Monday, April 25, 2011

மலர் 3 இணைய இதழ் 8 11 மார்ச் 2011

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்திலிருந்து த்யான் சித்தார்த், கிலிம்சஸ் மையம் ஏற்பாடு செய்திருந்த ஒருநாள் டைனமிக் தியான பயிற்சிப் பட்டறையை பிப்ரவரி 27ந் தேதி சென்னையில் நடத்தினார்.

திருப்பூரில் உள்ள ஓஷோ சாஸ்வதம் தியானமையத்தில் (கிளை) விரும்பும் அன்பர்கள் வந்திருந்து தியானம் செய்யலாம்.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்……

ஈகோ அல்லது – நான் – என்பதை சுயகற்பனை பிம்பம் என்று சொல்வது மிகவும் பொருந்தும்.

குழந்தைக்கு அடையாளம் கொடுத்து சுய கற்பனை பிம்பம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறது சமூகம். அன்பு காட்டும் தாய், அரவணைக்கும் குடும்பம், கொஞ்சும் கூட்டம், விளையாட தோழர்கள் என வளரும் குழந்தை தன் உணர்வுகளை மூடிய ஒரு சுயகற்பனை பிம்பத்தை, பொய்யான ஒரு அக உலகத்தை உருவாக்கிக் கொள்கிறது.

ஒரு குழந்தையை நாம் –முத்து- என அழைக்கும்போது, முத்துவுக்குப் பசிக்கிறதா என்று நாம் கேட்கிறோம். நீங்கள் கவனித்துப்பார்த்தால் குழந்தை பேசுகையில், ஆரம்பத்தில் அதுவும் முத்துவுக்குப் பசிக்கிறது என்றே கூறும். ஏனெனில் இன்னும் அதற்கு சுய அடையாளம், சுயகற்பனை பிம்பம் விழ ஆரம்பிக்கவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக - நம் பெயர்தான் நான் - என்பதில் தொடங்கி என் தாய், என் தந்தை என்று பிம்பத்தை கட்ட உதவுகிறோம். மேலும் இந்த சுயகற்பனை பிம்பத்தை ஒட்டியே குழந்தை தன் உணர்வு அனுபவங்களையும் சேகரிக்க ஆரம்பிக்கிறது. இதனால்தான் இதற்கு முந்தைய பதிவுகள் நமது நினைவில் இல்லாமல் போய்விடுகிறது.

வளர வளர வாழ்க்கையே சுயகற்பனை பிம்பத்திற்காக போராடும் போராட்டமாக ஆகிவிடுகிறது.

இதில் நிகழும் சறுக்கல்கள் துன்பமாகின்றன. ஏனெனில் சுய கற்பனை பிம்பம் உடையும் போதெல்லாம் உள்ளே பயமே இருக்கிறது. மரண பயம்.

சுய கற்பனை பிம்பத்தை பெரிதாக ஏற்படுத்தி காப்பாற்றக் கற்றுக்கொடுக்கிறது சமூகம்.

சுயகற்பனை பிம்ப கோட்டை கட்டி காப்பாற்ற முடியாதவர்கள் தோல்வியாளர்களாக பயத்தில் துவண்டு பதுங்கி வாழும் மனம் பெறுகின்றனர்.

வெற்றி பெறுபவர்கள் சுயகற்பனை பிம்பத்திலிருந்து வெளிவராமலிருக்கும் போதைகளை பிடித்து கொள்கின்றனர்.

இதில் சுயகற்பனை பிம்பத்தை ஊட்டி வளர்க்கும் சமூக போதைகளான புகழ், கௌரவம், அதிகாரம், அந்தஸ்து, பணம், மரியாதை இவற்றை நல்ல போதைகள் என்கிறது சமூகம். சூது, மாது, குடி இப்படி உள்ளவற்றை கெட்ட போதைகள் என்கிறது சமூகம். இது தவிர அரட்டை, டிவி, என பகல்கனவு அம்சங்கள் பல உள்ளன.

சுயகற்பனை பிம்பத்தை உடைக்கும் தனிமை எல்லோரையும் மிரட்டுகிறது.

சுயகற்பனை பிம்பத்தை உடைக்கும் அவமானம், ஏமாற்றம், தோல்வி, ஆகியவையும் மிரட்டுகின்றன.

ஆகக் கூடி இந்த சமூக அமைப்பு என்பதே மனிதனின் பசி செக்ஸ் என்ற இரண்டு பசிகளையும் சண்டையிட்டுக் கொள்ளாமல் தீர்த்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுப்பதும், உணர்வோடு வாழ்வதை மறக்கடிக்கும் விதமாக சுயகற்பனை பிம்ப போதைகளை இடையூறில்லாமல் ஏற்றிக் கொண்டு வாழ வழியமைப்பதுமாகவே இருக்கிறது. பகல் கனவுக்கும் ஆதரவு கொடுக்கிறது.

இதனால்தான் இந்த சமூகம் இன்னும் நாகரீகமடையவில்லை என்கிறார் ஓஷோ. இது இன்னும் ஒரு சிலர் வாழ எல்லோரும் அடிமைகளாக இருக்கும் விதமாகவே இருக்கிறது. போதையிலும், உறக்கத்திலும், குற்றவுணர்விலும், சுயகற்பனை பிம்பத்திலும் சிக்கித் தவிப்பவனாகவே உள்ளான் மனிதன். காட்டுமிராண்டியாய் மனிதன் வாழ்ந்த காலத்தின் நோக்கமே இன்றுவரை தொடர்கிறது.

ஆனால் மனிதன் சுயகற்பனை பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளாமல் உணர்வு பூர்வமாக வாழ்ந்தால் அவன் பிறக்கும்போதுள்ள விலங்குணர்ச்சிகள் எல்லாம் மனித உணர்ச்சிகளாக மாறும். அன்பும், படைப்பும், இசையும் என மனித குணங்கள் வளரும்.
பகுத்தறிவு, விஞ்ஞானம் போன்ற அறிவுகளையும் கலைகள், சிரிப்பு, வியப்பு, நட்பு, கருணை, திருப்தி, பகிர்வு, அழகு, போன்ற உணர்வுகளையும் அனுபவிக்கையில், மரண பயம் கடந்து இயற்கையோடியைந்த ஒரு அனுபவம் கிடைக்கும்.

அப்படிப்பட்ட அனுபவங்களில் இருந்து மனிதன் கண்டுணர்ந்த்தே தன்ணுணர்வு அனுபவம். அந்தக் கண்டுபிடிப்பால் மனித வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்தை மனிதன் அறிந்து கொண்டான். பிறகு அதைப்பெறுவதற்கான வாழ்க்கைப்பாதையும் அதைக் கண்டுணர்ந்த ஞானிகளால் அமைக்கப் பட்டது. ஆனால் அது புனரமைக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். மாறாக மத அமைப்புகளால் அதுவும் மக்களை ஏமாற்றவே பயன்படுத்தப் படுகின்றன.

