேன் என்றான்.
அவனது மனைவி ஒரு சமுக சேவகி. அவள் ஒரு அனாதை ஆசிரமம், பிச்சைக்காரர்களுக்கான ஆஸ்பத்திரி, ஒரு விதவைகளுக்கான இல்லம் என எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருக்கிறாள். நான் மாலையில் அவளிடம், காலையிலிருந்து மாலை வரை நீங்கள் செய்யும் எல்லா செயல்களையும் விரும்பி செய்கிறீர்களா என்று கேட்டேன்.

அவள், அனுபவிப்பதா இது ஒரு வகையான தப்பித்தல், தனக்குத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் என்றாள்.

நான் ஏன் நீங்கள் உங்களையே இப்படி துன்புறுத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்டேன்.
அவள் உங்களது நண்பரை தவிர்க்கத்தான். நாங்கள் இருவரும் தனித்திருந்தால் அதுதான் வாழ்விலேயே மோசமான அனுபவம். என்றாள்.

மேலும் இது காதல் திருமணம், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் அல்ல. அவர்கள் முழு குடும்பத்தையும், சமுதாயத்தையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். ஏனெனில் அவர்கள் வேறுபட்ட மதம், ஜாதியை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களது அச்சு பதிவு இவன்தான் சரியான ஆண் என்றும், இவள்தான் சரியான பெண் என்றும் அறிகுறி காட்டியது. ஆனால் இது எல்லாமே தன்னுணர்வற்ற மனநிலையில் நிகழ்ந்தது.

இதனால்தான் குறிப்பிட்ட ஆண் அல்லது பெண்ணிடம் உனக்கு ஏன் காதல் வந்தது என்ற கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடிவதில்லை. அது ஒரு உணர்வோடு எடுத்த முடிவல்ல. அது உனது தன்னுணர்வற்ற மனதில் பதிந்துள்ள அச்சுப்பதிவினால் எடுக்கப்பட்ட முடிவு.

அமியோ, இந்த முழு முயற்சியும் – உறவோ அல்லது ஆயிரத்தோரு விஷயங்களில் மும்மரமாக இருப்பதோ – நீ தனிமையில் இருக்கிறாய் என்ற கருத்தினால் அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியே. இங்குதான் தியானம் செய்யும் மனிதனும் சாதாரண மனிதனும் வேறுபடுகிறார்கள் என்பதை நான் அழுத்தந்திருத்தமாக சொல்ல விரும்புகிறேன்.
சாதாரண மனிதன் தனது தனிமையை மறக்க விரும்புகிறான். தியானிப்பவன் மேலும் மேலும் தனது ஒருமையை அதிகம் தெரிந்து கொள்கிறான். அவன் இந்த உலகத்தை விட்டு செல்கிறான். குகைகளுக்கு, மலைகளுக்கு, காட்டுக்கு ஒருமையில் இருப்பதற்காகவே போகிறான். தான் யாரென்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். கூட்டத்தில் அது கஷ்டம். அங்கு பல இடைசல்கள் இருக்கும் தங்களது ஒருமையை தெரிந்து கொள்பவர் யாரோ அவர்களே மனித இனத்துக்கு சாத்தியப்படக் கூடிய அளவில்லா சந்தோஷத்தை அறிந்து கொள்பவர். ஏனெனில் உனது இருப்பே ஒரு வரம்தான்.

உனது ஒருமையுடன் நீ லயப்பட்டபின் நீ தொடர்பு கொள்ளலாம், அப்போது உனது உறவுகள் உனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும், ஏனெனில் அவை பயத்தால் அமைந்தவை அல்ல. உனது ஒருமையை கண்டு கொண்டபின் நீ உருவாக்கலாம், நீ எத்தனை விஷயங்களை விரும்புகிறாயோ அத்தனை விஷயங்களிலும் ஈடுபடலாம், ஏனெனில் இந்த ஈடுபாடு உன்னிலிருந்து நீ தப்பி ஓடுவதாக இருக்காது. இப்போது அது உனது வெளிப்பாடு. இப்போது அது உனது திறமையின் வெளிப்பாட்டுத் தோற்றம்.

அப்படிபட்ட மனிதன் மட்டுமே – அவன் ஒருவனாக வாழ்ந்தாலும் சரி, சமுதாயத்தில் இருந்தாலும் சரி, அவன் திருமணம் செய்து கொண்டாலும் சரி, திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தாலும் சரி, அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது – எப்போதுமே ஆனந்தமாகவும் அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பான். அவனது வாழ்வே ஒரு கானம், ஒரு நடனம், ஒரு மலர்தல், ஒரு மணம்தான். அவன் எதை செய்தாலும் அவன் தனது மணத்தை அதில் கொண்டு வருவான்.

அதனால் உனது ஒருமையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அடிப்படையான விஷயம்.

இப்படி உன்னிடமிருந்து நீ தப்பிப்பது நீ கூட்டத்தலிருந்து கற்றுக் கொண்ட விஷயம். ஏனெனில் ஒவ்வொருவரும் தப்பிக்கிறார்கள். நீயும் தப்ப ஆரம்பிக்கிறாய். ஒவ்வொரு குழந்தையும் கூட்டத்தில் பிறக்கிறது, அவர்களை பார்த்து அதே போல போலியாக செய்ய ஆரம்பிக்கிறது, மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதுவும் அதையே செய்ய ஆரம்பிக்கிறது. மற்றவர்கள் எந்த விதமான துயரமான நிலையில் இருக்கிறார்களோ அதுவும் அதே போன்ற துயர நிலைக்குள் விழுகிறான். இதுதான் வாழ்க்கை என்பது என அவன் நினைக்க ஆரம்பித்து விடுகிறான். அவன் வாழ்க்கையை முழுமையாக தவற விட்டு விடுகிறான்.

அதனால் ஒருமையை தனிமை என தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என நான் உனக்கு நினைவூட்டுகிறேன். தனிமை என்பது ஆரோக்கியமற்றது, நோய் போன்றது. ஒருமை என்பது முற்றிலும் மிக ஆரோக்கியமானது.

நாம் எல்லோரும் ஒரேவிதமான தவறாக புரிந்து கொள்ளுதலை தொடர்ந்து செய்து கொண்டே வந்திருக்கிறோம்.

வாழ்வின் அர்த்தத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் கண்டு பிடிக்க முதலாவதும் முக்கியமாகவும் செய்ய வேண்டிய முதல் படி தனது ஒருமைக்குள் நுழைவதுதான் என்பதை எனது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அதுதான் உனது கோவில், அங்கேதான் உனது கடவுள் வசிக்கிறார், நீ இந்த கோவிலை வேறெங்கும் காண முடியாது. நீ சந்திரனுக்கு செவ்வாய்க்கு ............என போகலாம்.
நீ ஒரு முறை உன் இருப்பின் உள் மையத்திற்க்குள் நுழைந்துவிட்டால், உன்னால் உனது கண்களையே நம்ப முடியாது. நீ உன்னுள் அவ்வளவு மகிழ்ச்சியை, அவ்வளவு அன்பை, அவ்வளவு ஆசிகளை சுமந்து கொண்டிருக்கிறாய். நீ உன்னுடைய சொந்த புதையலிலிருந்தே தப்பி ஓடிக் கொண்டிருக்கிறாய்.

இந்த புதையலையும் இதன் குறையாத வளத்தையும் பற்றி தெரிந்து கொண்டு விட்டால் பின் நீ உறவு ஏற்படுத்திக் கொள்ளலாம். உருவாக்குதலிக்குள் நுழையலாம். நீ உனது அன்பை பகிர்ந்து கொள்ளுதலின் மூலம் மனிதர்களுக்கு உதவலாம், அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் இருக்கலாம். நீ உனது அன்பின் மூலம் அவர்களுக்கு ஒரு மதிப்பு கொடுக்கிறாய், நீ அவர்களது மரியாதையை அழிப்பதில்லை. எந்த முயற்சியும் இல்லாமல் மற்றவர்கள் தங்களது சொந்த புதையலை கண்டுகொள்ள ஆதாரமாக நீ மாறுகிறாய். நீ என்ன உருவாக்கினாலும், நீ எதை செய்தாலும், நீ உன்னுடைய மௌனத்தை, அமைதியை, சாந்தத்தை, வாழ்த்துக்களை சாத்தியப்படும் எல்லாவற்றிலும் பரப்புவாய்.

ஆனால் இந்த அடிப்படையான விஷயம் எந்த குடும்பத்தாலும், எந்த சமுதாயத்தாலும், எந்த பல்கலைகழகத்தாலும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. மக்கள் துயரத்திலேயே வாழ்ந்து அதற்கு பழக்கப்பட்டு போய் விடுகிறார்கள். எல்லோரும் துன்ப்படுவதால் நீ துயரப்படுவது பெரிதாக தெரிவதில்லை. நீ விதிவிலக்காக இருக்க முடியாது என தோன்றி விடுகிறது.

ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன். நீ விதி விலக்காக இருக்க முடியும். நீ அதற்கான சரியான முயற்சியை எடுக்க வில்லை, அவ்வளவுதான்.


Source : THE GOLDEN FUTURE CHEPTER # 6 Q # 1


தீட்சை - ஓஷோவின் கதை -33

பழைமையான கதை ஒன்று உண்டு.

கடைசி தீட்சை சீடனுக்கு அளிக்கப்படவுள்ளது. குரு, உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும், என கூறினார். குரு அவனுடைய வழியில் வைத்த எல்லா கஷ்டங்களிலும் சீடன் தேறிவிட்டான், அவன் தன்னை நிரூபித்துவிட்டான். இப்போது கடைசி தீட்சை . . . மற்றும் அவன் கடைசி தீட்சையிலும் தேறிவிட்டால், அவன் ஞானமடைந்தவன் என அறிவிக்கப்படுவான் சீடன் குருவின் காலை தொட்டு, நான் தயாராக இருக்கிறேன். வெறுமனே எனக்கு கட்டளையிடுங்கள் மற்றும் எது செய்யப்படவேண்டுமோ அதை நான் செய்வேன், என கூறினான்.

குரு ,நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்லவேண்டும், அரசரை பார்க்கும் முதல் ஆளாய் நீ இருக்கவேண்டும். ஏனெனில் அரசருக்கு ஒரு பழக்கம் உள்ளது, முதலில் வருபவர்கள் யாராக இருந்தாலும், வருபவர் எதை கேட்டாலும், அரசர் கொடுத்துவிடுவார். ஆனால் நாடு செல்வ செழிப்போடு இருப்பதால் யாராவது செல்வது மிகவும் அபூர்வம். வருடங்கள் கடந்துவிட்டன, எதை கேட்டும் யாரும் போவதில்லை. ஆனால் தவறவிட்டுவிடாதே – மிகவும் சீக்கிரமாகவே அங்கு இரு. அரசர் காலையில் அவருடைய தோட்டத்திற்குள் நுழைவார், சூரியன் உதயமாகும்போது, அரசர் தோட்டத்திற்குள் நுழைவார் – அங்கு இரு. மற்றும் அவர் உன்னை உனக்கு என்ன வேண்டும் ? என்று கேட்பார் மற்றும் உனக்கு என்ன வேண்டுமோ, அதை அவரிடம் கேள், என கூறினார்.

இந்த கடைசி தீட்சை எந்த விதமானது என்பதை சீடனால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கட்டளை பின்பற்றப்படவேண்டும், அவன் சென்றான். அவன் தவறவிடவில்லை, அதிகாலை மூன்று மணிக்கு அவன் அரசருக்காக காத்திருந்தான்.

சூரியன் உதயமாகும் சமயத்தில், அரசர் தோட்டத்தில் நுழைந்தார் அந்த இளைஞன் அரசரை வணங்கினான். அரசர் ,நீ எதையாவது கேட்பதற்காக வந்திருக்கிறாயா ? நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! நீ என்ன கேட்டாலும், நான் அதனை உனக்கு தருவேன், என கூறினார்.

மிகப்பெரிய ஆசை இளைஞனை ஆட்கொண்டது. அவன் ஒரு ஏழை, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன், மற்றும் அரசர் எதுவாக இருந்தாலும் என்று கூறுகிறார் ? நிச்சயமாக தெரிந்துகொள்வதற்காக, அவன் திரும்பவும் கேட்டான்.

எது வேண்டுமானாலும் என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? அரசர் சரியாக அதைத்தான் சொல்கிறேன் – எதுவாக இருந்தாலும் நீ என்னுடைய இராஜ்ஜியத்தை கேட்டால் கூட நான் அதனை உனக்கு தந்துவிடுவேன். நீ உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவு கேட்கலாம். . . . ,என கூறினார்.

ஏழை இளைஞனால் அதிகமாக யோசிக்கமுடியவில்லை. அவன் ஒருவேளை பத்தாயிரம் ரூபாய் போதுமானது என எண்ணினான். ஆனால் ஓர் ஆசை, ஏன் பத்தாயிரம் ? உனக்கு ஒருவேளை இப்படி ஒரு வாய்ப்பு திரும்பவும் கிடைக்காமலேயே போகலாம் – ஏன் ஒரு இலட்சம் கேட்கக்கூடாது ?

மற்றும் பிறகு மற்றொரு ஆசை, மற்றும் ஆசை மேலும் ஆசை. . . ஏனெனில் மனம் தொடர்ந்து இன்னும் இன்னும் என கேட்டுகொண்டேயிருக்கிறது. எனவே அவன் என்ன முடிவு செய்தாலும், மனம் இன்னும் அதிகமாக என்று கேட்டுகொண்டேயிருந்தது.

அரசர் நீ கேட்பதற்கு இன்னும் தயாராகவில்லை போல தெரிகிறது, நான் எனது காலை நடைப்பயிற்சிக்கு செல்கிறேன், அந்த நேரத்தில் நீ முடிவு செய். மற்றும் நான் திரும்ப வரும்போது, நீ என்ன கேட்டாலும் அது உனக்கு தரப்படும், என கூறினார்.

அந்த அரை மணிநேரம் சித்ரவதையாக இருந்தது, அவன் போய்கொண்டேயிருந்தான், நான் இதை கேட்கலாம் மற்றும் அதையும் கேட்கலாம், ஒரு தங்க ரதம், மற்றும் பல கோடி ரூபாய் பணம், மற்றும் மிக அதிக அளவிலான நிலம் – நான் எனக்கே உரிய ஒரு சிறிய இராஜ்ஜியத்தை உருவாக்குவேன்.

ஆசைகள் மற்றும் கனவுகள். . . மற்றும் அரசர் வந்தார். அந்த அரை மணி நேரம் மிகவும் வேகமாக போய்விட்டது. அரசர் அங்கு நின்றுகொண்டிருந்தார் மற்றும் அரசர் , இளைஞனே நீ இன்னும் முடிவு செய்யவில்லையா ? என கேட்டார்.

பிறகு திடீரென இளைஞன் , நான் எதை கேட்டாலும் அது அரசர் வைத்திருப்பதை விட குறைவாகவே இருக்கும், எனவே ஏன் எல்லாவற்றையும் கேட்ககூடாது ? எண்ணிக்கைக்கு முடிவு கட்டிவிடலாம் என எண்ணினான் !

எனவே அவன் ,ஐயா, நீங்கள் தர விரும்பினால், நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருப்பது அனைத்தையும் கேட்கிறேன். உங்களுடைய முழு இராஜ்ஜியம், உங்களுடைய அனைத்து செல்வங்களும், உங்களுடைய மாளிகைகள் - - அனைத்தும் வேண்டும். நீங்கள் வெறுமனே அரண்மனையை விட்டு வெளியேறிவிடுங்கள் ! மற்றும் நீங்கள் திரும்பவும் அரண்மனைக்குள் செல்லக்கூடாது. நீங்கள் ஏதையும் எடுத்துகொள்ளக் கூடாது. நீங்கள் வெறுமனே வெளியேறிவிடுங்கள் - - இராஜ்ஜியத்தைப்பற்றி எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். நான் உங்களுக்கு நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டுமே அனுமதிக்கமுடியும்.

அதைக்கூட அவன் எதிர்ப்போடுதான் செய்தான், அதுகூட அவனுக்கு குறைவதாக தோன்றியது.

அரசர் மண்டியிட்டு, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார், அவருடைய கண்களில் ஆனந்த கண்ணீர் உருண்டோடியது, பரவச கண்ணீர் ! மற்றும் அவர் கடவுளிடம் நான் இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காகத்தான் காத்துகொண்டிருந்தேன் ! ஆனால் முடிவில் என்னுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், இப்போது அவன் வந்துவிட்டான், நான் இந்த எல்லா முட்டாள் தனங்களில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். நன்றி நீங்கள் என் பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், அது அதிக இருந்தாலும், நான் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருந்தது இருந்தாலும், நீங்கள் எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்துவிட்டீர்கள், நான் நன்றியால் நிறைந்துள்ளேன் என நன்றி கூறிக்கொண்டிருந்தார்.

அரசர் இந்த விஷயங்களை கடவுளிடம் கூறிக்கொண்டிருக்கும்பொழுது இளைஞன் அங்கு நின்றுகொண்டிருந்தவன் என்ன விஷயம் ? இராஜ்ஜியத்தை துறப்பது குறித்து இந்த மனிதன் அதிக மகிழ்ச்சியை உணர்கிறான் என்றால், நான் எதற்குள் நுழைகிறேன் ? இந்த மனிதன் சொல்வதைப்போல் 30 வருடங்களாக என்னுடைய முழு இராஜ்ஜியத்தை ஏற்றுகொள்ளும் ஒருவனை அனுப்பு, என்னுடைய முழு இராஜ்ஜியத்தையும் கேட்கும் ஒருவனை அனுப்பு என இந்த மனிதன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான் என்றால் – 30 வருடங்களாக அவன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறான் எனில், பிறகு இது எந்த மதிப்பும் உடையது அல்ல. நான் தேவையற்ற பிரச்சனைக்குள் நுழைகிறேன் என யோசிக்க தொடங்கினான்.


இளைஞனும் மண்டியிட்டான், அரசரின் கால்களை தொட்டு சார் நான் ஒரு இளைஞன் . . ஓர் இளைய முட்டாள். தயவுசெய்து மன்னித்துவிடுங்கள். எனக்கு எதுவும் வேண்டாம். கடவுளிடம் உங்களுடைய பிரார்த்தனை, கடவுளிடம் உங்களுடைய நன்றியுணர்வு என்னுடைய முழு மனதையும் முடித்துவிட்டது. நான் காட்டிற்கு என்னுடைய குருவிடம் திரும்பி செல்கிறேன், என கூறினான்.

அரசர் அவனிடம் சம்மதிக்க வைக்க முயன்றார். போகாதே, வெறுமனே பார். அரண்மனைக்குள் வா ! நான் என்னுடைய அரண்மனை, என்னுடைய இராஜ்ஜியம், என்னுடைய செல்வங்கள் மட்டுமல்ல, அதோடு என்னுடைய அழகான பெண்ணையும் உனக்கு தருகிறேன், வந்து வெறுமனே பார் ! என்றார்.