சுயகற்பனை பிம்பத்தை காக்கும் ஓட்டம்தான் மனம். மனம் அதைக் காக்கும் பொருட்டு உடலின் சக்தி முழுவதையும் எடுத்துக் கொண்டு விடுகிறது. இயற்கையில் கரைந்து தன்னுணர்வு பெறும் அனுபவங்களுக்கு வழி விடாமல் சுயகற்பனை பிம்பத்தைக் காப்பாற்ற உடலின் விலங்குணர்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கிறது. மனிதனின் ஆறாம் அறிவையும் பயன்படுத்திக் கொள்கிறது. அப்படித்தான் துரோகமும் சூழ்ச்சியும் அரசியலும் வியாபாரமும் பிறந்துவிட்டது.

இதயத்திலிருந்து உணர்வோடு வாழ்வதே தன்னுணர்வுக்கு வழிகாட்டும். அதை வளர்க்கும். அதன் மூலம் பிரபஞ்ச உணர்வு எட்டுவதே மனிதனின் வாழ்வு, இயற்கையின் அடுத்த வளர்ச்சி நிலை.

மிருகம் வரை உணர்வு தன்னுணர்வு அற்றது.

மனிதனில் தன்னுணர்வு பிறந்தது அவனது உணர்வுபூர்வமான அனுபவத்தால். அது இயற்கையின் இணைப்புணர்வு அனுபவம், அது தியான அனுபவம், அது மனம் கடந்த நிலை, முழு உணர்வோடு இருக்கும் கணம். அந்த நிலையில் மனிதனாய் உள்ள அனைத்து பிரச்சனைகளும் காணாமல் போய்விடுகின்றன. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டமும், மரண பயமும் இல்லாமல் போய்விடுகிறது.

அதை பெற வாழ்வை எப்படிப் பயன்படுத்துவது என்று ஆராய்வோம், அதை முயற்சி செய்வோம், அதன் படி இருக்க முயல்வோம்.

நமது சுயகற்பனை பிம்பம் எது என புரிந்து கொள்ள முயற்சி செய்வோம், மனதின் வழி செல்லாமல் நமது இதயம் என்ன சொல்கிறது என கேட்க முயற்சி செய்வோம், இதய உணர்ச்சிகளை முன்னிறுத்தி அதன் வழி வாழ முயல்வோம்.

வாழ்க விழிப்புணர்வுடன்
சித்.

கவிதைப் பகுதி

அன்பின் சிறப்பு
உரிமை தாய்மையின் சிறப்பு,
கண்டிப்பு தந்தையின் சிறப்பு.

ஊடல் காதலின் சிறப்பு,
பகிர்தல் நண்பனின் சிறப்பு.

தியாகம் உணர்வின் சிறப்பு,
படைப்பு உழைப்பின் சிறப்பு.

நன்றியுணர்வு பக்தனின் சிறப்பு,
கருணை குருவின் சிறப்பு.

கலை அழகின் சிறப்பு,
நடனம் நளினத்தின் சிறப்பு,
இசை துய்த்தலின் சிறப்பு.

கணத்தில் வாழ்தல் குழந்தையின் சிறப்பு,
நேயம் நனிதனின் சிறப்பு.

இப்படி.....
எதன் சிறப்பும்
எப்போது பிறக்கிறது

அதனதன் நிலையில்
அன்பும் நேசமும்
பொங்கிப் பெருகுகையில்.....

ஆம்...
அப்போதுதான்
அந்த சிறப்பு பிறக்கிறது.

ஆகவே நண்பா

எந்த நிலையிலும் அன்பு கொள்,
சிறப்பு உன்னிடம் பிறக்கட்டும்.



. மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ


ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருத்தல்

ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருத்தல் என்பது மனமின்றி இருப்பது. எந்த எண்ணங்களும் இல்லாமல் வெற்றிடமாக இருக்கும்போது உன்னுடைய தன்னுணர்வு எதையும் பிடித்துக் கொள்ளாமல் இருக்கும்போது உனது கண்ணாடி பிரதிபலிக்க எதுவுமின்றி இருக்கும்போது இருப்பதுதான் ஏற்றுக் கொள்ளும் தன்மை. ஏற்றுக் கொள்ளும் தன்மை தெய்வீகத்திற்கான வாசல். மனதை விட்டு விட்டு இருத்தலாக இரு.

ஏற்றுக் கொள்ளும் தன்மை என்பது நீ சுமந்து கொண்டிருக்கும் குப்பைகளை வீசியெறிவது.

நான் ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இரு என்று கூறும்போது திரும்பவும் ஒரு குழந்தை போல மாறி விடு என்றுதான் கூறுகிறேன்.

எங்கே மௌனமும் விழிப்புணர்வும் சந்திக்கிறதோ அங்கே ஏற்றுக் கொள்ளும் தன்மை இருக்கிறது.

ஏற்றுக் கொள்ளும் தன்மை என்பது மிக முக்கியமான ஆன்மீக குணமாகும்.

சத்யத்தை வாங்க முடியாது, அதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மட்டுமே முடியும்.

அமைதியின் இருப்பு நிலையே ஏற்றுக் கொள்ளும் தன்மையாகும்.

தனித்தன்மை

உன்னைப் போன்ற ஒருவர் இந்த உலகத்திலேயே எங்கேயும் இல்லை. – இதற்கு முன்பும் இருந்த்தில்லை, இதற்கு பின்பும் இருக்கப்போவதில்லை. நீ ஒருவர்தான். ஒவ்வொரு தனி மனிதனும் தனித்துவமானவன். தனித்துவம் இயற்கையினால் கொடுக்கப்பட்ட பரிசு.

இயற்கை தொடர் வரிசையில் எதையும் செய்வதில்லை, அது தனித்துமானவைகளையே உருவாக்குகிறது.

என்னைப் பொறுத்தவரை, தனி மனிதர்களின் தனித்துவமே சத்தியமான உண்மை.

நீ எதைச் செய்தாலும் அதில் உனது தனித்துவத்தை வெளிப்படுத்து.

உன்னுடைய தனித்துவத்துக்கு மதிப்பளி. ஒப்பிடுதலை விட்டு விடு. உன்னுடைய இருத்தலில் தளர்வாக இரு.

உன்னுடைய தனித்துவம் என்னவென்று கண்டுபிடிப்பது மிகவும் சாகசமானதும் மெய்கூச்சரிய வைக்கும் அனுபவமும் ஆகும்.

மற்றவர்களிடம் கருணையோடு இருப்பதும் அவர்களின் தனித்துவத்தை மதிப்பதாகும்.




ஓஷோ வீடியோ

1. Osho : You are in Prison and you think you are Free

2. Osho : There is no Creator

3. Osho : Life is a Mystery to be Lived


தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

ஏற்றுக் கொள்ளுதல் செய்யும் வித்தை

ஆரம்பம் - ஏற்றுக் கொள்
உனக்கு என்ன நிகழ்ந்தாலும் நீ அதை உன் இருப்பின் ஒரு பாகமாக ஏற்றுக் கொள். அதை கண்டனம் செய்யாதே.

இரண்டாவது – முழுமையே இயற்கை

மரங்கள் மட்டுமல்ல, மேகங்கள் மட்டுமல்ல – முழுமை. என்ன நிகழ்ந்தாலும் அது இயற்கையினால்தான் நிகழ்கிறது. இயல்பில்லாதது எதுவுமேயில்லை, இருக்க முடியாது. இல்லாவிடில் அது எப்படி நடக்கும் ஒவ்வொன்றும் இயற்கையானது. அதனால் இது இயற்கையானது இது இயற்கையில்லாதது என பிளவு ஏற்படுத்தாதே. என்னவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள், அதை ஆராயாதே.

நீ மலையில் இருந்தாலும் சரி, மார்கெட்டில் இருந்தாலும் சரி நீ அதே இயற்கையில்தான் இருக்கிறாய். சில இடங்களில் இயற்கை மலையாக, மரமாக இருக்கிறது, சில இடங்களில் இயற்கை மார்க்கெட்டில் கடைகளாக இருக்கிறது.

ஒருமுறை நீ ஏற்றுக் கொள்ளுதலின் ரகசியத்தை தெரிந்து கொண்டு விட்டால் பின் கடைவீதியும் கூட அழகானதாகி விடும். கடைவீதிகென்றே ஒரு அழகு இருக்கிறது. அங்கே உள்ள அதன் வாழ்வு, அந்த துடிப்பு, சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் அந்த அழகான கிறுக்குத்தனம் எல்லாமும் அழகானது. அதற்கே உரிய அழகு இருக்கிறது. மேலும் கடைவீதி இல்லையென்றால் மலைகள் அவ்வளவு அழகாக இருக்காது. மலைகள் அவ்வளவு அழகாகவும் அவ்வளவு அமைதியானதாகவும் இருக்க காரணம் கடைவீதி இருப்பதுதான். கடைவீதிதான் மலைகளுக்கு மௌனத்தை கொடுக்கிறது.

நீ ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து உன்னை முழுமையாக மறந்து விடலாம். நீ கரைந்து போய்விடும் அளவு உன்னை மறந்து விடலாம். நீ தெருவில் நடனமாடலாம், நீ உன்னையே மறந்து விடும் அளவு உன்னை இழந்து நடனமாடலாம். என்ன நிகழ்ந்தாலும் அதில் முழுமையாக கரைந்து ஒன்றி போய் விடுதலே அதன் ரகசியம். உனது மேகம் நகரும் வழியை கண்டுபிடி, பொழியும் இடத்தை பார், அதை முழுமையாக அனுமதி. எங்கே அது பொழிந்தாலும் அது தெய்வீகத்தை சென்று சேரும். சண்டையிடாதே. மித, நதியுடன் போராடாதே. அதனுடன் மிதந்து போ. நடனத்துடன் நீ முழுமையாக ஒன்றி போகும்போதுதான் அது அழகானது, அதுதான் முக்கியம். எதையும் புறந்தள்ளாதே. புறந்தள்ளுதல் ஆன்மீகமானதல்ல. முழுமையாக ஏற்றுக் கொள். ஏற்றுக் கொள்ளுதலே பிரார்த்தனை.
My Way : The Way of The White Clouds


தியான யுக்தி - 3

உள்குரலை கவனித்தல்

நீங்கள் எங்களிடம் உன் உள் குரலை கேட்டு அதன் மூலம் செயல்படு என்று கூறுகிறீர்கள். ஆனால் எங்களுக்கு மனதின் குரல் மட்டுமே உண்டு என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அப்படியிருக்கும்போது எதனால் அப்படி கூறுகிறீர்கள் வெறுமைக்கு கூட குரல் உண்டா

ஆம். வெறுமைக்கு என்று அதற்கே உரித்தான குரல் உண்டு. அது உண்மையில் குரலே அல்ல. அது ஒரு உத்வேகம். அது ஒரு சப்தம் அல்ல. அது மௌனம். யாரும் இதை செய் என்று சொல்வதில்லை, நீயே அதை செய்ய வேண்டும் போல உணர்கிறாய். உள்குரலை கேட்பது என்பது எல்லாவற்றையும் உள்ளே உள்ள வெறுமையிடம் விட்டுவிடுவது. பின் அது உன்னை வழிநடத்தும்.

நீ வெறுமையாக செல்லும்போது எப்போதும் சரியாகத்தான் செல்வாய். உன்னிடம் உள் வெறுமை இருந்தால் எதுவும் தவறாகாது. எதுவும் தவறாக முடியாது. வெறுமையில் எதுவும் தவறானதில்லை. இதுதான் எப்போதும் சரியானது என்பதற்கான சான்று. ஆம். வெறுமைக்கென்று ஒரு குரல் உண்டு, மௌனத்திற்கென்று ஒரு இசை உண்டு, அசைவற்றது அதற்கே உரிய நடனத்தை கொண்டுள்ளது. ஆனால் நீ அதை சென்றடைய வேண்டும்.

நான் மனதை கேள் என்று சொல்ல வில்லை. உண்மையில் மனது உன்னுடையதே அல்ல. நான் உன்னுடைய குரலை கேள் என்று நான் சொல்லும்போது இந்த சமுதாயம் உனக்கு கொடுத்த எல்லாவற்றையும் விட்டுவிடு என்றுதான் கூறுகிறேன். இந்த மனம் சமுதாயத்தால் உனக்கு கொடுக்கப்பட்டது. உனது மனம் உன்னுடையது அல்ல. அது சமுதாயம், அது கட்டுத்திட்டப்படுத்தப்பட்டது. அது சமுதாயம். வெறுமை உன்னுடையது. மனம் உன்னுடையது அல்ல. மனம் ஒரு இந்துவாக, முகம்மதியனாக, கிறிஸ்டியனாக. கம்யூனிஸ்டாக, முதலாளித்துவமானதாக, கம்யூனிஸத்திற்க்கு எதிரானதாக இருக்கலாம். வெறுமை ஏதுமில்லாதது. யாருமில்லாதது. அந்த ஏதுமற்ற தன்மைதான் உன்னுடைய இருப்பின் தூய்மை. அதை கவனி.