ஆனால் இளைஞன் நான் இங்கு ஒரு நொடிகூட இருக்கமுடியாது - - ஏனெனில் மனம் என்னை ஏமாற்றிவிடலாம். ஒரு உள்ளார்ந்த புரிதல் நிகழ்ந்துவிட்டது, மற்றும் நீங்கள் கடவுளிடம் நன்றியுணர்வு கொண்டதைபோல நான் உங்களிடம் நன்றியுணர்வோடு இருக்கிறேன். நான் தெளிந்துவிட்டேன் ! என கூறினான்.

மற்றும் இளைஞன் தன்னுடைய குருவிடம் சென்று நடந்த முழு கதையையும் சொன்னபோது, குரு உன்னுடைய கடைசி தீட்சை முடிந்துவிட்டது. இப்போது எதுவும் எப்போதும் உன்னை ஒரு அடிமையாக்காது. இப்போது நீ கவனமாக, உணர்வோடு, சுதந்திரமாக இருக்கிறாய், நீ தேறிவிட்டாய் - - நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கிருந்து கவனித்துகொண்டிருந்தேன், நீ முழு இராஜ்ஜியத்தையும் கேட்டபோது, என்னுடைய இதயம் அழுதது. நான் ,எனவே இந்த முட்டாளிடம் 15 வருட உழைத்தது, எல்லாம் முடிந்தது என நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் நீ எடுத்த முடிவால் நான் அடைந்த மகிழ்ச்சியை நீ கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது, என கூறினார். நீ திரும்பவும் வந்துவிட்டாய், உன்னால் அந்த விஷயத்தை பார்க்கமுடிந்தது, நீ கவனித்துகொண்டிருந்தாய். என குரு கூறினார்.

கவனித்து கொண்டிரு, வெறுமனே கவனி. . . . மக்களிடம் பணம் உள்ளது, மக்களிடம் மாளிகைகள் உள்ளன, மக்களிடம் நீ ஆசைப்படும் அனைத்தும் உள்ளன - - வெறுமனே கவனி, வெறுமனே பார். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா ? அவர்கள் நிறைவாக இருக்கிறார்களா ? அவர்கள் உன்னைவிட மகிழ்ச்சியற்று இருக்கலாம் மற்றும் உன்னைவிட அதிகமாக நிறைவற்று உணரலாம் - - பிறகு அவர்களை பின்தொடராதே. அவர்கள் குருடர்கள் ! அவர்கள் மற்ற குருட்டு மக்களை பின்தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களை பின் தொடராதே, கூட்டத்தை பார்த்து காப்பியடிக்காதே.

மூலம் : THE FISH IN THE SEA IS NOT THRISTY CHAPTER # 7

மலர் 3 இணைய இதழ் 8 11 மார்ச் 2011

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்திலிருந்து த்யான் சித்தார்த், கிலிம்சஸ் மையம் ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் டைனமிக் தியான பயிற்சிப் பட்டறையை பிப்ரவரி 27ந் தேதி சென்னையில் நடத்தினார்.

திருப்பூரில் உள்ள ஓஷோ சாஸ்வதம் தியானமையத்தில் (கிளை) விரும்பும் அன்பர்கள் வந்திருந்து தியானம் செய்யலாம்.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்……

ஈகோ அல்லது – நான் – என்பதை சுயகற்பனை பிம்பம் என்று சொல்வது மிகவும் பொருந்தும்.

குழந்தைக்கு அடையாளம் கொடுத்து சுய கற்பனை பிம்பம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறது சமூகம். அன்பு காட்டும் தாய், அரவணைக்கும் குடும்பம், கொஞ்சும் கூட்டம், விளையாட தோழர்கள் என வளரும் குழந்தை தன் உணர்வுகளை மூடிய ஒரு சுயகற்பனை பிம்பத்தை, பொய்யான ஒரு அக உலகத்தை உருவாக்கிக் கொள்கிறது.

ஒரு குழந்தையை நாம் –முத்து- என அழைக்கும்போது, முத்துவுக்குப் பசிக்கிறதா என்று நாம் கேட்கிறோம். நீங்கள் கவனித்துப்பார்த்தால் குழந்தை பேசுகையில், ஆரம்பத்தில் அதுவும் முத்துவுக்குப் பசிக்கிறது என்றே கூறும். ஏனெனில் இன்னும் அதற்கு சுய அடையாளம், சுயகற்பனை பிம்பம் விழ ஆரம்பிக்கவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக - நம் பெயர்தான் நான் - என்பதில் தொடங்கி என் தாய், என் தந்தை என்று பிம்பத்தை கட்ட உதவுகிறோம். மேலும் இந்த சுயகற்பனை பிம்பத்தை ஒட்டியே குழந்தை தன் உணர்வு அனுபவங்களையும் சேகரிக்க ஆரம்பிக்கிறது. இதனால்தான் இதற்கு முந்தைய பதிவுகள் நமது நினைவில் இல்லாமல் போய்விடுகிறது.

வளர வளர வாழ்க்கையே சுயகற்பனை பிம்பத்திற்காக போராடும் போராட்டமாக ஆகிவிடுகிறது.

இதில் நிகழும் சறுக்கல்கள் துன்பமாகின்றன. ஏனெனில் சுய கற்பனை பிம்பம் உடையும் போதெல்லாம் உள்ளே பயமே இருக்கிறது. மரண பயம்.

சுய கற்பனை பிம்பத்தை பெரிதாக ஏற்படுத்தி காப்பாற்றக் கற்றுக்கொடுக்கிறது சமூகம்.

சுயகற்பனை பிம்ப கோட்டை கட்டி காப்பாற்ற முடியாதவர்கள் தோல்வியாளர்களாக பயத்தில் துவண்டு பதுங்கி வாழும் மனம் பெறுகின்றனர்.

வெற்றி பெறுபவர்கள் சுயகற்பனை பிம்பத்திலிருந்து வெளிவராமலிருக்கும் போதைகளை பிடித்து கொள்கின்றனர்.

இதில் சுயகற்பனை பிம்பத்தை ஊட்டி வளர்க்கும் சமூக போதைகளான புகழ், கௌரவம், அதிகாரம், அந்தஸ்து, பணம், மரியாதை இவற்றை நல்ல போதைகள் என்கிறது சமூகம். சூது, மாது, குடி இப்படி உள்ளவற்றை கெட்ட போதைகள் என்கிறது சமூகம். இது தவிர அரட்டை, டிவி, என பகல்கனவு அம்சங்கள் பல உள்ளன.

சுயகற்பனை பிம்பத்தை உடைக்கும் தனிமை எல்லோரையும் மிரட்டுகிறது.

சுயகற்பனை பிம்பத்தை உடைக்கும் அவமானம், ஏமாற்றம், தோல்வி, ஆகியவையும் மிரட்டுகின்றன.

ஆகக் கூடி இந்த சமூக அமைப்பு என்பதே மனிதனின் பசி செக்ஸ் என்ற இரண்டு பசிகளையும் சண்டையிட்டுக் கொள்ளாமல் தீர்த்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுப்பதும், உணர்வோடு வாழ்வதை மறக்கடிக்கும் விதமாக சுயகற்பனை பிம்ப போதைகளை இடையூறில்லாமல் ஏற்றிக் கொண்டு வாழ வழியமைப்பதுமாகவே இருக்கிறது. பகல் கனவுக்கும் ஆதரவு கொடுக்கிறது.

இதனால்தான் இந்த சமூகம் இன்னும் நாகரீகமடையவில்லை என்கிறார் ஓஷோ. இது இன்னும் ஒரு சிலர் வாழ எல்லோரும் அடிமைகளாக இருக்கும் விதமாகவே இருக்கிறது. போதையிலும், உறக்கத்திலும், குற்றவுணர்விலும், சுயகற்பனை பிம்பத்திலும் சிக்கித் தவிப்பவனாகவே உள்ளான் மனிதன். காட்டுமிராண்டியாய் மனிதன் வாழ்ந்த காலத்தின் நோக்கமே இன்றுவரை தொடர்கிறது.

ஆனால் மனிதன் சுயகற்பனை பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளாமல் உணர்வு பூர்வமாக வாழ்ந்தால் அவன் பிறக்கும்போதுள்ள விலங்குணர்ச்சிகள் எல்லாம் மனித உணர்ச்சிகளாக மாறும். அன்பும், படைப்பும், இசையும் என மனித குணங்கள் வளரும்.
பகுத்தறிவு, விஞ்ஞானம் போன்ற அறிவுகளையும் கலைகள், சிரிப்பு, வியப்பு, நட்பு, கருணை, திருப்தி, பகிர்வு, அழகு, போன்ற உணர்வுகளையும் அனுபவிக்கையில், மரண பயம் கடந்து இயற்கையோடியைந்த ஒரு அனுபவம் கிடைக்கும்.

அப்படிப்பட்ட அனுபவங்களில் இருந்து மனிதன் கண்டுணர்ந்த்தே தன்ணுணர்வு அனுபவம். அந்தக் கண்டுபிடிப்பால் மனித வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்தை மனிதன் அறிந்து கொண்டான். பிறகு அதைப்பெறுவதற்கான வாழ்க்கைப்பாதையும் அதைக் கண்டுணர்ந்த ஞானிகளால் அமைக்கப் பட்டது. ஆனால் அது புனரமைக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். மாறாக மத அமைப்புகளால் அதுவும் மக்களை ஏமாற்றவே பயன்படுத்தப் படுகின்றன.

சுயகற்பனை பிம்பத்தை காக்கும் ஓட்டம்தான் மனம். மனம் அதைக் காக்கும் பொருட்டு உடலின் சக்தி முழுவதையும் எடுத்துக் கொண்டு விடுகிறது. இயற்கையில் கரைந்து தன்னுணர்வு பெறும் அனுபவங்களுக்கு வழி விடாமல் சுயகற்பனை பிம்பத்தைக் காப்பாற்ற உடலின் விலங்குணர்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கிறது. மனிதனின் ஆறாம் அறிவையும் பயன்படுத்திக் கொள்கிறது. அப்படித்தான் துரோகமும் சூழ்ச்சியும் அரசியலும் வியாபாரமும் பிறந்துவிட்டது.

இதயத்திலிருந்து உணர்வோடு வாழ்வதே தன்னுணர்வுக்கு வழிகாட்டும். அதை வளர்க்கும். அதன் மூலம் பிரபஞ்ச உணர்வு எட்டுவதே மனிதனின் வாழ்வு, இயற்கையின் அடுத்த வளர்ச்சி நிலை.

மிருகம் வரை உணர்வு தன்னுணர்வு அற்றது.

மனிதனில் தன்னுணர்வு பிறந்தது அவனது உணர்வுபூர்வமான அனுபவத்தால். அது இயற்கையின் இணைப்புணர்வு அனுபவம், அது தியான அனுபவம், அது மனம் கடந்த நிலை, முழு உணர்வோடு இருக்கும் கணம். அந்த நிலையில் மனிதனாய் உள்ள அனைத்து பிரச்சனைகளும் காணாமல் போய்விடுகின்றன. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டமும், மரண பயமும் இல்லாமல் போய்விடுகிறது.

அதை பெற வாழ்வை எப்படிப் பயன்படுத்துவது என்று ஆராய்வோம், அதை முயற்சி செய்வோம், அதன் படி இருக்க முயல்வோம்.

நமது சுயகற்பனை பிம்பம் எது என புரிந்து கொள்ள முயற்சி செய்வோம், மனதின் வழி செல்லாமல் நமது இதயம் என்ன சொல்கிறது என கேட்க முயற்சி செய்வோம், இதய உணர்ச்சிகளை முன்னிறுத்தி அதன் வழி வாழ முயல்வோம்.

வாழ்க விழிப்புணர்வுடன்
சித்.

கவிதைப் பகுதி

அன்பின் சிறப்பு
உரிமை தாய்மையின் சிறப்பு,
கண்டிப்பு தந்தையின் சிறப்பு.

ஊடல் காதலின் சிறப்பு,
பகிர்தல் நண்பனின் சிறப்பு.

தியாகம் உணர்வின் சிறப்பு,
படைப்பு உழைப்பின் சிறப்பு.

நன்றியுணர்வு பக்தனின் சிறப்பு,
கருணை குருவின் சிறப்பு.

கலை அழகின் சிறப்பு,
நடனம் நளினத்தின் சிறப்பு,
இசை துய்த்தலின் சிறப்பு.

கணத்தில் வாழ்தல் குழந்தையின் சிறப்பு,
நேயம் நனிதனின் சிறப்பு.

இப்படி.....
எதன் சிறப்பும்
எப்போது பிறக்கிறது

அதனதன் நிலையில்
அன்பும் நேசமும்
பொங்கிப் பெருகுகையில்.....

ஆம்...
அப்போதுதான்
அந்த சிறப்பு பிறக்கிறது.

ஆகவே நண்பா

எந்த நிலையிலும் அன்பு கொள்,
சிறப்பு உன்னிடம் பிறக்கட்டும்.



. மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ


ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருத்தல்

ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருத்தல் என்பது மனமின்றி இருப்பது. எந்த எண்ணங்களும் இல்லாமல் வெற்றிடமாக இருக்கும்போது உன்னுடைய தன்னுணர்வு எதையும் பிடித்துக் கொள்ளாமல் இருக்கும்போது உனது கண்ணாடி பிரதிபலிக்க எதுவுமின்றி இருக்கும்போது இருப்பதுதான் ஏற்றுக் கொள்ளும் தன்மை. ஏற்றுக் கொள்ளும் தன்மை தெய்வீகத்திற்கான வாசல். மனதை விட்டு விட்டு இருத்தலாக இரு.

ஏற்றுக் கொள்ளும் தன்மை என்பது நீ சுமந்து கொண்டிருக்கும் குப்பைகளை வீசியெறிவது.

நான் ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இரு என்று கூறும்போது திரும்பவும் ஒரு குழந்தை போல மாறி விடு என்றுதான் கூறுகிறேன்.

எங்கே மௌனமும் விழிப்புணர்வும் சந்திக்கிறதோ அங்கே ஏற்றுக் கொள்ளும் தன்மை இருக்கிறது.

ஏற்றுக் கொள்ளும் தன்மை என்பது மிக முக்கியமான ஆன்மீக குணமாகும்.

சத்யத்தை வாங்க முடியாது, அதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மட்டுமே முடியும்.

அமைதியின் இருப்பு நிலையே ஏற்றுக் கொள்ளும் தன்மையாகும்.

தனித்தன்மை

உன்னைப் போன்ற ஒருவர் இந்த உலகத்திலேயே எங்கேயும் இல்லை. – இதற்கு முன்பும் இருந்த்தில்லை, இதற்கு பின்பும் இருக்கப்போவதில்லை. நீ ஒருவர்தான். ஒவ்வொரு தனி மனிதனும் தனித்துவமானவன். தனித்துவம் இயற்கையினால் கொடுக்கப்பட்ட பரிசு.

இயற்கை தொடர் வரிசையில் எதையும் செய்வதில்லை, அது தனித்துமானவைகளையே உருவாக்குகிறது.

என்னைப் பொறுத்தவரை, தனி மனிதர்களின் தனித்துவமே சத்தியமான உண்மை.

நீ எதைச் செய்தாலும் அதில் உனது தனித்துவத்தை வெளிப்படுத்து.

உன்னுடைய தனித்துவத்துக்கு மதிப்பளி. ஒப்பிடுதலை விட்டு விடு. உன்னுடைய இருத்தலில் தளர்வாக இரு.

உன்னுடைய தனித்துவம் என்னவென்று கண்டுபிடிப்பது மிகவும் சாகசமானதும் மெய்கூச்சரிய வைக்கும் அனுபவமும் ஆகும்.

மற்றவர்களிடம் கருணையோடு இருப்பதும் அவர்களின் தனித்துவத்தை மதிப்பதாகும்.




ஓஷோ வீடியோ

1. Osho : You are in Prison and you think you are Free

2. Osho : There is no Creator

3. Osho : Life is a Mystery to be Lived


தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

ஏற்றுக் கொள்ளுதல் செய்யும் வித்தை

ஆரம்பம் - ஏற்றுக் கொள்
உனக்கு என்ன நிகழ்ந்தாலும் நீ அதை உன் இருப்பின் ஒரு பாகமாக ஏற்றுக் கொள். அதை கண்டனம் செய்யாதே.

இரண்டாவது – முழுமையே இயற்கை

மரங்கள் மட்டுமல்ல, மேகங்கள் மட்டுமல்ல – முழுமை. என்ன நிகழ்ந்தாலும் அது இயற்கையினால்தான் நிகழ்கிறது. இயல்பில்லாதது எதுவுமேயில்லை, இருக்க முடியாது. இல்லாவிடில் அது எப்படி நடக்கும் ஒவ்வொன்றும் இயற்கையானது. அதனால் இது இயற்கையானது இது இயற்கையில்லாதது என பிளவு ஏற்படுத்தாதே. என்னவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள், அதை ஆராயாதே.

நீ மலையில் இருந்தாலும் சரி, மார்கெட்டில் இருந்தாலும் சரி நீ அதே இயற்கையில்தான் இருக்கிறாய். சில இடங்களில் இயற்கை மலையாக, மரமாக இருக்கிறது, சில இடங்களில் இயற்கை மார்க்கெட்டில் கடைகளாக இருக்கிறது.

ஒருமுறை நீ ஏற்றுக் கொள்ளுதலின் ரகசியத்தை தெரிந்து கொண்டு விட்டால் பின் கடைவீதியும் கூட அழகானதாகி விடும். கடைவீதிகென்றே ஒரு அழகு இருக்கிறது. அங்கே உள்ள அதன் வாழ்வு, அந்த துடிப்பு, சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த அழகான கிறுக்குத்தனம் எல்லாமும் அழகானது. அதற்கே உரிய அழகு இருக்கிறது. மேலும் கடைவீதி இல்லையென்றால் மலைகள் அவ்வளவு அழகாக இருக்காது. மலைகள் அவ்வளவு அழகாகவும் அவ்வளவு அமைதியானதாகவும் இருக்க காரணம் கடைவீதி இருப்பதுதான். கடைவீதிதான் மலைகளுக்கு மௌனத்தை கொடுக்கிறது.