நான் கவனி என்று சொல்லும்போது, யாரோ ஒருவர் உன்னிடம் அங்கிருந்துகொண்டு பேசுகிறார் என்று நான் சொல்லவில்லை. அதை கவனி என்று நான் சொல்லும்போது அதற்கு நீ கிடைக்கக்கூடியவனாக இரு, உன் இருப்பு அதில் இருக்கட்டும், உன் செவி அதற்கு திறந்திருக்கட்டும் என்று கூறுகிறேன். அது உன்னை வழி நடத்தும், அது யாரையும் தவறாக வழிநடத்தியதில்லை. இந்த ஏதுமற்ற தன்மையிலிருந்து வெளிவரும் எதுவுமே அழகானதாக, சத்யமானதாக, சிறந்ததாக, வரமாகத்தான் இருக்கும்.
Yoga : The Alpha And the Omega


ஓஷோவின் விளக்கம் - ஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 2

ஓஷோ மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதன் 2-வது மாதத் தொடர்ச்சி.

இரண்டாவது பள்ளத்தாக்கு நினைத்துவருந்தும் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
நீ யார் என்பதை நீ பார்க்க ஆரம்பித்தால், அங்கே மிக ஆழ்ந்ததொரு நினைத்துவருந்துதல் எழுகிறது. நீ செய்த தவறுகளினாலும், நீ செய்திருக்க வேண்டிய செயல்களாலும், அவசியம் இல்லாமல் செய்த செயல்களாலும் நீ நினைத்துவருந்த ஆரம்பிக்கிறாய். அதனால் தன்னுணர்வோடு கூடிய ஒரு சிகரம் அங்கே எழுகிறது. – ஆனால் அதோடு திடீரென மனசாட்சியும் எழுகிறது. நினைவில் கொள், உன்னிடம் இப்போது உள்ள மனசாட்சி உண்மையானது அல்ல. அது போலியானது. அது சமுதாயத்தினால் உனக்கு கொடுக்கப்பட்டது.

மக்கள் எது நல்லது எது கெட்டது என்றும் எது முறையானது எது முறையற்றது என்றும் உனக்கு சொல்லியிருக்கிறார்கள். எது நெறிமுறை என்றோ எது நெறிமுறையற்றது என்றோ உனக்குத் தெரியாது. ஆனால் முதல் பள்ளத்தாக்கை கடந்தபின் எது தவறு எது சரி என்பது உனக்கு தெரியவரும். அப்போது நீ செய்த தவறுகள் அனைத்தும் உனக்கு புரியும் – எத்தனை பேரை காயப்படுத்தியிருக்கிறாய், மற்றவர்களிடம் எவ்வளவு குரூரமாக நடந்திருக்கிறாய், உன்னிடமே நீ எவ்வளவு பொறாமை, கோபம், ஆக்ரோஷம், வன்முறை, அழிக்கும் சக்தி கொண்டவனாக இதுவரை இருந்திருக்கிறாய் – இவையனைத்தும் உன் பார்வைக்கு வருகின்றன.

தன்னுணர்வடையும்போது மனசாட்சி எழுவது அந்த செயலுடன் கூடிய விளைவு.
நீ கொண்டுள்ள மனசாட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது – நீ கொண்டுள்ள மனசாட்சி கடன் வாங்கப்பட்டது. நீ அதை வைத்துக் கொள்ளலாம், அது உன்னை காயப்படுத்துவதில்லை, அது உனக்கு வலி தந்து அதன் மூலம் உன்னை நிலைமாற்றம் அடைய செய்வதில்லை. உனக்கு இது இது சரியென்று தெரியும், ஆனாலும் நீ தவறானதையே செய்து கொண்டு போகிறாய், நீ செய்ய விரும்புவது எதுவோ அதையே செய்கிறாய். இதுதான் சரியென்று உனக்கு தெரிந்த உன்னுடைய அறிவு உன்னுள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. உனக்கு கோப்படுவது தவறென்று தெரியும், ஆனால் நீ கோபமாகவேதான் இருக்கிறாய். ஒரு முனையில் கோபம் தவறென்று உனக்குத் தெரியும், மற்றொரு முனையில் எந்த வித உறுத்தலும் இல்லாமல் நீ கோபமாகவே இருக்கிறாய். ஒரு முனையில் பிடித்து வைத்துக் கொள்வது தவறென்று உனக்குத் தெரியும், மற்றொரு முனையில் நீ பிடித்து வைத்துக் கொள்கிறாய் – பொருட்களை மட்டுமல்லாமல் ஆட்களையும் பிடித்து வைத்துக் கொள்கிறாய். உனது மனைவி, உனது கணவன், உனது குழந்தைகள் எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கொள்கிறாய் – அவர்கள் ஏதோ பொருட்கள் போல, ஏதோ அவர்களை பிடித்து வைத்துக் கொள்ளலாம் போல. – உன்னுடைய பிடித்து வைத்துக் கொள்வதின் மூலம் நீ அவர்களை அழிக்கிறாய், அதை தவறு என்று தெரிந்தே செய்கிறாய்.

இந்த கடன் வாங்கப்பட்ட மனசாட்சி உனக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை, அது உனக்கு ஒரு சுமையே. நீ முதல் பள்ளத்தாக்கை கடந்தபின் உனது சொந்த மனசாட்சி எழும். இப்போது உனக்கு எது தவறு என்பது மிக நன்றாகத் தெரியும், ஆதலால் சரியானதை மட்டுமே செய்ய முடியும். இதுதான் சாக்ரடீஸ் கூறிய அறிவு தான் நற்குணம்

இப்போது இந்த நினைத்துவருந்தும் பள்ளத்தாக்கின் எதிர்மறை என்ன என்பதை பார்ப்போம்....... கடந்த காலத்தில் செய்த தவறுகளை எண்ணி மிகவும் குற்ற உணர்ச்சி கொள்வாய். இந்த தவறு செய்து விட்டோம், அந்த தவறு செய்து விட்டோம், மேலும் நீ ஆயிரக்கணக்கான தவறுகளை செய்து விட்டாய். இங்கே நீ வெகு காலம் சுயஉணர்வின்றி இருந்து விட்டாய் ஆதலால் செய்த தவறுகளை கணக்கெடுக்க ஆரம்பித்தால் அது அதீதமான அளவு வரும். அதனால் குற்றஉணர்வு மிகக் கொண்டு வளர்வதற்கு பதிலாக நீ மிக ஆழ்ந்த இருளில் வீழ்ந்து விடுவாய்.
குற்ற உணர்ச்சி கொண்டால் அதனால் நீ இயல்பிழந்து விடுவாய். கடந்த காலம் மிக சுமையாக மாறி நீ இரண்டாவது பள்ளத்தாக்கிலேயே இருந்து விடுவாய். உன்னால் அதை கடக்க முடியாது போய்விடும். கடந்த காலம் முக்கியமாகி விட்டால் நீ தொடர்ந்து அழுது அரற்றி, தவறு செய்து விட்டேனே என்று நெஞ்சிலடித்துக் கொண்டு அழுவதை தவிர வேறெதுவும் செய்ய இயலாது.