நீ ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து உன்னை முழுமையாக மறந்து விடலாம். நீ கரைந்து போய்விடும் அளவு உன்னை மறந்து விடலாம். நீ தெருவில் நடனமாடலாம், நீ உன்னையே மறந்து விடும் அளவு உன்னை இழந்து நடனமாடலாம். என்ன நிகழ்ந்தாலும் அதில் முழுமையாக கரைந்து ஒன்றி போய் விடுதலே அதன் ரகசியம். உனது மேகம் நகரும் வழியை கண்டுபிடி, பொழியும் இடத்தை பார், அதை முழுமையாக அனுமதி. எங்கே அது பொழிந்தாலும் அது தெய்வீகத்தை சென்று சேரும். சண்டையிடாதே. மித, நதியுடன் போராடாதே. அதனுடன் மிதந்து போ. நடனத்துடன் நீ முழுமையாக ஒன்றி போகும்போதுதான் அது அழகானது, அதுதான் முக்கியம். எதையும் புறந்தள்ளாதே. புறந்தள்ளுதல் ஆன்மீகமானதல்ல. முழுமையாக ஏற்றுக் கொள். ஏற்றுக் கொள்ளுதலே பிரார்த்தனை.
My Way : The Way of The White Clouds


தியான யுக்தி - 3

உள்குரலை கவனித்தல்

நீங்கள் எங்களிடம் உன் உள் குரலை கேட்டு அதன் மூலம் செயல்படு என்று கூறுகிறீர்கள். ஆனால் எங்களுக்கு மனதின் குரல் மட்டுமே உண்டு என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அப்படியிருக்கும்போது எதனால் அப்படி கூறுகிறீர்கள் வெறுமைக்கு கூட குரல் உண்டா

ஆம். வெறுமைக்கு என்று அதற்கே உரித்தான குரல் உண்டு. அது உண்மையில் குரலே அல்ல. அது ஒரு உத்வேகம். அது ஒரு சப்தம் அல்ல. அது மௌனம். யாரும் இதை செய் என்று சொல்வதில்லை, நீயே அதை செய்ய வேண்டும் போல உணர்கிறாய். உள்குரலை கேட்பது என்பது எல்லாவற்றையும் உள்ளே உள்ள வெறுமையிடம் விட்டுவிடுவது. பின் அது உன்னை வழிநடத்தும்.

நீ வெறுமையாக செல்லும்போது எப்போதும் சரியாகத்தான் செல்வாய். உன்னிடம் உள் வெறுமை இருந்தால் எதுவும் தவறாகாது. எதுவும் தவறாக முடியாது. வெறுமையில் எதுவும் தவறானதில்லை. இதுதான் எப்போதும் சரியானது என்பதற்கான சான்று. ஆம். வெறுமைக்கென்று ஒரு குரல் உண்டு, மௌனத்திற்கென்று ஒரு இசை உண்டு, அசைவற்றது அதற்கே உரிய நடனத்தை கொண்டுள்ளது. ஆனால் நீ அதை சென்றடைய வேண்டும்.

நான் மனதை கேள் என்று சொல்ல வில்லை. உண்மையில் மனது உன்னுடையதே அல்ல. நான் உன்னுடைய குரலை கேள் என்று நான் சொல்லும்போது இந்த சமுதாயம் உனக்கு கொடுத்த எல்லாவற்றையும் விட்டுவிடு என்றுதான் கூறுகிறேன். இந்த மனம் சமுதாயத்தால் உனக்கு கொடுக்கப்பட்டது. உனது மனம் உன்னுடையது அல்ல. அது சமுதாயம், அது கட்டுத்திட்டப்படுத்தப்பட்டது. அது சமுதாயம். வெறுமை உன்னுடையது. மனம் உன்னுடையது அல்ல. மனம் ஒரு இந்துவாக, முகம்மதியனாக, கிறிஸ்டியனாக. கம்யூனிஸ்டாக, முதலாளித்துவமானதாக, கம்யூனிஸத்திற்க்கு எதிரானதாக இருக்கலாம். வெறுமை ஏதுமில்லாதது. யாருமில்லாதது. அந்த ஏதுமற்ற தன்மைதான் உன்னுடைய இருப்பின் தூய்மை. அதை கவனி.

நான் கவனி என்று சொல்லும்போது, யாரோ ஒருவர் உன்னிடம் அங்கிருந்துகொண்டு பேசுகிறார் என்று நான் சொல்லவில்லை. அதை கவனி என்று நான் சொல்லும்போது அதற்கு நீ கிடைக்கக்கூடியவனாக இரு, உன் இருப்பு அதில் இருக்கட்டும், உன் செவி அதற்கு திறந்திருக்கட்டும் என்று கூறுகிறேன். அது உன்னை வழி நடத்தும், அது யாரையும் தவறாக வழிநடத்தியதில்லை. இந்த ஏதுமற்ற தன்மையிலிருந்து வெளிவரும் எதுவுமே அழகானதாக, சத்யமானதாக, சிறந்ததாக, வரமாகத்தான் இருக்கும்.
Yoga : The Alpha And the Omega


ஓஷோவின் விளக்கம் - ஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 2

ஓஷோ மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதன் 2-வது மாதத் தொடர்ச்சி.

இரண்டாவது பள்ளத்தாக்கு நினைத்துவருந்தும் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
நீ யார் என்பதை நீ பார்க்க ஆரம்பித்தால், அங்கே மிக ஆழ்ந்ததொரு நினைத்துவருந்துதல் எழுகிறது. நீ செய்த தவறுகளினாலும், நீ செய்திருக்க வேண்டிய செயல்களாலும், அவசியம் இல்லாமல் செய்த செயல்களாலும் நீ நினைத்துவருந்த ஆரம்பிக்கிறாய். அதனால் தன்னுணர்வோடு கூடிய ஒரு சிகரம் அங்கே எழுகிறது. – ஆனால் அதோடு திடீரென மனசாட்சியும் எழுகிறது. நினைவில் கொள், உன்னிடம் இப்போது உள்ள மனசாட்சி உண்மையானது அல்ல. அது போலியானது. அது சமுதாயத்தினால் உனக்கு கொடுக்கப்பட்டது.

மக்கள் எது நல்லது எது கெட்டது என்றும் எது முறையானது எது முறையற்றது என்றும் உனக்கு சொல்லியிருக்கிறார்கள். எது நெறிமுறை என்றோ எது நெறிமுறையற்றது என்றோ உனக்குத் தெரியாது. ஆனால் முதல் பள்ளத்தாக்கை கடந்தபின் எது தவறு எது சரி என்பது உனக்கு தெரியவரும். அப்போது நீ செய்த தவறுகள் அனைத்தும் உனக்கு புரியும் – எத்தனை பேரை காயப்படுத்தியிருக்கிறாய், மற்றவர்களிடம் எவ்வளவு குரூரமாக நடந்திருக்கிறாய், உன்னிடமே நீ எவ்வளவு பொறாமை, கோபம், ஆக்ரோஷம், வன்முறை, அழிக்கும் சக்தி கொண்டவனாக இதுவரை இருந்திருக்கிறாய் – இவையனைத்தும் உன் பார்வைக்கு வருகின்றன.

தன்னுணர்வடையும்போது மனசாட்சி எழுவது அந்த செயலுடன் கூடிய விளைவு.
நீ கொண்டுள்ள மனசாட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது – நீ கொண்டுள்ள மனசாட்சி கடன் வாங்கப்பட்டது. நீ அதை வைத்துக் கொள்ளலாம், அது உன்னை காயப்படுத்துவதில்லை, அது உனக்கு வலி தந்து அதன் மூலம் உன்னை நிலைமாற்றம் அடைய செய்வதில்லை. உனக்கு இது இது சரியென்று தெரியும், ஆனாலும் நீ தவறானதையே செய்து கொண்டு போகிறாய், நீ செய்ய விரும்புவது எதுவோ அதையே செய்கிறாய். இதுதான் சரியென்று உனக்கு தெரிந்த உன்னுடைய அறிவு உன்னுள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. உனக்கு கோப்படுவது தவறென்று தெரியும், ஆனால் நீ கோபமாகவேதான் இருக்கிறாய். ஒரு முனையில் கோபம் தவறென்று உனக்குத் தெரியும், மற்றொரு முனையில் எந்த வித உறுத்தலும் இல்லாமல் நீ கோபமாகவே இருக்கிறாய். ஒரு முனையில் பிடித்து வைத்துக் கொள்வது தவறென்று உனக்குத் தெரியும், மற்றொரு முனையில் நீ பிடித்து வைத்துக் கொள்கிறாய் – பொருட்களை மட்டுமல்லாமல் ஆட்களையும் பிடித்து வைத்துக் கொள்கிறாய். உனது மனைவி, உனது கணவன், உனது குழந்தைகள் எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கொள்கிறாய் – அவர்கள் ஏதோ பொருட்கள் போல, ஏதோ அவர்களை பிடித்து வைத்துக் கொள்ளலாம் போல. – உன்னுடைய பிடித்து வைத்துக் கொள்வதின் மூலம் நீ அவர்களை அழிக்கிறாய், அதை தவறு என்று தெரிந்தே செய்கிறாய்.

இந்த கடன் வாங்கப்பட்ட மனசாட்சி உனக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை, அது உனக்கு ஒரு சுமையே. நீ முதல் பள்ளத்தாக்கை கடந்தபின் உனது சொந்த மனசாட்சி எழும். இப்போது உனக்கு எது தவறு என்பது மிக நன்றாகத் தெரியும், ஆதலால் சரியானதை மட்டுமே செய்ய முடியும். இதுதான் சாக்ரடீஸ் கூறிய அறிவு தான் நற்குணம்

இப்போது இந்த நினைத்துவருந்தும் பள்ளத்தாக்கின் எதிர்மறை என்ன என்பதை பார்ப்போம்....... கடந்த காலத்தில் செய்த தவறுகளை எண்ணி மிகவும் குற்ற உணர்ச்சி கொள்வாய். இந்த தவறு செய்து விட்டோம், அந்த தவறு செய்து விட்டோம், மேலும் நீ ஆயிரக்கணக்கான தவறுகளை செய்து விட்டாய். இங்கே நீ வெகு காலம் சுயஉணர்வின்றி இருந்து விட்டாய் ஆதலால் செய்த தவறுகளை கணக்கெடுக்க ஆரம்பித்தால் அது அதீதமான அளவு வரும். அதனால் குற்றஉணர்வு மிகக் கொண்டு வளர்வதற்கு பதிலாக நீ மிக ஆழ்ந்த இருளில் வீழ்ந்து விடுவாய்.
குற்ற உணர்ச்சி கொண்டால் அதனால் நீ இயல்பிழந்து விடுவாய். கடந்த காலம் மிக சுமையாக மாறி நீ இரண்டாவது பள்ளத்தாக்கிலேயே இருந்து விடுவாய். உன்னால் அதை கடக்க முடியாது போய்விடும். கடந்த காலம் முக்கியமாகி விட்டால் நீ தொடர்ந்து அழுது அரற்றி, தவறு செய்து விட்டேனே என்று நெஞ்சிலடித்துக் கொண்டு அழுவதை தவிர வேறெதுவும் செய்ய இயலாது.

இதன் நேர்மறையான செயல் என்னவென்றால் நீ எதிர்காலத்தைத்தான் பார்க்க வேண்டும். கடந்த காலத்தை அல்ல. நீ தவறு செய்து விட்டாய்தான் ஆனால் நீ இதுவரை சுயஉணர்வின்றி இருந்து விட்டாய் அதனால் தவறு நிகழ்ந்து விட்டது ஆதலால் குற்றஉணர்வு கொள்ள வேண்டிய அவசியமில்லை. சுயஉணர்வின்றி இருக்கும்போது எப்படி ஒருவர் சரியானதை தேர்ந்தெடுத்து செய்ய முடியும் நீ அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் – உனது கடந்த காலம் முழுவதும் தவறானது – ஆனால் அது உன் நெஞ்சில் சுமையாகக் கூடாது. இதை குறித்துக் கொள். இதை குறித்து கொள்வது நீ திரும்பவும் அதை செய்யாமல் இருக்க உதவும். அது முடிந்து விட்ட ஒரு விஷயம். நீ பலரை பல வகைகளிலும் காயப்படுத்தி இருப்பதை எண்ணி இப்போது வருத்தப்பட்டாலும் கூடவே சந்தோஷமாகவும் உணரலாம், ஏனெனில் இனி அதுபோல நடக்கப்போவதில்லை. நீ குற்றஉணர்விலிருந்தும் கடந்தகாலத்திலிருந்தும் விடுதலையடைந்துவிட்டாய். நீ அதையே நினைத்துக் கொண்டிருக்கவேண்டியதில்லை, நீ எதிர்காலத்தைப் பற்றி, வருங்காலத்தைப்பற்றி அக்கறை கொள்ளலாம்.

இப்போது உன்னிடம் உனது சொந்த மனசாட்சி இருக்கிறது, இப்போது வருங்காலம் முழுமையாக வேறுபட்டதாக, குணத்தில் மாறுபட்டதாக, முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கப்போகிறது. நீ அந்த சாகசத்தால் மெய்சிலிர்க்கப்போகிறாய். இப்போது உனக்கே எது சரி, எது தவறென்ற சொந்த புரிதல் இருப்பதால் தவறேதும் நிகழ வாய்ப்பே இல்லை. நீ அதை கட்டுப்படுத்துவாய் என்பதல்ல, உன்னுடைய சொந்த மனசாட்சி எழும்போது அங்கே கட்டுப்பாடோ, நெறிமுறையோ தேவைப்படாது. சரியானது இயல்பாகிவிடும். சரியானது நிகழ்ந்துவிடும். அப்போது சரியானதுதான் இயல்பானது, இயல்பானதுதான் சரியானது.

உண்மையில் ஒருமுறை உனக்கு புரிதல் எழுந்து விட்டால் தவறானதை செய்ய நீ மிகமுயற்சி எடுக்கவேண்டி வரும். அப்போதுகூட அது முழு வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான்.

உன்னுடைய சொந்த புரிதல் அல்லாமல் சரியானதை செய்ய நீ முழுமுயற்சி எடுத்தாலும் அது வெற்றி பெறாது. அதனால் இப்போது மிகவும் சிலிர்ப்போடு இருப்பாய். ஒருவர் கடந்தகாலத்தை பற்றி மிகவும் வருத்தப்பட்டாலும் அதை சுமக்க வேண்டியதில்லை. ஏனெனில் கடந்தகாலம் முடிந்த ஒன்று. இதுதான் அதன் நேர்மறை. – நிலைமாற்றம் நிகழ்ந்துவிட்டதை ஒருவர் உணர வேண்டும். கடவுள் அருள் கிடைத்து விட்டதை, உனது சொந்த புரிதல் உனக்கு நிகழ்ந்து விட்டதை உணர்ந்து கொள்ள வேண்டும். இப்போது உன்னுடைய வாழ்க்கை ஒரு புதிய பரிமாணத்தில், ஒரு புதிய பாதையில் செல்லும்.

இங்குதான் உண்மையான நெறிமுறை, நற்குணம், சீலம் பிறக்கிறது.
Source - The Secret of Secrets Vol 2 che #1

தனிமை பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓஷோவின் பதில் முதல்
பகுதி இம்மாதம் வருகிறது. அடுத்த மாதமும் தொடரும்.

ஏன் இன்றைய நாகரீக மனிதன் மிகவும் தனிமையை உணர்கிறான்?

தம்மோ,

மனிதன் எப்போதும் தனிமையை உணர்கிறான். ஏனெனில் மனிதன் அடிப்படையிலேயே தனியானவன். நாம் தனியாகவேதான் பிறக்கிறோம், தனியாகவேதான் இறக்கிறோம். இதற்கு இடையில் கூடசேர்ந்து இருப்பதுபோல பாசாங்கு செய்து கொள்கிறோம். தனிமை சேதாரப்படாமல் அப்படியே இருக்கிறது. அது அப்படியே அடிப்படை நீரோட்டமாக இருக்கிறது. அது அடியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மனிதன் எப்போதுமே தனியானவன், ஆனால் இன்றைய நாகரீக மனிதன் அதை அதிகமாக உணர்வதற்கு காரணம் இருக்கிறது. முதல்முறையாக மனிதன் தன்னைப் பற்றி நினைத்துப்பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது. கடந்த காலத்தில் உணவுக்காக போராடுவதற்கே நேரம் சரியாக இருந்தது. காலையில் எழுந்தால் இரவு படுக்கப்போகும்வரை உழைத்தால்கூட அது அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் போதாமல் இருந்தது.
இன்றும் கிழக்கித்திய நாடுகளில் அதுதான் நிலைமையாக இருக்கிறது. இந்திய கிராமத்தில் வாழும் இன்றைய மனிதன் தனியாக உணர்வதில்லை. எதையும் உணர்வதற்கு அவனுக்கு நேரம் கிடையாது. அவன் பசியை உணர்கிறான், தனிமையை உணர்வதில்லை. அவனுக்கு தங்குமிடம், வீடு வேண்டும். இந்த விஷயங்கள் – தனிமையை – அவனுக்கு கிடைக்காது. சமுதாயம் சிறிதளவாவது வளமடையும்போதுதான் இந்த உணர்வுகள் உணரப்படுகின்றன.

மக்கள் நன்றாக சாப்பிட்டு, நன்றாக இருந்து, நல்ல இடத்தில் தூங்கி, நல்ல வேலையில் இருக்கும்போது, வாழ்வின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகிவிட்டபின் வாழ்க்கையின் உண்மையான பிரச்னைகள் எழுகின்றன. அப்போது ஒருவனுக்கு நான் தனியானவன், கூட்டத்தில் இருக்கும்போதுகூட நான் தனியானவன் என்பது உறைக்கிறது. அது உயரிய தேவை, தளம் உயர்ந்த தேவை.

முதலில் உடல்தேவை வருகிறது. உடலின் தேவை பூர்த்தியாகாவிட்டால் உனக்கு மனத்தேவை கிடையாது. உடல்தேவை பூர்த்தியான பின்பே மனத்தேவை எழுகிறது. அது அடுத்த கட்டத்திறகானது. இசையைப் பற்றி, கவிதையை, ஓவியத்தை பற்றி எண்ண ஆரம்பிக்கிறான். கலையைப்பற்றி, அழகுணர்ச்சியைப்பற்றி எண்ணுகிறான். இவை உயரிய தேவைகள். ஷேக்ஸ்பியரைப்பற்றி, மில்டன் பற்றி, காளிதாஸ் பற்றி, ரவீந்திரநாத் தாகூர் பற்றி, கலீல் கிப்ரான் பற்றி, நினைக்கிறான். வாக்நர், பீதோவன், லீநர்டோ, வான்காக், பிகாஸோ..........இவையெல்லாம் உயரிய தேவைகள்.
பசியுள்ள மனிதனுக்கு பீதோவனைப் புரியாது. அந்த இசை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அது அவனது பசியை போக்காது. இசையை கேட்பதற்கு பதிலாக அந்த இசையமைப்பவரை கொன்றுவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு அவனது பசி இருக்கும்.