இதன் நேர்மறையான செயல் என்னவென்றால் நீ எதிர்காலத்தைத்தான் பார்க்க வேண்டும். கடந்த காலத்தை அல்ல. நீ தவறு செய்து விட்டாய்தான் ஆனால் நீ இதுவரை சுயஉணர்வின்றி இருந்து விட்டாய் அதனால் தவறு நிகழ்ந்து விட்டது ஆதலால் குற்றஉணர்வு கொள்ள வேண்டிய அவசியமில்லை. சுயஉணர்வின்றி இருக்கும்போது எப்படி ஒருவர் சரியானதை தேர்ந்தெடுத்து செய்ய முடியும் நீ அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் – உனது கடந்த காலம் முழுவதும் தவறானது – ஆனால் அது உன் நெஞ்சில் சுமையாகக் கூடாது. இதை குறித்துக் கொள். இதை குறித்து கொள்வது நீ திரும்பவும் அதை செய்யாமல் இருக்க உதவும். அது முடிந்து விட்ட ஒரு விஷயம். நீ பலரை பல வகைகளிலும் காயப்படுத்தி இருப்பதை எண்ணி இப்போது வருத்தப்பட்டாலும் கூடவே சந்தோஷமாகவும் உணரலாம், ஏனெனில் இனி அதுபோல நடக்கப்போவதில்லை. நீ குற்றஉணர்விலிருந்தும் கடந்தகாலத்திலிருந்தும் விடுதலையடைந்துவிட்டாய். நீ அதையே நினைத்துக் கொண்டிருக்கவேண்டியதில்லை, நீ எதிர்காலத்தைப் பற்றி, வருங்காலத்தைப்பற்றி அக்கறை கொள்ளலாம்.

இப்போது உன்னிடம் உனது சொந்த மனசாட்சி இருக்கிறது, இப்போது வருங்காலம் முழுமையாக வேறுபட்டதாக, குணத்தில் மாறுபட்டதாக, முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கப்போகிறது. நீ அந்த சாகசத்தால் மெய்சிலிர்க்கப்போகிறாய். இப்போது உனக்கே எது சரி, எது தவறென்ற சொந்த புரிதல் இருப்பதால் தவறேதும் நிகழ வாய்ப்பே இல்லை. நீ அதை கட்டுப்படுத்துவாய் என்பதல்ல, உன்னுடைய சொந்த மனசாட்சி எழும்போது அங்கே கட்டுப்பாடோ, நெறிமுறையோ தேவைப்படாது. சரியானது இயல்பாகிவிடும். சரியானது நிகழ்ந்துவிடும். அப்போது சரியானதுதான் இயல்பானது, இயல்பானதுதான் சரியானது.

உண்மையில் ஒருமுறை உனக்கு புரிதல் எழுந்து விட்டால் தவறானதை செய்ய நீ மிகமுயற்சி எடுக்கவேண்டி வரும். அப்போதுகூட அது முழு வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான்.

உன்னுடைய சொந்த புரிதல் அல்லாமல் சரியானதை செய்ய நீ முழுமுயற்சி எடுத்தாலும் அது வெற்றி பெறாது. அதனால் இப்போது மிகவும் சிலிர்ப்போடு இருப்பாய். ஒருவர் கடந்தகாலத்தை பற்றி மிகவும் வருத்தப்பட்டாலும் அதை சுமக்க வேண்டியதில்லை. ஏனெனில் கடந்தகாலம் முடிந்த ஒன்று. இதுதான் அதன் நேர்மறை. – நிலைமாற்றம் நிகழ்ந்துவிட்டதை ஒருவர் உணர வேண்டும். கடவுள் அருள் கிடைத்து விட்டதை, உனது சொந்த புரிதல் உனக்கு நிகழ்ந்து விட்டதை உணர்ந்து கொள்ள வேண்டும். இப்போது உன்னுடைய வாழ்க்கை ஒரு புதிய பரிமாணத்தில், ஒரு புதிய பாதையில் செல்லும்.

இங்குதான் உண்மையான நெறிமுறை, நற்குணம், சீலம் பிறக்கிறது.
Source - The Secret of Secrets Vol 2 che #1

தனிமை பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓஷோவின் பதில் முதல்
பகுதி இம்மாதம் வருகிறது. அடுத்த மாதமும் தொடரும்.

ஏன் இன்றைய நாகரீக மனிதன் மிகவும் தனிமையை உணர்கிறான்?

தம்மோ,

மனிதன் எப்போதும் தனிமையை உணர்கிறான். ஏனெனில் மனிதன் அடிப்படையிலேயே தனியானவன். நாம் தனியாகவேதான் பிறக்கிறோம், தனியாகவேதான் இறக்கிறோம். இதற்கு இடையில் கூடசேர்ந்து இருப்பதுபோல பாசாங்கு செய்து கொள்கிறோம். தனிமை சேதாரப்படாமல் அப்படியே இருக்கிறது. அது அப்படியே அடிப்படை நீரோட்டமாக இருக்கிறது. அது அடியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மனிதன் எப்போதுமே தனியானவன், ஆனால் இன்றைய நாகரீக மனிதன் அதை அதிகமாக உணர்வதற்கு காரணம் இருக்கிறது. முதல்முறையாக மனிதன் தன்னைப் பற்றி நினைத்துப்பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது. கடந்த காலத்தில் உணவுக்காக போராடுவதற்கே நேரம் சரியாக இருந்தது. காலையில் எழுந்தால் இரவு படுக்கப்போகும்வரை உழைத்தால்கூட அது அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் போதாமல் இருந்தது.
இன்றும் கிழக்கித்திய நாடுகளில் அதுதான் நிலைமையாக இருக்கிறது. இந்திய கிராமத்தில் வாழும் இன்றைய மனிதன் தனியாக உணர்வதில்லை. எதையும் உணர்வதற்கு அவனுக்கு நேரம் கிடையாது. அவன் பசியை உணர்கிறான், தனிமையை உணர்வதில்லை. அவனுக்கு தங்குமிடம், வீடு வேண்டும். இந்த விஷயங்கள் – தனிமையை – அவனுக்கு கிடைக்காது. சமுதாயம் சிறிதளவாவது வளமடையும்போதுதான் இந்த உணர்வுகள் உணரப்படுகின்றன.