அவனுக்கு கலைகளின் அழகைப்பற்றி கவலை கிடையாது, அதற்கு பதிலாக அவன் காரல் மார்கஸ் பற்றியும் கம்யூனிஸத்தைப்பற்றியும் அக்கறை காட்டுவான். உடல்தேவை பூர்த்தியானபின்பே மனத்தேவைகள் எழும்.
எனக்கு பல கடிதங்கள் சோவியத் ரஷ்யாவிலிருந்து வருகின்றன என்று அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். அவர்களால் எனக்கு நேரிடையாக கடிதம் எழுத முடியாது. எழுதினால் அவை வந்து சேராது. முதலில் ரஷ்ய அரசாங்கத்தால், பின்பு இந்திய அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்படும். இந்திய அரசாங்கம் மட்டும்தான் என்றால் அங்கே வாய்ப்பு இருக்கலாம், ஆனால் ரஷ்ய அரசாங்கம்..... அவர்கள் மிகவும் கொள்கைபிடிப்புள்ளவர்கள். அதனால் இந்த கடிதங்கள் விருந்தாளிகளிடம், உல்லாசபயணம் வருபவர்களிடம் கொடுக்கப்பட்டு, லண்டனிலோ, பாரீஸிலோ, பெர்லினிலோ போஸ்ட் செய்யப்பட்டு எனக்கு வந்து சேருகின்றன.

பலர் இங்கே வருவதற்கு விருப்பம் தெரிவித்து எழுதி இருக்கின்றனர், ஆனால் அது சாத்தியமில்லாதது. எனது புத்தகங்கள் மறைமுகமாக படிக்கப்படுகின்றன. அவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு என கொடுக்கப்பட்டு படிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு கம்யூனிஸ நாட்டில் நீ எனது புத்தகத்தை நேரிடையாக எடுத்துக் கொண்டு செல்லமுடியாது.
உடல்ரீதியான தேவைகள் பூர்த்தியாகி, மனத்தேவைகள் எழும் கட்டத்திற்கு ரஷ்யா வந்து கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தேவைகள் மேலும் உயரிய தரமானவை. மனத்தேவைகளும் பூர்த்தியான பின் – சிறந்த இசையை கேட்டபின், சிறந்த ஓவியத்தை பார்த்த பின், சிறப்பான கவிதையை படித்தபின் – என்ன செய்வது? மிக விரைவில் இந்த விஷயங்கள் விளையாட்டாக போய் விடும், ஆனால் சிறப்பான விளையாட்டாக இருந்தாலும் கூட விளையாட்டு விளையாட்டுதானே.

பின் இறுதியானது உனது கதவை தட்ட ஆரம்பிக்கும்போது, இறுதியானது உனது கதவை தட்டும்போது நீ தனிமையை உணர்வாய். இந்த முழு பிரபஞ்சத்திலும் தனிமையாக உணர்வாய். அதுதான் தியானத்தின் ஆரம்பம். நீ தனிமையை உணர்ந்தாலும் அந்த தனிமையை வரமாக, ஆழ்ந்து, ஈடுபாட்டுடன் உணர்ந்தால், பின் நீ தியானம் செய்யலாம்.

தனிமையிலிருந்து தப்பி ஓடுவதற்கு பதிலாக அதில் முழ்கி, அது என்னவென்று நேருக்கு நேராக பார்ப்பதற்கான, அதனுடன் இயைந்து செல்வதற்கான, ஒரே வழி தியானம்தான். பின் நீ வியப்படைவாய். நீ உனது தனிமையின் உள்ளே சென்றால் அதன் மையத்தில் இருப்பது தனிமை அல்ல முற்றிலும் வேறுபட்ட விஷயமாக உள்ள ஏகாந்தம் – ஒருமை – என்பதை அறியும்போது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

வெளிப்புற சூழ்நிலை தனியானதாகவும் மையம் ஒருமையானதாகவும் அமைந்திருக்கிறது. வெளிபுறம் தனிமையாகவும் உள்மையம் ஏகாந்தமாகவும் உள்ளது. ஒரு முறை உனக்கு உனது அற்புதமான ஒருமை தெரிந்து விட்டால் பின் முற்றிலும் வித்தியாசமான ஆளாக மாறிவிடுவாய். நீ ஒருபோதும் தனியாக உணர மாட்டாய். தனியாக இருக்க நேரிடும் மலை, பாலைவனம் போன்ற இடங்களில்கூட நீ தனியாக உணர மாட்டாய். ஏனெனில் உன் ஒருமையில் கடவுள் உன்னுள் இருப்பதை நீ அறிந்து விட்டாய். உன் ஒருமையில் நீ கடவுளுடன் ஆழ்ந்த தொடர்பில் இருப்பது தெரிந்த பின் தனிமையில் இருப்பதைப்பற்றி யார் கவலைப் பட போகிறார்கள், கூட யாராவது இருந்தால் என்ன? யாரும் இல்லாவிட்டால் என்ன? நீ உள்ளே நிறைந்திருக்கிறாய், உள்ளே செல்வந்தனாக இருக்கிறாய்.

இப்போது கூட்டத்தில்கூட நீ தனிமையில் இருக்கிறாய். நான் சொல்கிறேன், நீ உனது ஒருமையை உணர்ந்து விட்டால் உனது தனிமையில்கூட நீ தனியாக உணர மாட்டாய்.

ஆனால் இன்றைய நாகரீக மனிதன் சிரமப்படுகிறான்.......

மக்கள் உண்மையாகவே தனியாக இருக்கிறார்கள். இதுவரை மனிதன் தனியாக உணர்ந்ததில்லை, ஏனெனில் அவனால் அவனது அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள முடிந்ததில்லை. முதன்முதலாக மேற்கத்திய நாடுகளில் மனிதனால் அவனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. அதனால் அடுத்தகட்ட தேவைகள் மேலே வருகின்றன. இது நல்ல விஷயம்தான். இது சாபம் போல தோன்றுகிறது, ஆனால் அது அப்படியல்ல, மாறுவேடத்தில் வரும் வரம்.
மேலை நாடுகள் கீழை நாடுகளைப்போல மாறும் காலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வேதனை என்னவென்றால் கீழை நாடுகள் மேலை நாடுகள் போல மாறுவதுதான். மனிதன் மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறான். மேலை நாடுகள் கீழை நாடுகளைப்போல மாறும் போது கீழை நாடுகள் மேலை நாடுகளைப்போல மாறி விட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இப்படித்தான் சக்கரம் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் அதை இங்கேயே பார்க்கலாம். இங்கே இந்தியர்கள் குறைவாக இருப்பதை பார்க்கலாம். ஏனெனில் இது அவர்களின் தேவை அல்ல. நான் இங்கே பகிர்ந்து கொள்ளும் விஷயம் அவர்களுக்கானது அல்ல. அதற்கான ஆசை இன்னும் அவர்களுக்கு வரவில்லை. அவர்கள் வந்தாலும்கூட அவர்கள் கேட்பது தியானத்தைபற்றியோ, சன்னியாசைபற்றியோ, நேசத்தைபற்றியோ அல்ல. கேட்பதே இல்லை.

எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் நீங்கள் ஏன் சில மருத்துவமனைகளை, சில பள்ளிகளை திறந்து நடத்தக் கூடாது நீங்கள் ஏன் உங்களது சன்னியாசின்களுக்கு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை போதிக்ககூடாது என்று கேட்டிருந்தது. ஏழைகள் உதவி பெற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் ஏழ்மையை ஒழித்து விட முடியாது. அது மட்டும் நிச்சியம். வாழ்க்கையை பற்றிய ஒரு புதிய பார்வையை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே ஏழ்மையை ஓழிக்க முடியும். அவர்களது கருத்துகள் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர், வாழ்க்கையை பற்றிய அவர்களது கண்ணோட்டம் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர். அவர்கள் ஏழையாக இருப்பது அவர்களால்தான். அவர்களுக்கு கருணை தேவையில்லை, அவர்களுக்கு தேவை கல்விதான். அவர்களுக்கு சேவை தேவையில்லை, அவர்கள் விழிக்க வைக்கப்பட வேண்டும். ஆனால் யாரும் தங்களது கனவிலிருந்தும் தூக்கத்திலிருந்தும் வெளி வர விரும்புவதில்லை. எனவேதான் அவர்களுக்கு என்மேல் ஆத்திரம் வருகிறது.

மருத்துவமனைகள் இருக்கின்றன, மேலும் சிலது வரலாம், பள்ளிகள் இருக்கின்றன, மேலும் சிலது திறக்கலாம், ஆனால் அது அவர்களுக்கு உதவப் போவதில்லை. இது கடலில் சில கரண்டி வண்ணங்களை கரைப்பது போன்றது, இதனால் கடலின் நிறம் மாறப்போவதில்லை.
நாம் முழு அடிப்படையையே மாற்ற வேண்டும். ஏன் இந்தியா பல நூற்றாண்டுகளாக ஏழ்மையிலேயே இருக்கிறது காரணம் மிகவும் ஆழமானதாக இருக்க வேண்டும். காரணம் இந்திய மனம் வாழ்வுக்கு எதிரானது. இது பிளவுபட்டிருக்கிறது, இந்த உலகம் அந்த உலகம் என்று பிரிந்திருக்கிறது. பொருளுலகத்திறக்கு எதிரானது இந்திய மனம் இதுதான் காரணம். நீ பொருளுலகத்திற்கு எதிராக இருந்தால் இயல்பாகவே நீ ஏழையாகத்தான் இருப்பாய். அது உனது முடிவு. உனது விதியை நீயேதான் முடிவு செய்கிறாய்.

உண்மையான ஆன்மீகம் விஞ்ஞான ரீதியான பொருளுலகத்தை சார்ந்தது. பொருளும் தன்னுணர்வும் இரண்டு விஷயங்கள் அல்ல, உடலும் தன்னுணர்வும் வேறுபட்டது அல்ல, அவை ஒன்றேதான். இந்த உலகம் விரும்பப்பட வேண்டும், பின்பு இந்த உலகம் தன்னை வெளிபடுத்தும், தன் ரகசியங்களை உனக்கு தெரியப்படுத்தும்.

மேலை நாடுகள் ஒரு தவறு செய்தன, அதனால் அங்கே ஆன்மீகம் இல்லை, பொருளுலகம் மட்டுமே இருக்கிறது, அதனால் அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தியாகி விட்டன, ஆனால் அவர்களது உயரிய தேவைகள் அவர்களை தொந்தரவு செய்கின்றன, அது அவர்களை தற்கொலை வரை செலுத்துகிறது அல்லது பைத்தியம் பிடிகிறது. கீழை நாடுகள் வேறொரு தவறு செய்கின்றன. இங்கே பொருளுலகம் இல்லாமல் ஆன்மீகம் மட்டுமே இருக்கிறது. அதனால் இது ஒரு ஆவி போலாகி விட்டது, உடல் இன்றி அலையும் ஒரு ஆவி போலாகி விட்டது. மேற்கு உயிரின்றி உடல் மட்டுமே உள்ள ஒரு எலும்புக்கூடு போல, கிழக்கு உடல் இன்றி அலையும் ஆவி போல இருக்கின்றன.

என்னுடைய முயற்சி என்னவென்றால் கிழக்கையும் மேற்கையும் அருகருகே கொண்டு வந்து இணைத்தால் அப்போது எல்லோரிடமும் உடலும் உயிரும் இருக்கும். ஆன்மீகமும் பொருளுலகமும் ஒரே வாழ்வின் இரண்டு பார்வைகள். அப்போது ஏழ்மை மறைந்து விடும். இந்த உலகம் தேவையான அளவு வளமாகவே உள்ளது, மனிதனின் புத்திசாலித்தனம் உள்ளது – நாம் இதை இன்னும் அதிக அளவு வளப்படுத்தலாம்.

ஆனால் நீங்கள் இங்கே அதிக அளவு இந்தியர்களை பார்க்க முடியாது. சிலரே இருப்பர். அடிப்படை தேவைகள் பூர்த்தியானாலும்கூட திருப்தியாக இருக்க முடியாது என்பதை பார்க்கும் அளவு புத்திசாலிகளாக இருக்கும் சிலரே இங்கு இருப்பர். இவர்கள் கிழக்கத்தியநாடுகளில் பிறந்திருந்தாலும்கூட முன்னேற்றமடைந்தவர்கள், நிகழ்கால மனம் படைத்தவர்கள். இவர்கள் மேற்கத்திய நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்கள். இந்தியா செல்வ செழிப்படைந்தாலும்கூட இதுதான் நடக்கப் போகிறது. மேற்கத்திய நாடுகளில் மகிழ்ச்சி இல்லை, இந்தியா வளமடைந்தாலும்கூட இங்கும் மகிழ்ச்சி இருக்காது. அதனால் மகிழ்ச்சி வேறு பரிமாணங்களில் தேடப்பட வேண்டும்.

ஒருமையை அடையும்வரை நீ தனிமையை சந்திக்க வேண்டும். ஒருமையின் முதல் தரிசனம் சடோரி. இரண்டாவது தரிசனம் இரண்டாவது சடோரி. நீ உனது ஒருமையினுள் நிலைப்பட வேண்டும், ஆழமாக வேரூன்ற வேண்டும். மூன்றாவது சடோரி, முடிவான சடோரி இந்தியாவில் நாங்கள் அதை சமாதி என்றழைப்போம். அது நீ உனது ஒருமையிலிருந்து வேறுபட்டு இல்லாத நிலை. அதுதான் நீ. நீதான் உனது ஒருமை.

பின் ஒருவர் அருவி போல பொங்கி பெருக வேண்டும். அந்த ஒருமையிலிருந்து நேசத்தின் மணம் பெருகும், அந்த ஒருமையிலிருந்து படைப்புத்தன்மை பெருகும், - ஏனெனில் இந்த ஒருமையிலிருந்து இறைமைதன்மை பொங்கி வழியும். நீ ஒரு வெற்று மூங்கிலாகிவிடுவாய்...... கடவுள் உன் மூலம் இசைக்க ஆரம்பித்து விடுவார். ஆனால் பாடல் எப்போதும் அவருடையதுதான்.

Source : The Fish in The Sea is not Thirsty Che # 6 Qus : # 6



பிடிப்பின் வலை - ஓஷோவின் கதை - 32

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார்.

“இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று புரியவில்லை அந்த தலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார். இதில் ஏதோ ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர் இறந்து போய் விட்டார். ஏன் நீங்கள் பூனைகளுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று நான் கேட்டிருப்பேன். உங்களது வாழ்க்கை முழுவதும்.... உங்களது ஒழுக்கம் வழிமுறை நெறிமுறை விளக்கம் வரையறை அனைத்தும் இதற்குத்தானா? - பூனையை வீட்டினுள் அனுமதிக்காதே.

ஒரு வயதான மனிதர் கூறினார், “எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்தன”.

ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை. உங்களுக்கு அது உள்ளாடை ஆனால் அவருக்கு அது மட்டுமே ஆடை.

அவரிடம் இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்ததில் பிரச்னை என்னவென்றால் அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை என்னுடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார்.

ஒருவர், “அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்.” என்றார்.

அந்த குரு, “சரி, இது ஒரு எளிய வழிதான்.” என்று ஒத்துக் கொண்டார்.

பூனை வந்தது. அது அதன் வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள் தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக் கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது. பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை முடித்து விட்டது. ‘நான் உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது’ என்று சொல்லாமல் சொல்லியது.

அந்த குரு திரும்பவும் வந்து, “இப்போது என்ன செய்வது அந்த பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னை பார்க்கிறது. எனக்கு உணவு கொடு இல்லைவிடில் நான் போகிறேன். நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்து விடும். என்பது போல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன் கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். “
என்று கேட்டார்.

அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான்.

அவர் பசுவை எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார்.

மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள் ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர்.

அதனால் அந்த குரு, விதை விதைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது. ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்கு சென்றார்.

“பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார்.

மக்கள், “இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும் தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள் உணவை, எல்லாவற்றையும் – எல்லாவற்றையும் என்றால் பூனை. எலி ...... அவள் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்.”

ஆனால்! என்ற துறவி நான் ஒரு துறவி. என்றார்.

அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள். நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது.” என்றனர்.

அவர், “அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக இல்லாவிடில் சரி. அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை. நான் தான் திருமணம் செய்யவில்லையே. நான் அந்த பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்த கிராமம் எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான். நான் அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக எதுவும் செய்யவேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும் செய்யவேண்டியதில்லை.” என்று ஒத்துக் கொண்டார்.

அவர் அந்த பெண்ணுடன் பேசினார். அவள், எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில் இருக்கிறீர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில் இது எனக்கு சரிதான்.” என்றாள்.

அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு சிசுரிஷை செய்தாள். மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். ஒரு ஆண் ஆண்தான், ஒரு பெண் பெண்தான். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை உணர்ந்தனர். ஒரு குளிர்கால இரவில் இங்கே குளிராக இருக்கிறது நாம் ஏன் நெருங்கி இருக்கக் கூடாது என மற்றவர் கேட்கவேண்டும் என இருவருமே விரும்பினர்.

இறுதியில் அந்த பெண், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது என்று கூறினாள்.
அந்த துறவியும் இங்கேயும் குளிராக இருக்கிறது என்றார்.

அப்போது அந்த பெண், உங்களுக்கு தைரியம் இல்லைபோல தோன்றுகிறதே என்றாள்.

அவர், அதுசரிதான். நீ இங்கே வா, எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு துறவி, நீ ஒரு அனுபவமுள்ள பெண்மணி. நீ இங்கே வா. இருவரும் சேர்ந்திருந்தால் கதகதப்பாக இருக்கும். என்றார்.

கதகதப்பாகத்தானே இருக்கும்.

இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார்.

வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம், “அதிலிருந்து உங்களது பாதையில் ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது வழக்கமாகிப் போனது. பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும் – வாழ்க்கை மிகவும் விசித்திரமானது”. என்றார்.

Source : From Personality To Individuality Che # 5

மலர் 3 இணைய இதழ் 7 11 பிப்ரவரி 2011

மலர் 3 இணைய இதழ் 7 11 பிப்ரவரி 2011

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்தில் ஜனவரி மாதம் 13, 14, 15, தேதிகளில் கொண்டாட்டம் நிகழ்ந்தது.
திருப்பூரில் உள்ள ஓஷோ சாஸ்வதம் தியானமையத்தில் (கிளை) விரும்பும் அன்பர்கள் தியானம் செய்யலாம்.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்……

நான் எப்படி இருக்கிறேன் ? ஏன் இந்தக் குழப்பம் ? ஏன் என்னால் இந்த உலக பந்தங்களை விட முடியவில்லை ? ஏன் என்னால் தியானம் செய்ய முடியவில்லை ? ஏன் என் மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது ?

இப்படி கேள்விகளோடு சோர்ந்து போய் வெகு தூரத்திலிருந்து ஒருவர் வந்தார்.
தம்பி, ஒவ்வொன்றாக நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது.....
முதலாவது இப்படி கேள்வி கேட்கிறாயே, அதுவே ஒரு நல்ல ஆரம்பம்தான்.! குழப்பமாக இருக்கிறோம் வாழ்வில் என்று தெரிவதே ஒரு தெளிவுதான். ஆகவே முதலில் இருக்கும் நிலையை ஆமாம், இப்படி இருக்கிறேன் என்று ஒத்துக் கொண்டிருப்பதும் அப்படி ஒத்துக் கொண்டதால் அப்படி இருப்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஓஷோவால் உனக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது.

ஆனால் இது மேலும் கேள்விகளையே உண்டாக்கியுள்ளது. இதுவும் சரியே. தெளிவிற்கு முன் தெளிவு வரை, அனுபவப்படும் வரை கேள்வியோடு இருப்பதும் ஆராய்ச்சி செய்வதுமே சரியான வழி. நம்பிக்கையில் விழுந்துவிட்டால் அந்தப் படுகுழியிலிருந்து மீள எத்தனை பிறவிகளாகும் என்று சொல்ல முடியாது. கேள்வி கேட்பதும், ஆராய்வதும், பரிசோதித்துப் பார்ப்பதும் ஒரு ஆன்ம சாதகனுக்கு இன்றியமையாத குணங்களாக இருக்க வேண்டும்.

தியான அனுபவங்களைக் கூட ஆராய்ந்து பார்க்க வேண்டும். குருவாக ஏற்றுக் கொண்டவரைக் கூட சந்தேகிக்க வேண்டும். இப்படி பகுத்தறிவை இழந்து விடாமல் இருப்பது மிக முக்கியம். ஆராய்ச்சி செய்து பார்க்கலாம், பரிசோதனை செய்து பார்க்கலாம், எனக்குப் புரிகிறது , இனி செய்து பார்க்கலாம் என்ற பகுத்தறிவுப் புரிதல் மிக மிக அவசியம். மனம் ஒத்துழைக்கும் ஒரு விஷயத்தில் தான் நாம் முதலில் ஈடுபட முடியும்.

இப்படி ஆரம்பித்தபின் நிகழப் போவது எல்லாம் வாழ்வின் மர்மத்தில் கரைந்து போவதாய் இருப்பினும் ஆரம்பம் இதுதான். இந்தப் புரிதல் இல்லாததால் பல நண்பர்கள் முதல் அடியோடு முற்றுப் பெற்று நிற்கிறார்கள். அடுத்த அடிக்கு மனதின் அனுமதி அவர்களுக்கு கிடைக்கவில்லை. என்றுமே போராட்டம் சக்தியை உறிஞ்சி விடும். ஆதரவு சக்தியை ஊட்டும். ஆகவே மனதைக் கடந்த அனுபவத்திற்கும் மனதின் அனுமதியும் ஆதரவும் தேவை. அதற்கு சரியான பகுத்தறிவுப் புரிதல் தேவை. ஆகவே அந்த அடிப்படையில் கேள்வி கேட்பது என்பது ஒரு நல்ல ஆரம்பம்தான்.
ஆனால் கேள்விகளை புரிந்து கொள்வதற்காகக் கேளுங்கள். உங்களின் ஏதோ ஒரு முடிவை விவாதம் செய்து வெற்றி பெறும் நோக்கத்தில் கேட்காதீர்கள்.
சரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? சமூகத்தில் எல்லோரும் இருக்கிறபடிதான் இருக்கிறீர்கள். எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் ?

பிளவு பட்டவர்களாக நாம் இருக்கிறோம். பிறவியிலேயே உள்ள விலங்குணர்ச்சிகள் ஒருபுறம், சமூகத்தில் தாய், தந்தை, ஆசிரியர், கல்வி என்று ஆரம்பித்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று புகட்டப்பட்ட பாடம் ஒருபுறம், நான் எனும் சுயகற்பனையை காப்பாற்றிக் கொள்ள, மெருகேற்ற, நிரூபிக்க, இப்படிச் செய், இப்படிச் செய் என்ற உந்துதல் ஒருபுறம். இவைதான் அடிப்படைப் பிரிவுகள். இதில் உட்பிரிவுகள் ஏராளமாய் ஏற்படுத்திக் கொண்டே போகிறோம். இந்த பிளவுப் பட்டநிலையினால்தான் எந்த முடிவும் எதிலும் எடுக்க முடிவதில்லை. குழப்பமோ குழப்பம். உதாரணமாக சாமான் வாங்க கடைக்குப் போகிறீர்கள். கடலை மிட்டாயைப் பார்த்தவுடன் வாங்கி சாப்பிட நாக்கில் எச்சில் ஊறுகிறது, அல்லது எலந்த வடையைப் பார்த்தவுடன் நாக்கில் எச்சில் சுரக்கிறது.

ஆனால் எப்படி வாங்குவது ? கண்ணியமான தோற்றத்தோடு டீக்காக டிரஸ் செய்து கொண்டு மரியாதைக்கு உரியவனாக தோற்றம் அளிக்கும் நாம் எப்படி இதை வாங்குவது ? நமது கௌரவம் என்ன ஆகும் இப்படி ஒருபுறம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதை சாப்பிடக் கூடாது என்ற சமூகப் பாடம் இன்னொரு பக்கம், சுவைக்க விரும்பும் குழந்தையின் உணர்ச்சி மற்றொரு பக்கம். இப்படி இருக்கிறது நமது நிலை. ஒன்றுமில்லாத செயல், ஆபத்தில்லாத செயல், அறிந்த தெரிந்த ஒருவரும் இல்லாத இடம், செலவில்லாத சிறிய இன்பம். இதற்கே இப்படி இருக்கிறது நமது நிலை.

அப்படியென்றால் சமூகம் எதிர்க்கும், சட்டம் கேள்வி கேட்கும், சுற்றம் கேலி செய்யும். செயல்களை எப்படிச் செய்ய முடியும், சேர்த்த பணம் சிதறிப் போகலாம் அல்லது உடலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம் என்ற செயல்களை அவை நமக்கு பிடித்த விருப்பமான இன்பம் தருவதான செயல்களாக இருந்தாலும் செய்வதில் எந்த அளவு தடுமாறுவோம் அல்லது தடுமாறுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது இதிலிருந்து விடுபடுவது எப்படி ? அதேசமயம் தவறான பாதையில் சென்றுவிடாமல் சரியானதை உணர்ந்து கொள்வது எப்படி ?

முதலில் இந்த பிளவுபட்ட நிலையிலிருந்து நாம் ஒருவனாக, ஒருமைப்பட்டவனாக ஆக வேண்டும். அப்படி ஒருவன் ஒருவனாக இருக்கும்போதுதான் அவன் சக்தி நிறைந்தவனாக, சக்தி ஓட்டமாய், உயிரோட்டமாய், எதையும் உணரும் ஆற்றல் உள்ளவனாய் ஆகிறான்.

இதற்குத்தான் ஓஷோ கூறுகிறார். முதலில் வாழ்வுக்கு எதிர்மறையான நெகட்டிவான கண்ணோட்டத்தை அணுகுமுறையை கைவிடு. எதையும் தவறாகப் பார்க்காதே. நடப்பது எதுவாக இருந்தாலும் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது நம்மிடம்தான் இருக்கிறது. வாழ்வில் எதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள். அதிலுள்ள நல்லதை நன்மையைப் பார். மகிழ்ச்சி கொள், சந்தோஷப்படு. அப்படிப் பார்க்க உன் அறிவைப் பயன்படுத்து.

உதாரணமாக ஒரு பகுத்தறிவுவாதி என்னிடம் வந்து சொன்னார். என் மனைவியை திருத்தவே முடியவில்லை. கோயிலுக்குப் போவதும் சாமி கும்பிடுவதும் மூடநம்பிக்கை என்றால் முகத்தை திருப்பிக் கொள்கிறாள். உங்கள் பகுத்தறிவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் நானாவது உருப்படியாக இருக்கிறேன் உங்களுக்கும் சேர்த்துத்தான் நான் வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்கிறாள். அவள் சாமி கும்பிடுவதை நிறுத்தச் செய்ய என்னால் முடியவில்லை. எல்லாம் மட ஜன்மங்கள், திருத்த முடியாது என்றார்.

நான் சொன்னேன் : அது அப்படியல்ல. நீங்கள் காலையில் எழுந்து பேப்பர் படிக்கிறீர்கள். பிறகு உலக நடப்பை தெரிந்துகொண்டுவிட்ட மாதிரி வெளியே போய் அரட்டை அடிக்கிறீர்கள், அதனால் ஏதோ சமூகப் பிரசனையை தீர்க்கிறமாதிரி. பிறகு ஆபீஸில் அரட்டை, சண்டை, சிகரெட், மது, டீ, காபி, நொறுக்குத்தீனி என்று உங்களை ஏதோவொரு விதமாய் தளர்த்திக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் மனதின் கூப்பாட்டை, உள் போராட்டத்தை மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்ள ஆயிரம் செய்கிறீர்கள். நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறீர்கள். இரவில் தண்ணியடித்து கொட்டிக் கொள்கிறீர்கள். விளையாட, ஜிம்முக்கு, டூருக்கு என்று போகிறீர்கள், இப்படி எத்தனை எத்தனை வெளியேற்றும் வழிகள் வைத்திருக்கிறீர்கள்……..

உங்கள் மனைவி யாரிடம் நம்பிக்கையுடன் தன் மனசுமையை இறக்கி வைக்க முடியும் ? நீங்கள் அதற்கு செவி சாய்த்திருக்கிறீர்களா ? சாமி என்பது என்ன ஒரு சுயவசிய தியானயுக்தி தான். இந்து மதத்தில் ஏராளமான சாமிகள் ஏன் தெரியுமா? ஒரு விஞ்ஞான காரணத்தால்தான். தன்னை சுயவசிய படுத்திக் கொள்ள தன்னைப் போன்ற குணங்கள் கொண்ட ஒரு சாமி ஒவ்வொருவருக்கும் தேவை. அதன் முன்னால் நின்று பேசுவது தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொள்வதுதான். அது மிகவும் விஞ்ஞானபூர்வமானது. ‘ ஸெல்ப் – ஹிப்னாஸிஸ் ‘ என்ற இந்த சுயவசியம் ஆபத்தில்லாதது. உடனடிப் பலன் கொடுப்பது. நம்மை நாமே சுத்தப்படுத்திக் கொள்ளும் எளிய சக்தி மிகுந்த வழி இது.

ஆகவே இதை அவர்களுக்கு புரிய வைப்பதே செய்ய வேண்டியது, அப்போது அதன்மூலமும் அவர்கள் உயரலாம். இது ஒரு விஷயம்.
மற்றொரு விஷயம் ஒருவரிடம் ஒன்றை நிறுத்தச் சொல்கிறோம் என்றால் அவர்கள் செய்வதை குறை கூறுகிறோம் என்றால் அப்போது அதைச் செய்வதால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறதோ அதைவிட அதிக பலனைக் கொடுக்கும் சிறந்த ஒன்றை நம்மால் தரவும் சுட்டிக்காட்டவும் கற்றுக் கொடுக்கவும் முடியவேண்டும். வெறும் குறை கூறுவது முட்டாள்தனம். நமது அகம்பாவத்தையே அது காட்டுகிறது.

ஆகவே மனைவி கோவிலுக்குப் போய் சந்தோஷமாக நிறைவாக இருந்தால் அதைப் பாராட்டு. அதை பாசிட்டிவாகப் பார். அப்போது அதன் அடிப்படை புரியும். பிறகு அதைவிட சிறந்த முறை தியானிப்பது என்று கற்றுக் கொடுத்தால் அவர்கள் வளரலாம். அதை விடுத்து குறை கூறுவதால் போராட்டமும் கசப்புணர்வுமே மிஞ்சும்.

ஆகவே முதலில் கிடைத்துள்ள வாழ்க்கையை சந்தோஷமாக வாழு. பணம் இருந்தால் அருமையான இசையை கேட்டவாறு அழகான ரூமில் நடனமாடு. ஏழை என்றால் நிலவின் வெளிச்சத்தில் இரவில் வண்டுகளின் ரீங்காரத்தில் பறவை பாடல்களின் இடையே திறந்த வெளியில் நடனமாடு. ஏன் குறை சொல்கிறாய் ? வாழ்வில் வாழ்விடம் பிச்சைக்காரனாய் போகாதே, மகாராஜாவாய் போ என்று ஓஷோ கூறுகிறார். ஆகவே பாசிட்டிவாய் இரு. உள் பிளவுகள் இப்போது வலுவிழக்கும். உள் போராட்டம் இருக்காது. அப்போது சக்தியுள்ளவனாய் நீ இருப்பாய்.
வாழ்ந்து பார்க்கும் ஆற்றல் உள்ளவனாய் நீ மாறுவாய். இங்கிருந்துதான் எதுவும் சாத்தியம்.

இப்போது நீ தியானம் செய்து பார்க்கலாம். தியானத்தில் ஒரு உள் சூழலை நாம் உருவாக்குகிறோம். அந்த சூழல் மனதை கடந்த அனுபவம் பெறுவதற்கு உதவி செய்யலாம்.

தியானத்தில் தியானம் நிகழலாம். அதாவது நான் என்ற இப்போதிருக்கும் நமது உணர்வு ‘நானுணர்வு’ போய், இயற்கையின் பிரபஞ்சத்தின் உணர்வுக்குள் நாம் கலந்துவிடுவது ஒரு கணம் நிகழலாம். அப்படி கலந்துவிடும் அனுபவம் பெறுவதே தியானம். இயற்கையோடுள்ள இணைப்புணர்வு அனுபவமே முதல் தியான அனுபவம். இதன்பின் இந்த நானுணர்வு போய் தன்னுணர்வு இருக்கும். தன்னுணர்வு என்பது உணரும் உணர்வு தன்னையே உணர்ந்திருத்தல். இது பிரபஞ்சத்தின் இயல்பு, சத்தியத்தின் இயல்பு. விழிப்புணர்வு என்பதும் இதுதான். விழிப்புணர்வு என்பது உணரும் உணர்வு எதையும் பற்றிக்கொள்ளாமல் தன்னையே உணர்ந்திருக்கும் விழிப்பு நிலை. இது நமது சாத்தியக்கூறு, நமது பிறப்புரிமை. இதற்கு உதாரணமாய் திகழ்பவர்தான் ஓஷோ.

இப்படி இயற்கையோடு இயைந்த இணைப்புணர்வில் நாம் திரும்பப் பெறுவதே தியானம். இந்த அனுபவம் ஏற்பட்டபின் இயல்பாகவே இவ்வுலக வாழ்க்கையின் இறுக்கம் தளர்ந்து விடும். ஏனெனில் இறுக்கத்திற்க்கும் போராட்டத்திற்க்கும் காரணம் நமது நானுணர்வுதான். அது போய் தன்னுணர்வு வரும்போது வாழ்க்கை ஒரு லீலையாய் விளையாட்டாய் மாறிப் போகிறது. எல்லாமே சமம்தான் பாதிபாதிதான் என்ற உணர்வு ஏற்படுகிறது. இயற்கையின் கூறாய் இருக்கும் வாழ்வை இதயம் திறந்து வாழ ஆரம்பிக்கிறோம்.

அப்போது நமது விலங்குணர்ச்சிகள் பரிணாம வளர்ச்சியடைந்து அன்பாய், அழகாய், படைப்பாய், கவிதையாய், பகிர்தலாய், கருணையாய், மகிழ்ச்சியாய், நடனமாய், இசையாய், சிரிப்பாய், விஞ்ஞானமாய், இந்த உலகத்தை சொர்க்கமாக்குகின்றன.
அதற்கு நடை போடுவோம்,


தியான வழிநடப்போம், வாழ்க விழிப்புணர்வுடன்!

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

தனிமை
அன்புக்கு ஏற்ற இடம்,
இதமான இடம்,
தோதான நிலை,
தூண்டிவிடும் சூழல்,
அது தனிமைதான்.
ஆச்சரியமாயிருக்கிறதா
அப்படியானால்... இன்னும் நீ
அன்பை அறிந்தவனில்லை.
அன்பில் கரைந்திருந்தால்....
நீ தனிமை தேடுவாய்.
ஆம்...
பேராசை, பொறாமை, காமம், அதிகாரம்,
சுயநலம், பெருமை, போலித்தனம் சூழ்ந்த
சமுதாயத்திலிருந்து நீ தனிமை தேடுவாய்,
இது மனிதர்களை வெறுப்பதல்ல,
மனிதர்களின்
மதம்பிடித்த தன்மையை வெறுப்பது.
ஆகவே உன் தனிமையும்
தனிமையல்ல........
அது ஒருமை
ஆறாய், மலையாய், அருவியாய்,
பருவமாய், அழகாய், மரமாய், செடியாய்.....
இப்படி
இயற்கைநிலை தவறாதவற்றோடு
இயைந்தநிலை

இது ஒருமைநிலை.
தனிமைநிலையல்ல.

.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ


புத்துணர்வு

உனது மனம் புத்துணர்வுடன் இருக்கும்போது இந்த முழு பிரபஞ்சமும் ஒரு மெல்லிசையாக மாறும். நீ புத்துணர்வுடன் இருந்தால் எல்லாமும் புதுமையாக இருக்கும். இந்த இயற்கையே புத்துணர்வாக மாறும். நீ புத்துணர்வுடன் இருந்தால், நினைவுகள் சுமையாக இல்லாமல் இருக்கும்போது எல்லாமும் இளமையாக புதிதாக வேறுபட்டதாக இருக்கும்.

நீ வெறுமையிலிருந்து செயல்புரியும்போது அங்கு உன்னைச் சுற்றி ஒரு புத்துணர்வு இருக்கும்.

சக்தி தேங்கி நிற்காமல் ஓடும்போது நீ புத்துணர்வாக இருப்பாய், நீ நதி போல ஓடுவாய்.

சாட்சிபாவமாக இரு. நீ புத்துணர்வோடு இருக்கும்போது மட்டுமே சாட்சி பாவமாக இருக்கமுடியும்.

பக்குவப்படுதல் என்பது புத்துணர்வுடன் வெகுளித்தனமாக தூய்மையாக இருத்தலாகும்.

கடந்தகாலத்தை பொறுத்தவரை இறந்துவிடு. அப்போதுதான் நீ புத்துணர்வுடன் புதிதாக இருக்கமுடியும்.

ஒருவர் இந்த கணத்தை முழுமையாக வாழும்போது ஒரு புத்துணர்வு பிறக்கும்.

சந்தோஷம்

வாழ்வை முழுமையாக மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி ஆடி பாடி வாழு. அப்போது இந்த கணமே இந்த முழு பிரபஞ்சமும் தெய்வீகமானதாகிவிடும். உன் ஆடலில், பாடலில், சந்தோஷத்தில், பரவசத்தில் அது தெய்வீகமானதாகிவிடும். உன் ஆனந்தத்தில் நீ தெய்வீகத்தின் எல்லையை சென்றடைவாய்.