மக்கள் நன்றாக சாப்பிட்டு, நன்றாக இருந்து, நல்ல இடத்தில் தூங்கி, நல்ல வேலையில் இருக்கும்போது, வாழ்வின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகிவிட்டபின் வாழ்க்கையின் உண்மையான பிரச்னைகள் எழுகின்றன. அப்போது ஒருவனுக்கு நான் தனியானவன், கூட்டத்தில் இருக்கும்போதுகூட நான் தனியானவன் என்பது உறைக்கிறது. அது உயரிய தேவை, தளம் உயர்ந்த தேவை.

முதலில் உடல்தேவை வருகிறது. உடலின் தேவை பூர்த்தியாகாவிட்டால் உனக்கு மனத்தேவை கிடையாது. உடல்தேவை பூர்த்தியான பின்பே மனத்தேவை எழுகிறது. அது அடுத்த கட்டத்திறகானது. இசையைப் பற்றி, கவிதையை, ஓவியத்தை பற்றி எண்ண ஆரம்பிக்கிறான். கலையைப்பற்றி, அழகுணர்ச்சியைப்பற்றி எண்ணுகிறான். இவை உயரிய தேவைகள். ஷேக்ஸ்பியரைப்பற்றி, மில்டன் பற்றி, காளிதாஸ் பற்றி, ரவீந்திரநாத் தாகூர் பற்றி, கலீல் கிப்ரான் பற்றி, நினைக்கிறான். வாக்நர், பீதோவன், லீநர்டோ, வான்காக், பிகாஸோ..........இவையெல்லாம் உயரிய தேவைகள்.
பசியுள்ள மனிதனுக்கு பீதோவனைப் புரியாது. அந்த இசை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அது அவனது பசியை போக்காது. இசையை கேட்பதற்கு பதிலாக அந்த இசையமைப்பவரை கொன்றுவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு அவனது பசி இருக்கும்.

அவனுக்கு கலைகளின் அழகைப்பற்றி கவலை கிடையாது, அதற்கு பதிலாக அவன் காரல் மார்கஸ் பற்றியும் கம்யூனிஸத்தைப்பற்றியும் அக்கறை காட்டுவான். உடல்தேவை பூர்த்தியானபின்பே மனத்தேவைகள் எழும்.
எனக்கு பல கடிதங்கள் சோவியத் ரஷ்யாவிலிருந்து வருகின்றன என்று அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். அவர்களால் எனக்கு நேரிடையாக கடிதம் எழுத முடியாது. எழுதினால் அவை வந்து சேராது. முதலில் ரஷ்ய அரசாங்கத்தால், பின்பு இந்திய அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்படும். இந்திய அரசாங்கம் மட்டும்தான் என்றால் அங்கே வாய்ப்பு இருக்கலாம், ஆனால் ரஷ்ய அரசாங்கம்..... அவர்கள் மிகவும் கொள்கைபிடிப்புள்ளவர்கள். அதனால் இந்த கடிதங்கள் விருந்தாளிகளிடம், உல்லாசபயணம் வருபவர்களிடம் கொடுக்கப்பட்டு, லண்டனிலோ, பாரீஸிலோ, பெர்லினிலோ போஸ்ட் செய்யப்பட்டு எனக்கு வந்து சேருகின்றன.

பலர் இங்கே வருவதற்கு விருப்பம் தெரிவித்து எழுதி இருக்கின்றனர், ஆனால் அது சாத்தியமில்லாதது. எனது புத்தகங்கள் மறைமுகமாக படிக்கப்படுகின்றன. அவை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு என கொடுக்கப்பட்டு படிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு கம்யூனிஸ நாட்டில் நீ எனது புத்தகத்தை நேரிடையாக எடுத்துக் கொண்டு செல்லமுடியாது.
உடல்ரீதியான தேவைகள் பூர்த்தியாகி, மனத்தேவைகள் எழும் கட்டத்திற்கு ரஷ்யா வந்து கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தேவைகள் மேலும் உயரிய தரமானவை. மனத்தேவைகளும் பூர்த்தியான பின் – சிறந்த இசையை கேட்டபின், சிறந்த ஓவியத்தை பார்த்த பின், சிறப்பான கவிதையை படித்தபின் – என்ன செய்வது? மிக விரைவில் இந்த விஷயங்கள் விளையாட்டாக போய் விடும், ஆனால் சிறப்பான விளையாட்டாக இருந்தாலும் கூட விளையாட்டு விளையாட்டுதானே.

பின் இறுதியானது உனது கதவை தட்ட ஆரம்பிக்கும்போது, இறுதியானது உனது கதவை தட்டும்போது நீ தனிமையை உணர்வாய். இந்த முழு பிரபஞ்சத்திலும் தனிமையாக உணர்வாய். அதுதான் தியானத்தின் ஆரம்பம். நீ தனிமையை உணர்ந்தாலும் அந்த தனிமையை வரமாக, ஆழ்ந்து, ஈடுபாட்டுடன் உணர்ந்தால், பின் நீ தியானம் செய்யலாம்.

தனிமையிலிருந்து தப்பி ஓடுவதற்கு பதிலாக அதில் முழ்கி, அது என்னவென்று நேருக்கு நேராக பார்ப்பதற்கான, அதனுடன் இயைந்து செல்வதற்கான, ஒரே வழி தியானம்தான். பின் நீ வியப்படைவாய். நீ உனது தனிமையின் உள்ளே சென்றால் அதன் மையத்தில் இருப்பது தனிமை அல்ல முற்றிலும் வேறுபட்ட விஷயமாக உள்ள ஏகாந்தம் – ஒருமை – என்பதை அறியும்போது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

வெளிப்புற சூழ்நிலை தனியானதாகவும் மையம் ஒருமையானதாகவும் அமைந்திருக்கிறது. வெளிபுறம் தனிமையாகவும் உள்மையம் ஏகாந்தமாகவும் உள்ளது. ஒரு முறை உனக்கு உனது அற்புதமான ஒருமை தெரிந்து விட்டால் பின் முற்றிலும் வித்தியாசமான ஆளாக மாறிவிடுவாய். நீ ஒருபோதும் தனியாக உணர மாட்டாய். தனியாக இருக்க நேரிடும் மலை, பாலைவனம் போன்ற இடங்களில்கூட நீ தனியாக உணர மாட்டாய். ஏனெனில் உன் ஒருமையில் கடவுள் உன்னுள் இருப்பதை நீ அறிந்து விட்டாய். உன் ஒருமையில் நீ கடவுளுடன் ஆழ்ந்த தொடர்பில் இருப்பது தெரிந்த பின் தனிமையில் இருப்பதைப்பற்றி யார் கவலைப் பட போகிறார்கள், கூட யாராவது இருந்தால் என்ன? யாரும் இல்லாவிட்டால் என்ன? நீ உள்ளே நிறைந்திருக்கிறாய், உள்ளே செல்வந்தனாக இருக்கிறாய்.