நீ ஒரு பாடலை பாடும்போது நீ அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தலில் உயிர்ப்புடன் இருக்கிறாய்.

நினைவில் கொள், நீ மகிழ்ச்சியடைந்தால் தவிர உன்னால் அன்பு செய்ய முடியாது.

நான் சத்தியமாக சொல்கிறேன், உன்னுள் சந்தோஷமும் கொண்டாட்டமும் நிரம்பி இருக்க முடியும்.

ஆழ்ந்த மௌனத்தில் சந்தோஷத்தில் நிறைவில் லயம் தானாகவே வரும்.

நீ என்ன செய்தாலும் அதை சந்தோஷமாக செய்யும்போது மகிழ்ச்சி தானாகவே நிகழும், மலரும்.

சந்தோஷம் முதலில் வரும். பின் கொண்டாட்டம் அதை தொடர்ந்து வரும்.

ஓஷோ வீடியோ

1. Osho : Jesus never died on the Cross

2. Osho : Bravo America – Glimpses of a Cosmopolitan world

3. Osho : And now the Sutra – A Zen Experience


தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

எண்ணங்களை எழுதுவது


கேட்கும் காதுகளையுடைய யாரும் கேட்கலாம், ஆனால் அதற்காக அவர்கள் கவனிக்கவேண்டும் என்பது அவசியமில்லை. கவனிப்பதற்கு கேட்கும் சக்தியுடைய காதுகளுடன் மேலும் ஒன்று தேவை. ஒரு அமைதி, ஒரு மெளனம், ஒரு சாந்தம் – காதுகளின் மூலம் மனம் கேட்ககூடாது, இதயம்தான் கேட்க வேண்டும்.
மனம் நீ செவிடு இல்லை என்றாலும் கூட உன்னை செவிடாக்கிவிடும்- ஏனெனில் மனம் ஒரு பேசும் பெட்டி அது நிறுத்தாமல் தொடர்ந்து அரட்டையடித்துக்கொண்டே இருக்கும்.

முதல் படி உனது அறையில் உட்கார்ந்து கதவுகளை மூடிக்கொண்டு, உனது மனதில் ஓடுவதை அப்படியே எழுது.

என்ன ஓடுகிறது என தெரிந்துகொள்வதற்காக எழுது. ஏனெனில் நீ அதை வேறு யாருக்கும் காட்டப் போவதில்லை. திருத்தாதே. அதனால் என்ன வருகிறதோ அதை அப்படியே எழுது. நீ ஆச்சர்யப்படுவாய். பத்து நிமிடத்திற்குள் உன் புத்தி சுவாதீனத்தில் இல்லை என்பதை நீ பார்ப்பாய். உனது மனம் ஒரு பைத்தியக்காரனின் மனமாக இருப்பதை நீ பார்ப்பாய். எப்படியோ நீ அதை மூடிமறைத்து, உள்ளே என்ன உள்ளதென்று யாரும் பார்க்காமல் சமாளித்து போய்கொண்டிருக்கிறாய். உனது மனதில் உள்ளது என்னவென்று பிறர்க்கு மட்டுமின்றி உனக்கும்கூட தெரியாமல் மறைக்கும் அளவு நீ அதில் திறமைசாலியாகிவிட்டாய். அது தொடர்ந்து போய்கொண்டே இருக்கிறது. யாக்கட்டியாக், யாக்கட்டியாக். இதுபோல் தொடர்ந்து ஓசை எழுப்பிகொண்டேயிருக்கும் மனதினால் நீ செவிடாக இல்லாவிட்டாலும்கூட உன்னால் கவனிக்கமுடிவதில்லை நீ கேட்க மட்டுமே செய்கிறாய்.
கவனிப்பதற்கு ஒரு அமைதியான தொடர்பு சாதனம் தேவை.

THE OSHO UPANISHED
.
தியான யுக்தி – 2

உள் உரையாடல்

எப்போது முடிகிறதோ அப்போது ஒரு மணிநேரமோ அதற்கு மேலுமோ மெளனத்தில் அமர்ந்திரு. உள்ளே உரையாடல் ஓடிக்கொண்டேயிருக்கும். ஆனால் அதில் பங்கெடுத்துக்கொள்ளாதே.

காலம் 6 மாதங்கள்.

சம்பந்தப்படாமல் கவனித்தல்

இரண்டு பேர் பேசுவதை கவனிப்பது போல சம்பந்தப்படாமல் கவனிப்பதுதான் இதன் முக்கியமான பாகம். அதில் சம்பந்தப்படாதே. மனதின் ஒரு பாகம் மற்றொரு பாகத்திடம் சொல்வது என்ன என்று பார். என்ன வந்தாலும் வரட்டும். அதை அடக்க முயற்சிக்காதே. ஒரு சாட்சியாக மட்டும் இரு.
வருடக்கணக்கில் நீ சேர்த்து வைத்த குப்பைகள் வெளிவரும். இந்த குப்பைகளை வெளிவீச மனதிற்கு சுதந்திரம் கொடுக்கப்படவேயில்லை.
பந்தயக்குதிரை
வாய்ப்பு கிடைத்தவுடன், மனம் கட்டவிழ்ந்த குதிரை போல ஓடும். ஓடட்டும். உட்கார்ந்து கவனி. கவனி. கவனிப்பது மட்டுமே செய். பொறுமையாக உட்கார்ந்திருப்பது ஒரு கலை. நீ குதிரை மீது அமர்ந்து அதை இப்படி அப்படி செலுத்த விரும்புவாய். அது உன் பழைய பழக்கம். இந்த பழக்கத்தை உடைக்க பொறுமையாக இருக்க வேண்டும். அந்த பொறுமையாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொள். மனம் ஓடும்போதெல்லாம் வெறுமே கவனி. எந்த வகையிலும் குறுக்கிட முயற்சிக்காதே. ஒரு வார்த்தை எழுந்தாலும் அதன் மூலம் மற்றொன்று என ஆயிரம் விஷயங்கள் உள்ளே வந்துவிடும். ஏனெனில் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே.
உன் மனதை வெளியே கொட்டு

சாத்தியப்பட்டால் உனது எண்ணங்களை வெளியே கொட்டு. பேசு. அது இன்னும் அவசியம். அது மேலும் உதவி புரியும். ஏனெனில் நீயும் அதை கேட்கலாம். ஏனெனில் நினைக்கும்போது எண்ணங்கள் மிகவும் மெலிதானவை. உனக்கு அதைப் பற்றி தெளிவாக தெரியாததால் ஒருவிதமான பயம் இருக்கக்கூடும். சத்தமாக பேசு, அதை கவனி, அதைப் பற்றிய விழிப்புணர்வு கொள். அதில் சம்பந்தப்படாமல் பிரிந்து இருப்பதில் கவனமாக இரு. மனதில் இருப்பதை பேசுவதன் மூலம் தெளிவு பெறு. ஆனால் தொடர்பற்று சம்பந்தமில்லாமல் இரு. கெட்ட வார்த்தை வந்தால் ஏசு, பேசு. ஆறு மாதங்கள் பொறுமையாக மனதை காலி செய்வது மிகவும் அவசியம். ஏனெனில் உனது வாழ்க்கை முழுவதும் நீ மனதை எண்ணங்களால் நிரப்புவதை தவிர வேறேதுவும் செய்யவில்லை. பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செய்தால் மட்டுமே ஆறு மாதங்கள் போதும். இல்லாவிடில் அது ஆறு வருஷங்களோ, ஆறு பிறவிகளோ எடுக்கும். எல்லாமே உன்னைப் பொறுத்தது. நீ எந்த அளவு முழு மனதுடனும் நேர்மையாகவும் இந்த முறையில் முயற்சி செய்கிறாய் என்பதை பொறுத்தது. நீ சாட்சியாக இருக்கிறாய் என்பதை பலமுறை நீ மறந்துபோவாய். குதிரை மீது ஏறி சவாரி செய்ய ஆரம்பித்து விடுவாய். அதில் ஈடுபட்டு, உனது எண்ணங்களின் பயணத்தை ஆரம்பித்துவிடுவாய். நீ ஏதாவது எண்ணத்துடன் உன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டால் அப்போது நீ தோற்றுப் போய் விட்டாய். அதைப் பற்றி விழிப்புணர்வு அடைந்த கணமே குதிரையை விட்டு இறங்கி, வார்த்தைகளும் எண்ணங்களும் அதை செலுத்தாமல் எங்கே போகுமோ அங்கே போகட்டும். விட்டுவிடு, கவனிப்பதை மட்டுமே செய்.

மெது மெதுவாக நீ மௌனத்தின் மிருதுவான காலடி ஓசையை கேட்க ஆரம்பிப்பாய். கேட்கும் கலையை அனுபவப்படுவாய். காற்று மரத்தில் மோதும் ஒலியை, பூவிதழ்களும் சருகுகளும் உதிரும் ஓசையை நீ கேட்பாய். கடற்கரையில் அமர்ந்தால் அலையின் ஓசையை கேட்பாய். நதியின் ஓட்டத்தை, மின்னலை, இடியோசையை கேட்பாய். பறவைகள் பாடுவதை, குழந்தை அழுவதை, நாய் குரைப்பதை கேட்பாய். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நீ சப்தத்தை கேட்பாய்.

நீ கேட்பது எப்படி என்ற கலையை கற்றுக் கொண்டு விட்டால் பின் நீ சந்தோஷத்தால் நிறைந்து போவாய், ஏனெனில் நீ அப்போது ஒரு சாட்சியாளன் மட்டுமே. கவனிப்பதே சந்தோஷமானதாக இருக்கும். கவனித்தால் அது தியானமாகும். தியானமாக இல்லாவிடில் நீ கேட்க முடியாது.

THE TRUE SAGE

தியான யுக்தி - 3
தந்தி வாக்கியம் போல பேசு

வார்த்தைகளில் உணர்வு வார்த்தைகள், அறிவார்ந்த வார்த்தைகள் என உள்ளன. அறிவார்ந்த வார்த்தைகளை மேலும் மேலும் விலக்கி விடு. மேலும் மேலும் உணர்வுரீதியான வார்த்தைகளை உபயோகப்படுத்து. சமூக வார்த்தைகளும் ஆன்மீக வார்த்தைகளும் உண்டு. சமூக வார்த்தைகளை விடு. பிளவை உருவாக்கும் வார்த்தைகள் உள்ளன. நீ அவற்றை சொன்ன கணமே வாதம் ஆரம்பமாகும். அதனால் தர்க்கரீதியான வாதத்துக்கு அடிகோலும் மொழியை உபயோகிக்காதே. அன்பின் அக்கறையின் கனிவின் மொழியை உபயோகி. அப்போது தகராறு எழாது.

முதல்படி அவசியப்பட்டால் மட்டுமே பேசுதல் தேவைப்பட்டதை மட்டும் பேசுதல்- தந்தி கொடுப்பது போல, பத்து வார்த்தைகளுக்குள் தேர்ந்தெடுத்து பேசு. மக்கள் பேசும்போது கேட்டால் ஆச்சர்யப்படுவாய் எல்லா இடத்திலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. நீ சொல்வது ஒன்று, வேறொன்று புரிந்துகொள்ளப்படுகிறது. மக்கள் தாங்கள் இப்போது பேசுவதில் ஐந்து சதவீதம் மட்டும் பேசினால் போதும் அந்த ஐந்து சதவீதத்தில் தேவைப்படுவது அனைத்தும் உள்ளடங்கிவிடும். அப்போது இந்த உலகம் இன்னும் அமைதியாகவும் இன்னும் மெளனமாகவும் இருக்கும்.
உன்னுடைய தந்தி என்பது ஒரு கடிதத்தை விட சுருக்கமானதாகவும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கும். தந்திபோல பேசு, அப்படி பேசினால் நாள் பூராவும் சில தடவைகள் மட்டுமே பேச வேண்டிவருகிறது என்பதை கண்டு நீ ஆச்சர்யப்படுவாய்.

THE GOLDEN FUTURE


ஓஷோவின் விளக்கம் - ஏழு பள்ளத்தாக்குகள்


ஓஷோ மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதும் அதைப் பற்றி அவர் கூறும் விளக்கங்களும் இனி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பள்ளத்தாக்கு என தொடர்ந்து வரும்.

முன்னொரு காலத்தில் ஒரு பெண் இருந்தாள். அவள் வளர்ந்து வந்த மதத்தை விட்டு அவள் விலகி வந்தாள். அவள் மற்றொரு மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதில் சேர்ந்தாள். பின் மற்றொரு மதத்தின் கொள்கை மீது பிடிப்பு ஏற்பட்டு இதை விட்டு விலகி அதில் சேர்ந்தாள். ஒவ்வொரு முறை அவள் வேறு மதத்தின் மீது ஈர்ப்பு கொள்ளும்போதும் அவளுக்கு ஏதோ புரிந்து விட்டதாகவும் ஆனால் அது நிறைவு தரவில்லை எனவும் அவள் நினைத்தாள். ஒவ்வொரு முறை அவள் மதம் மாறும்போதும் அவள் வரவேற்கப்பட்டாள். அவளது தரம் உயர்ந்து இருப்பதாகவும், அவளது தூய்மையும் ஞானநிலையும் உயர்ந்து வருவதாகவும் எல்லோரும் நினைத்தனர்.

ஆனால் அவளது மனநிலையோ குழப்பமாகத்தான் இருந்தது. இந்த நீண்ட பயணத்தில் அவள் ஒருமுறை இமாம் ஜபார் சாதிக் என்ற நிறைவடைந்த ஞானி ஒருவரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்கச் சென்றாள்.

அவளது முயற்சிகளையும் கருத்துக்களையும் கேள்விப்பட்ட பின் அவர் நீ உன் வீட்டிற்கு திரும்பிச் செல். நான் எனது முடிவை ஒரு செய்தியாக அனுப்பி வைக்கிறேன் என்றார்.

விரைவிலேயே அந்த ஞானியின் சீடர் ஒருவர் இவளின் வீடு தேடி வந்தார். அவர் கையில் அந்த குரு கொடுத்தனுப்பிய ஒரு பார்சல் இருந்தது. அவள் அதை திறந்து பார்த்தாள். அதில் ஒரு கண்ணாடி பாட்டில் இருந்தது. அதில் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்களையுடைய மணல் மூன்று அடுக்குகளாக நிரப்பப்பட்டு இருந்தது. மீதி பாதி பஞ்சால் நிறைக்கப்பட்டிருந்தது. அதன்கூடவே இந்த பஞ்சை எடுத்துவிட்டு இந்த பாட்டிலை குலுக்கு. அது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் நீ இருக்கிறாய் என்ற எழுதப்பட்ட குறிப்பு ஒன்றும் இருந்தது.

அவள் அந்த பஞ்சை எடுத்துவிட்டு அந்த பாட்டிலை குலுக்கினாள். பார்த்தபோது அவள் கையில் இருந்தது சாம்பல் கலர் கொண்ட மணல் பாட்டில்.


மனிதன் முரண்பாடுடையவன். மனிதன் மட்டுமே மிருகமாகவும் மனிதனாகவும் இருக்கக் கூடியவன். அதுதான் முரண்பாடு. அதுதான் அவனது தனித்துவம். மனிதனின் சிறப்பே அவனுக்கு உள்ளே உள்ள உள்முக முரண்பாடுதான். மற்ற அனைத்து மிருகங்களும் முரண்பாடு உடையவை அல்ல.

ஒரு மரம் மரம் மட்டுமே. ஒரு நாய் நாய் மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் அது மட்டுமே என்பது போன்ற நிலை கிடையாது. அவன் எப்போதுமே வளர்ச்சியடைபவன், நிலைமாற்றமடையக் கூடியவன். மனிதன் எப்போதும் தன்னையே கடந்து செல்கிறான். அதுதான் அவனது முரண்பாடு. அது அவனது ஆழ்நிலை இருப்பு. அது தற்செயலானதல்ல, அதுதான் அடிப்படையே. நீ இந்த முரண்பாட்டை புரிந்து கொண்டால் மனித்தன்மை பற்றிய முதல்தரிசனம் உனக்கு ஏற்படும்.

மனிதன் என்பவன் எப்போதும் ஒரு திட்டம்தான், ஒரு வளரக்கூடியவன்தான். அவனது இருப்பு வளரக்கூடியது, அதுதான் முரண்பாடு. அவன் எப்போதும், முன்பு எப்படி இருந்தானோ அதற்கும் இனிமேல் என்னவாக மாறப் போகிறானோ அதற்கும் இடையில் இருக்கிறான். அவன் எப்போதும் அவனது கடந்த காலத்திற்கும் அவனது எதிர்காலத்திற்கும் இடையில் இருக்கிறான். கடந்த காலமும் எதிர்காலமும் ஆன இரண்டு நிரந்தரத்திற்கிடையே ஆன பாலம் அவன். அவன் கடந்து செல்பவன், தொடர்ந்து கடந்து சென்று கொண்டே இருப்பவன். மனிதன் அவன் என்னவாக இருக்கிறானோ அதில் நிறைவடைவது இல்லை. அவன் கடந்து செல்ல முயன்று கொண்டே இருக்கிறான். எப்போதும் முயன்று கொண்டே இருக்கிறான். அவன் என்ன செய்தாலும் அடிப்படையில் அவனது முயற்சி எப்படி மேன்மேலும் உயர்வது, மேன்மேலும் சிறப்படைவது, மேன்மேலும் வளர்வது என்பதிலேயே இருக்கிறது.
மனிதன் ஒரு முன்னேறுபவன், ஒரு வழிப்போக்கன், ஒரு பயணம்தான். அவனது வாழ்வே ஒரு புனிதப்பயணம்தான், முடிவற்ற பயணம்தான், அது போய்க் கொண்டே இருக்கும். ஒரு நாய் பிறக்கிறது, ஒரு மரம் பிறக்கிறது - மரம் ஒரு மரத்திற்குரிய குணாதிசியங்களுடன் பிறக்கிறது, நாய் அதற்கேரிய குணாதிசியங்களுடன் பிறக்கிறது. மனிதன் அது போன்ற கொடுக்கப்பட்ட யதார்த்தமல்ல. மனிதன் மறைந்துள்ள ஆற்றலுடன், ஒரு சாத்தியக்கூறாக பிறக்கிறான். மனிதன் வெறுமையாக, வெற்றுத்தாளாக பிறக்கிறான். எதுவும் எழுதப்படவில்லை.