இப்போது கூட்டத்தில்கூட நீ தனிமையில் இருக்கிறாய். நான் சொல்கிறேன், நீ உனது ஒருமையை உணர்ந்து விட்டால் உனது தனிமையில்கூட நீ தனியாக உணர மாட்டாய்.

ஆனால் இன்றைய நாகரீக மனிதன் சிரமப்படுகிறான்.......

மக்கள் உண்மையாகவே தனியாக இருக்கிறார்கள். இதுவரை மனிதன் தனியாக உணர்ந்ததில்லை, ஏனெனில் அவனால் அவனது அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள முடிந்ததில்லை. முதன்முதலாக மேற்கத்திய நாடுகளில் மனிதனால் அவனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. அதனால் அடுத்தகட்ட தேவைகள் மேலே வருகின்றன. இது நல்ல விஷயம்தான். இது சாபம் போல தோன்றுகிறது, ஆனால் அது அப்படியல்ல, மாறுவேடத்தில் வரும் வரம்.
மேலை நாடுகள் கீழை நாடுகளைப்போல மாறும் காலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வேதனை என்னவென்றால் கீழை நாடுகள் மேலை நாடுகள் போல மாறுவதுதான். மனிதன் மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறான். மேலை நாடுகள் கீழை நாடுகளைப்போல மாறும் போது கீழை நாடுகள் மேலை நாடுகளைப்போல மாறி விட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இப்படித்தான் சக்கரம் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் அதை இங்கேயே பார்க்கலாம். இங்கே இந்தியர்கள் குறைவாக இருப்பதை பார்க்கலாம். ஏனெனில் இது அவர்களின் தேவை அல்ல. நான் இங்கே பகிர்ந்து கொள்ளும் விஷயம் அவர்களுக்கானது அல்ல. அதற்கான ஆசை இன்னும் அவர்களுக்கு வரவில்லை. அவர்கள் வந்தாலும்கூட அவர்கள் கேட்பது தியானத்தைபற்றியோ, சன்னியாசைபற்றியோ, நேசத்தைபற்றியோ அல்ல. கேட்பதே இல்லை.

எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் நீங்கள் ஏன் சில மருத்துவமனைகளை, சில பள்ளிகளை திறந்து நடத்தக் கூடாது நீங்கள் ஏன் உங்களது சன்னியாசின்களுக்கு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை போதிக்ககூடாது என்று கேட்டிருந்தது. ஏழைகள் உதவி பெற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் ஏழ்மையை ஒழித்து விட முடியாது. அது மட்டும் நிச்சியம். வாழ்க்கையை பற்றிய ஒரு புதிய பார்வையை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே ஏழ்மையை ஓழிக்க முடியும். அவர்களது கருத்துகள் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர், வாழ்க்கையை பற்றிய அவர்களது கண்ணோட்டம் அவர்களை ஏழையாக்குவதால் அவர்கள் ஏழையாக இருக்கின்றனர். அவர்கள் ஏழையாக இருப்பது அவர்களால்தான். அவர்களுக்கு கருணை தேவையில்லை, அவர்களுக்கு தேவை கல்விதான். அவர்களுக்கு சேவை தேவையில்லை, அவர்கள் விழிக்க வைக்கப்பட வேண்டும். ஆனால் யாரும் தங்களது கனவிலிருந்தும் தூக்கத்திலிருந்தும் வெளி வர விரும்புவதில்லை. எனவேதான் அவர்களுக்கு என்மேல் ஆத்திரம் வருகிறது.

மருத்துவமனைகள் இருக்கின்றன, மேலும் சிலது வரலாம், பள்ளிகள் இருக்கின்றன, மேலும் சிலது திறக்கலாம், ஆனால் அது அவர்களுக்கு உதவப் போவதில்லை. இது கடலில் சில கரண்டி வண்ணங்களை கரைப்பது போன்றது, இதனால் கடலின் நிறம் மாறப்போவதில்லை.
நாம் முழு அடிப்படையையே மாற்ற வேண்டும். ஏன் இந்தியா பல நூற்றாண்டுகளாக ஏழ்மையிலேயே இருக்கிறது காரணம் மிகவும் ஆழமானதாக இருக்க வேண்டும். காரணம் இந்திய மனம் வாழ்வுக்கு எதிரானது. இது பிளவுபட்டிருக்கிறது, இந்த உலகம் அந்த உலகம் என்று பிரிந்திருக்கிறது. பொருளுலகத்திறக்கு எதிரானது இந்திய மனம் இதுதான் காரணம். நீ பொருளுலகத்திற்கு எதிராக இருந்தால் இயல்பாகவே நீ ஏழையாகத்தான் இருப்பாய். அது உனது முடிவு. உனது விதியை நீயேதான் முடிவு செய்கிறாய்.

உண்மையான ஆன்மீகம் விஞ்ஞான ரீதியான பொருளுலகத்தை சார்ந்தது. பொருளும் தன்னுணர்வும் இரண்டு விஷயங்கள் அல்ல, உடலும் தன்னுணர்வும் வேறுபட்டது அல்ல, அவை ஒன்றேதான். இந்த உலகம் விரும்பப்பட வேண்டும், பின்பு இந்த உலகம் தன்னை வெளிபடுத்தும், தன் ரகசியங்களை உனக்கு தெரியப்படுத்தும்.

மேலை நாடுகள் ஒரு தவறு செய்தன, அதனால் அங்கே ஆன்மீகம் இல்லை, பொருளுலகம் மட்டுமே இருக்கிறது, அதனால் அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தியாகி விட்டன, ஆனால் அவர்களது உயரிய தேவைகள் அவர்களை தொந்தரவு செய்கின்றன, அது அவர்களை தற்கொலை வரை செலுத்துகிறது அல்லது பைத்தியம் பிடிகிறது. கீழை நாடுகள் வேறொரு தவறு செய்கின்றன. இங்கே பொருளுலகம் இல்லாமல் ஆன்மீகம் மட்டுமே இருக்கிறது. அதனால் இது ஒரு ஆவி போலாகி விட்டது, உடல் இன்றி அலையும் ஒரு ஆவி போலாகி விட்டது. மேற்கு உயிரின்றி உடல் மட்டுமே உள்ள ஒரு எலும்புக்கூடு போல, கிழக்கு உடல் இன்றி அலையும் ஆவி போல இருக்கின்றன.

என்னுடைய முயற்சி என்னவென்றால் கிழக்கையும் மேற்கையும் அருகருகே கொண்டு வந்து இணைத்தால் அப்போது எல்லோரிடமும் உடலும் உயிரும் இருக்கும். ஆன்மீகமும் பொருளுலகமும் ஒரே வாழ்வின் இரண்டு பார்வைகள். அப்போது ஏழ்மை மறைந்து விடும். இந்த உலகம் தேவையான அளவு வளமாகவே உள்ளது, மனிதனின் புத்திசாலித்தனம் உள்ளது – நாம் இதை இன்னும் அதிக அளவு வளப்படுத்தலாம்.