மற்ற உயிரினங்கள் அனைத்தும் ஒரு குறிபிட்ட ஜீவிதத்தை ஒரு குறிப்பிட்ட உயிரமைப்பை கொண்டுள்ளன. மனிதன் எதிரிடையானவன். அவனது இருப்பு முதலில் வந்து விடுகிறது. அவன் அவனது உயிரமைப்பை தேடுகிறான். மற்ற விலங்குகளில் உயிரமைப்பு முதலில் வந்து விடுகிறது, பின் இருப்பு வருகிறது. அவை ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட உள்ளடங்கிய அமைப்புடன் வருகின்றன. அவை வளருவதேயில்லை, அவை அப்படியேதான் இருக்கின்றன. அதனால்தான் அவை வெகுளியாக, கவலையற்று, பதட்டமற்று இருக்கின்றன. ஒரு பசுவின் கண்களைப் பார் – எவ்வளவு அமைதி, எவ்வளவு அடக்கம், எவ்வளவு சாந்தம் – அதில் வேதனையோ கவலையோ எதுவும் இருக்காது. தெளிவாக இருக்கும். மனிதனின் கண்களைப்பார், அவை எப்போதும் தெளிவற்று இருக்கும். அதில் எப்போதும் ஒரு வேதனை இருக்கும். அதில் எப்போதும் ஒரு நடுக்கமிருக்கும். நான் இதை செய்து முடிப்பேனோ இல்லையோ என்னால் என்னை கண்டுபிடிக்க முடியுமோ முடியாதோ நான் நிறைவடைவேனோ இல்லை நிறைவடையாமல் நின்று விடுவேனோ என்ற பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.

விலங்குகள் தளர்வாக ஓய்வாக இருக்கின்றன. மனிதன் இறுக்கத்தில் இருக்கிறான். அதுதான் அவனது சிறப்பு, அதுதான் அவனது வேதனை. அதுதான் அவனது அழகு, அதுதான் பிரச்னை. அவனால் அவனை செதுக்க முடியும் அதுதான் அவனது தனித்துவம், அவன்தான் கடவுள். அவனால் அவனை செதுக்கமுடியாமல் போய்விடலாம், அவன் தோல்வியடையலாம், என்ன நிகழுமென்பது யாருக்குத் தெரியும் அதுதான் அவனது வேதனை. சுதந்திரத்தினால் அது சிறப்பானது. அவன் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டவனல்ல. ஏற்கனவே உருவாக்கப்பட்ட அமைப்புடன் பிறக்காத ஒரே விலங்கு மனிதன்தான். அவனுக்கு வழிமுறை இல்லை. அவன் திட்டமிடப்பட்டவனல்ல.

மனிதன்தான் செயல்முறை திட்டமற்றவன். அவன் பிரபஞ்சத்தினுள் ஏதுமற்றவனாக வருகிறான். பின் அவன் அவனது உயிரமைப்பை துழாவ ஆரம்பிக்கிறான். அவன் தேடி திரிந்து உருவாக்க ஆரம்பிக்கிறான். மனிதனே ஒரு சாகசம்தான்.

ஆனால் சாகசத்துடன் நிலையற்றதும் பாதுகாப்பற்றதும், தோல்வியும் பயமும் இருக்கும். தவறாக போய்விடலாம். தவறாகப் போய்விடக் கூடிய வாய்ப்புதான் அதிகம். சரியாக செல்லக்கூடிய வாய்ப்பு குறைவு. ஆயிரத்தோரு வழிகள் உள்ளன. எது சரியானது. நீ எப்போதும் தவிப்பில்தான் இருப்பாய். நீ எதை தேர்ந்தெடுத்தாலும் அதை உறுதியோடு தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் இந்த பாதை உன்னை உனது குறிக்கோளுக்குத்தான் கூட்டிச் செல்லும் என்ற உறுதி உனக்கு இருக்கமுடியாது. அது சென்றடையலாம் அல்லது அது ஒரு பாலைவனத்தில் சென்று முடியலாம்.

மனிதனின் சிறப்பே அவனது சுதந்திரம்தான். அவனால் அவனை உருவாக்கிக் கொள்ள முடியும், அவனால் அவனாக இருக்கமுடியும். எதுவும் அவனுக்கு கட்டாயமில்லை, எதுவும் அவன்மேல் திணிக்கப்படவில்லை. மனிதனின் துயரம் என்னவென்றால் அவனால் உறுதியாக இருக்கமுடியாது, அவன் சரியான பாதையில்தான் இருக்கிறான் என்று உறுதி கொள்ள முடியாது, அவன் செய்வது அர்த்தமுடையதா இல்லையா என்று கூற முடியாது என்பதுதான்.

மனிதன் கிறுக்காகிவிட்ட ஒரே விலங்கு. அவன் சந்திக்கவேண்டிய தீர்க்கவேண்டிய பிரச்னை உண்டு. அவன் அதை கடந்து வளர வேண்டும். இதுதான் நீ புரிந்துகொள்ளவேண்டிய முதல் விஷயம் என நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன்.

மிகச் சிறந்த சூஃபி ஞானி ஒருவர் இருந்தார். - அவர் எல்லா ஞானிகளைவிடவும் மிகவும் சிறந்தவர் – அவர் பெயர் அல் ஹாஜலை. அவர், மனிதனிலிருந்து கடவுளுக்கு, மனிதனின் ஆற்றலிலிருந்து நிதர்சனத்திற்கு, சாத்தியக்கூற்றிலிருந்து நிஜத்திற்கு என மனிதனின் வளர்ச்சிப் பாதையில் ஏழு நிலைகள் - ஏழு பள்ளத்தாக்குகள் - உள்ளன எனக் கூறியுள்ளார். இந்த ஏழு நிலைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை புரிந்து கொள்ள முயற்சி செய். ஏனெனில் நீ இவற்றை கடந்து வர வேண்டும். ஒவ்வொருவரும் இந்த ஏழு நிலைகளையும் கடந்து வந்தாக வேண்டும்.
அந்தந்த பள்ளத்தாக்குடன் என்ன செய்ய வேண்டும் என்பதை நீ சரியாக புரிந்து கொண்டால் நீ அதை எளிதாக கடந்து விடலாம். சிகரத்தை அடையலாம். ஏனெனில் ஒவ்வொரு பள்ளத்தாக்கும் மலைஉச்சிகளால் சூழப்பட்டுள்ளது. உன்னால் பள்ளத்தாக்கை கடந்து செல்ல முடிந்தால், நீ பள்ளத்தாக்கில் சிக்கிக் கொள்ளவில்லையென்றால், நீ பள்ளத்தாக்கில் தொலைந்து போக வில்லையானால், நீ பள்ளத்தாக்குடன் பந்தம் கொள்ளாவிடில், நீ பந்தமற்று ஒரு சாட்சியாக தனிப்பட்டவனாக இருந்தால், சிகரத்தை மறக்காமல் இருந்தால், நான் மலைஉச்சியைதான் சென்றடைய வேண்டும், நான் இங்கு ஒரு அன்னியர்தான், இது எனது வீடல்ல என்பதை மறக்காமல் தொடர்ந்து நினைவில் வைத்துக் கொண்டிருந்தால் நீ சிகரத்தை சென்றடைவாய். ஒவ்வொரு பள்ளத்தாக்கை கடந்தபின்னும் அங்கு கொண்டாட்டம் இருக்கும்.

ஆனால் ஒவ்வொரு பள்ளத்தாக்கை கடந்தபின்னும் நீ மற்றொரு பள்ளத்தாக்கினுள் நுழைய வேண்டும். இது போய்க்கொண்டே இருக்கும். ஏழுபள்ளத்தாக்குகள் உள்ளன. நீ ஏழாவது பள்ளத்தாக்கை கடந்துவிட்டால் பின் முடிந்தது. அப்போது மனிதன் தன் இருப்பை சென்றடைந்து விடுகிறான். அவன் இப்போது முரண்பாடானவனல்ல. அங்கு தவிப்பில்லை, வேதனையில்லை. இதைத்தான் நாம் புத்தநிலை என்று அழைக்கிறோம். இதைத்தான் கிறிஸிதுவர்கள் கிறிஸ்து நிலை என்று அழைக்கின்றனர். ஜைனர்கள் ஜைனநிலை என்று அழைக்கின்றனர். வெற்றி பெற்ற நிலை. அதற்கு பல பெயர்கள். ஆனால் மனிதன் கடவுள் நிலை அடையும்வரை அவன் தவிப்பில் இருப்பான் என்பதுதான் அடிப்படையான ஒன்று. கடவுள் நிலையை அடைவதற்கு முன் ஏழு நிலைகள் ஏழு பள்ளத்தாக்குகள் கடக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு நிலையும் அதற்கே உரித்தான கவர்ச்சியை கொண்டுள்ளது. நீ அதில் ஈர்ப்பு அடைந்து அதிலேயே இருந்து விடும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. நீ இரண்டாவது பள்ளத்தாக்கினுள் செல்ல இதிலிருந்து வெளியே சென்றாக வேண்டும். இதை விட்டாக வேண்டும். ஒவ்வொரு பள்ளத்தாக்கிற்க்கு பின்னும் ஒரு சிகரம் ஒரு மிகஉயர்ந்த மலைஉச்சி இருக்கும். ஒவ்வொரு பள்ளத்தாக்கிற்கு பின்னும் ஒரு கொண்டாட்டம் இருக்கும். அந்த கொண்டாட்டம் மேலும் மேலும் ஆழமானதாக இருக்கும். இறுதியாக ஏழாவது பள்ளத்தாக்கில் நீ அந்த ஆனந்த பிரபஞ்சநிலையை அடைந்து விடுகிறாய். நீ கரைந்துவிடுகிறாய். பின் அங்கு கடவுள் மட்டுமே இருக்கிறார்.

இந்த ஏழு பள்ளத்தாக்குகளை பற்றியும் கவனித்து கேட்டு புரிந்துகொள்ள முயற்சி செய். அல் – ஹாஜலில் ஏதோ தத்துவார்த்தமாக பேசுகிறார் என்று நினைக்காதே. சூஃபிகள் தத்துவத்தில் அக்கறை கொள்வதில்லை. அவர்கள் மிக யதார்த்தமான மக்கள். அவர்கள் எதையாவது சொன்னால் அதில் பொருள் இருக்கும்.அவர்கள் எதையாவது சொன்னால் அது தேடுபவர்களுக்கானது, அது வெறுமனே ஆவல் கொண்டவர்களுக்கானதோ, அறிவு பூர்வமானவர்களுக்கானதோ அல்ல. அது உண்மையை அடைய மிக தீவிரமாக முயற்சி செய்பவர்களுக்கானது, அந்த பாதையில் இருப்பவர்களுக்கானது, அது தேடுபவர்களுக்கானது.

முதல் பள்ளத்தாக்கு............. அது அறிவு பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
இயல்பாகவே அறிவு முதலில் வரும். ஏனெனில் மனிதன் அறிந்து கொள்வதில் இருந்துதான் ஆரம்பமாகிறான். வேறு எந்த மிருகத்திற்கும் அறிவு இல்லை. மனிதன் மட்டுமே அறிந்து கொள்கிறான். மனிதன் மட்டுமே அறிவை சேகரித்து வைத்துக் கொள்கிறான். மனிதன் மட்டுமே எழுதுகிறான், படிக்கிறான், பேசுகிறான். மனிதனுக்கு மட்டுமே மொழி, கொள்கைகள், வேதங்கள் உள்ளன. அதனால் அறிவுதான் தகவலறிவுதான் முதல் பள்ளத்தாக்காக இருக்க முடியும்.

இந்த பள்ளத்தாக்கின் எதிர்மறையான விஷயம் என்னவென்றால் நீ தகவலறிவால் கவரப்படுவாய். நீ அறிவானவனாக மாறலாம், நீ தகவலறிவின் உண்மையான காரணத்தை மறந்து விடக்கூடும். நீ தகவலறிவுடன் மிகவும் ஒன்றிவிடலாம். பின் மேலும் மேலும் அறிவை சேர்த்துக் கொண்டே போகலாம். பல பிறவிகள்கூட அறிவை சேர்க்கலாம். நீ மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராக, பண்டிதர்களில் ஒருவராக கூட ஆகலாம். ஆனால் நீ ஒரு தெரிந்து கொண்டவனாக முடியாது.

தெரிந்து கொள்வதற்கான வழி அறிவைச் சேகரிக்கும் வழியிலிருந்து வேறுபட்டது.
அறிவு வரும்போது இரண்டு விஷயங்கள் நிகழ்கின்றன. அறிந்து கொள்ளும் விஷயம் – நீ ஏதோ ஒன்றை அறிந்து கொள்கிறாய். அடுத்து, தன்னுணர்வு - பிரதிபலிப்பு - அறிந்து கொள்ளும் நீ. அறிந்து கொள்ளும் உன்னை விட்டுவிட்டு அறிந்து கொண்ட விஷயத்துடன் நீ மிகவும் ஒன்றி விடும்போது பள்ளத்தாக்கில் நீ தொலைந்துவிடுகிறாய். உன்னை கவரும், உன்னை சிக்க வைக்கும், நீ ஒன்றிவிடும் பாகத்தைத்தான் நான் எதிர்மறை என்றழைக்கிறேன்.

நீ அறிவானவனாக மாறிவிட்டால் நீ தொலைந்து போவாய். நீ இந்த முதல் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறுவதில்லை. தகவலறிவு அதிகம் பெற பெற நீ அதிக குழப்பமடைவாய் – ஏனெனில் எது உண்மை என்று முடிவு செய்ய வழியேயில்லை.
நீ காதால் கேட்பது எதுவுமே தர்க்கரீதியாக சொல்லப்பட்டால், மிகச் சரியாக உன்முன் வைக்கப்பட்டால், அது சரியானதாக தோன்றும். முடிவு செய்ய உனக்கு வேறு வழியேயில்லை. அதற்கு அளவுகோல் இல்லை. அதனால்தான் அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நீ ஒரு குருவிடம் செல்கிறாய், அவர் சொல்வதை நீ கேட்கும்போது அது சரியானதாக தோன்றுகிறது. நீ வேறொரு குருவிடம் சென்று அவர் கூறுவதை கேட்கும்போது அதுவும் சரியானதாக தோன்றுகிறது. நீ ஒரு புத்தகத்தை படிக்கிறாய், அது சரியானதாக தோன்றுகிறது. வேறொரு புத்தகத்தை – அதற்கு நேர் எதிரிடையானதை – படிக்கிறாய். அதுவும் அதற்கான தர்க்கத்துடன் படிக்கும்போது அதுவும் சரியானதாக தோன்றுகிறது. சரியானது என்று முடிவு செய்ய இங்கு வழியேயில்லை. நீ சேர்த்துக் கொண்டே போனால் எதிர்மறையானவற்றையும் – வேறுபட்ட கோணங்களை – சேர்த்துக் கொண்டே போவாய். கோடிக்கணக்கான நிலைப்பாடுகள் உள்ளன. விரைவிலேயே நீ தத்துவங்களின் கோட்பாடுகளின் கூட்டமாக மாறி விடுவாய். அது உதவப் போவதில்லை, அது மிகுந்த இடையூறாக மாறிவிடும்.

அறிவு பள்ளத்தாக்கில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் அறிந்து கொள்கிறோம் என்பதில் மட்டுமே தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். பொருளைப்பற்றியோ, விஷயத்துக்கோ முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. சாட்சியாக இருப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டும். மேலும் மேலும் சுதாரிப்புடனும் விழிப்புடனும் இருந்தால் தெரிந்து கொள்பவராக மாறலாம். பல விஷயங்களை அறிந்து கொள்வதால் அல்ல, விழிப்புணர்வுடன் இருப்பதால் மட்டுமே ஒருவர் உண்மையான தெரிந்து கொள்பவராக மாற முடியும்.
தகவல் அறிவு பாதை, கருத்துகள் நம்பிக்கைகள் முறைகள் கொண்ட ஆன்மீக நூல்களுடன் சம்பந்தப்பட்டது அல்ல. அது தெரிந்து கொள்வதுடன் சம்பந்தப்பட்டது. நீ தெரிந்து கொள்கிறாய். தன்னுணர்வு அடைவதற்கு உன்னிடம் அளவு கடந்த ஆற்றல் இருக்கிறது. பெற்றுக் கொள்பவரைப் பற்றி அக்கறை கொள். விழிப்புணர்வடை. பெற்ற விஷயத்தை பொருட்படுத்தாதே.
அறிந்து கொண்ட விஷயத்தைப் பற்றி அக்கறைப் படாதே. அறிந்து கொண்டுள்ளவரைப் பற்றி அக்கறை கொள். அறிவு இருபுறமும் முனை கொண்ட அம்பு போன்றது. ஒருமுனை அறிந்த விஷயத்தையும் மற்றொரு முனை அறிந்து கொள்பவரையும் சுட்டும். நீ விஷயத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் நீ பள்ளத்தாக்கில் தொலைந்து போவாய். நீ அறிந்து கொள்பவரை பிடித்துக் கொண்டால் நீ பள்ளத்தாக்கில் தொலைந்து போக மாட்டாய். உன்னால் பள்ளத்தாக்கை கடந்து போக முடியும். நீ அறிவு பள்ளத்தாக்கை கடந்து விட்டால் அங்கு சந்தோஷமான சந்தோஷம் இருக்கிறது. ஏனெனில் நீ உன்னுள் உள்ள அடிப்படைகளில் ஏதோ ஒன்றை இறுதி வரை இருக்கப்போகின்ற ஏதோ ஒன்றை மிகவும் தேவையான ஒன்றை புரிந்து கொண்டு விட்டாய். அறிந்து கொள்ளும் திறமையை தன்னுணர்வு அடையும் திறமையை புரிந்து கொண்டு விட்டாய்.

நீ அறிந்து கொள்பவரை பார்க்க கற்றுக் கொண்டால், அறிந்து கொள்பவரை பற்றி கவனமாக இருக்க ஆரம்பித்தால் நீ நேர்மறையானதை உபயோகிக்கிறாய்.

Source - The Secret of Secrets Vol 2 che #1



சொர்க்கம் மற்றும் நரகத்தின் கதவுகள்- ஓஷோவின் கதை - 31

இந்த கதை அழகானது. ஜென் குரு ஹேக்குன் அபூர்வ மலர்களில் ஒருவர். ஒரு போர்வீரன் அவரிடம் வந்தான். ஒரு சமுராய், ஒரு சிறந்த வீரன் வந்து ஹேக்குனிடம் நரகம் என்று ஏதாவது உள்ளதா ? சொர்க்கம் என்று ஏதாவது உள்ளதா ? நரகம் மற்றும் சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால் அவைகளின் கதவுகள் எங்கே உள்ளன ? நான் எங்கேயிருந்து உள்ளே செல்வது ? நான் எவ்வாறு நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தை தேர்ந்தெடுப்பது ? என கேட்டான், அவன் ஒரு எளிய வீரன். வீரர்கள் எப்போதும் எளிமையானவர்கள்.

எளிமையாக இருக்கும் ஒரு வியாபாரியை கண்டுபிடிப்பது கடினம். ஒரு வியாபாரி எப்போதும் தந்திரமான புத்தியை உடையவன். இல்லாவிடில் அவன் ஒரு வியாபாரியாக இருக்கமுடியாது. ஒரு வீரன் எப்போதும் எளிமையானவன், இல்லாவிடில் அவன் ஒரு வீரனாக இருக்கமுடியாது. ஒரு வீரன் இரண்டு விஷயங்களை மட்டுமே அறிவான், வாழ்க்கை மற்றும் இறப்பு – அதிகமல்ல.
அவனுடைய வாழ்க்கை எப்போதும் பணயத்திலேயே உள்ளது, அவன் எப்போதும் சூதாடிக்கொண்டிருக்கிறான், அவன் ஒரு எளிமையான மனிதன். அதனால்தான் வியாபாரிகள் ஒரே ஒரு மகாவீரரையோ, ஒரே ஒரு புத்தரையோ கூட உருவாக்கமுடியவில்லை. பிராமணர்களும்கூட ஒரு இராமரையோ, ஒரு புத்தரையோ, ஒரு மகாவீரரையோ உருவாக்கமுடியவில்லை. பிராமணர்களும் தந்திரசாலிகள், வேறு ஒரு வகையில் தந்திரசாலிகள். அவர்களும் ஒரு வேறுபட்ட உலகத்தின், மறு உலகத்தின் வியாபாரிகளே. அவர்கள் இந்த உலகத்தை சேராத ஒரு வியாபாரத்தை செய்கிறார்கள், ஆனால் அது மறு உலகத்தை சேர்ந்தது. அவர்களுடைய பூசாரித்தனம் ஒரு வியாபாரம். அவர்களுடைய மதம் கணிதம், கணக்கீடு. அவர்களும் தந்திரசாலிகளே, வியாபாரிகளை விட அதிக தந்திரசாலிகள். வியாபாரி அவனுடைய உலகத்திற்கு உட்பட்டவன், அவர்களுடைய தந்திரம் அதையும் கடந்து செல்கிறது. அவர்கள் எப்போதும் மறு உலகத்தைப்பற்றி, அவர்கள் மறு உலகத்தை அடையும்போது அங்கு கிடைக்கபோகும் பரிசுகள் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சடங்குகள், அவர்களுடைய முழு மனமும் மறு உலகில் அதிக சுகத்தை எப்படி பெறுவது என்பது குறித்து சிந்தித்துகொண்டிருக்கிறது. அவர்களது கவலை சுகத்தை பற்றியது. வியாபாரிகளால் முடியவில்லை. பிராமணர்கள்கூட ஒரு புத்தரை உருவாக்கமுடியவில்லை. இது அதிசயமாய் உள்ளது. 24 தீர்த்தங்கரர்கள் அனைவரும் சத்திரியர்கள், வீரர்கள். புத்தர் ஒரு சத்திரியர், இராமன் மற்றும் கிருஷ்ணர் இருவரும் சத்திரியர்கள்.

அவர்கள் எளிமையான மக்கள், அவர்களுடைய மனதில் எந்த தந்திரமும், எந்த கணக்கீடும் இல்லை. அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும் – வாழ்க்கை மற்றும் இறப்பு.

இந்த எளிமையான வீரன் ஹேக்குனிடம் சொர்க்கம் எங்கே இருக்கிறது மற்றும் நரகம் எங்கே இருக்கிறது என்று கேட்பதற்காக வந்துள்ளான், அவன் எந்த கோட்பாடுகளையும் தெரிந்துகொள்வதற்காக வரவில்லை. அவன் கதவுகளை தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால் அவன் நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தில் நுழையலாம் ஹேக்குன் ஒரு வீரன் மட்டுமே புரிந்துகொள்ளகூடிய வகையில் பதிலளித்தார். அங்கு ஒரு பிராமணன் இருந்திருந்தால், வேதங்கள் தேவைப்பட்டிருக்கும், அவர் வேதங்கள், உபநிடதங்கள், பைபிள், குரான், ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பார் அப்போதுதான் ஒரு பிராமணன் புரிந்துகொள்ளமுடியும். ஒரு பிராமணனுக்கு தேவையானவை அனைத்தும் வேதங்களில் உள்ளது, வேதங்களே உலகம். ஒரு பிராமணன் வார்த்தைகளில், சொற்களில் வாழ்கிறான். ஒரு வியாபாரி அங்கு இருந்திருந்தால், ஹேக்குன் கொடுத்த பதில், இந்த வீரனோடு அவர் நடந்துகொண்ட விதம், ஆகியவற்றால் இந்த விடையை புரிந்துகொண்டிருக்கமாட்டான். ஒரு வியாபாரி எப்போதும் உன்னுடைய சொர்க்கத்தின் விலை என்ன ? என்ன விலை ? நான் அதனை எப்படி அடைவது? நான் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்? அங்குள்ள நாணயம் எது? சொர்க்கத்தை அடைய நான் என்ன செய்யவேண்டும்? என்றே கேட்டுகொண்டிருப்பான். அவன் எப்போதும் விலையை கேட்பான்.

நான் ஒரு அழகான கதையை கேள்விப்பட்டிருக்கிறேன். இது தொடக்கத்தில் கடவுள் உலகத்தை படைத்தபோது நடந்தது. கடவுள் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்களிடம் பத்து கட்டளைகளை பற்றி கேட்பதற்காக பூமிக்கு வந்தார்.

வாழ்வின் பத்து விதிமுறைகள். யூதர்கள் அந்த பத்து விதிமுறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவிட்டார்கள் – கிறிஸ்துவர்களும் முகமதியர்களும். இந்த மதங்கள் அனைத்தும் யூதத்தன்மை உடையவை, அடிப்படை யூதம், யூதன் ஒரு சரியான வியாபாரி.


இப்படி அதனை கேட்பதற்காக கடவுள் வந்தார், அவர் இந்துகளிடம் வந்து பத்து கட்டளைகளை பெற்றுகொள்ள விரும்புகிறீர்களா என கேட்டார். இந்துகள் முதல் கட்டளை என்ன ? எங்களுக்கு இந்த பத்து கட்டளைகள் என்னவென்று தெரியாது எங்களுக்கு கண்டிப்பாக ஒரு உதாரணம் தேவை என்றனர்.

கடவுள் உயிர்களை கொல்லக்கூடாது என கூறினார்.

இந்துகள் எங்களுக்கு அது கடினமாக இருக்கும். வாழ்க்கை சிக்கலானது, கொல்வதும் உள்ளடங்கியுள்ளது. அது ஒரு பெரிய பிரபஞ்ச விளையாட்டு, அதில் பிறப்பு, இறப்பு, போராட்டம், போட்டி, எல்லாம் உள்ளது. எல்லா போட்டிகளும் எடுக்கப்பட்டுவிட்டால் முழு விஷயமும் தட்டையாக துடிப்பற்றதாகிவிடும். எங்களுக்கு இந்த கட்டளைகள் பிடிக்கவில்லை. அவை முழு விளையாட்டையும் அழித்துவிடும். என கூறினர். பிறகு அவர் முகமதியர்களிடம் சென்று தவறான உறவில் ஈடுபடக்கூடாது என அவர்களுக்கும் அவர் ஒரு உதாரணம் கொடுத்தார். அவர்களும் உதாரணம் கேட்டனர். முகமதியர்கள் இது கடினமாக இருக்கும். வாழ்க்கை எல்லா அழகையும் இழந்துவிடும், குறைந்தபட்சம் நான்கு மனைவிகளாவது தேவை. நீங்கள் அதனை பலவந்தம் என அழைக்கலாம், ஆனால் இதுதான் வாழ்வைத் தரக்கூடியது, எல்லா புனிதமான மக்களும் பெற வேண்டியது. மறு உலகத்தைப்பற்றி யார் அறிவார் ? இதுதான் உலகம், அனுபவிப்பதற்காக எங்களிடம் நீங்கள் இந்த உலகத்தை அளித்துள்ளீர்கள் ஆனால் இப்போது நீங்கள் இந்த பத்து கட்டளைகளோடு வந்துள்ளீர்கள். இது முரண்பாடானது என கூறினர்.

கடவுள் சுற்றி சுற்றி வந்தார். பிறகு அவர் மோசஸிடம், யூதர்களின் தலைவரிடம் வந்தார். மோசஸ் உதாரணத்தைச் சிறிதும் கேட்கவில்லை, மேலும் கடவுள் பயப்பட்டார், மோசஸ் முடியாது என்று சொல்லிவிட்டால், யாரும் இல்லை, மோசஸ்தான் கடைசி நம்பிக்கை. கடவுள் மோசஸை கேட்டபோது – கடவுள் என்னிடம் பத்து கட்டளைகள் உள்ளன என்று சொன்ன நொடியில் –- மோசஸ் என்ன பதிலளித்தார் ? அவர் அவை என்ன விலை? என்று கேட்டார். இப்படித்தான் ஒரு வியாபாரி யோசிப்பான். அவன் தெரிந்துகொள்ள விரும்பும் முதல் விஷயம் விலை.
கடவுள் அவை இலவசம் என கூறினார். மோசஸ் பிறகு நான் பத்தை வைத்துக்கொள்கிறேன். அவை இலவசமாக இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினார். அப்படித்தான் பத்து கட்டளைகளும் பிறந்தன.

ஆனால் இந்த சமுராய் ஒரு யூதனல்ல, அவன் ஒரு வியாபாரியல்ல, அவன் ஒரு போர்வீரன். அவன் ஒரு எளிமையான கேள்வியோடு வந்துள்ளான். அவனுக்கு வேதங்களிலோ, விலையிலோ, சொல்லும் பதிலிலோ, ஆர்வமில்லை. அவன் உண்மையின் மீது ஆர்வம் கொண்டிருந்தான். மற்றும் ஹேக்குன் என்ன செய்தார் ? அவர் நீ யார் ? என கேட்டார் போர்வீரன் நான் ஒரு சமுராய் என பதிலளித்தான். ஒரு சமுராயாக இருப்பது ஜப்பானில் மிகவும் பெருமை வாய்ந்த ஒரு விஷயம். அதன் பொருள் ஒரு சிறந்த போர்வீரன், அவனுடைய வாழ்க்கையை இழப்பதற்கு ஒரு நொடிகூட தயங்கமாட்டான். அவனைப்பொறுத்தவரை, வாழ்வும் இறப்பும் வெறும் ஒரு விளையாட்டு.

அவன் நான் ஒரு சமுராய், சமுராய்களின் தலைவன். அரசரும்கூட எனக்கு மரியாதை அளிக்கிறார், என கூறினான். ஹேக்குன் சிரித்துவிட்டு, நீ ஒரு சமுராய் ? நீ ஒரு பிச்சைக்காரனைப்போல இருக்கிறாய் என கூறினார்.

உடனே சமுராயின் பெருமை காயப்பட்டுவிட்டது, அவனுடைய ஆணவம் அடி வாங்கிவிட்டது. அவன் எதற்காக வந்தான் என்பதை அவன் மறந்துவிட்டான். அவன் அவனுடைய வாளை எடுத்து ஹேக்குனை கொல்லப்போனான். சொர்க்கத்தின் கதவைப்பற்றியும் நரகத்தின் கதவைப்பற்றியும் கேட்க இந்த குருவிடம் அவன் வந்துள்ளான் என்பதையே அவன் மறந்துவிட்டான்.

அப்போது ஹேக்குன் சிரித்துவிட்டு இதுதான் நரகத்தின் கதவு. இந்த வாளோடு, இந்த கோபம், இந்த ஆணவம், கதவு இங்குதான் திறக்கிறது என கூறினார்.

இதைத்தான் ஒரு போர்வீரன் புரிந்துகொள்ளமுடியும். உடனடியாக அவன் புரிந்துகொண்டான், இதுதான் கதவு. அவன் அவனுடைய வாளை அதன் உறைக்குள் போட்டான்.

அப்போது ஹேக்குன் இங்கு சொர்க்கத்தின் கதவு திறக்கிறது என கூறினார்.

நரகமும் சொர்க்கமும் உனக்குள் உள்ளன. இரண்டு கதவுகளும் உனக்குள் உள்ளன. நீ உணர்வற்று செயல்படும்போது அங்கு நரகத்தின் கதவு உள்ளது, நீ கவனமாகவும், உணர்வுடனும் இருக்கும்பொழுது, அங்கு சொர்க்கத்தின் கதவு உள்ளது.

இந்த சமுராய்க்கு என்ன நடந்தது? ஹேக்குனை கொல்லப்போகும் அந்த சமயத்தில் அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் என்ன செய்யப்போகிறான் என்பதுபற்றி அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் எதற்காக இங்கு வந்துள்ளான் என்பதுபற்றி உணர்வோடு இருந்தானா ? எல்லா உணர்வும் மறைந்துவிட்டது.

ஆணவம் ஆட்கொள்ளும்போது, நீ கவனமாக இருக்கமுடியாது. ஆணவம் ஒரு போதை, அந்த போதை உன்னை முழுமையாக உணர்வற்றவனாக்கிவிடும். நீ செயல்படுவாய் ஆனால் அந்த செயல் உனது உணர்வற்ற நிலையிலிருந்து வெளிப்படும் உன்னுடைய உணர்வு நிலையிலிருந்து வெளிப்படாது. மற்றும் உணர்வற்ற நிலையிலிருந்து எந்த செயல் வந்தாலும் அப்போதெல்லாம், நரகத்தின் கதவு திறந்துள்ளது. நீ என்ன செய்தாலும், நீ என்ன செய்கிறாய் என்ற உணர்வு உனக்கு இல்லாவிட்டால் நரகத்தின் கதவு திறந்துவிடுகிறது.

திடீரென, ஹேக்குன் இதுதான் கதவு அதை நீ ஏற்கனவே திறந்துவிட்டாய் என சொன்னவுடன் உடனடியாக சமுராய் கவனமடைந்தான் – சூழ்நிலையே கண்டிப்பாக கவனத்தை உண்டாக்கியிருக்கவேண்டும்.

வெறுமனே கற்பனை செய்து பார். நீ போர்வீரனாக இருந்திருந்தால், சமுராயாக இருந்திருந்தால், வாளை கையில் ஏந்திகொண்டு, கொல்லப்போகிறாய். என்ன நடந்திருக்கும். ஒரு நொடி அதிகமாகியிருந்தால் ஹேக்குனின் தலை வெட்டப்பட்டிருக்கும், ஒரு நொடி அதிகமாகியிருந்தால் அது உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும். அப்போது ஹேக்குன் இதுதான் நரகத்தின் கதவு என கூறினார்.

இது ஒரு தத்துவார்த்தமான பதில் அல்ல. எந்த ஞானியும் தத்துவார்த்தமான முறையில் பதில் அளிப்பதில்லை, சாதாரண ஞானமடையாத மனங்களுக்கு மட்டுமே தத்துவம் இருக்கிறது. ஞானி பதிலளிக்கிறார். அப்போது அந்த பதில் வார்த்தைகளால் ஆனதல்ல. அது முழுமையானது. இந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம் என்பது பொருட்டல்ல. நீ என்னை கொன்றால் நீ கவனம் பெறுவாய் என்றால், அது தகுதிவாய்ந்ததே – ஹேக்குன் விளையாட்டை விளையாடினார். ஒரு வினாடி தப்பியிருந்தாலும் அந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம். ஆனால் சரியான நொடியில் ஹேக்குன் இதுதான் கதவு என கூறினார்.

நீ ஒருவேளை சமுராயைப்பற்றி கேள்விபடாமல் இருக்கலாம். நீ ஒரு சமுராயை கொல்லப்போவதாக வைத்துகொள்வோம், உன்னுடைய வாள் உன்னுடைய கையில் உள்ளது, அது இப்போது அவனுடைய கழுத்தை தொடப்போகிறது. அவன் உனக்கு முன்னால், பாதுகாப்பு ஏதுமின்றி, எந்த ஆயுதமும் இன்றி, நின்றுகொண்டிருக்கிறான். சமுராய்கள் ஒரு குறிப்பிட்ட சத்தத்தை வைத்திருக்கிறார்கள், ஒரு மந்திரம். அவன் ஒரே ஒரு வார்த்தையை மிகவும் சத்தமாக கூறுவான், நீ உன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்துவிடுவாய். நீ இறந்ததை போல, ஒரு சிலைபோல ஆகிவிடுவாய். அவன் வெறுமனே ஒருவேளை ஹே என்று கூறலாம். நீ நிள்றுவிடுவாய். உனது கை நகராது. அந்த சத்தம் எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் இதயத்தில் குத்தும். உன்னுடைய கை நின்றுவிடும், உன்னுடைய மனம் அதிர்ச்சி அடையும், எல்லா செயல்பாடுகளும் மறைந்துவிடும். அவன் ஆயுதம் ஏதுமின்றி இருந்தால்கூட உன்னால் ஒரு சமுராயை கொல்லமுடியாது. ஒரு சத்தம் அவனுக்கு பாதுகாப்பாகிவிடும். நீ ஒரு துப்பாக்கி வைத்திருந்தால், உன்னுடைய கைகள் நகரமுடியாது, அல்லது நீ குறியை தவறவிடுவாய். அது வெறும் ஒரு சத்தம், ஒரு குறிப்பிட்ட முறையில் எழுப்பபடவேண்டிய ஒரு சத்தம், ஆனால் அது உனது இதயத்திற்குள் ஆழமாக சென்று உன்னுடைய செயல்பாட்டை முழுமையாக மாற்றிவிடும், உன்னுடைய செயல்பாட்டின் வழக்கத்தை மாற்றிவிடும்.

ஹேக்குன் இதுதான் கதவு என கூறியபோது சமுராய் சிலைபோல கண்டிப்பாக நின்றிருக்கவேண்டும். அந்த சிலைபோன்ற நிலையில், எல்லா செயல்களும் உறையும்போது, நீ கவனமடைகிறாய். ஏதாவது செயல் தேவை . . . இல்லாவிடில் உனது உணர்வற்ற தன்மை உடைந்து நீ உணர்வு பெறுவாய். ஒரு மனிதன் ஆறு மணிநேரம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தால் அவன் ஞானடைந்துவிடுவான் என ஜென் கூறுகிறது. வெறும் ஆறு மணிநேரம் . . .ஆனால் ஆறுமணிநேரம் உண்மையிலேயே மிக அதிகம். நான் ஆறு நிமிடங்கள் போதும் என கூறுகிறேன். நீ முற்றிலுமாக எந்த செயல்பாடும் இன்றி இருக்கமுடியுமானால் ஆறு நொடிகள் கூட போதும். நீ ஏதும் செய்யாமல் இருக்கும்போது, நீ உணர்வற்று இருக்கமுடியாது, நீ ஏதும்செய்யாமல் இருக்கும்போது உன்னுடைய முழு சக்தியும் உணர்வுதன்மை அடைகிறது. ஒரு பிரம்மாண்ட வெடித்தல் நிகழ்கிறது.

Source: A BIRD ON THE WING CHAPTER # 3.