ஆனால் நீங்கள் இங்கே அதிக அளவு இந்தியர்களை பார்க்க முடியாது. சிலரே இருப்பர். அடிப்படை தேவைகள் பூர்த்தியானாலும்கூட திருப்தியாக இருக்க முடியாது என்பதை பார்க்கும் அளவு புத்திசாலிகளாக இருக்கும் சிலரே இங்கு இருப்பர். இவர்கள் கிழக்கத்தியநாடுகளில் பிறந்திருந்தாலும்கூட முன்னேற்றமடைந்தவர்கள், நிகழ்கால மனம் படைத்தவர்கள். இவர்கள் மேற்கத்திய நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்கள். இந்தியா செல்வ செழிப்படைந்தாலும்கூட இதுதான் நடக்கப் போகிறது. மேற்கத்திய நாடுகளில் மகிழ்ச்சி இல்லை, இந்தியா வளமடைந்தாலும்கூட இங்கும் மகிழ்ச்சி இருக்காது. அதனால் மகிழ்ச்சி வேறு பரிமாணங்களில் தேடப்பட வேண்டும்.

ஒருமையை அடையும்வரை நீ தனிமையை சந்திக்க வேண்டும். ஒருமையின் முதல் தரிசனம் சடோரி. இரண்டாவது தரிசனம் இரண்டாவது சடோரி. நீ உனது ஒருமையினுள் நிலைப்பட வேண்டும், ஆழமாக வேரூன்ற வேண்டும். மூன்றாவது சடோரி, முடிவான சடோரி இந்தியாவில் நாங்கள் அதை சமாதி என்றழைப்போம். அது நீ உனது ஒருமையிலிருந்து வேறுபட்டு இல்லாத நிலை. அதுதான் நீ. நீதான் உனது ஒருமை.

பின் ஒருவர் அருவி போல பொங்கி பெருக வேண்டும். அந்த ஒருமையிலிருந்து நேசத்தின் மணம் பெருகும், அந்த ஒருமையிலிருந்து படைப்புத்தன்மை பெருகும், - ஏனெனில் இந்த ஒருமையிலிருந்து இறைமைதன்மை பொங்கி வழியும். நீ ஒரு வெற்று மூங்கிலாகிவிடுவாய்...... கடவுள் உன் மூலம் இசைக்க ஆரம்பித்து விடுவார். ஆனால் பாடல் எப்போதும் அவருடையதுதான்.

Source : The Fish in The Sea is not Thirsty Che # 6 Qus : # 6



பிடிப்பின் வலை - ஓஷோவின் கதை - 32

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார்.

“இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று புரியவில்லை அந்த தலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார். இதில் ஏதோ ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர் இறந்து போய் விட்டார். ஏன் நீங்கள் பூனைகளுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று நான் கேட்டிருப்பேன். உங்களது வாழ்க்கை முழுவதும்.... உங்களது ஒழுக்கம் வழிமுறை நெறிமுறை விளக்கம் வரையறை அனைத்தும் இதற்குத்தானா? - பூனையை வீட்டினுள் அனுமதிக்காதே.

ஒரு வயதான மனிதர் கூறினார், “எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்தன”.

ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை. உங்களுக்கு அது உள்ளாடை ஆனால் அவருக்கு அது மட்டுமே ஆடை.

அவரிடம் இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்ததில் பிரச்னை என்னவென்றால் அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை என்னுடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார்.

ஒருவர், “அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்.” என்றார்.

அந்த குரு, “சரி, இது ஒரு எளிய வழிதான்.” என்று ஒத்துக் கொண்டார்.

பூனை வந்தது. அது அதன் வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள் தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக் கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது. பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை முடித்து விட்டது. ‘நான் உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது’ என்று சொல்லாமல் சொல்லியது.

அந்த குரு திரும்பவும் வந்து, “இப்போது என்ன செய்வது அந்த பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னை பார்க்கிறது. எனக்கு உணவு கொடு இல்லைவிடில் நான் போகிறேன். நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்து விடும். என்பது போல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன் கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். “
என்று கேட்டார்.

அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான்.

அவர் பசுவை எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார்.

மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள் ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர்.

அதனால் அந்த குரு, விதை விதைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது. ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்கு சென்றார்.

“பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார்.

மக்கள், “இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும் தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள் உணவை, எல்லாவற்றையும் – எல்லாவற்றையும் என்றால் பூனை. எலி ...... அவள் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்.”

ஆனால்! என்ற துறவி நான் ஒரு துறவி. என்றார்.

அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள். நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது.” என்றனர்.

அவர், “அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக இல்லாவிடில் சரி. அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை. நான் தான் திருமணம் செய்யவில்லையே. நான் அந்த பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்த கிராமம் எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான். நான் அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக எதுவும் செய்யவேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும் செய்யவேண்டியதில்லை.” என்று ஒத்துக் கொண்டார்.

அவர் அந்த பெண்ணுடன் பேசினார். அவள், எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில் இருக்கிறீர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில் இது எனக்கு சரிதான்.” என்றாள்.

அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு சிசுரிஷை செய்தாள். மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். ஒரு ஆண் ஆண்தான், ஒரு பெண் பெண்தான். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை உணர்ந்தனர். ஒரு குளிர்கால இரவில் இங்கே குளிராக இருக்கிறது நாம் ஏன் நெருங்கி இருக்கக் கூடாது என மற்றவர் கேட்கவேண்டும் என இருவருமே விரும்பினர்.

இறுதியில் அந்த பெண், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது என்று கூறினாள்.
அந்த துறவியும் இங்கேயும் குளிராக இருக்கிறது என்றார்.

அப்போது அந்த பெண், உங்களுக்கு தைரியம் இல்லைபோல தோன்றுகிறதே என்றாள்.

அவர், அதுசரிதான். நீ இங்கே வா, எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு துறவி, நீ ஒரு அனுபவமுள்ள பெண்மணி. நீ இங்கே வா. இருவரும் சேர்ந்திருந்தால் கதகதப்பாக இருக்கும். என்றார்.

கதகதப்பாகத்தானே இருக்கும்.

இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார்.

வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம், “அதிலிருந்து உங்களது பாதையில் ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது வழக்கமாகிப் போனது. பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும் – வாழ்க்கை மிகவும் விசித்திரமானது”. என்றார்.

Source : From Personality To Individuality Che # 5

No comments: