Monday, April 25, 2011

மலர் 3 இணைய இதழ் 6 11 ஜனவரி 2011

மலர் 3 இணைய இதழ் 6 11 ஜனவரி 2011

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்தில் சென்ற மாதம், அதாவது டிசம்பர் மாதம் 25 ந் தேதி மாலை சன்னியாஸ் கொண்டாட்டமும் அதை தொடர்ந்து 26ந் தேதி முழுவதும் தியானங்களும் நடந்தேறின.
இந்த மாதம் ஜனவரி 14, 15, 16 மூன்று நாட்களும் தன்னை அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு ஒரு வாய்ப்பு. தியானங்கள், தியானங்கள், தியானங்கள்தான், தியானம் மட்டும்தான். விவரம் அறிய உங்களுக்கே தெரியும்.
திருப்பூரில் உள்ள சாஸ்வதம் தியானமையத்தில் (கிளை) விரும்பும் அன்பர்கள் தியானம் செய்யலாம்.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

ஞானம் எப்படி அடைவது?
தியானமில்லா ஞானம் ஏன் பெறக் கூடாது?
இவ்வுலகமே வெறுத்துவிட்டது, எனக்கு ஞானம் மட்டுமே வேண்டும்.!
தியான யுக்திகளைச் செய்வதே முழு நேர வேலையாக முயற்சிக்க விரும்புகிறேன்.!
ஞானம் அடைந்தால் அப்படி இருக்குமா? இப்படி இருக்குமா? ஞானமடைந்தவரைப் பார்க்க வேண்டும்.!
இப்படி பலர் வருகிறார்கள்.
இவர்களின் பிரச்னைதான் என்ன? ஏன் இவர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

இருக்கும் வாழ்வை, இக்கணத்தை, கிடைத்த வாழ்வை, அனுபவிக்க முடியாமல் சிறுமைப்பட்டு கிடப்பதே காரணம். தன்னை உயர்த்திக் கொள்ள வழி தேடும் இவர்களுக்கு இந்த ஞானப்பிரச்னைக்குள் நுழைந்து கொள்வது சாதகமாகவும், பாதுகாப்பாகவும் மதிப்பாகவும் போய்விடுகிறது.

ஞானம் யாருக்கு வேண்டும், மக்களை ஒவ்வொருவராக உண்மையைச் சொல்லச் சொல்லிக் கேளுங்கள். துன்பமும் பயமும் வரும்போது தப்பிக்கவே ஞானம் தேவைப்படுகிறது. நிராதரவான நிலையிலேயே ஆறுதலாக ஞானத்தை தேடுகின்றனர். பிறகு அதுவே ஒரு சமூக அந்தஸ்து கொடுப்பதைப் பிடித்துக் கொண்டு நடித்துக் கொண்டிருப்பவர்களே பலர். வேறு நல்ல பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு வந்துவிட்டால் ஞானம் மறந்து போகும், மறைந்து போகும். வேலையிருக்கிறது அப்புறம் பார்க்கலாம் என்று ஆகி விடும்.
இல்லாவிட்டால் ஞானத்தைத் தேடுபவதாக பேர் பண்ணிக் கொண்டு ஒரு பாதுகாப்பான பஜனைக் கூட்டத்தில் ஐக்கியமாவதில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கிறது.

இல்லையென்றால் டென்ஷனும், உடல் உபாதையும் தலைவலியும் துரத்தும்போது தப்பித்துக் கொள்ள பக்கவிளைவு இல்லாத உடனடி நிவாரணத்துக்காக ஞான கூடாரம் பக்கம் போக விரும்புகின்றனர்.

இது சரிதான் என்றே நான் சொல்கிறேன். ஏனெனில் முதலில் ஞானம் என்றால் என்ன என்று தெரியாதபோது அதை எதற்கு தேடி அலைவதாக பாவ்லா பண்ண வேண்டும். ஏனெனில் பாவ்லா மட்டும்தான் நம்மால் பண்ணமுடியும். தெரியாததை எப்படி உண்மையாகத் தேட முடியும்?

அப்படியானால் நாம் ஏன் நேர்மையாய் இருக்கக் கூடாது ? நேர்மையாய் நம்முடைய பிரச்னைகளை சிந்திக்கவும், சந்திக்கவும் கூடாது ? ஏன் ஞானத்தை, ஆன்மீகம் என்ற கற்பனைக் குப்பையை உள்ளே இறக்க வேண்டும் ?

ஓஷோவின் வழி ஞானத்தை அளிக்கிறேன் என்பதல்ல.
நம்மை உண்மையாக நாமே பார்ப்பது, அலசுவது, ஆராய்வது, தெளிவு பெறுவது, அதற்கு விஞ்ஞான பூர்வமான உடல், மன இயல்களைப் பயன்படுத்தி செயல்திட்டம் வகுப்பது.

நம்முடைய பிரச்னை, வாழ்வை அனுபவிக்க முடியவில்லை. மகிழ்ச்சியாக செயல்பட முடியவில்லை, வாழ முடியவில்லை, அமைதி இல்லை, விளையாட்டுத்தன்மை இல்லை. பிறக்கும்போது இருந்த குழந்தைத் தனமும், கொஞ்சு முகமும், குதூகலமும் மறைந்து விட்டது. சாவுக்கு பயம், புதுமைக்கு பயம், மாறுதலுக்கு பயம், சோம்பேறித் தனமும், தூக்கமும், கனவுமே சுகமாகத் தோன்றுவதால் வாழ்க்கையை சந்திக்க சிரமமாய் இருக்கிறது. இப்படித்தான் இருக்கிறது நிலைமை.

இதில் ஞானமில்லையே என்பது எங்கு இருக்கிறது.? செல்வமில்லையே என்பதே மனிதன் பிரச்னையாக இருக்கிறது. செல்வமிருப்பவனுக்கு அதனால் கிடைக்கும் சுகங்கள் போதை போலவே இருக்கின்றன. சிறிது நேரத்தில் இறங்கி விடுகின்றன என்ற பிரச்னை.

ஆகவே ஓஷோ சொல்வது நாம் வாழ்க்கையிடம் தவறான அணுகுமுறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதே. பயமும் பதட்டமும் பேராசையும் பாதுகாப்பும் நமது சமூகத்தின் அடித்தளங்களாக இருந்து வந்திருக்கின்றன என்பதே. சுரண்டலும் சுயலாபமும் கொண்ட அரசன் போன்ற ஆதிக்க நிலையில் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட கொள்கைகள், போட்பாடுகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழக்கங்கள், நாகரீகங்கள் கொண்டதாகவே இதுவரை நமது சமூகம் இருந்து வந்துள்ளது. இருந்து கொண்டிருக்கிறது என்பதே.

ஆகவே அறியாத ஞானத்திற்கு ஆசைப்பட சொல்வதில்லை ஓஷோ.
கிடைத்துள்ள வாழ்வை அனுபவிக்கும் கொண்டாடும் ஆனந்தப்படும் வழி சொல்பவர் ஓஷோ.

இந்தக்கணம் மட்டுமே இருப்பது என்ற நிசர்சனத்தில் நிலை கொண்ட வாழ்வை வலியுறுத்துபவர் ஓஷோ.

எனவே ஓஷோ இன்றைய மனிதனின் நோய்களை ஆராய்ந்து மருந்தாக தியான யுக்திகளைக் கொடுத்து அவன் இக்கணத்தை இனிமையாய் வாழ வழி செய்பவர். வறட்டு வேதாந்தம் பேசுபவரல்ல. கதா காலேட்சேபம் செய்பவரல்ல.

ஆகவே நண்பர்களே
எப்படி வாழ்வது என்று கேளுங்கள். ஆழமாக, ஆனந்தமாக, கொண்டாட்டமாக, அழகாக, எப்படி வாழ்வது என்று தேடுங்கள்.

அதுதானே மனிதனின் தேடல்.

அதற்கு முதல் படியாய் உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை அனுபவியுங்கள். கொண்டாடுங்கள். உங்களை நீங்களாக உங்கள் நிறை குறைகளோடு முழுதாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்காக பெருமைப் படுங்கள். அந்த சுய மரியாதையை எதற்காகவும் இழக்காதீர்கள்.

ஓஷோவின் ஏற்றுக் கொள்ளல் அடுத்தவர்களை, அமுக்கும் அதிகாரங்களை, கட்டளைகளை, ஏற்றுக் கொண்டு அடிமையாய், போலியாயம், பாசாங்காய் வாழ்வதல்ல. தன்னை ஏற்றுக் கொள்ளலே. தன் தனித்தன்மையை இழக்காமல் இருத்தலே.

ஆனால் இது முதல்படிதான். இரண்டாம்படி ஏற்றுக் கொண்ட உங்களை குறித்து உணர்வோடு இருங்கள். தன்னுணர்வு கொள்ளுங்கள். இந்த தன்னுணர்வு கொள்ளல் ஏற்றுக் கொண்ட பிறகே, முதல்படிக்குப் பிறகே சாத்தியம். தன்னுணர்வோடு வாழ்தல்தான் வாழ்க்கை. உணர்வோடு இருப்பதுதான் நாம் இருக்கிறோம் என்பதன் பொருள். தன்னுணர்வோடு வாழும்போதுதான் உங்களை நீங்கள் தூய்மையாக, நேர்மையாக, தூசும் மாசும் படியாமல் போற்றி வாழ முடியும். இல்லாவிட்டால் ஏற்றுக்கொண்ட உங்களில் அடுத்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட அழுக்குகளை, நம்பிக்கைகளை, கருத்துகளை களைந்தெறிய முடியாது. உங்களது உண்மையான உங்களை கண்டுபிடிக்கவும், அதன்பின் பேணி வளர்க்கவும் தண்ணுணர்வு அவசியம்.

இன்றைய தன்னுணர்வு அற்ற நிலை போதை நிலை. மத போதை, கூட்ட போதை, இன போதை, மொழி போதை, சினிமா, டிவி போதை இப்படி தன்னுணர்வு இல்லாமல் கற்பனைக்குள் கூட்டிச் செல்லும் எத்தனையோ போதைகள் சமூகத்தில் உள்ளன. இந்த போதைகளுக்கு முன்னால் ஒருவன் தானே தெரிந்து செய்து கொள்ளும் சிகரெட், மது, கஞ்சா போன்ற போதைகளின் தீமை மிகக் குறைவே.

அடுத்த மூன்றாவது படி நீங்கள் உங்களை அனுபவிக்க, குதூகலிக்க்க் கற்றுக் கொள்ள வேண்டும். ஒப்பிடலாலும், மற்றவர் கருத்தாலும் சிறுமையாய் உணர்வதிலிருந்து வெளிப்பட்டு சந்தோஷிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மந்தையாய் நம்மை அடிமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் குருக்களும் போதகர்களும், அதிகாரம் படைத்தவர்களும் பின்னியுள்ள சரியான மனிதன் என்ற சூழ்ச்சி வலைக் கருத்துகளில் அடங்கி விடாமல் அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி சொல்வதால் சமூக ஒழுங்கு சீர்கெட்டுப் போகும் என்று கூப்பாடு போடும் கும்பலொன்று எப்போதும் இருக்கிறது. அதற்கு பதில் இதோ. இந்த முழு பிரபஞ்சமும் எந்தப் போலிஸும் சமூக கட்டுதிட்டமும் இல்லாமல் மிகச் சரியாக இயங்கும்போது ஏன் தன்னுணர்வோடு வாழும் மனிதனால் ஒழுங்கு கெட்டுப் போகும் ? ஆகவே இது மறுபடியும் ஏமாற்று வேலையே,! ஆளை அடிமைப்படுத்தும் வேலையே.!

ஆகவே அனுபவி, சந்தோஷப்படு, குதூகலி, இக்கணத்தை, இந்த உடலை, இந்த பூமியை, கொண்டாடு. ஆடு, பாடு, ஆனந்தப்படு. இது உனது பிறப்புரிமை. உன்னை கொண்டாடப் பிறந்தவனே நீ. நீ அடிமைப்பட்டுப் போனதன் காரணம் தன்னுணர்வை தவறவிட்டது. ஆகவே தன்னுணர்வு கொண்டு, விழிப்புணர்வு கொண்டு உன்னை ஆடிப் பாடி உன் மண்ணை, காற்றை, நீரை அனுபவி. உடலை அனுபவி. ஆனந்தப்படு.
இதற்கு உதவிபுரிய, தன்னுணர்வு தரிசனம் பெறத்தான் தியான யுக்திகளை ஓஷோ உருவாக்கியிருக்கிறார். தியானம் என்பது மருந்து. அதுவே சாப்பாடு அல்ல. மருந்தை உண்டு தன்னுணர்வு பெற்று தன் வாழ்வை மலரும்படி வாழ வேண்டியது நம் பொறுப்பு. அப்படி நமது தனித்தன்மையை தன்னுணர்வோடு வாழ்ந்து கொண்டாடுவதே ஓஷோவின் வாழ்க்கை, வழி, இலக்கு, எல்லாமே. அடைய வேண்டிய இடமோ, இலக்கோ, உச்சியோ வாழ்வில் இல்லை என்பதே அவரின் செய்தி.

யாருக்கு வேண்டும் ஞானம் அப்படியொன்று இருந்தால் அது நாம் வாழும் வாழ்வின் முழுமையில், ஆனந்தத்தில் தானாய் பிறக்கும். அப்படி பிறப்பது வளர்ச்சி.
அப்படி அடைவதே உயர்நிலை. தேடி அடைவது அல்ல. மலர்ந்து மணப்பது அது.

ஆகவே நண்பர்களே
நம்மை ஏற்போம்
தன்னுணர்வு கொள்வோம்
நம்மைக் கொண்டாடுவோம்
அரட்டையில் ஆறுதல் தேடுவோர் தேடிக் கொண்டே இருக்கட்டும்.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

புது வேதம்

வேதம் கடவுளின் பாஷையாம்,
புதிரான சொற்களாம்,
பொருள் கடந்த மந்திரமாம்,
உன்னை உய்விக்குமாம்.
எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்து யாரும்
இதனால் உய்யவில்லை.

ஆனால்......என் வேதம்.......
வேறுபாடுகள் களையும்
வினாடியில் ஆளை மாற்றும்
வெறுப்பும் எதிர்ப்பும் ஓடிப் போகும்
கொண்டாட்டம் கொண்டு வரும்
குதூகலத்தில் ஆழ்வீர்கள்
தேடுவதை விட்டுவிட்டு
ஓடிச் சென்று கொடுப்பீர்கள்
வாழ்வில் பற்றாக்குறை நீங்க
வாழ்வு வந்து பற்றிக் கொள்ளும்.
அது அன்பு......
அன்பை உணருங்கள்,
அன்பைக் கொள்ளுங்கள்,
அதன்வழி ஆனந்தமாய் வாழுங்கள்.


மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

மலர்தல்
உனக்குள் மலர்கள் விரிந்து மணம் பரப்புவதை பார்த்த நாளில் இருந்துதான் ஆன்மீகம் என்ற ஒன்று இருப்பதை நீ அறிந்துகொள்கிறாய். மேலும் அது ஒரு இலக்கு அல்ல. மரங்கள் எந்த இலக்கை நோக்கியும் வளர்வதில்லை. மலர்ந்து மணம் பரப்புவதன் மூலம் இயற்கையோடு முழுமையாக கரைந்து கலந்து விடக் கூடிய அவற்றின் உள்ளே உள்ளார்ந்து மறைந்து உள்ள சக்தியை வெளிக் கொண்டு வரவே அவை வளர்கின்றன. பிரபஞ்சத்திற்கு எந்த இலக்கும் இல்லை. அது வெறுமனே மலர்ந்து மணம் பரப்புகிறது.

நீ உனது பொறுப்பை புரிந்து கொண்ட வினாடியில் நீ மலர ஆரம்பிக்கிறாய்.

உன்னுடைய ஆயிரம் இதழ் கொண்ட தாமரை விரிவதுதான் பேரானந்தம். அது உன் உள்ளார்ந்த இயல்பு.

உன்னைச் சுற்றிலும் மலரும் கண்ணுக்குத் தெரியாத மலர்கள் அனைத்தையும் சேகரி.

உன்னுடைய உடல் உனது வேர், உனது தன்னுணர்வு உனது மலர்ச்சி.

இறப்பு எங்கிருந்தோ வருவதல்ல, அது உன்னுள் வளர்வது. அது உனது மலர்ச்சி.

ஞானமடைதல் என்பது உனது தன்னுணர்வு மலர்தலே.

காலமற்ற தன்மை

மனம் குறுகியது. ஆகவே அது பிரிவுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. மனதின் திரையில் அப்போது தோன்றும் கணத்தை நிகழ்காலம் என்றும், மனதின் திரையை விட்டு போய்விட்ட கணம் கடந்த காலம் என்றும், இன்னும் வராதது எதிர்காலம் என்றும் மனம் பிரித்துவைத்துள்ளது. ஆனால் எதுவும் இயற்கையை விட்டு வெளியே போவதும் இல்லை. இயற்கைக்குள் உள்ளே வருவதும் இல்லை. காலம் என்பது தவறான கற்பனை. காலமற்ற தன்மையே உண்மை.

தன்ணுணர்வு காலத்தை கடந்தது, தன்ணுணர்வுக்கு காலம் கிடையாது.

மௌனம், மனமற்றநிலை, காலமற்ற தன்மை ஆகியன தியானத்தின் மூலமே நிகழும்.

தன்னுடைய இருப்பினுள் நகரும் மனிதன் காலத்தை கடந்து விடுகிறான்.

காலத்தை கடந்து உணர்வது இறப்பற்ற தன்மையை உணர்வதுதான்.

காலத்தை கடந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுகிறாய்.

தர்க்கம் நேரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அன்புக்கு கால நேரம் கிடையாது. அன்பு காலமற்ற தன்மையில் செயல்படுகிறது.


கொண்டாட்டம்
மலர் பூச்சொரிந்து கொட்டுகிறது. அது தொடர்ந்து சொரிகிறது. அவை நிறுத்துவதேயில்லை. இயற்கை இதுவரை நிகழ்ந்த புத்தர்களுக்கும் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் புத்தர்களுக்கும் இனி நிகழப் போகும் புத்தர்களுக்கும் சேர்த்து அளவற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இயற்கையை பொறுத்தவரை கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்றெல்லாம் கிடையாது. இப்போது என்பது மட்டுமே முடிவற்றது, இப்போது மட்டுமே இருக்கிறது.

உண்மையான மௌனம் உன்னுள் நிகழ்ந்துள்ளது என்பதற்கான சான்றே கொண்டாட்டம்தான்.

நீ என்ன செய்தாலும் அதை அனுபவித்து, கொண்டாடி, அன்போடு செய்தாலே படைப்பதாகும்.

உன்னுடைய வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாக இருந்தால் இறப்பு அதன் உச்சகட்ட கொண்டாட்டமாக இருக்கும்.

நீ நிறைவடைந்ததை, அடைந்ததை நடனமாடி கொண்டாடுவதே கருணையாகும்.

இந்த இயற்கை முழுமையும் ஒரு கொண்டாட்டமே, அதன் பாகமாகி விடு.


ஓஷோ வீடியோ

1. Osho : I always thought I loved somebody

2. Osho : Does Society have a responsibility to its disadvandaged people

3. Osho : There is no god but I have found something far more significient


தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

தீர்மானம்
எப்போது - இரவில்
காலம் - 10 நிமிடங்கள்.

முதல் படி : சுவாசத்தை உள்ளிழுக்கும் போது திரும்ப திரும்ப சொல்லுதல்………

அவசரப்படாமல், மெதுவாக, சுவாசத்தை உள்ளிழுத்து உனது நுரையீரல் முழுவதும் காற்று நிரம்பும்படி செய். அப்படி செய்யும்போதே, உனக்குள் நீ உன் வாழ்வில் செய்ய விரும்புவது எதுவோ அதை மெதுவாக திரும்ப திரும்ப சொல். உதாரணமாக ‘ நான் தியானஉணர்வு பெறுவேன்.’

இரண்டாவது படி : உன் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு திரும்ப திரும்ப சொல்லுதல்……..

உனது நுரையீரல் முழுவதும் நிறைந்தபின் உனது மூச்சை இழுத்து பிடித்துக் வைத்துக்கொண்டு, ‘நான் தியானஉணர்வு பெறுவேன்’ என்பதை திரும்ப திரும்ப சொல். நீ பதட்டமடைவாய், மூச்சை வெளிவிட துடிப்பாய், இருப்பினும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல்.

மூன்றாவது படி மூச்சை வெளிவிடும்போது திரும்ப திரும்ப சொல்லுதல்....

இப்போது மெதுவாக மூச்சை வெளிவிட்டபடி நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல். சுவாசம் முழுமையாக வெளியேறும்வரை மூச்சை வெளிவிட்டபடி நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல்.

நான்காவது படி மூச்சை முழுமையாக வெளியேற்றியபின் திரும்ப திரும்ப சொல்.

இப்போது முழுமையாக மூச்சை வெளியேற்றியபின் திரும்ப சுவாசிக்காதே. மூச்சை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு எவ்வளவு தடவை முடியுமோ அவ்வளவு தடவை திரும்ப திரும்ப நான்தியானஉணர்வு பெறுவேன் என்பதை சொல்.

ஐந்தாவது படி சுவாசி....

இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுக்க ஆரம்பி. ஒரு முறை உள்ளிழுத்து ஒருமுறை வெளியே விடுவது இரண்டும் சேர்ந்து ஒரு தடவை என்பதாகும்.

ஆறாவது படி ஓய்வெடு. இதை ஐந்து முறை செய்தபின் மெதுவாக சுவாசித்தபடி நிமிர்ந்து அமைதியாக உட்கார்ந்து ஓய்வெடு. உனது உடல் தளர்வாக, கண்கள் மூடியபடி ஐந்து நிமிடங்கள் உட்கார்.

நான் அமைதியை அடைவேன், நான் தியானஉணர்வு பெறுவேன், நான் தியானஉணர்வு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன் என்று உனது முழு உயிர்த்தலும் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்ளட்டும். அதன்மூலம் அது தியானத்தினுள் நுழையட்டும். உனது முழு இருப்பையும் அந்த உறுதி மொழி சூழ்ந்து கொள்ளட்டும். இது உன் தன்னுணர்வின் ஆழ் மையம்வரை சென்று சேரட்டும்.

இந்த ஓய்வாக இருக்கும் நேரத்தில் நீ எடுத்துக் கொண்ட தீர்மானம் உன் உள்ளே உள் மையத்திற்கு சென்று சேரட்டும். அந்த தீர்மானத்தை 5 தடவை சொல். பின் மௌனமாக அமர்ந்து உனது சுவாசத்தை கவனி. மெதுவாக மூச்சு விடு.

இந்த யுக்தியை 5 அல்லது 7 தடவை படுக்கைக்கு போகும்முன் செய். உன்னால் செய்ய முடியும் வரை செய். பின் உறங்கச் செல். நான் அமைதியாக இருப்பேன் – இது உறுதி. என்று நினைத்தபடி உறங்கச் செல். தூக்கம் வரும்போது இந்த எண்ணம் உன்னுள் இருக்கட்டும். பின் விளக்கை அணைத்துவிடு.

முழுமையாக மூச்சை வெளியேற்றியபின் சுவாசிக்காமல் இருக்கும்போது என்ன நிகழ்கிறது மூச்சை முழுமையாக வெளியேவிட்டபின் சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொண்டு விட்டால் என்ன நடக்கிறது சிறிது நேரத்திற்க்குள் என் முழு உடல் மட்டும் சுவாசத்திற்காக துடிப்பதில்லை, என் உடலின் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு செல்லும் மட்டும் காற்றுக்காக கதறுவதில்லை, எந்த அளவு நான் சுவாசத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கிறேனோ அந்த அளவு காற்றுக்கான துடிப்பு என் தன்னுணர்வற்ற நிலைக்குள்ளும் செல்கிறது. எந்த அளவு நான் மூச்சை நிறுத்தி வைத்திருக்கிறேனோ அந்த அளவு எனது இருப்பின் ஆழ் மையம் வரை காற்றுக்காக ஏங்குகிறது. அது ஒரு சாதாரண விஷயம் அல்ல இப்போது. மேல்மட்டம் தான் பாதிப்படைகிறது என்பதல்ல இப்போது இது. இப்போது இது வாழ்வா சாவா என்ற பிரச்னை. கீழ்மட்டத்திலிருந்து அடி மட்டம்வரை அனைத்துமே காற்றை கேட்கிறது.

உனது முழு இருப்பும் காற்றுக்காக ஏங்கும் இந்த கட்டத்தில், இந்த நேரத்தில் நீ உன்னுள் நான் தியானஉணர்வு பெறுவேன் என்று சொல்லிக் கொள். உனது உடல் காற்றுக்காக ஏங்கட்டும், உனது மனம் இந்த நினைப்பை திரும்ப திரும்ப சொல்லட்டும். காற்றுக்கான ஏக்கம் அதிகமாக அதிகமாக உனது தீர்மானம் உள்ளே செல்லும். உனது முழு உயிரும் காற்றுக்காக துடிக்க துடிக்க நீ இந்த உறுதிமொழியை திரும்ப திரும்ப சொல். இதன் தீவிரம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த வழியில் அது உன் தன்னுணர்வற்ற மனத்தினுள் நுழையும், தன்னுணர்வற்ற மனத்துக்கு சென்று சேரும்.

DHYAN SUTRA

தியான யுக்தி – 2

1) மௌனமாக அமர்ந்து உன்னைச் சுற்றி பேரானந்தம் மேகம் போன்று சூழ்ந்திருப்பதாக உணர்ந்து பார். அந்த மேகத்தினுள் தளர்வாக இரு. உன்னை கரைத்துவிடு. அந்த மேகம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும், ஆயினும் அது உன்னுடனே இருக்கும்.
2) நீ உன்னை கரைக்கும்போது நீ உன்னை மேலும் மேலும் பேரானந்தமாக உணர ஆரம்பிப்பாய். நீ முழுமையாக கரைந்து நீயே இல்லாமல் அந்த மேகம் மட்டுமே இருக்கும் மிக அரிதான கணங்கள் வரும். அவைதான் சமாதி என்றும் சடோரி என்றும் சொல்லப்படும் முதல் தரிசனங்கள்.
3) சில தினங்களுக்கு பின் நீ அதை உண்மையாகவே உணர ஆரம்பிப்பாய். ஏனெனில் அது அங்கேயேதான் இருக்கிறது. நீ அதை இதுவரை உணரவில்லை. அவ்வளவுதான். ஒவ்வொருவரும் பேரானந்த மேகத்தினுள்தான் இருக்கிறோம். நாம் அதை உணர வேண்டும். அது நமது உயிர், இது நமது உள்ளார்ந்த இயல்பு.

Blessed Are the Ignorant




யார் குரு? - ஓஷோவின் கதை - 30

மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில் ஒருவரான ஹாசன் என்பவரிடம் இறக்கும் சமயத்தில் உங்களது குரு யார் என்று யாரோ ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், மிக தாமதமாக இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நேரம் இல்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்று கூறினார். அதற்கு கேள்வி கேட்டவர், நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள், இன்னும் சுவாசித்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது என்று கேட்டார்.

அதற்கு ஹாசன் எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதில் ஒன்று ஒரு திருடர். ஒருமுறை நான் பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன்.

நான் அவரிடம், நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர், நான் ஒரு திருடன், நீங்களோ ஒரு சுஃபி ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் விருப்ப்பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள். என்று அழைத்தார்.

நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் சூஃபியை பார்த்து பயப்படாத போது ஏன் சூஃபி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன், மிகவும் அருமையான மனிதர். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும், சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன். என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை.

ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.

மேலும் தொடர்ந்து ஹாசன் சொல்லுகையில் நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை, எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் – அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன்.

அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன்கூட அந்த அளவு நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் என்று முயல உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே விட்டது. நான் அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம் அப்பால் இருந்தேன். ஆயினும் நான் அந்த திசையில் வணங்கினேன். அவர்தான் எனது முதல் குரு.

எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் மிகவும் தாகமாக இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. அதற்கும் மிகவும் தாகமாக இருந்தது. அது நதிக்குள் பார்த்தது. அங்கே வேறொரு நாய் இருப்பதை பார்த்தது. – அதனுடைய பிம்பம்தான் – அதைப் பார்த்து பயந்தது. அது குரைத்தது உடனே அந்த நாயும் குரைத்தது. இது மிகவும் பயந்து போய் தயங்கிக் கொண்டே திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்தது, தண்ணீரில் பார்த்தது, அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது, அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து அது ஒரு கோடை காலமாக இருந்ததால் தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். ஒருவர் எல்லா பயங்களோடும் எட்டிக் குதித்து விடவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

நான் அறியாததற்குள் குதித்து விடும் ஒரு சமயம் வந்த போது ஒரு பயம் வந்தது. அந்த எல்லை வரை போய்விட்டு தயக்கப் பட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவேன். அப்போது அந்த நாயின் நினைவுதான் வந்தது எனக்கு. நாய் எட்டிக் குதிக்கும்போது நான் ஏன் எட்டிக் குதிக்கக் கூடாது என்று தோன்றியது. ஒருநாள் நான் அறியாததற்குள் எட்டிக் குதித்துவிட்டேன். நான் கரைந்து அறியாதது மட்டுமே இருந்தது. அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.

எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது அந்த குழந்தை ஒரு மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு சென்றது அதன் திரி ஏற்றப்பட்டிருந்தது, மசூதியில் வைப்பதற்காக ஏற்றப்பட்ட அந்த மெழுகுவர்த்தியை கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த மெழுகுவர்த்தியை ஏற்றினாய் என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று கூறினான். நான் தொடர்ந்து, அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா மெழுகுவர்த்தி எரியாமல் இருந்தது, நீ ஏற்றினாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த பையன் சிரித்துவிட்டு, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, இப்போது நீங்கள் இந்த ஒளி எங்கு போனது என்று பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது, எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அறிந்தவன் என்பதை விட்டு விட்டேன். என்றார்.

ஹாசன் மூன்று குருக்களைப் பற்றி கூறினார். மேலும் அவர் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் பற்றியும் பேச எனக்கு நேரம் இல்லை என்றார்.

ஆம், அது உண்மை. எனக்கு ஒருவர்தான் குரு என்று கிடையாது. ஏனெனில் எனக்கு ஆயிரக்கணக்கான குருக்கள் இருக்கின்றனர். நான் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் கற்றுக் கொண்டேன்.

நீ அப்படிப்பட்ட விதமான ஒரு சீடன் என்றால் உனக்கு குரு என்று ஒருவர் தேவை இல்லை. ஆனால் நினைவில் கொள், குரு என்ற ஒருவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீ தேர்ந்தெடுத்தாலும் சரி, தேர்ந்தெடுக்காமல் எல்லோரையும் வைத்துக் கொண்டாலும் சரி, நீ ஒரு சீடனாக இருக்க வேண்டியது அவசியம்.

சீடனாக இருப்பது இந்த பாதையில் மிக அவசியமான ஒரு விஷயம்.

சீடனாக இருப்பது என்றால் - கற்க முடிவது, கற்க தயாராக இருப்பது, இந்த இயற்கைக்கு திறந்தவனாக இருப்பது. நீ ஒரு குருவை தேர்ந்தெடுக்கும் போது என்ன நிகழ்கிறது எப்படி கற்றுக் கொள்வது என கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாய். ஒரு குருவுடன் இருக்கும்போது நீ மெதுமெதுவாக லயப்பட ஆரம்பிக்கிறாய். மெதுமெதுவாக நீ இயற்கையுடன் லயப்படுவது எப்படி என கற்றுக் கொள்கிறாய்.

குரு என்பவர் இந்த இயற்கையின் சிறிய வடிவம்தான். குருவுடன் நெருங்கி வர வர நீ அழகு, நேசம், நெருக்கம், அணுக்கம், அன்யோன்யம், ஒப்புக்கொடுத்தல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்கிறாய். ஒருவரிடம் ஒன்றாக இருக்கும்போது இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும்போது முழுமையுடன் ஒன்றாக இருக்கும்போது எவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்பதை நீ பார்க்கும் ஒரு நேரம் வரும். குரு என்பவர் ஒரு ஆரம்பம்தான், அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல்தான், நீ அவர் மூலம் சென்று கடந்து போக முடியும். உண்மையான குரு நீ அவரை கடந்து செல்ல உதவுபவர்.

The Secret of Secrets, Vol 1 che #3

மலர் 3 இணைய இதழ் 5 11 டிசம்பர் 2010

மலர் 3 இணைய இதழ் 5 11 டிசம்பர் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்தில் இந்த மாதம், அதாவது டிசம்பர் மாதம் 25 ந் தேதி மாலை சன்னியாஸ் கொண்டாட்டமும் அதை தொடர்ந்து 26ந் தேதி முழுவதும் தியானங்களும் நடக்க இருப்பதால் விரும்பும் அன்பர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

சென்ற மாதம் திடீரென கூடிய அன்பர்கள் எட்டு பேர் கலந்துகொண்ட ‘ உள்ளுக்குள் உள்ளது யார் ‘ மிகச் சிறப்பாக நடந்தேறியது. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நிகழ்ந்தது இந்த குழு தியான முகாம். இது மிகப் பெரிய அளவில் உதவியதை கலந்து கொண்ட அனைவரும் உணர்ந்தனர்.

டிசம்பர் 11, ஓஷோவின் பிறந்தநாள், திருப்பூரில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.


தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

இந்த தலையங்கத்தில் நான்கு விஷயங்களை எழுதப் போகிறேன்.

நான் ஓஷோவின் பேச்சுக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் குழப்பமாக இருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார்.

எனது பதில் ஒன்றே ஒன்றுதான். ஓஷோவின் பேச்சு முழுவதும் வற்புறுத்துவது ஒன்றே ஒன்றைத்தான். அது ‘பிரபஞ்சத்தன்ணுணர்வை அடை’ என்பதுதான். பிரபஞ்சத்தன்ணுணர்வை அடையும் வரை போய் கொண்டே இரு.

எப்போதும் பிரபஞ்ச இணைப்புணர்விலிருந்தே நீ செயல்பட வேண்டும். உனது உடல் ஏற்கனவே அப்படித்தான் செயல்படுகிறது. உனது மனமே பிளவு. உனது தன்னுணர்வு உனது உடலைப் போல பிரபஞ்சத் தன்ணுணர்வினுடன் இணைந்து செயல்படுவதே. உனது உடல் தனியாகத் தெரிகிறது பார்ப்பதற்கு. ஆனால் அது தனியல்ல, நீ சுவாசிக்கிறாய். அதுதான் உன் உயிரின் ஆதாரம். சுவாசம் காற்றுமண்டலத்தை சேர்ந்தது. காற்று மண்டலம் இல்லாவிட்டால் உன் சுவாசம் இல்லை. அப்படியானால் உன் உடல் காற்று மண்டலத்தின் ஒரு பாகம்தானே! அது போலவே உனது உடல் நீரின் பாகமாகவும் நிலத்தின் பாகமாகவும் இருக்கிறது. இதை தனி என்று நினைப்பது அறியாமையே. அது போலவே ஒருவரின் தன்னுணர்வும் தனியானது அல்ல. அப்படி நினைப்பது அறியாமை. அந்த அடிப்படை அறியாமையிலிருந்து பிறப்பதுதான் ‘நான்’ என்ற மாயை. அதைச்சுற்றி அதைக் காப்பாற்ற இயங்கும் சக்தி ஓட்டமே மனம்.

ஆகவே ஓஷோ எங்கு தொட்டாலும், எதைப் பேசினாலும், அது செக்ஸ், அன்பு, நட்பு, தியானம், செயல் என்று எதுவாக இருந்தாலும், இந்த வாழ்க்கையின் உணர்வுகள் முழுவதையும் பிரபஞ்சத்தன்ணுணர்வு வரை கொண்டு செல்ல சொல்கிறார். அதற்கு பாதை போட்டுக் காட்டுவதே அவரது பேச்சுக்களும், விளக்கங்களும். அதோடு அப்படி பிரபஞ்சத்தன்ணுணர்வை அடைய தடையாக இருக்கும் உணர்வுகளை தூக்கியெறிந்துவிடச் சொல்கிறார். அதுதான் அவரது கெத்தாரிஸிஸ். மேலும் அவர் தனது புது வழியென – பிரபஞ்சத்தன்ணுணர்வு அடையக் – கூறுவது ‘ தன்னுணர்வோடு உன்னைக் கொண்டாடு ‘ என்பதையே. அப்படி கொண்டாடும்போது பிரபஞ்சவுணர்வை இயல்பாக எட்டுவாய் என்கிறார். ஆகவே 3 விஷயங்கள்:

1. பிரபஞ்சத்தன்ணுணர்வை எட்டு
2. அதற்கு தடையானவற்றை அகற்று
3. அதற்கு வழியாக தன்னுணர்வோடு உன்னைக் கொண்டாடு

சுருக்கமாக இந்த சாரத்தை புரிந்து கொண்டால் ஓஷோவை எங்கு தொட்டாலும் அவர் சுட்டிக்காட்டுவதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

2. மற்றொரு முக்கிய விஷயமாக நான் கூற விரும்பும் ஓஷோவின் செய்தி சீரியஸாக இருக்காதே. கடுகடுப்போடு இருக்காதே. கடுகடுப்புதான் ஈகோ, இறுக்கம், பதட்டம். இது மனிதனின் அடிப்படை நோயாக இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயத்தையும் எவ்வளவு ஆழமான நட்பையும், அன்பையும், புரிதலையும் கூட இது ஒரு சொட்டு விஷமாக கெடுத்து விடுகிறது. ஆனந்தமான சூழலை அசிங்கமாக்கி விடுகிறது. ஓஷோ இதை மனிதனைப் பிடித்துள்ள ஒரு கொடிய நோயாகச் பேசுகிறார்.

ஆகவே எப்போதும் இந்த கடுகடுப்பில் விழுந்துவிடாமல் ஜாக்கிரதையாக இருங்கள். அதுவே உங்கள் இதயத்தைத் திறக்கும். வாழ்வைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியாது. வாழ்தலில் எதுவும் நிரந்தரமில்லை. ஆகவே கடுப்பும் இறுக்கமும் கொள்வதில் என்ன பயன்? லேசாக இருங்கள்! கிடைக்கும் கணத்தை வாழ்ந்து விடுங்கள். அது மட்டுமே புத்திசாலித்தனம்! பிடித்து வைத்துக் கொள்ள முயல்வதில் பிறப்பதுதான் கடுகடுப்பு. இழந்துவிட மனமில்லாத பேராசை, உரிமை கொள்வதில் ஏற்படும் படபடப்புதான் சீரியஸ்தன்மை, கடுகடுப்பு.

ஆகவே நண்பர்களே! எந்த சூழலிலும் கடுகடுப்பாகாதீர்கள். பதிலாக வாழுங்கள்! திறந்த இதயத்துடன் ஆடுங்கள்! திறந்த கைகளுக்கு வானமே எல்லை. மூடிய கைகளுக்குள் எவ்வளவை அடக்கி வைக்க முடியும்? எவ்வளவு நாட்களுக்கு மூடிய கையுடன் வாழ முடியும்? வாழ்க்கை ஓடிக் கொண்டிருப்பது! பட்டினத்தார், ‘ வாழ்வை குடம் கவிழ் நீர் ஓட்டமென்றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே ‘ என்று கூறுவதே உண்மை, சத்தியம்.

கடுகடுப்புக்கு இடம் தராமல் இறுக்கமும் பதட்டமும் இன்றி இருந்து பாருங்கள். வாழ்வு எவ்வளவு இனிய தருணங்களைக் கொண்டிருக்கிறது என்பது புரியும். இந்த வாழ்வே இனிக்கும். இருப்பதிலேயே கிடைப்பதிலேயே மகிழ்வு பிறக்கும். கொண்டாட முடியும். இல்லாமல் கடுகடுப்போடு தியானம் செய்தால்கூட பலனில்லை. இந்த நோய் மிக ஆழம் வரை வேரோடிக் கிடக்கிறது. இதுவே இலக்கும் பொறாமையும் போட்டியும் சூழ்ச்சியும் என கால்வாய் வெட்டிப் பாய்கிறது. ஆகவே இதைக் கண்டு பிடித்து உங்கள் இருப்பிலிருந்து எடுத்து விடுங்கள். இருப்பதை கொண்டாடுவது அப்போதுதான் சாத்தியம். அங்கிருந்துதான் வளர்ச்சியும் ஆரம்பமாகும்.

3. ஓஷோ விளையாட்டுத்தன்மையோடு இருக்கச் சொல்கிறார். இது உண்மை, மிக உண்மை. ஆனால் பலர் விளையாட்டுத்தன்மையோடு இருப்பதை தன்னுணர்வற்றும் பொறுப்பற்றும் இருப்பதோடு பொருத்திக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவேதான் இதை எழுதுகிறேன்.

ஓஷோ விளையாட்டுத்தன்மையோடு செயல்படு, தியானம் செய் என்று கூறுவதன் பொருள், நாம் ஒரு விளையாட்டில் ஈடுபடும்போது உள்ள மனநிலையை குறிப்பதுதான். விளையாட்டில் ஈடுபடும்போது மகிழ்ச்சி கொள்கிறோம். முழுமையாக அதில் குதிக்கிறோம். விளையாட்டில் நேரம் போவதே தெரிவதில்லை. மனம் மறந்து போகிறது. உடல் ஆனந்த நடனமாடுகிறது. மேலும் விளையாட்டிலேயே நாம் மூழ்கி விடுகிறோம். ‘ நான் ‘ காணாமல் போய் அந்த விளையாடும் செயலே அங்கிருக்கிறது.

மாறாக விளையாட்டை எப்படி நமது மனம் நினைத்துத்பார்க்கிறது என்ற மனநிலையில் வாழச் சொல்வதில்லை ஓஷோ. மனதிற்கு எப்போதும் சீரியஸ்தான் பிடிக்கும். விளையாட்டாய் ஈடுபடுவது வேஸ்ட், அது ஒரு பொழுதுபோக்குதானே தவிர வாழ்க்கையில்லை, இப்படியெல்லாம் நினைப்பது மனம். இந்த மனத்தோடு எதையும் செய்யச் சொல்வதில்லை ஓஷோ.

அவர் சொல்வது மனம் கடந்து விளையாட்டில் குதூகலிக்கும் நிலை. ‘ நான் ‘ என்பதை மறந்து உடலின் செயல்பாட்டில் மகிழ்ச்சி கொள்ளும் நிலை.

இதற்கு நமது முழு சக்தியையும் கொடுத்து விளையாட வேண்டும். முடிவு பற்றிய பிடிப்பு எதுவும் அற்று, தன்னைக் கொண்டாடும் வாய்ப்பாக, விளையாட்டாக ஈடுபட வேண்டும்.

பொறுப்பற்ற, சீரியஸ் அல்லாத என்ற மனதின் பார்வைப்படி அணுகிவிடக்கூடாது. அப்போது நமது முழு சக்தியையும் நாம் கொடுக்க மாட்டோம். மாறாக மனம் பொழுதுபோக்காக போக்குக் காட்டி நம்மை ஏமாற்றி விடும். ஆகவே ஜாக்கிரதையாக நாம் ஓஷோ கூறுவதை உணர்ந்து கொள்வது அவசியம்.

4 அதே போல இன்னொரு விஷயம் நம்மை நாம் உடல், மனம், இதயம் எனப் பிரித்து உணர்கிறோம். இவைகள் ஒன்றோடொன்று இணைந்த ஒரே உயிர்தான் என்றாலும் தனித்தனி செயல்பாடுகள் உள்ளன. இதைக் குறித்து நாம் கொண்டிருக்கும் பழக்கங்கள், கட்டுக்கோப்புகள் அறியாச் செயல்கள் நம்மை மிகவும் பாதிக்கின்றன. வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுகின்றன.

பிரபஞ்சத்தன்ணுணர்வடைவதற்கான அல்லது அந்த பிரபஞ்சத்தன்ணுணர்வு வரை நமது தன்னுணர்வைக் கூர்மைப் படுத்துவதற்கான பாதையில் செல்லும் நாட்டம் கொண்ட நாம், இந்த மூன்றையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


இதில் முதலில் உடல்! இதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்? லயத்தில் இசை பிறக்க சரியாக சுருதி கூட்டப்படும் கம்பியைப் போல, எந்த வித்திலும் ஒரு பக்கமாக சாயாமல் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டினி கிடப்பதும் தவறு! பசியின்றி விழுங்குவதும் தவறு! அதிக தூக்கமும் தவறு! தூக்கமின்மையும் தவறு! மாடு போல உழைப்பதும் தவறு! டிவி நேயராகி விடுவதும் தவறு! அப்படி உடலை ஒரு இயந்திரத்தை வைத்துப் போற்றுவது போல சரியாக்க் காப்பாற்ற வேண்டும்.

மனம்! அதை சந்தையில் மட்டும் பயன்படுத்துங்கள். வியாபாரத்தில் மட்டும், சமூகத் தேவைகளுக்காக மட்டும், இயக்குங்கள். நண்பரிடம், மனைவியிடம், குழந்தையிடம், இசை கேட்கையில், நடமாடுகையில், ஒரு ரோஜாவை, ஒரு அருவியை, மலையை, சூரிய உதயத்தைப் பார்க்கையில் உள்ளே கொண்டு வராதீர்கள். அது வெறும் ஒரு சமூக பாதுகாப்பு கருவியாக இருக்கட்டும்! அது ஒரு நல்ல வேலைக்காரன், மிக மோசமான எஜமானன் என்று ஓஷோ கூறுவதை நினைவில் கொள்ளுங்கள்.

இதயம்! இதுதான் நாம் வாழ வேண்டிய இடம். மனிதனின் இருப்பிடம்! நமது இருப்பிற்குச் செல்ல பிரபஞ்சவுணர்வோடு நம்மை சேர்க்கக் கூடிய இடம். அதுதான் நமது எஜமானனாக இருக்க வேண்டும். இதயத்துக்கு உடலும் மனமும் உண்மையுள்ள வேலைக்காரனாக உதவ வேண்டும். இதயம் அன்பு வழி! இதயத்தின் மொழி அன்பு! இதயம் அன்பு மயமானது! அகங்காரமற்றது! தவறுகளை மன்னிப்பது! காயங்களை குணப்படுத்துவது! சுமையற்றது! பறக்கவும், பரவவும், விரியவும், வல்லமை கொண்டது. உணர்வின் ஆட்சி இங்கு! இதிலிருந்து பிறக்கும் எதுவும் பூமியை வளமாக்கும். அழகாக்கும். மெருகேற்றும்! யுத்தமும் அரசியலும் இங்கு இல்லை. தவறு கண்டு தட்டிக் கேட்பதும், கொடுமை கண்டு கொந்தளிப்பதும் கூட இதுதான்! இது உணர்வுக் கடல். மேலே ஏற்படும் கொந்தளிப்புகள் சிறிது நேரமே இருக்கும். பிறகு மாறிப் போகும். உள்ளே ஆழத்தில் அமைதியும் சாந்தமும் தாய்மையும் எப்போதுமிருக்கும். இது மனிதனின் சாத்தியம்

நாம் பிறப்பது இங்குதான்! மனம் எஜமானனாவதில்தான் நம் வாழ்வு தடம் புரள்கிறது. ஆகவே இதயம் திறந்து வாழுங்கள். அதற்காக இழப்பதெல்லாம் மதிப்பற்றவையே! வாழ்ந்து பெறப்போவது இருப்புநிலை.

சமயம் வாய்க்கும்தெல்லாம் இதயம் திறக்க கற்றுக் கொள்வதிலிருந்து தியானத்தை ஆரம்பியுங்கள்.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

காதலி

அன்பைக் கற்றுக் கொள்ள அன்னையிடம் தவறவிட்டவர்கள்,
காதலியிடம் கற்றுக்கொள்ளுங்கள்......

ஆம் நண்பா
காதலி முக்கியமல்ல,
காதலிப்பது முக்கியம்,
கல்யாணம் முக்கியமல்ல,
காதல் சுவை முக்கியம்.
இன்னும் சொல்லப்போனால்......
காதலின் சுவை பிரிவில்தான்
நிலைத்து நிற்கும்.
கல்யாணம் செய்து காப்பாற்றிக் கொள்வது
மிகவும் சிரமம்.
எனவே நண்பா
காதல் கொள் அன்பின் அரவணைப்பைப் பார்
உன்னுள் ஊறும் அன்பை உணர்
அதன்பின்.....
அனைவரையும் அனைத்தையும் அன்பு செய்
அப்போது உன் வாழ்வுக்குப் பிறக்கும்......ஓர் அர்த்தம்
ஓர் ஆனந்தம் ஓர் சுவை ஓர் இருப்பு.


அன்பு உலகம்

பூட்டு இல்லாத பீரோ,
தாழ்ப்பாள் அற்ற கதவு,
விளக்குப் போடாத வீதி,
போலீஸ் இல்லாத சமூகம்,
சட்டம் இயற்றாத ஆட்சிக் குழு,
ராணுவம் அற்ற நாடு,
அணுகுண்டு இல்லாத உலகம்,
பிரிவினை கொள்ளாத பக்தன்,
போட்டியிடாத வியாபாரிகள்,
பொறாமைப்படாத பெண்கள்,
காமம் களைந்த ஆண்கள்,
பாசவலை பின்னாத குடும்பம்,
அகந்தை அற்ற மனிதன்,
அடடா.......இந்த அன்பு உலகம்......
அனைவரும் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும் இந்த ஆனந்தப்பூங்கா,
அன்பில் விளைந்த அமிர்த யுகம்.

நண்பர்களே!
இது இன்றும் சாத்தியம்!
இங்கு இப்போதே சாத்தியம்!
இதற்கு தேவையெல்லாம் இதுதான்,
இதயத்தை மலர விடுங்கள்!

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

நட்புணர்வு

நட்புணர்வு என்பது யாரைக் குறித்துமான, யாரை நோக்கியுமான அன்பு அல்ல. அது பேச்சாலோ அல்லது வேறு விதத்திலோ செய்துகொண்ட எந்த ஒப்பந்தமும் அல்ல. அது ஒருதனிநபருக்கும் மற்றொரு தனிநபருக்கும் இடையே ஆனதல்ல. மாறாக அது ஒரு தனிநபருக்கும் முழு இயற்கைக்குமானது. மேலும் அதில் மரங்களும் விலங்குகளும் நதிகளும் மலைகளும் விண்மீன்களும் அடங்கும். எல்லாமே நட்புணர்வுக்குள் அடங்கி விடுகிறது.

உனது மௌனம் வளர்வதைப் போலவே உனது நட்புணர்வும் வளரும், உனது அன்பும் நேசமும் பிரியமும் வளரும்.

பொறாமை மறையும்போது அங்கு ஆழமான நட்புணர்வு மலரும்.

வாழ்வு ஒரு கண்ணாடி, அதனுடன் நட்புணர்வு கொள் – வாழ்வு அனைத்தும் நட்புணர்வையே பிரதிபலிக்கும்.

நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.

மனதுடன் நட்பு கொள், அதை ஆழ்ந்த நட்புணர்வுடன் கவனி.

நட்புணர்வு எதையும் எதிர்பார்ப்பதில்லை, அது எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.

கவனித்தல் [கவனம்]

உன்னுடைய எண்ணங்களுக்கு சக்தி கொடுக்காதே, ஒரு கவனிப்பவனாக மட்டுமே, ஒரு சாட்சியாக மட்டுமே இரு – தொடர்பற்றவனாக, தொலைவில் இருப்பவனாக, வேறுபட்டவனாக இரு. எண்ணங்களை வெறுமனே பார்! அதனுடன் எந்த வகையிலும் ஈடுபாடு கொள்ளாதே, அதனுடன் இணைந்தோ அதற்கு எதிராகவோ இருக்காதே! ஒரு கவனிப்பவனாக மட்டுமே இரு! மன ஓட்டம் நிகழட்டும், ஓரத்தில் நின்று அதை வேடிக்கை பார்! அதனுடன் நீ எந்த தொடர்பும் கொள்ளாமல், அதனால் எந்த பாதிப்பும் அடையாமல், தள்ளி நின்று பார்.

எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து என்ன நிகழ்ந்தாலும் கவனி.

உன் உள்ளத்தில் என்ன உணர்வுகள் வந்தாலும் ஒரு கவனிப்பவனாக மட்டுமே இருந்து கவனி.

ஆன்மீகத்தின் எளிய ரகசியமே இதுதான், ஒரு சாட்சியாக இரு!

மனதை விட்டுவிடு, கவனிப்பவனில் மேலும் மேலும் மையம் கொள்.

கவனிப்பவனில் நீ மையம் கொண்டிருந்தால் நடப்பவை யாவும் கடந்து செல்பவை மட்டுமே.

முழுமையான சாட்சிபாவம் பெற, முழுமையான கவனிப்பவனாக மாற சிறிதுகாலம் பிடிக்கும், பொறுத்திரு.

வாழ்க்கை

வாழ்வை பருகுபவனாக, இயற்கையின் சாற்றை பருகுபவனாக, குடிகாரனைப் போல இரு. தூங்குமூஞ்சியாக இருக்காதே, ஒரு தூங்குமுஞ்சி இறந்தவனே! வாழ்வின் ரசத்தை பருகு, அது கவிதை ரசமும் அன்பு மயமும் அளவுகடந்த சாறும் கொண்டது. நீ எந்த வினாடியும் வசந்தத்தை கொண்டு வரமுடியும். வசந்தத்துக்கு ஒரு அழைப்பு விடு! சூரியனும் காற்றும் மழையும் உன்னுள் நுழைய அனுமதி.

வாழ்க்கை ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டதல்ல, அதிலும் குறிப்பாக மனித இனத்துக்கு அறவே கிடையாது.

நீ எதைச் செய்தாலும் வாழ்க்கை அதுவாகவேதான் இருக்கும் என்பதை புரிந்து கொள்.

வாழ்க்கை தனிப்பட்ட அர்த்தம் எதுவும் கொண்டதல்ல, ஆடு, பாடு, அனுபவி, ஆனந்தப்படு, கொண்டாடு!

வாழ்க்கைக்கு எல்லைகளோ, வரையறைகளோ கிடையாது, அது எப்போதும் எல்லாவற்றையும் கடந்து செல்லும்.

வாழ்க்கை ஒரு நம்பிக்கையல்ல, அது உண்மைக்கான ஆழமான தேடல்.

வாழ்க்கை ஒரு சாகச பயணம், வாழ்க்கை ஒரு தொடர்ந்த தேடல்தான்!


ஓஷோ வீடியோ

1. Osho : I Respect Money

2. Osho : Bringingup Children

3. Osho : About Drugs


தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

அன்பை வெளிக்காட்டுதல்

இதயம் தூங்கிக் கொண்டிருக்கிறது, நமக்கு வெறுப்பை மட்டுமே வெளிக்காட்ட சொல்லித் தரப்பட்டிருக்கிறது. நாம் அன்பில் துடிக்கும்போது மட்டுமே நாம் உண்மையிலேயே வாழ்கிறோம், முழுமையாக வாழ்கிறோம்.

அதனால் அதைப்பற்றி விழிப்புணர்வு கொள், மேலும் மேலும் விழிப்புணர்வு அடைய அடைய அதிக அளவு அன்பை உணர்வாய்.

உனது நண்பனின் கரங்களை பிடித்துக் கொண்டிருக்கும்போது, அதை மிகவும் விழிப்போடு பிடி. உனது கரம் கதகதப்பை வெளிப்படுத்துகிறதா இல்லையா என்று பார்.
கதகதப்பை வெளிப்படுத்த வில்லையானால் அங்கு சக்தி தொடர்பு இருக்காது, சக்தி மாற்றம் இருக்காது. உள்ளே ஆழத்தில் சக்தி பாய்ந்தோடுகிறதா இல்லையா என்று பார். சக்தி வெளிப்பட உதவி செய். அங்கு சக்தியை கொண்டுவா, ஆரம்பத்தில் அது ஒரு கற்பனையான செயலாக இருக்கும், ஆனால் சக்தி கற்பனையை தொடர்ந்து வரும். கரம் கதகதப்போடும் வரவேற்பதாகவும் இருப்பதாக கற்பனை செய் – மிகப் பெரிய மாற்றம் நிகழ்வதை நீயே கண்கூடாக பார்ப்பாய்.

யாரையாவது பார்க்கும்போது, உனது அன்பின் மூலமாக பார், உனது கண்கள் மூலமாக அன்பை கொட்டு, நடக்கும்போது சுற்றிலும் அன்பை பரப்பிக் கொண்டே நட. ஆரம்பத்தில் அது கற்பனையாக மட்டுமே இருக்கும். ஒரே மாதத்தில் அது உண்மையாகிவிடும். உன்னை அன்பானவனாக, கதகதப்பானவனாக, உன்னருகில் இருப்பதே மிகவும் நன்றாக இருப்பதாக, மற்றவர்கள் உணர ஆரம்பிப்பர். ஒரு நல்ல இருத்தல் எழுகிறது.

அன்பை பற்றி மேலும் அதிக உணர்வடை, அன்பை மேலும் அதிகமாக வெளிப்ப்படுத்து.

Blessed Are the Ignorant

தியான யுக்தி – 2

மேலும் அதிக நேசமாக இருத்தல்

நேசத்திலிருந்து சந்தோஷம் பிறக்கிறது. அதுதான் ஒரே சந்தோஷம். நீ எப்போதெல்லாம் நேசிக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்கிறாய். எப்போதெல்லாம் நேசமாக இருக்க முடிவதில்லையோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. சந்தோஷம் நேசத்தின் விளைவு, நேசத்தின் நிழல். அது நேசத்தை பின்தொடரும். நீ மேலும் மேலும் நேசமாக இருக்க இருக்க நீ மேலும் மேலும் சந்தோஷப்படுவாய்.

உன்னுடைய நேசம் திரும்ப வருகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாதே. அது முக்கியமல்ல. அது திரும்ப வருகிறதோ இல்லையோ, மற்றவர்கள் பெற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நீ நேசித்தால் சந்தோஷம் நேசத்தை தானாகவே பின்தொடரும்.

நீ சந்தோஷமாயிருப்பாய், அதுவே போதும். ஒருவர் எதிர்பார்ப்பதை விட போதும். அதுதான் நேசத்தின் அழகு – அதன் விளைவு – அதன் அர்த்தம் - அது அடுத்தவரின் எதிர்விளைவை பொறுத்ததல்ல, அது முழுமையாக உன்னுடையது.

மக்கள் எப்போதும் திரும்ப எதையாவது எதிர்பார்கிறார்கள். அவர்களது நேசம் நிபந்தனைக்குரியது. அவர்கள் என்னை சந்தோஷப்படுத்து, பின் நான் உன்னை நேசிக்கிறேன் என்கின்றனர். அவர்களது நேசத்தில் கட்டுப்பாடு உள்ளது, அதில் பேரம் உள்ளது. அவர்கள் முழுமையான குருடர்களாக உள்ளனர். நேசிப்பதன் மூலம் சநேதோஷம் தானாகவே மலரும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது ஒரு தொடரும் பின்விளைவு. அதனால் நேசி, நீ யாரை அல்லது எதை நேசிக்கிறாய் என்பது முக்கியமல்ல – பூனை, நாய், மரம், பாறை எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பாறையின் அருகில் உட்கார்ந்து அதை நேசி! அதனுடன் பேசு! அதை முத்தமிடு.

அந்த பாறை மீது படுத்துக்கொள். அந்த பாறையுடன் ஒன்றாக உணர்ந்து பார்! திடீரென ஒரு சக்திபிரவாகம், ஒரு சக்தி வெள்ளம் வருவதை உணர்வாய். நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய். அந்தப் பாறை திரும்ப எதுவும் கொடுக்காமல் இருக்கலாம், கொடுக்கலாம் – ஆனால் அது முக்கியமல்ல! நீ நேசிப்பதன் மூலம் நீ மகிழ்ச்சியடைகிறாய்.

யார் நேசிக்கிறார்களோ அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒருமுறை உனக்கு இந்த சாவி கிடைத்துவிட்டால், உன்னால் இருபத்திநான்கு மணி நேரமும் சநேதோஷமாக இருக்க முடியும். நீ இருபத்திநான்கு மணி நேரமும் நேசமாக இருந்தால் பின் நேசிக்க பொருளை தேட மாட்டாய். மேலும் மேலும் நீ விடுதலை பெற்றவனாக இருப்பாய். ஏனெனில் உன்னால் நேசிக்க முடியும் என்பதை மேலும் மேலும் அதிகமாக அறிந்து கொள்வாய் – அங்கு யாரும் இல்லையென்றால் கூட உன்னைச் சுற்றியுள்ள அந்த வெறுமையை நேசிப்பாய். உன்னுடைய அறையில் தனிமையில் அமர்ந்திருக்கும்போதுகூட அந்த அறையை உனது அன்பால் நிறைத்துவிடுவாய். நீ சிறையில் இருக்கலாம், நீ அதை கோவிலாக ஒரு வினாடிக்குள் மாற்றி விடுவாய். நீ அதை நேசத்தால் நிறைக்கும்போது அது ஒரு சிறையாக இருக்காது!

Dance Your Way To God

தியான யுக்தி 3

உனது நேசிக்கும் திறனை வளப்படுத்திக்கொள்

மரங்கள், பாறைகள், அன்னியர்கள், மக்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரையும் நேசிக்க ஆரம்பி.

ஒரு பாறை மேல் உட்கார்ந்து அதை நீ காதலிப்பதுபோல உணர்ந்து தொட்டுப்பார்! நீ உடனடியாக பதில்விளைவை உணர்வாய்! ஒரு மரத்தை ஆழ்ந்த நேசத்துடன் தொட்டுப்பார்! திடீரென அது ஒரு வழிப்பாதையல்ல என்பதை உணர்வாய்! உணவை சாப்பிடும்போது, உணவை அன்புடன் மெல்லு! குளிக்கும்போது தண்ணீரை தெய்வீகம் போன்று ஆழ்ந்த அன்புடன் நன்றியுடன் பெற்றுக் கொள்! ஏனெனில் தெய்வீகம் எல்லாவற்றிலும் எல்லா இடத்திலும் உள்ளது.

ஒருமுறை எல்லாமும் தெய்வீகம் என்று உணர ஆரம்பித்துவிட்டால் பின் நீ நேசத்திற்காக ஏங்க மாட்டாய், ஏனெனில் எல்லா இடங்களிலும் அது நிறைந்திருப்பதை நீ உணர்வாய்.

Nothing To Lose But Your Head

கூட்ட மனப்பான்மை - ஓஷோவின் கதை - 29


கலீல் கிப்ரானின் புத்தகத்தில் ஒரு அழகான சூஃபி கதை ஒன்று உண்டு. உண்மையில் நிகழ்ந்ததாக கூறப்படும் அந்தக் கதையில் ஒரு கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று அரண்மனையில் இருந்தது. அதை மந்திரியும் அரச குடும்பத்தினரையும் தவிர வேறு யாரும் உபயோகிக்க முடியாது. மற்றொன்று ஊரின் நடுவே இருந்தது. அதை மற்ற அனைவரும் உபயோகித்தனர்.

ஆனால் ஒருநாள், ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து சில மந்திரங்களை கூறிக்கொண்டே ஏதோ ஒன்றை அந்த பொது கிணற்றினுள் போட்டான். மக்கள் எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை! அவன் இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பருகுபவர் யாராயிருந்தாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவர் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டான்.

தண்ணீர் குடிக்க வேறு வழியில்லை, அரண்மனைக்கு போக முடியாது. எனவே தாங்கள் பைத்தியமாகி விடுவோம் என தெரிந்தபோதிலும் மக்கள் வேறு வழியில்லாமல் இந்த தண்ணீரையே குடித்தனர். சூரியன் மறையும்போது அந்த தண்ணீரைக் குடித்த வயது முதிர்ந்த கிழவனிலிருந்து சிறு குழந்தை வரை அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. ராஜா, ராணி, இளவரசன், மந்திரி ஆகியோரைத் தவிர தலைநகர் முழுமைக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது.

யாருக்கும் சுயநினைவில்லை! ஏனெனில் எல்லோரும் பைத்தியமாக இருக்கும்போது யாருக்கு சுய உணர்விருக்கும்? ஹிப்பிகள் சொல்வதுபோல ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பியதை செய்தனர். மக்கள் அம்மணமாக திரிந்தனர், கத்தி கதறி கூக்குரலிட்டனர், பெண்கள் நிர்வாணமாக தெருவில் ஓடினர்! ஒருவர் தலைகீழாக நின்றார், மற்றொருவர் யோகாசனம் செய்தார், எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்! என்ன செய்வது? நகர் முழுவதும் பைத்தியமாகிவிட்டனர். எல்லோரும் பைத்தியமாகிவிட்டதால் எடுத்துச் சொல்ல யாருமே அங்கு இல்லையே!

மந்திரியும் அரச குடும்பத்தினரும் மட்டுமே சோகமாக இருந்தனர். எல்லோரும் பைத்தியமாகி விட்டனரே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். உண்மையில் தங்களது உணர்வைப் பற்றி அவர்களுக்கே சந்தேகமாக இருந்தது. நாம்தான் பைத்தியமாகிவிட்டோமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கு ஒரு வித்தியாசமான விஷயம் நடந்தது.

நகர் முழுவதும் அரசரும் மந்திரியும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தது. அரசரும் மந்திரியும் பைத்தியமாகிவிட்டனர் என்ற வதந்தி பரவியது. கூட்டம் முழுமையும் அரண்மனை முன் ஒன்று கூடி அரசன் பைத்தியமாகிவிட்டான் என சத்தமிட ஆரம்பித்தனர். எல்லோருக்கும் பைத்தியம் பிடித்திருந்தது. எனவே அரசர் நம்மைப் போல இல்லை எனும் விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டனர்.

காவலாளிகள், போலீஸ், படைபட்டாளம் ஆகிய அனைத்தும் பைத்தியமாகிவிட்டனர்! அதனால் அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களும் சேர்ந்து கூடி கூத்தாடிக் கொண்டு, “மரியாதையாக இயல்பாகி விடு, இல்லையேல் அரண்மனையை விட்டு வெளியே வா! நாங்கள் எங்களைப் போலவே இருக்கும் ஒருவரை புதிய அரசராக தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்,” என கூக்குரலிட்டனர்.

அரசர், மந்திரியிடம், “நமது படைகளுக்கும் கூட பைத்தியம் பிடித்து விட்டதே! என்ன செய்வது? நமக்கு பாதுகாப்பில்லையே!” என்று கேட்டார். மந்திரி விவேகமுள்ளவர், வயது முதிர்ந்த அனுபவசாலி. அவர், “ஒரே ஒரு வழிதான் உள்ளது! முன்வாசலை அடைத்துவிட்டு பின்வாசல் வழியே தப்பி சென்று அவர்கள் தண்ணீர் பருகிய அந்த கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுத்து குடித்து நாமும் பைத்தியமாகி விட வேண்டியதுதான். இல்லாவிடில் இந்த பைத்தியகார கும்பல் நம்மை கொன்றுவிடும்.” என்றார்.

அந்த அறிவுரை மிகவும் சரியானது. அரசரும் மந்திரியும் அரச குடும்பத்தினரும் பின்வாசல் வழியே ஓடினர். அந்த மந்திரவாதி ரசாயன மாற்றம் செய்திருந்த அந்த கிணற்று தண்ணீரைக் குடித்தனர். பின் அவர்கள் பின்வாசல் வழியே வரவில்லை, ஆடிக் கொண்டும், கத்திக் கொண்டும், குதித்துக் கூத்தாடிக் கொண்டும், முன் வாசல் வழியே வந்தனர். தங்களது அரசரும் மந்திரியும் இயல்பாகி விட்டதைக் கண்ட கூட்டம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அன்று இரவு தலைநகரம், ‘அரசரும் அரச குடும்பத்தினரும் மந்திரியும் இயல்பு நிலையடைந்து விட்டனர் ‘ என்று மிகவும் கோலாகலமாக இருந்தது.

Source: Christianity : The Deadliest Poison and Zen : The Antidote to All Poisons Chapter # 3 Question # 1

Sunday, November 28, 2010

மலர் 3 இணைய இதழ் 4 11 நவம்பர் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையம் பலரின், தியானம் என்பது என்ன ? அதை செய்வது எப்படி ?அதை உபயோகிக்கும் விதம் என்ன ? அதனால் நாம் அடைவது என்ன ? ஓஷோவின் வழி என்ன, செய்தி என்ன? என்பது போன்ற சந்தேகங்களுக்கு பதில் அளித்து அதை நடைமுறைப் படுத்தவும் உதவி வருகிறது.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். தங்கி தியானம் செய்யலாம்.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.சிரிப்பு

ஆழமான சிரிப்பில் மனம் கரைந்துவிடுகிறது.

சிரிப்பு மனதின் பாகமோ, இதயத்தின் பாகமோ அல்ல.

உண்மையான சிரிப்பு உனது அடிவயிற்றின் ஆழத்திலிருந்து வரும்போது அது உனது மையத்திலிருந்து வருகிறது. அலைகள் மையத்திலிருந்து கிளம்பி வெளிவட்டத்துக்கு வருவது போல உண்மையான சிரிப்பு உனது மையத்திலிருந்து கிளம்பி அலையலையாய் வெளிப்புறத்துக்கு வரும்.

சிரிப்பு உன்னுள் ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.

நீ உன்னைப் பார்த்து சிரிப்பதுதான் உண்மையான சிரிப்பு.

எப்போதும் உனது அடி வயிற்றிலிருந்து வருவதுதான் உண்மையான சிரிப்பு.

நீ சிரிக்கும்போது எதிர்காலத்திலோ, இறந்த காலத்திலோ இருக்க முடியாது.

சிரிப்பு முடிவானதின் வாயிலை திறக்கக் கூடும்.

2.அன்பு

நிஜமான அன்பு என்பது உள் வெளியை நிறைக்கும் ஏதோ ஒன்று அல்ல. அதற்கு பதிலாக உள்வெளியை பகிர்ந்து கொள்வதோடு சம்பந்தப்பட்டது. நீ பகிர்ந்துகொண்டால் அது அன்பு. பகிர்தல்தான் மனிதனை தெய்வீகத்தோடு இணைப்பது. அன்புதான் உன்னை தெய்வீகத்தோடு இணைக்கும் பாலம்.

அன்பு அபாயகரமான பாதை. துணிவுள்ளவர்கள் மட்டுமே அதில் பயணம் செய்யமுடியும்.

அன்பு செய்வது என்பது உனது ஆணவத்தை விடுவது, உன்னை இழப்பது. அன்பு என்றால் இல்லாமல் போவது.

நீ மிகவும் தலைகனம் பிடித்தவனாய் இருந்தால் உன்னால் காதலில் விழ முடியாது.

உடலுக்கு எப்படி உணவு தேவையோ அது போல ஆன்மாவுக்கு தேவையானது அன்பு.

அன்புக்கு தர்க்கம் கிடையாது, அன்புக்கு காரணம் கிடையாது, அன்புதான் வாழ்க்கை.

அன்பு நிபந்தனைகளற்ற பரிசு, அது பேரம் பேசுவதல்ல.

3.மையம்.

மையமின்றி வாழ்வு இல்லை. உனக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். அது வேறு விஷயம். அதை நீ உருவாக்க முடியாது, நீ அதை திரும்பவும் கண்டுபிடிக்க வேண்டும். நினைவில் வைத்துக் கொள், நான் நீ அதை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, நீ திரும்பவும் கண்டு பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.

மையமின்றி யாரும் உயிர்த்திருக்க முடியாது. மையமில்லாமல் வாழ்வு சாத்தியமேயில்லை.

புயலின் நடுவே அசையாதிருக்கும் அந்த மையத்தை கண்டறி.

கவனமாயிருப்பது, விழிப்புணர்வோடிருப்பது ஒன்று மட்டுமே உன் மையமாகட்டும்.

வெளிப்புறமின்றி மையமில்லை. அவை உண்மையில் ஒன்றே.

எல்லா சிறப்பானவைகளும் மையத்திலிருந்து தோன்றியவையே.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

இந்த தலையங்கத்தில் மூன்று தலைப்புகளில் எழுதப் போகிறேன்.

வரும் நண்பரிகளிடம் நான் முதலில் சோதிக்க வேண்டியிருப்பது அவர்கள் தன்னைப் பார்க்க தயாராய் இருக்கிறார்களா என்பதைத்தான்.

அது இல்லாதவர்கள் தியானம் செய்வதில்கூட சமூக மனத்தின் பேராசையும், பாதுகாப்புத் தேடுதலுமே ஓங்கி நிற்பதை நான் பார்க்கிறேன்.

உதாரணமாக ஒரு நண்பர் நான் அந்த சாமியாரிடம் போனேன், அதற்குப் பின்பு கஷ்டம் நீங்கி நன்றாக இருக்கிறேன் என்கிறார். இன்னொருவர் அந்தக் கோயிலுக்குப் போய் அங்கு ஓரிடத்தில் நின்றால் அங்கு ஒரு சக்தியிருப்பதை உணர்கிறேன். அதற்காகவே அங்கு தவறாது போகிறேன். அது எனக்கு அமைதி கொடுக்கிறது என்கிறார்.

ஓஷோவையும் படிக்கிறார்கள், தியானம் செய்கிறார்கள். ஆனால் ஈர்ப்பு வேறொங்கோ இருப்பது ஏன்,? மேலும் ஓஷோவிடமும் அப்படி ஒரு பயன்பெறவே வர விரும்புகிறார்கள். ஓஷோவும் அப்படி பயனளிப்பார், தனது நோயைத் தீர்ப்பார், வியாபாரத்தைப் பெருக்குவார், ஆரோக்கியம் தருவார் என்று நம்ப விரும்புகிறார்கள்.

நண்பர்கரளே, தயவுசெய்து ஓஷோவையாவது அவர் வழியே விட்டுவிடுங்கள்.

உங்களது ஆசைகளை, பேராசைகளை, பயத்தை, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓஷோவை பயன்படுத்திக் கொள்ள நினைக்காதீர்கள். சாமியாரிடம் போனால் கஷ்டம் நீங்கி விட்டது என்றால் இங்கு எல்லோரும் ஏன் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? சாமியாரின் முகவரி தெரியாத ஒன்றுதான் பிரச்னையா? மடத்தனம் இது.!

ஒரு முறை நான் பல வருடங்களுக்கு முன்பு தற்செயலாக மகரிஷி மகேஷ்யோகி அவருடையதேயான சேனலில் அவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அவர் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தியாவின் அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம் நமது பார்லிமெண்டின் வாஸ்து சரியில்லை என்பதுதான் என்று. இவருக்கு என்று ஒரு தனி தொலைக் காட்சி சேனல்.! இதைப் பார்த்து ஏமாறும் மக்கள் கூட்டம்.! என்ன சொல்வது நமது சமூகத்தை?

நான் கூறவந்தது என்னவென்றால், இப்படி நம்புகிறவர்கள், ஏமாறுகிறவர்கள் அனைவரின் பொதுகுணமாக இருப்பது தன்னைப் பார்க்க பயப்படும் தன்மைதான்.

ஆனால் ஓஷோ உன்னைப் பார்ப்பதுதான் ஆரம்பம் என்பவர். உன்னை அப்படியே ஏற்றுக் கொள், அப்படியே பார், எல்லா அசிங்கங்களையும், சேர்த்து வைத்துள்ள எல்லா குப்பைகளையும் பார். பார்க்க முடிந்த பின்பு தானே சுத்தம் செய்வது, எப்படி சுத்தம் செய்வது என்பதெல்லாம் வருகிறது. சுத்தம் செய்த பின்பு தானே தியான வாய்ப்பு வருகிறது.!

ஒரு செடி உள்ளிருந்து வளர்கிறது. வெளியே உள்ளவைகளை வாழ்க்கைச் சூழ்நிலையை பயன்படுத்தி வளர்கிறது. வளர்ந்து மலர்கிறது. மணம் பரப்புகிறது. காயாகி, கனியாகி உதிர்கிறது. மேலும் இந்த முழுவதையும் அழகோடு, ஆனந்தத்தோடு செய்கிறது.

மனிதனுக்கு என்ன ஆனது? முதலில் உள்ளிருந்து வாழ்வதை நிறுத்தி விட்டான். வெளி விஷயங்களை உணரவும் முடிவதில்லை. உள்ளிருந்து வாழும் உடலோடு ஆன தொடர்பும் கொஞ்சமே இப்போது மிச்சமிருக்கிறது.

நாம் இயற்கையின் தொடர்பை மதிப்பதில்லை. அதன் அவசியத்தை நாம் மறந்து விட்டோம்.

ஒரு மான் கூட்டமும், அதை கொன்று வாழும் புலியும் ஒரே காட்டில் ஒரே இடத்தில்தான் வாழ்கின்றன. எந்த மான் கூட்டமும் புலியில்லாத காட்டிற்கு தப்பி ஓடிவிட முயற்சிப்பதில்லை. புலி துரத்தும்போது ஓடுகிறது. ஏதாவது ஒரு மானை புலி பிடித்தவுடன் புலி நின்று விடுகிறது. மான் கூட்டமும் ஓடுவதை நிறுத்திவிட்டு மேய ஆரம்பிக்கிறது. புலியும், எதற்கு தினமும் இந்த துரத்தல் சில நாள் எதுவும் கிடைப்பதில்லை, மான் லாவகமாக தப்பி ஓடி விடுகிறது. ஆகவே ஒரு பத்து மான்களை அடித்து ஒரு குகையில் சேர்த்து வைக்கலாம் என்று திட்டமிடுவதில்லை. பசிக்கும்போது தேட ஆரம்பிக்கிறது. உண்டவுடன் இளைப்பாற ஆரம்பித்து விடுகிறது.

இப்படி இயற்கையில் எதிரெதிர் ஆனவை என்று நாம் நினைக்கும் அனைத்தும் சேர்த்து வாழ்கின்றன. மான் பெருகி பஞ்சம் வந்து விடாமல் புலி காக்கிறது. புலி உணவின்றி இறந்துவிடாமல் மான் காக்கிறது.

ஆனால் மனிதனின் நிலை என்ன? எதிரானது என்று தோன்றுவதை எல்லாம் அழித்து சமநிலையைக் குலைக்கிறான்.

வெள்ளம் வராது இருக்க அணை கட்டுகிறான். வெள்ளம் வந்தால்தான் அது கொண்டு வரும் வண்டல் மண் நிலம் முழுவதும் பரவி, நிலத்தின் வளம் அழிந்துவிடாமல் காப்பாற்றப் படும். ஆனால் அணையில் ஆறு அடித்து வரும் வண்டல்மண் எல்லாம் பயனற்று அணையின் அடியில் சேகரமாகிறது படிந்துவிடுகிறது. மேலேதான் நீர் வெளியேற திறக்கப்படுவதால் வண்டல்மண் வீணாவதே நடக்கிறது.

உதாரணத்திற்கு ஒன்று இது. இப்படி சமநிலையைக் கெடுப்பதால், காடுகளை அழித்து, பெட்ரோல் சேமிப்புகளைக் குடித்து, காற்றை மாசுபடுத்தி, தற்கொலைப் பாதையில் செல்வதே இன்றைய நாகரீகத்தின் விளைவாக இருக்கிறது.

விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி இயற்கையை அழிக்காமல் வாழ்வதை விட்டுவிட்டு அதை வெற்றி கொள்ளும் வெறியில் மனிதன் அழிவுப் பாதையில் செல்கிறான்.

மலைகள் தகர்க்கப்படுகின்றன. சேலம் பக்கத்தில் பல மலைகளைக் காணோம். பூனாவைச் சுற்றி மலைகள் சமமாக்கப்பட்டு அடுக்குமாடி வீடுகளாக்கப்பட்டு விட்டன. எதற்கு இந்த தற்கொலை முயற்சி ?ஏன் இந்த தற்கொலை முயற்சி?

இதன் காரணம் மனிதன் தனது உள்ளுணர்வை இழந்து விட்டதுதான். இயற்கையோடுள்ள இணைப்புணர்வை இழந்து விட்டதுதான். ஒரு உதாரணம் சொல்கிறேன். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது இது. நான் பார்க்கவில்லை. ஒரு நண்பர் கூறிய தகவல். ஆனால் இது உண்மைதான், மேலும் இது போன்ற உதாரணங்களை கோடிக்கணக்கில் கொடுக்கமுடியும். அதாவது ஒரு மரம் கொஞ்சம் பெரிய காயாக காய்த்து வெடிக்கிறது. அப்போது அதனுள்ளிலிருந்து விதைகள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. அந்த விதைகளுக்கு ஹெலிக்காப்டரைப் போல மெல்லிய இறக்கைகள் உள்ளன. மேலும் அவை வெளிப்படுகையில் ஒரு விசை போன்ற துடிப்பை விதைகள் பெறுகின்றன. அதன் மூலம் அது காற்றில் பறக்க ஆரம்பித்து வெகுதூரம் செல்கிறது. அந்த இறக்கைகள் காற்றில் சுழன்று வெகுதூரம் விதையை எடுத்துச் செல்கின்றன. இதைப் பார்த்து நண்பர் ஆச்சரியப்பட்டு போனார். எவ்வளவு அறிவோடு எல்லாம் இருக்கிறது என்ற ஆச்சரியம் அவருக்கு. இதைக் கேட்ட நான் சொன்னேன். இந்த அறிவுக்கே ஆச்சரியப் படுகிறீர்களே! இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள். அந்த மரம் ஒரு அடி கூட அதன் வாழ்நாளில் நகர்ந்ததில்லை. பிறகு எப்படி பறப்பது பற்றி அதற்கு தெரிந்தது,? மரம்தான் காயை உருவாக்கியது, அதன் விதைகளை அது தான் அவ்வாறு உருவாக்கிறது. ஆனால் அதற்கு காற்றில் பறக்க இப்படி இறக்கையோடு நமது விதையை ஏற்படுத்த வேண்டும். அதன் ஆரம்பத்திற்கு ஒரு விசை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அதற்கு எப்படித் தெரிந்தது? அதன் சொந்த அனுபவம் என்ன? சொந்த அனுபவமும் இல்லை, படித்ததும் இல்லை, கல்லூரி சென்று கற்கவும் இல்லை, ஆனால் தவறில்லாமல் முதல்முறையே மிகச் சரியாகத் தயாரித்து வெற்றிகரமாக செயல்படுத்துகிறது.! எப்படி - இந்த ஆச்சரியத்தை யோசியுங்கள் என்றேன். நீங்களும் யோசியுங்கள்.

நமது சொந்த அனுபவம், பார்த்தது, கேட்டது, படித்தது, கற்றது என்ற ஐம்புலன் அனுபவத்தை அறிவென்று எண்ணி அல்லல்படும் நாம் இதை கண்டிப்பாக யோசிக்க வேண்டும். இயற்கையின் இணைப்புணர்வே நமது உண்மையான வழிகாட்டி, அந்த உணர்வே நமது வாழ்வின் சாரம்.

இன்றைய மனிதன் நோக்கம், பார்வை, இலக்கு, இலட்சியம், கொள்கை, கோட்பாடு, நெறிமுறை, கருத்து, உறுதி, ஆகிய எல்லாமே சரியான திசையில், சரியான கண்ணோட்டத்தோடு இல்லை என்பது அடிப்படை சமூக பிரச்சனை.

இந்த சமூகம் பணத்தை முன்னிறுத்தி விட்டது. பாதுகாப்பை முன்னிறுத்தி விட்டது. சுயநலத்தை முன்னிறுத்து விட்டது. போலி கௌவரத்தை, அதிகாரத்தை, ஆடம்பரத்தை முன்னிறுத்தி விட்டது. வீண் பெருமையை, அடுத்தவர் புகழ்ச்சியை முன்னிறுத்தி விட்டது. பயத்தையும் சந்தேகத்தையும், முன்னிறுத்தி விட்டது. பேராசையை முன்னிறுத்தி விட்டது. தன் குடும்பம், தன் இனம், தன் மொழி என்பதை முன்னிறுத்தி விட்டது.

ஆனால் நமது சமூகம் பணத்திற்கு பதிலாக குணத்தை முன்னிறுத்துவதாக, பேராசைக்கு பதிலாக பகிர்ந்து கொடுப்பதை, பொறாமைக்கு பதிலாக அன்பை, அதிகாரம் தேடுவதற்கு பதிலாக அருளை, கருணையை, போட்டிக்கு பதிலாக அமைதியை, வறட்டு கெளரவம் தேடுவதற்கு பதிலாக கடவுள் நிலை தேடுதலை முன்னிறுத்தியதாக இருந்தது. முழு வாழ்க்கை முறையும் கடவுள் நிலை பெறுவதை முன்னிறுத்தியே இருந்தது. அதற்கான ஒரு முழு மனவியலும் இங்கே ஓங்கி வளர்ந்திருந்தது.

நடுவில் என்ன ஆனது. மேற்கு நாடுகளைப் பார்த்து பணப்பேய், அதிகாரப்பேய், அதற்காக எந்த சூழ்ச்சியும், சுரண்டலும் செய்வது, மது, மாது, சூதுவே மகிழ்ச்சி என்ற மயக்கம் நம்மைப் பிடித்துக் கொண்டது. ஆகவே நாம் திசை மாறினோம். இலக்கு மாறினோம். இதுவே நம் சமூகத்தின் இன்றைய அவலம்.

பாதுகாப்பை முன்னிறுத்திய சமூகமாக நம்முடையதும் மாறி விட்டது. அடிமையாய் வறுமையாய் இருந்ததன் விளைவால் நாம் மேற்கத்திய வாழ்க்கைக்கு அதிகம் ஈர்க்கப்பட்டோம்.

இதனால் இன்று பாதுகாப்பான வாழ்வை எட்டிவிட்டவர்கள் அடைய வேண்டியதை அடைந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்ள முயல்கிறார்கள்.! அரசாங்க உத்தியோகம் பெற்றவர்கள், புதுப் பணக்காரராய் மாறி விட்டவர்கள், வாடகையும் வட்டியும் வாங்கி வாழ்பவர்கள் இவர்களெல்லாம், வரவுக்குள் வாழ்வைச் சுருக்கி பாதுகாப்பான வாழ்வை தவறவிட்டுவிடாமல் வாழும் போக்கு நமது சமூகத்தில் இருக்கிறது.

மேலும் இவர்கள் இதில் பெருமை வேறு பட்டுக்கொள்கிறார்கள், வாழ்வில் வெற்றி அடைந்துவிட்டதுபோல. ஆனால் உண்மை என்ன?

பாதுகாப்பு எதற்கு? வாழ்வதற்கு, பயமின்றி வாழ்வதற்கு.! ஒரு செடி வளர்வதற்கு அதைச் சுற்றிப் போடும் வேலி ஒரு பாதுகாப்பு. ஆனால் வேலியை முதலில் முள்வேலி, பிறகு கம்பி வேலி, பிறகு காம்பவுண்ட் சுவர் என்று அதிகரித்துக் கொண்டே போய்விட்டு விதையை மண்ணில் விதைக்காமல் வைத்திருந்தால் என்ன பயன்? ஆனால் ஒருவருக்கும் இதைப் பற்றிய உணர்வே இல்லை. பாங்க் இருப்பை, சொத்து மதிப்பை, அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் வாழும் தைரியம் வருவதில்லை.

இதற்கும் காரணம் இருக்கிறது. சுற்றிலும் இந்தப் பாதுகாப்பை அடையாமல், இந்தப் பாதுகாப்பை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் கூட்டம் இருக்கிறது. அதைப் பார்க்கையில் நாம் அடைந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி பிறக்கிறது. இது பொய்யானதுதான். நமது கற்பனைதான்.

உண்மையான உணர்வு எதுவுமே உள்ளிருந்து வர வேண்டும். பசி, தாகம் போல. ஆனால் இந்தப் பொய்யான உணர்வு கொடுக்கும் அகங்கார போதையில் அனைவரும் மகிழ்ந்து கொள்கிறார்கள். காலை எழுந்தவுடன் பேப்பர் படித்து, எங்கெங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபத்து, கலவரம் என்றெல்லாம் தெரிந்துகொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. ஏனெனில் இது எதுவும் நடக்காமல் நான் நன்றாக இருக்கிறேன் என்று மகிழ்ந்து கொள்ள இது மிகவும் அவசியமாக இருக்கிறது. நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப உணர்வதன் மேல் இன்றைய மனிதனுக்கு விருப்பம் ஏற்படுகிறது.

ஆனால் இது ஒரு மனநோய்தான். மற்றவர்களின் துன்பமே நமது மகிழ்ச்சிக்கு காரணமாய் இருப்பது ஒரு நோயல்லாமல் வேறென்ன? அடுத்த வீட்டுக்காரனின் வெற்றியும் தோல்வியுமே உனது கோபத்தையும் மகிழ்ச்சியையும் தீர்மானிப்பதாய் இருப்பது ஒரு அவலம்தான்.

மேலும் நாம் இதை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு ஊட்டி விடுகிறோம். இதன் அடியில் உள்ள பயத்தைப் போக்கிக் கொள்ளும் வழியை நாமும் தெரிந்துகொள்வதில்லை. குழந்தைகள் பயத்தை உணரும்போதும் அதைக் கடப்பதற்கு நாம் சொல்லியும் தருவதில்லை. அதை அமுக்கி வைக்கும், மறைத்துக் கொள்ளும் வழிகளையே சொல்லித் தருகிறோம்.

நமக்கு வாழ்வின் இலக்கே மாறிப்போனது அல்லது மறந்துபோனதுதான் இந்நிலைக்குக் காரணம் என்று உணர்ந்தால், நமக்கு உறைத்தால் அப்போதுதான் விடிவு பிறக்கும். நிறைவு கிடைக்கும். நாம் திரும்பவும் வாழ ஆரம்பிப்போம். போதையை நோக்கியல்ல, சத்தியத்தை நோக்கி.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

கண்ணீர்

இதயம் கரைகையில் எழுவது கண்ணீர்

அதுவே மனிதனைக் கழுவி,
அவன் ஆன்மாவை காப்பாற்றி வருகிறது.

இடர்களை இறக்கிவைத்து,
வாழ்வைத் தொடர வழி செய்கிறது.

இன்பம் முட்டும்போதெல்லாம்,
நன்றியை பொங்கிப் பெருக வைக்கிறது.

உடல் உபாதையில் உழழும்போது,
வலியைக் கரைத்து வழிகிறது கண்ணீர்.

இப்படி மனிதனை இயற்கையோடு.......
இணைத்து வைத்திருப்பது கண்ணீர்.

அவன் இதயம் திறக்கும்போதெல்லாம்.......
அதில் பூத்து மலர்வது கண்ணீர்.

ஆம்.......
உடலின்பால் அன்பு,
உறவின்பால் அன்பு,
உள்ளத்தின்பால் அன்பு,
உயிரின்பால் அன்பு,
என்று.......
அன்பு எழும்போதெல்லாம் முகிழ்வது கண்ணீர்.

கண்ணீர் அன்பின் வெளிப்பாடு,
ஆகவே கண்ணீர் விடுங்கள்,
உங்களை அன்பால் கழுவுங்கள்.

2,
அன்பு இல்லையே

உன்னை பார்க்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் நான் உன்மீது அன்பு கொண்டிருக்கிறேன்.

உன் பேச்சைக் கேட்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு......

உன்னை நினைக்கப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு.......

உன்னை தனியாகப் பிடிக்கவில்லை
ஏனெனில் அன்பு......

நீ நான், நான் நீ
ஆம் இதுதான் பிடித்திருக்கிறது

ஓஷோ வீடியோ

1. Osho : Meditation is a very simple phenomenon



2. Osho : Rediscovering your joyful self



3. Osho : Spiritual growth and enlightenment



தியான யுக்திகள்

தியான யுக்தி – 1

இதயத்துடனான இணைப்பை இழந்து விடாதே.

உணர்வுதான் உண்மையான வாழ்க்கை. நினைப்பு போலியானது. ஏனெனில் நினைப்பு என்பது அதைப் பற்றியது. அது உண்மையானதல்ல. மதுவைப் பற்றிய நினைப்பு உனக்கு போதையை கொடுக்காது. மதுதான் உனக்கு போதையை கொடுப்பது. நீ மதுவைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கலாம், ஆனால் மது பற்றிய நினைப்பு மட்டுமே உனக்கு போதை தராது. நீ அதை குடிக்க வேண்டும். குடிப்பது உணர்வின் மூலமே நிகழும்.
நினைப்பு ஒரு போலியான செயல், ஒரு பதிலான செயல். அது உனக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்ச்சியை தரும். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை. அதனால் நினைப்பிலிருந்து உணர்வுக்கு நிலைமாறு. அதற்கு சிறந்த வழி இதயத்திலிருந்து சுவாசிக்க ஆரம்பிப்பதுதான்.

பகலில், எவ்வளவு முறை நினைவு வருகிறதோ அவ்வளவு முறை ஒரு ஆழமான மூச்சு எடு. அது உனது இதயத்தின் மையத்தை சென்று அடைவதாக உணரு. முழு இயற்கையும் உன் இதயமையம் எதுவோ அங்கே உன்னுள் சொரிவதாக உணர்ந்து பார். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அது சாதாரணமாக வலது பக்கத்தில் இருக்கும். அதற்கும் உடல்ரீதியான இதயத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது முற்றிலும் வித்தியாசமான விஷயம். அது நுண் உடலை சேர்ந்தது.
ஆழமாக மூச்செடு. நீ என்ன செய்தாலும் ஆழமான மூச்செடுத்து ஐந்து தடவைகள் செய். மூச்சை இழுத்து இதயத்தை நிரப்பு. இயற்கை இதயத்தின் மூலமாக நிரம்புவதாக இதயத்தின் நடுவே உணர்ந்து பார். வாழ்வு, தெய்வீகம், இயற்கை, துடிப்பு எல்லாமும் சொரிவதாக உணர். பின் அழுத்தமாக மூச்சை வெளியே விடு. இதயத்திலிருந்து உனக்கு கிடைத்த எல்லாவற்றையும் திரும்ப இயற்கைக்கு, தெய்வீகத்திற்கு கொடுப்பதாக உணர்ந்து கொடு.

ஒரு நாளைக்கு இதை பல தடவைகள் செய். ஆனால் எப்போது இதை செய்தாலும் முதலில் ஐந்து தடவைகள் ஆழமான மூச்செடு. அது தலையிலிருந்து இதயத்துக்கு இடம் மாற உனக்கு உதவி புரியும்.

நீ மேலும் மேலும் உண்ர்வுள்ளவனாக மாறுவாய். நீ விழிப்படையாத பல விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய். நீ அதிக சுவை அறிபவனாக, அதிக வாசனை உணர்வுள்ளவனாக, தொடு உணர்ச்சி அதிகம் உள்ளவனாக மாறுவாய். உன்னால் அதிகம் கேட்க முடியும், அதிகமாக பார்க்க முடியும். எல்லாமும் அதிக ஆழமானதாக மாறும். தலையிலிருந்து இதயத்துக்கு இடம் மாறு, திடீரென உனது புலன்கள் ஜொலிப்பதை நீ உணர்வாய். வாழ்வு உன்னுள் துடிப்பதை, உன் மூலம் பாய்ந்தோட தயாராக இருப்பதை, உன் மூலம் பொங்கி வருவதை நீ உணர்வாய்.

தியான யுக்தி – 2

உணர்வோடு சுவையறிதல்

நாம் சுயஉணர்வின்றி, இயந்திரதனமாக, அவசரமாக சாப்பிடுகிறோம். சுவையை அறியாமல் ருசித்து உணராமல் சாப்பிடும்போது நாம் உணவை அடைக்கிறோம், அவ்வளவுதான். மிகவும் மெதுவாக சாப்பிடு, சுவையை ருசி. பொருட்களை விழுங்காதே. அவசரமின்றி ருசித்து சுவையாகவே மாறி விடு. இனிப்பை உணரும்போது இனிப்பாகவே மாறு. அப்போது அதை உனது உடல் முழுவதும் உணர முடியும். வாயில் மட்டுமின்றி. நாக்கில் மட்டுமின்றி அலை போல உடல் முழுவதும் பரவுவதை உணர முடியும்.

நீ எதை சாப்பிட்டாலும் அந்த சுவையை உணரு, அந்த சுவையாகவே மாறு. சுவையறியாவிட்டால் உனது புலன்கள் இறந்தவையாகி விடும். அவை மேலும் மேலும் உணர்விழந்துவிடும். உணர்விழந்து இருக்கும்போது உனது உடலை உன்னால் உணர முடியாது. உனது உணர்ச்சிகளை உன்னால் உணர முடியாது. அப்போது நீ உனது தலையில் மட்டும்தான் இருப்பாய்.

தண்ணீர் குடிக்கும்போது அதன் குளிர்ச்சியை உணரு. கண்களை மூடி, மெதுவாக உணர்ந்து குடி. குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்து அந்த குளிர்ச்சியாகவே நீ மாறு. ஏனெனில் தண்ணீரில் இருந்த அந்த குளிர்ச்சி இப்போது உனது உடலுக்கு மாற்றப்பட்டு விட்டது. அது உனது உடலின் பாகமாகி விட்டது. தண்ணீரில் இருந்த குளிர்ச்சி இப்போது உன் வாயில், உனது நாக்கில் உள்ளது. அது உனது உடல் முழுவதும் நிகழ அனுமதி. அதன் குணம் உடல் பூராவும் பரவ அனுமதித்தால் உனது உடலில் குளிர்ச்சியை நீ உணரலாம். இந்த முறையில் உனது புலனுணர்வு வளரும், நீ மேலும் மேலும் உயிர்துடிப்போடும், நிறைவாகவும் மாறுவாய்.

தியான யுக்தி 3

மனதை உபயோகிக்காமல் பார்த்தல்

நீ பொருட்களை எப்படி பார்க்கிறாய் என்பது உன்னைப் பொருத்தது, பொருட்களை பொருத்ததல்ல. இடைச்செருகல் செய்யும் மனதை விட்டு விட்டு நேரடியாக தனித்து பொருட்களை பார்க்கும் ஒரு நிலைக்கு வரும் வரை மனம் உன்னை மொழிபெயர்த்துக் கொண்டேதான் இருக்கும். அது நிறத்தை மாற்றும், அது பல விஷயங்களை கலந்து இடையூறு செய்யும். அவை தூய்மையானதாக இராது.

அதனால் உண்மையை அடைய ஒரே வழிதான் உள்ளது. – எப்படி நீ உனது பார்வையாக மாறுவது, மனதின் துணையை எப்படி கைவிடுவது என கற்றுக் கொள்வதுதான். இந்த மனதின் கொந்தளிப்புதான் பிரச்னை. ஏனெனில் மனத்தினால் கனவுகளை மட்டும்தான் உருவாக்க முடியும். ஆனால் மனதால் மிக அழகான கனவுகளை உருவாக்க முடியும். அதனால் நீ மிகவும் கிளர்ச்சியுறுகிறாய். இந்த கிளர்ச்சியினால் அந்த கனவு உண்மை போல தோன்றுகிறது. நீ மிகவும் அதீத கிளர்ச்சியுறும்போது போதையடைந்து விடுகிறாய். நீ உணர்வோடு இல்லை. அப்போது நீ பார்ப்பது எதுவும் நீ பார்ப்பதல்ல. மேலும் எத்தனை மனம் உண்டோ அத்தனை உலகம் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு மனமும் அதன் சொந்த உலகில் வாழ்கிறது. நீ அடுத்தவரின் முட்டாள்தனத்தை எண்ணி சிரிக்கலாம், ஆனால் நீ உன்னுடைய முட்டாள்தனத்தை பார்த்தே சிரிக்காத வரை நீ இயல்பானவனாகவோ, உண்மையானவனாகவோ, தாவோவின் வழி செல்பவனாகவோ ஆக முடியாது. என்ன செய்வது ?

மனதை கொண்டு வராமல் இருந்து பார்க்க முதலில் சிறிய விஷயங்களில் முயற்சி செய். ஒரு மலரை பார்க்கும் போது வெறுமனே பார். அழகு என்றோ அசிங்கம் என்றோ சொல்லாதே. வார்த்தைகளை கொண்டு வராதே. சொற்படுத்தாதே. வெறுமனே பார். மனம் மிகவும் சங்கடப்படும், அசௌகரியப்படும். ஏதாவது சொல்ல முற்படும். ‘அமைதியாக இரு, நான் பார்க்கிறேன், என்னை பார்க்க விடு’ என்று சொல்லி விடு.

முதலில் இது கடினமானதாக இருக்கும். ஆனால் உனக்கு அதிக ஈடுபாடு இல்லாத விஷயங்களில் இருந்து இதை ஆரம்பி. வார்த்தைகள் எதையும் உள்ளே கொண்டு வராமல் உனது மனைவியை பார்ப்பது கடினம். நீ உணர்வுரீதியாக இணைந்திருக்கிறாய், ஈடுபாடு கொண்டிருக்கிறாய். அன்போ, கோபமோ ஆனால் ஈடுபட்டிருக்கிறாய். நடுநிலையான விஷயங்களில் இருந்து ஆரம்பி, பின்தான் உணர்வுரீதியாக கட்டுண்டுள்ள சூழ்நிலைகளை கையாள முடியும்.

எப்போது என்னால் விஷயங்களை மனமின்றி பார்க்கமுடியும் என்று உனக்கு தோன்றுகிறதோ அதன்பின் சொந்த பிடிப்புக்கள் மீது முயற்ச்சித்துப் பார். மெது மெதுவாக அதில் திறமை வந்துவிடும். நீ மனதோடு அதிக நாட்கள் இருந்துள்ளதால் மனமின்றி ஒரு கணம் கூட இருக்க முடியாது என்றே உனக்குத் தோன்றும். மனமின்றி இருக்க முடியும் என்பதை உன்னால் நம்ப முடியாது. ஆனால் முயற்சித்துப் பார். எந்த அளவு மனதை தள்ளி வைக்கிறாயோ அந்த அளவு வெளிச்சம் உனக்குத் தெரியும். ஏனெனில் அப்போது அங்கே கனவுகள் இல்லை, எனவே கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது, ஆகாயம் உனக்கு தெரிகிறது, சூரியன் எழுகிறது, அது வந்து உன் இதயத்தை தொடுகிறது, ஒளி உன்னை வந்தடைகிறது. உனக்குள் கனவுகள் குறைய குறைய நீ சத்யத்தால் மேலும் மேலும் நிரப்பப்படுவாய்.

யார் பிராமணன் - ஓஷோவின் கதை - 28

நான் ஜபல்பூர் எனப்படும் ஊரில் இருபது வருடங்கள் தங்கி இருந்தேன். அதன் பழைய பெயர் ஜபலாபுர். அது மிகப் பெரிய ஞானிகளில் ஒருவரும், உபநிஷதத்தை எழுதியவருள் ஒருவருமான சத்யகம் ஜபால் என்ற ஞானியின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த கதை சத்யகம் ஜபால் தெடர்புடையது.

சத்யகம் குழந்தையாய் இருக்கும் போதே மிகவும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் அனுபவிக்காதவரை அவர் எதையும் நம்புவதில்லை. அவர் இளைஞனாக ஆன போது – அவருக்கு பன்னிரெண்டு வயதானபோது – அவர் தனது தாயிடம், “இந்த நாட்டின் இளவரசன் காட்டில் இருக்கும் குருகுலம் செல்கிறான். அவனுக்கும் எனது வயதுதான். நானும் போக விரும்புகிறேன், நானும் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இதுதான் நேரம்.” என்றார்.

தாய், “அது மிகவும் கஷ்டம், சத்யகம். ஆனால் எனக்குத் தெரியும், நீ பிறவியிலேயே தேடுதல் ஆர்வமுடையவன். நீ உன்னை ஒருநாள் ஒரு குருவிடம் அனுப்பச் சொல்லிக் கேட்பாய் என்று நான் பயந்து கொண்டேதான் இருந்தேன். நான் ஒரு ஏழைபெண். ஆனால் அது பிரச்னையல்ல. பிரச்னை என்னவென்றால் நான் இளமையாக இருந்தபோது பல வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் ஏழை, ஆனால் அழகானவளாக இருந்தேன். அதனால் உனது தந்தை யாரென்று தெரியாது. நான் உன்னை ஒரு குருவிடம் அனுப்பினால் அவர்கள் உன் தந்தை யாரென்று கேட்பார்கள். உன் தந்தை யாரென்று தெரியாது என்று சொன்னால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடும்.

ஆனால் முயற்சி செய்வதில் எதுவும் தப்பில்லை. நீ போய் நான் உன்னிடம் இப்போது சொன்னது போலவே உண்மையை அப்படியே சொல். நான் ஏழையாக இருந்ததால் பலர் என்னுடைய உடலை உபயோகித்திருக்கின்றனர். என்னுடைய தந்தை யாரென்று எனக்குத் தெரியாது என்பதை சொல். உன்னுடைய பெயர் சத்யகம் என்றும் உன் தாய் பெயர் ஜபாலா என்றும் சொல். அப்போது அவர்கள் உன்னை சத்யகம் ஜபால் என்று அழைக்கட்டும். உண்மையை பொறுத்தவரை உனது தந்தை யாரென்பது ஒரு பிரச்னையல்ல.”

சத்யகம் காட்டில் உள்ள ஒரு வயதான குருவிடம் சென்றான். நிச்சயமாக முதல் கேள்வி, உன்னுடைய பெயர் என்ன? உன்னுடைய தந்தை பெயர் என்ன? என்று கேட்பார்கள் என்று தெரிந்தே போனான்.

அவர்கள் கேட்டவுடன் அவன் தன் தாய் சொன்னதை அப்படியே சொன்னான்.
அங்கு பல இளவரசர்கள், பணக்காரர்களின் புதல்வர்கள் ஆகியோர் சீடர்களாக இருந்தனர். அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் அந்த வயதான குரு, “நான் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். உனது தந்தை யாரென்பது பொருட்டல்ல. நீ ஆணித்தரமாகவும், நேர்மையாகவும், பயமில்லாமலும் இருப்பது தான் இங்கு முக்கியமான விஷயம். எந்தவிதமான தர்மசங்கடமும் இல்லாமல் உண்மையை சொல்லும் நேர்மை உன்னிடம் இருப்பதுதான் சிறப்பு. உன் தாய் உனக்கு சரியான பெயர்தான் கொடுத்திருக்கிறாள் சத்யகம் சத்யகம் என்றால் உண்மையை அடைவது மட்டுமே தேடுதலாக கொண்டவன் என்று பொருள். உனக்கு மிக அழகான தாய் கிடைத்திருக்கிறாள், நீ இன்றிலிருந்து சத்யகம் ஜபால் என்று அழைக்கப்படுவாய்.

இங்கு பிராமணர்கள் மட்டுமே சீடர்களாக ஏற்றுக்கொள்ளப் படுவது தான் சம்பிரதாயம். நான் உன்னை ஒரு பிராமணன் என்று பிரகடனப்படுத்துகிறேன். ஏனெனில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்த உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம் இருக்கும்.” என்றார்.

அவை மிக அழகான நாட்கள். அந்த வயதான குருவின் பெயர் உதாலக்.
சத்யகம் அவருடைய மிக நெருங்கிய அன்பான சீடனாக ஆனான். அவருக்கு தகுதி இருந்தது. அவர் மிகவும் தூய்மையானவராகவும் மிகவும் நிர்மலமானவராகவும் இருந்தார்.

ஆனால் உதாலக்கு சில வரையறைகள் இருந்தன. அவர் கற்றுக் கொடுப்பதில் மிகச் சிறந்தவராக இருந்த போதிலும் அவர் ஞானமடையவில்லை. அதனால் அவர் சத்யகமுக்கு எல்லா சமயநூல்களையும் கற்றுக் கொடுத்தார், அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், ஆனால் அவர் எல்லோரையும் நம்பவைப்பது போல சத்யகம்மை நம்பவைக்கவில்லை. சத்யகம் கேள்வி கேட்பார் என்பதற்காக அல்ல. அவருடைய நிர்மலமான தன்மை அந்த அளவு உண்மையானதாக இருந்தது. அவர், “நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாமே நான் நூல்களில் இருந்து படித்ததுதான். அவை எனக்கு சொந்தமானவை அல்ல. நான் அவற்றை அனுபவப்படவில்லை. அதை நான் வாழ்ந்து பார்த்ததில்லை. இன்னும் உள்ளே காட்டிற்க்குள் வாழும் ஒரு மனிதரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் அன்பானவர், கருணையானவர், உண்மையே வடிவானவர். நீ அவரிடம் போ.” என்று கூறி சத்யகம்மை அவரிடம் அனுப்பி வைத்தார்.

உதாலக் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாரே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. உதாலக் மிகப் பிரபலமானவர், சிறந்த பண்டிதர்.......
சத்யகம் அந்த இன்னொருவரிடம் சென்றார். அவர் சத்யகம்முக்கு பல புதிய சமய நூல்களையும், எல்லா வேதங்களையும், இந்த உலகத்தின் பழைமையான நூல்களையும் கற்பித்தார். பல வருடங்களுக்கு பிறகு, “இப்போது உனக்கு அனைத்தும் தெரியும், இனி கற்பதற்கு எதுவும் இல்லை. நீ திரும்பி வீட்டுக்குப் போகலாம்.” என்றார்.

முதலில் சத்யகம் உதாலக்கை காண சென்றார். உதாலக் ஜன்னல் வழியே காட்டிக்குள்ளிலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையின் வழியே சத்யகம் வருவதை பார்த்தார். அவர் அதிர்ச்சியடைந்தார். சத்யகம்மின் நிர்மலமான தன்மை காணாமல் போயிருந்தது. அதற்கு பதிலாக பெருமை குடியிருந்தது – எல்லோருக்கும் ஆவது போலவே, அவருக்கு இப்போது இந்த உலகத்திலுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் தெரியும் என்ற நினைப்பே ஆணவத்தை கொடுத்திருந்தது.

அவர் உள்ளே வந்தார். அவர் உதாலக்கின் பாதங்களை தொட குனியும்போது உதாலக், “எனது பாதங்களில் விழாதே. முதலில் நீ உன்னுடைய நிர்மலமான தன்மையை எங்கே தொலைத்தாய் என எனக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை தவறான மனிதரிடம் அனுப்பி விட்டேன் போலத் தெரிகிறது” என்றார்.

சத்யகம், “தவறான மனிதரிடமா, அவர் அறிய வேண்டிய அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார் .“ என்று கூறினார்.

உதாலக், “நீ எனது பாதங்களில் விழுவதற்கு முன் நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன் – நீ எதையாவது அனுபவப்பட்டாயா அல்லது எல்லாமே வெறும் தகவல்கள் மட்டும்தானா? ஏதாவது நிலைமாற்றம் நிகழ்ந்ததா? உனக்கு தெரிந்திருப்பவை அனைத்தும் உன்னுடையவை என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.

சத்யகம், “அப்படி எதையும் கூற முடியாது. நான் அறிந்திருப்பவை அனைத்தும் நூல்களில் உள்ளவை மட்டுமே. நான் எதையும் அனுபவப்படவில்லை” என்று கூறினார்.

அப்போது உதாலக், “நீ போன பிறகு வேறொரு மனிதரைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். நீ அவரிடம் போ. உனக்கு அனுபவப்படாத வரை திரும்பி வராதே. நான் உன்னை அனுப்பும் போது இருந்ததை விட மதிப்பு குறைந்தவனாக திரும்பி வந்திருக்கிறாய். மதிப்பிட முடியாத ஒன்றை நீ இழந்து விட்டாய். அறிவு என்று நீ அழைப்பது கடன் வாங்கப் பட்டதாக இருந்தால் அது உனது அறியாமையை மூடி மறைப்பதாக மட்டுமே இருக்கும். அது உன்னை அறிந்தவனாக ஆக்காது. நான் சொல்லும் இந்த மனிதரிடம் செல், அவரிடம், உண்மையை பற்றி, கடவுளைப் பற்றி, அன்பைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் பெறுவதற்காக வரவில்லை என்று கூறு. நீ கடவுளை, அன்பை, உண்மையை தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறாய் என்று சொல். உங்களால் இதை செய்ய முடியுமென்றால் நான் இங்கே இருக்கிறேன். இல்லையென்றால் நான் நேரத்தை வீணாக்காமல் வேறு ஒரு குருவை தேடிப் போகிறேன் என்று சொல்” என்று கூறினார்.

சத்யகம் சென்று அப்படியே கூறினார்.

அந்த குரு ஒரு மரத்தடியில் தனது சில சீடர்களுடன் உட்கார்ந்திருந்தார். இந்த கோரிக்கையை கேட்டவுடன் அவர், “அது சாத்தியமானதுதான், ஆனால் நீ வித்தியாசமான ஒன்றை கேட்கிறாய். இங்கே பல சீடர்கள் உள்ளனர். அவர்கள் இன்னும் அதிக விவரமான தகவல்கள் கேட்கின்றனர். இதைப் பற்றி, அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் உனக்கு தகவல்கள் சேகரிக்க விருப்பம் இல்லையென்றால், நீ உண்மையை தெரிந்து கொள்வதற்காக எதையும் செய்ய தயார் என்றால் சத்தியத்திற்கான உனது தேடுதல் உன்னையே நீ அர்ப்பணித்துக்கொள்ள தயாராக இருக்குமானால் நான் உனக்காக ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்”. என்றார்.

சத்யகம், “நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மையறியாமல் திரும்பி செல்ல என்னால் முடியாது. எனக்கு சதயகம் என்று பெயரிட்ட எனது தாயிடமோ, அல்லது நான் உண்மையை கூறிய ஒரே காரணத்தினாலேயே நான் பிராமணனா இல்லையா என்று கவலைப் படாமல் என்னை ஏற்றுக் கொண்ட எனது குருவிடமோ திரும்பி போக முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.” என்று கேட்டான்.

குரு, “இங்கே நீ பார்க்கும் இந்த பசுக்களை கூட்டிக் கொண்டு உள்ளே காட்டிற்க்குள் சென்று விடு. எந்த மனிதருடனும் தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் எவ்வளவு அடர்ந்த காட்டிற்க்குள் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் உள்ளே சென்று விடு. நீ மொழியை, வார்த்தைகளை மறக்கவேண்டும் என்பதுதான் காரணம். பசுக்களுடன் வாழ், அவற்றை பாதுகாத்து வா, உனது குழலுடன் விளையாடு, நடனமாடு – ஆனால் வார்த்தைகளை மறந்துவிடு. இந்த பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆனவுடன் திரும்பி வா.” என்றார்.

இங்கே இருந்த மற்ற சீடர்களுக்கு என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை – ஏனெனில் அங்கு இருந்தது ஒரு டஜன் அல்லது இரண்டு டஜன் பசுக்கள்தான். அவை எப்போது ஆயிரம் பசுக்கள் ஆவது ?

ஆனால் சத்யகம் பசுக்களை கூட்டிக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள், மனித சஞ்சாரமற்ற இடத்துக்கு, மனித வாடையற்ற இடத்துக்கு சென்றார். முதல் சில தினங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பசுக்கள் மட்டுமே அவரது தோழமையாக இருந்தன. அவை மிக அமைதியான மக்கள். அவன் தனது புல்லாங்குழலை வாசிப்பான், காட்டில் தனியாக நடனமாடுவான், மரத்தடியில் படுத்து ஓய்வெடுப்பான்.
முதல் சில வருடங்கள் தொடர்ந்து பசுக்களை கணக்கெடுத்து வந்தான். பின் மெது மெதுவாக அதை விட்டு விட்டான். ஏனெனில் அவை ஆயிரமாக மாறுவது இயலாததாக தோன்றியது. மேலும் எப்படி கணக்கெடுப்பது என்பதையும் அவன் மறந்துவிட்டான். மொழி மறைந்துவிட்டது.

வார்த்தைகள் மறைந்துவிட்டன. கணக்கு எடுக்க இயலவில்லை.

இந்த கதை மிகவும் அழகானது.

பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் அடைந்தவுடன் பசுக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. ஏனெனில் அவைகள் வீடு செல்ல விரும்பின. இவனுக்கு எப்படி எண்ணுவது என்பது மறந்து போய் விட்டது. இறுதியில் பசுக்கள், “நாம் இவனுக்கு சொல்லியாக வேண்டும். இல்லாவிடில் இந்த தனிமையான வனமே நமது கல்லறையாகிவிடும்.” என்று முடிவெடுத்தன.

அதனால் ஒருநாள் பசுக்கள் சத்யகம்மை பிடித்து நிறுத்தி, “இங்கே பார், சத்யகம், நாங்கள் இப்போது ஆயிரம் பசுக்களாகி விட்டோம். நாம் இப்போது வீடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றன.

சத்யகம், “உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இப்போது என்னிடம் இதை சொல்லியிராவிட்டால்........ நான் வீட்டை பற்றியும் திரும்பி போவது பற்றியும் மறந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் மிகவும் அழகானதாக..... பரவசமாக இருக்கிறது. இந்த மௌனத்தில் மலர்கள் பூச்சொரிகின்றன. நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். நான் யார் என்பதையும் நான் எதற்காக இங்கே வந்தேன் என்பதையும் நான் மறந்து விட்டேன். இங்கே எல்லாமும் முடிவடைந்துவிட்டது. புல்லாங்குழல் வாசிப்பது மட்டுமே போதும். மரத்தடியில் ஓய்வெடுப்பது மட்டுமே போதும், இந்த அழகான பசுக்கள் சுற்றிலும் அமைதியாக இருப்பதை பார்ப்பது மட்டுமே மிக அருமையானது. ஆனால் நீங்கள் வற்புறுத்தினால், நாம் திரும்பிப் போவோம்.” என்றான்.

அந்த குருவின் சீடர்கள் சத்யகம் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவதை பார்த்தனர். அவர்கள் குருவிடம், “அவன் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவான் என நாங்கள் நினைக்கவேயில்லை. அவன் வந்து விட்டான். நாங்கள் எண்ணி விட்டோம் அவை மிகச் சரியாக ஆயிரம் பசுக்கள் உள்ளன. அவன் வருகிறான்.” என்றனர்.

அவன் வந்து நின்றான்........பசுக் கூட்டத்தின் நடுவே நின்றான்.

குரு தனது சீடர்களிடம், “நீங்கள் தவறாக எண்ணியிருக்கிறீர்கள். அங்கே ஆயிரத்தோரு பசுக்கள் உள்ளன. நீங்கள் சத்யகம்மை எண்ண மறந்து விட்டீர்கள். அவன் உங்களது உலகத்தை விட்டு தாண்டி போய் விட்டான். அவன் நிர்மலமான தன்மையினுள், மௌனத்தினுள், அறிவுக்கெட்டாதனுள் நுழைந்து விட்டான். அவன் பசுக்கள் எப்படி நிற்கிறதோ அங்கேயே நிற்கிறான் பாருங்கள்.” என்றார்.

குரு, “சத்யகம், நீ வெளியே வரலாம். இப்போது நீ உன்னை இங்கே அனுப்பிய உனது குருவிடம் செல்லலாம். அவர் மிகவும் வயதானவர், அவர் உன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடும். உன் தாய் உனக்காக காத்துக் கொண்டிருப்பாள்.” என்றார்.

சத்யகம் தனது முதல் ஆசிரியரிடம் – சத்யகம் ஒரு தகவல் களஞ்சியமாக மட்டுமே மாறியதால் தனது வெகுளித்தனத்தை தொலைத்து, தனது நிலையிலிருந்து கீழிறங்கி ஒரு பிராமணனாக இல்லாமல் போய் விட்டார் எனக் கூறி தனது பாதத்தில் விழக் கூடாது என தடுத்த உதாலக்கிடம் - திரும்பி வந்தார். இவர் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த உதாலக் பின் வாசல் வழியாக ஓடிப் போய் விட்டார். ஏனெனில் இப்போது சத்யகம் தனது பாதங்களில் விழ அனுமதிக்க கூடாது. தான்தான் அவர் பாதங்களில் விழ வேண்டும். ஏனெனில் உதாலக் இப்போது வெறும் பண்டிட் மட்டுமே, ஆனால் சத்யகம் இப்போது விழிப்புணர்வு பெற்று அறிந்தவராகி விட்டார்.

உதாலக் வீட்டிலிருந்து தப்பிப் போய் விட்டார். “என்னால் அவரை சந்திக்க முடியாது. நான் வெட்கமடைகிறேன். உதாலக் இறந்து போய்விட்டார். அவர் உன்னை நினைத்துக் கொண்டே இறந்தார் என சத்யகம்மிடம் சொல்லி விடு. அவரை அவருடைய தாயிடம் போக சொல்” என தனது மனைவியிடம் சொல்ல சொல்லிவிட்டு போய் விட்டார். வெவ்வேறு விதமான மக்கள் இருக்கிறார்கள்.

சத்யகம் வீடு திரும்பினார்.

தாய்க்கு மிகவும் வயதாகி விட்டிருந்தது. ஆனால் அவள் காத்துக் கொண்டே...........இருந்தாள். “உண்மை எப்போதும் ஜெயிக்கும் என்பதை நீ நிரூபித்துவிட்டாய், சத்யகம். பிராமணன் என்பவன் பிறப்பது இல்லை, பிராமணன் என்பது அடையவேண்டிய ஒரு குணாதிசியம் என்பதை நீ நிரூபித்துவிட்டாய். ஒவ்வெருவரும் பிறப்பால் சூத்திரர்தான், ஏனெனில் ஒவ்வொருவரும் பிறப்பில் ஒன்றானவரே. ஒருவன் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதனாலும், ஒருமை படுத்திக் கொள்வதனாலும், மையம் மற்றும் ஞானத்தை அடைவதனாலும், தான் ஒரு பிராமணன் என்பதை நிரூபிக்கவேண்டும். பிராமண குடும்பத்தில் பிறப்பதால் மட்டுமே அவன் பிராமணன் ஆவதில்லை.” என்றாள்.

Source : BEYOND ENLIGHTENMENT, che - 25

Thursday, October 28, 2010

மலர் 3 இணைய இதழ் 3 11 அக்டோபர் 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி 2 கோவை NH – 47-ல், கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் மையம் தனது தனித்துவமான விதத்தில் பலவிதமான நபர்களின் பிரச்னைகளின் அடி ஆழத்தை கண்டாய்ந்து அவர்கள் அதிலிருந்து வெளி வர உதவி வருகிறது. நான் இதிலிருந்து வெளிவர வேண்டும், ஆனால் எப்படி என தெரியவில்லையே என்று முழுமையாக விரும்பும் நபர்கள் ஒருமுறை முயற்சி செய்யலாம். தேவை முழுமையான விருப்பம் மட்டுமே. அப்போதுதான் தன்னை வெளிப்படுத்தி கொள்ள அவர்களால் முடியும். இந்த ஓஷோ மையத்தை பொறுத்தவரை யாரும் மதிப்பீடு செய்யப்படுவதில்லை, அவரவர் சூழ்நிலை மற்றும் வளர்ப்பு மற்றும் பதிவுகள் மூலமே அனைத்தும் நடக்கிறது என்பதை அவரவர்களுக்கே புரிய வைப்பதே நோக்கம் என்பதால் தயக்கம் தேவையில்லை. அவரவர்களை அவரவர்களுக்கே ஓஷோவின் வழிகாட்டல் மற்றும் தியானங்களின் படி விழிப்புணர்வு கொள்ள வைப்பதையே நாம் தனிநபர் அகநலபகுத்தாய்வு என குறிப்பிடுகிறோம்.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். தங்கி தியானம் செய்யலாம்.

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.
உங்களது வாழ்வை ஓர் அழகியல் அனுபவமாக்குங்கள். அப்படி அழகியல் அனுபவமாக மாற்றப் பெரிதாக ஒன்றும் தேவையில்லை. வெறும் அழகான உணர்வு நிலையே தேவை ஒரு நுண்ணுணர்வுள்ள ஆன்மா. அதிக உணர்வு கொள்ளுங்கள், அதிக உணர்ச்சியுடனிருங்கள். அப்போது நீங்கள் அதிக ஆன்ம உணர்வும் பெறுவீர்கள்.
2.
ஒருமையில் இருக்கும் துணிவை நுண்ணறிவு தருகிறது. மேலும் படைப்புத் தன்மையையும் நுண்ணறிவு தருகிறது. படைப்பதற்கு மிகப் பெரிய பசியும், மிப்பெரிய தவிப்பும் எழுகிறது. அதற்குப் பின்தான், அதன் தொடர்ச்சியாகத்தான், நீங்கள் மகிழ்ச்சியடைய முடியும், நீங்கள் பரமானந்தமடைய முடியும்.
3.
வாழ்வுக்கு மிகப்பெரிய ஒட்டுமொத்தமான ஆம் என்பதையே நான் உங்களுக்குக் கற்பிக்கிறேன். நான் உங்களுக்குத் துறந்துவிடுதலைக் கற்பிக்கவில்லை, மாறாக மகிழ்ச்சியடைதலையே கற்பிக்கிறேன். மகிழ்ச்சி கொள், மகிழ்ச்சி கொள், மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன், மகிழ்ச்சி கொள், ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும்போது கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுவீர்கள்.

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

எனது தலையங்கங்கள் அமைவதுதான். நான் யோசித்து எழுதுவது அல்ல. அதில் வரும் கருத்துக்களும், பார்வைகளும் ஓஷோவைப் பகிர்ந்து கொள்ளும்போது வெளிப்படுபவைதான். ஆகவே இதில் உங்கள் பங்கும், ஓஷோவின் பங்கும் நிறைய பெரும்பகுதியாக உள்ளன. எனது பகுதி நான் இதற்குப் பயன்படுகிறேன் என்பதே. தலையங்கம் சில ஒருமாதம், இரண்டு மாதம் முன்பே வந்துவிடும். எழுதிவிடுவேன். சில சமயம் கடைசி நாட்களில் வரும். ஏன் வராமலேயே போகும் ஒரு கட்டம் வரலாம். அப்போது தலையங்கம் இருக்காது.

சரி, நேற்று ஒரு தலையங்கம் ஒரு நண்பரின் பகிர்ந்து கொள்ளுதலில் பிறந்துவிட்டது. இதோ எழுதிவிடுகிறேன்.

நமது ஓஷோ அன்பர்களுக்கும், சந்நியாசிகளுக்கும், தியானம் செய்பவர்களுக்கும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்குமான விஷயம் இது.

முதலில் இது எப்படி வந்தது என்றால், இந்த ஒருநாள் முகாம், மூன்று நாள் முகாம் நீங்கள் ஏன் நடத்தக் கூடாது, ஏன் நடத்துவதில்லை, அதற்கான வசதியும் வாய்ப்பும் இருந்தும் ஏன் செய்வதில்லை என்பதில் ஆரம்பித்தது.

ஒரு நாள் மூன்று நாள் தியான முகாம்கள் ஓரளவு நடத்தப்பட்டு வருகின்றன. நானும் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை, ஏறத்தாழ பதிமூன்று வருடங்கள் நடத்தியும் வந்தவன்தான்.

இப்போது நான் அதைச் செய்வதில்லை. செய்யத் தயாரில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஆறு அல்லது எட்டு ஒருநாள் தியான முகாம்கள் திருப்பூரில் எனது இடத்தில் நமது ஓஷோ சந்நியாசி ஒருவரால் நடத்தப்பட்டது. அவருக்கு வேறு வேலைகள் வந்து விட்டபோது நின்று விட்டது. ஆகவே தயவுசெய்து நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் அதற்கு எதிரானவன் அல்ல. தேவையற்றது என்ற கருத்துக் கொண்டவன் அல்ல. ஆதரிக்காதவன் அல்ல.

ஆனால் அது மட்டும் போதாது, அதோடு நின்றுவிடக் கூடாது, புதியவர்களுக்கு அது தேவை, அது ஒரு அறிமுகம், ஒரு முதல் தரிசனம் என்று கூறுகிறேன். இதுவேதான் தினமும் ஒருமணி நேரம் டைனமிக்கோ, குண்டலினியோ செய்ய வருபவர்களுக்கும் கூறுகிறேன். அந்த ஒரு மணிநேர தியானம் இடைவிடாது ஒரு பயிற்சியாகச் செய்வதால் மட்டும் எதுவும் நிகழ்ந்துவிடாது. மறுபடியும் நான் சொல்லவேண்டும். நான் அதற்கு எதிரானவன் அல்ல. ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது என்பவன்.

எந்த அனுபவத்தையும் மனம் தனதாக்கிக் கொள்ளும், தனது அகங்காரத்தில் சேர்த்துக் கொள்ளும். உடல் பழகி விடும், மனம் தயாராகி விடும். மேலும் தியானத்தைத் தொடர்ந்து பயிற்சியாக செய்வதனால் மனம் புத்துணர்ச்சி பெறலாம், உடலின் நோய் தீரலாம். பொறுமையும், அமைதியும் அதிகமாகலாம். கோபம் குறையலாம், திறன் அதிகமாகலாம், உணர்வுக் கூர்மையும் புத்திக் கூர்மையும் மேலும் கூர்மையடையலாம். சங்கடங்கள், பதட்டங்கள் குறையலாம். தெளிவும் தைரியமும் பிறக்கலாம். சுருக்கமாக மனமாற்றமும், ஏன், குண மாற்றமும் எளிதாக நடக்கலாம்.

ஆனால் ஓஷோவின் கனவு, ஜோர்புத்தா - ஒரு நிலைமாற்றம். ஓஷோவின் கனவு இயல்பான வாழ்விலிருந்து வலுக்கட்டாயமாக எதையும் மாற்றாமல் விழிப்புணர்வின் மூலம் புத்தாவாதல். ஜோர்பாவாக இரு, இயல்போடு இரு. ஆனால் உனது கவனம் புத்தாவினுடையதாக இருக்கட்டும். வேர் விடுவது ஜோர்பா வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை. கிளை விட்டு மலராய் பூப்பது புத்தத் தன்மை. இவை ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருப்பவர் ஓஷோ.

ஆகவே உங்களது தியானத்தை இந்த உலகத்தோடு, இந்த உடலோடு, உங்கள் ஆசைகள், உங்கள் நோக்கங்கள், உங்கள் எதிர்பார்ப்புகளோடு பொருத்தி விடாதீர்கள். அவை நிறைவேற பயன்படுத்திக் கொள்வதே நோக்கமாக்கிக் கொண்டு விடாதீர்கள். ஏனெனில் அப்போது நீங்கள் தியானம் செய்வதுகூட உங்கள் பேராசையாக, உங்கள் இவ்வுலக குறிக்கோளுக்கான முயற்சியாக ஆகிப் போகிறது. அப்போது நீங்கள் இன்னும் இந்த உலக வாழ்க்கை ஒரு கனவு, உங்கள் மனதின் பிரதிபலிப்பு என்பதை மறந்தவர்களாய் ஆகிவிடுகிறீர்கள். ஓஷோவின் மலர்வதற்காக வேர்விடும் மரத்தைப் போன்ற ஜோர்புத்தாவை மறந்துவிடுகிறோம். இன்னும் உள்முகமாய் திரும்பாமலேதான் தியானம் செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் புறவாழ்க்கையின் மேலேயே நமது கண்கள் பதிந்துள்ளன.

இப்படித்தான் எல்லா சாமியார்களின் எல்லா ஆசிரமங்களும் உள்ளன. இதுதான் அடிப்படை வேறுபாடு. உனது இப்போது வாழும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள தியானத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள் எல்லா இடத்திலும்.

ஆனால் ஓஷோ தியானத்திற்காக உனது இப்போது வாழும் வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று சொல்கிறார். தியானத்தை மேம்படுத்திக்கொள்ளும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறார் ஓஷோ. தியானத்தின் மூலமாக சக்தியை, பலனைத் திரும்ப தியானத்தில் இன்னும் ஆழமாகப் போகவே உபயோகப்படுத்தச் சொல்கிறார் ஓஷோ. வாழ்வில் உன்னிடம் பணம் இருக்கிறதா, படிப்பு இருக்கிறதா, கலைத்திறன் இருக்கிறதா, படைப்பாற்றல் இருக்கிறதா, எல்லாவற்றையும் தியானத்தில் குதிக்க, தியானத்தில் மூழ்கப் பயன்படுத்து என்பவர் ஓஷோ. நல்ல மனைவி என்றால் அவளுடன் சேர்ந்து தியானி. மோசமான மனைவி என்றால் கிடைக்கும் தனிமையை தியானிக்கப் பயன்படுத்து. புகைப்பதை விடமுடியவில்லையா, அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்காதே, அதை தியானமாக மாற்றி அதன்மூலமும் தியானத்திற்கு வழி சொல்கிறேன் என்பவர் ஓஷோ. நல்ல குணமோ, கெட்ட குணமோ, பணக்காரனோ ஏழையோ, உழைப்பாளியோ சோம்பேறியோ எந்தவித வாழ்க்கை உனக்கு அமைந்திருந்தாலும், நீ வாழ்ந்தாலும் நீ செய்ய வேண்டியது ஒன்றுதான்.

அது, இதைப் பெரிதுபடுத்துவதை நிறுத்திவிட்டு, இதிலுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதை விட்டுவிட்டு, இதில் போட்டிபோடாமல், இதில் வெற்றியைத் தேடாமல் உள்நோக்கித் திரும்பு. உனது வாழ்வு எதுவாய் இருந்தாலும் அதிலுள்ள ஆதரவுக் கணங்களை, மகிழ்ச்சிக் கணங்களை, அது ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளை, அதனால் உனக்கு தெரியவந்துள்ள உண்மைகளைப் பயன்படுத்தி தியானத்தில் குதி.

உடல்நிலை சரியில்லையா, அதுவும் நல்லதுதான். எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது, இதைவிட அருமையான எந்தப் பரிசை பிரபஞ்ச இருப்பு உனக்கு கொடுக்கமுடியும். சாவு தெரிந்துவிட்டது, இனி வீணடிக்க நேரமில்லை, பயமில்லை, வறட்டு கௌரவமும், போலித்தனமும் தேவையில்லை. வாழ்ந்து பார்த்துவிடலாம் முழுமையாக என்கிறார் ஓஷோ. அது போல எதையும் தியானத்திற்குப் பயன்படுத்தச் சொன்னார் ஓஷோ. மாறாக மற்றவர்கள் தியானத்தை எதற்கும் பயன்படுத்தச் சொல்லித் தருகிறார்கள். அதனால் என்ன பயன். அலையில் ஆடும் படகை அசையாமல் நிறுத்தும் முயற்சி இது.

மேலும் மாதத்திற்கு ஒருநாள், ஒருநாளில் ஒருமணி நேரம் தியானம் செய்வது எதற்கு. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அனுபவத்தைச் சுமந்துகொண்டு தினசரி வாழ்க்கையில் அதைத் தேட வேண்டும் என்பதுதான் சரியான வழி. அதை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, மறந்துவிட்டு, சராசரி வாழ்க்கைக்கு வந்துவிட்டால் அது பயனளிக்காது. கண்டிப்பாக நிலைமாற்றமோ, ஜோர்புத்தாவோ நடக்காது. மனமாற்றமும் குணமாற்றமும் பற்றி நான் பேசவில்லை. ஒருமணி நேரம் தியானம் புரிந்துவிட்டு 23 மணிநேரம் அதற்கு எதிரிடையாக செயல்பட்டால் அதில் என்னபயன், அது பயித்தியக்காரத்தனம், வெறும் அகங்காரத் தீனிதான், என்கிறார் ஓஷோ.

ஆகவே ஒருநாளில் ஒருமணிநேரம், ஒரு மாதத்தில் ஒருநாள் ஆழமான அனுபவம் பெற்று, அதை மீதமுள்ள நேரம் முழுவதுமான வாழ்வில் புகுத்துங்கள். அதுதான் என் விருப்பம்.

வாழ்வில் வசதியும், வாய்ப்பும் எப்படிக் கிடைக்கிறதோ அதை தியானத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதை எப்படி தியானத்திற்கு பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள். தோல்வியில் கிடைக்கும் அமைதியும், தனிமையும் அருமையான வாய்ப்புத்தானே. அவமானத்தில் ஏற்படும் அகங்காரத்தின் இறப்பு மனதைக் கடக்கும் ஒரு சந்தர்ப்பம் தானே. நோய்வாய்படுவது உடலின் இறப்பை உணர்த்தும் உபயோகமுள்ளதுதானே.

ஓஷோ சமுதாய வாழ்வில் எதையும் சாதிக்கச் சொல்லவில்லை. பாதுகாப்பையும் உறவையும் பலப்படுத்திக் கொள்ள சொல்லவில்லை. காமத்தையும், கோபத்தையும், பேராசையும், அகங்காரத்தையும் நியாயப்படுத்திக்கொள்ள சொல்லவில்லை. அறிவாய் அவரை பயன்படுத்தச் சொல்லவில்லை. நல்லவனாய், வல்லவனாய் இரு என்றோ, எதற்கும் எதிரியாய், புரட்சியாளனாய் இரு என்றோ ஓஷோ சொல்லவில்லை. கெட்ட குணங்களை விட வேண்டாம் என்றோ, நல்ல குணங்கள் கூடாது என்றோ ஓஷோ சொல்லவில்லை. ஓஷோ சொல்வதெல்லாம் எனக்கு இந்த கனவுலக வாழ்வில் அக்கறை கிடையாது நீயும் அதைப் பொருட்படுத்தாதே. உண்மை உலகம் தியானத்திற்குப் பின்தான் தெரியும். ஆகவே தியானம் செய். அதற்கு இந்த உலகத்தை, கனவுலகத்தை பயன்படுத்த முடிந்த அளவு பயன்படுத்திக் கொள். பயணம் இனிதாக இருக்கும். சண்டையிடும் சக்தியும் மிச்சமாகும். அவ்வளவுதான். இருப்பது கனவுலகில் எனும்போது இதுவே சிறந்த உபாயம். அவ்வளவுதான்.

ஆகவே நம்பர்களே விழிப்புணர்வோடு இயல்பாயிரு அதுதான் ஜோர்புத்தா ஜோர்பா எனும் புத்தர். அதற்கு அப்படி முழு வாழ்வையும் முழுநேரத்தையும் விழிப்புணர்வோடிருக்க பணயம் வைக்கும் தைரியத்திற்கு, அந்த தைரியத்தைப் பெறுவதற்கு, அந்த துணிச்சலை, உள்முகமாய் திருப்புதலே வாழ்வு என்று முடிவெடுப்பதற்கு ஒரு ஆரம்பமாக, ஒரு உதவியாக, ஒரு தரிசனமாக மட்டுமே தியானப் பயிற்சிகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அவை சமுதாய வாழ்விற்கு உதவும்பொருட்டு ஏற்படுத்தப்பட்டவை அல்ல. உடல் உபாதைகளைக் குறைத்துக் கொள்வதற்கான உபாயங்கள் அல்ல. அவை உண்மையின் தரிசனங்கள். எவரெஸ்ட் சிகரத்தை தரிசிப்பது வேறு. அங்கு ஏறி அதன் உச்சியை அடைவது வேறு. ஆகவே முழு வாழ்க்கையையும் தியானத்தை நோக்கியதாக, தியானத்திற்கு உதவுவதாக, அமைத்துக் கொள்ள முடிவு எடுங்கள்.

எல்லாவற்றையும் தியானமாக மாற்றும் மந்திரக்கோல் விழிப்புணர்வை விட்டுவிடாதிருங்கள். பிறகு இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் என்கிறார் ஓஷோ. அதேபோல பலரும் என்னிடம் கேட்கின்றனர், ஏன் நீங்கள் 5 பேர் மட்டும்தான் ஒரே நேரத்தில் தியானம் செய்ய இருக்கவேண்டும், அதிகம்பேர் வேண்டாம் என்கிறீர்கள் என்று.

கூட்டத்தில் நாம் ஏற்கனவே சிக்குண்டு கிடக்கிறோம். கூட்ட மனப்பான்மை ஏற்கனவே நம்மை ஆட்டிப் படைக்கிறது. மேலும் அகங்காரம் கூட்டத்தில் வெளியே முண்டியடித்து வருவதற்குத் துடிக்கும். ஆகவே கூட்டத்தைத் தவிர்த்தால் கூட்டமனப்பான்மை இல்லாமல், அகங்காரத்தின் வெளிப்பாடு குறைவாயிருக்கும்படியாக நாம் இருக்கமுடியும். அதோடு கூட்டத்தில் குளிர்காயும் உணர்வைத் தவிர்ப்பது தியானத்திற்கு மிகவும் அவசியம். தியானம் தனிமனிதனுக்கானது, தனக்குள் செல்லும் விஷயம். இதில் கூட்டத்தின் பங்கு ஒன்றுமேயில்லை. திருவிழாவும், கொண்டாட்டமும் தனிமையிலேயே உள்ளிருந்து பொங்கி எழுவதே சிறப்பு. வெளித்திருவிழாவும், கொண்டாட்டமும் நமது விழிப்புணர்வை குறைத்து, உணர்வற்ற மனம் வெளிவரவே உதவும்.

நான் இதற்கு எதிரானவன் அல்ல. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். அதிக நபர்கள் கொண்ட தியானமுகாம்கள் நடத்துவதை எதிர்ப்பவன் அல்ல நான். அதுவும்கூட இன்றைய மனிதனின் ஆரம்பக் கட்டத்திற்கு தேவைப்படலாம், உதவலாம். உதவி புரிகிறது. ஆனால் திரும்பவும் அறிமுகத்திற்கு மட்டுமே அது. ஆழமாகச் செல்ல கூட்டம் நிச்சயமாக ஒரு தடை. எனவே நான் அதைச் செய்வதில்லை. அவ்வளவுதான்.

சேர்ந்து செய்கையில் சக்தி கிடைக்கிறது, உற்சாகம் பிறக்கிறது, மகிழ்ச்சி அடைகிறேன் என்பது உண்மைதான். ஆனால் அது ஆழமற்றது. வந்தது போலவே கூட்டம் கொண்டு போய்விடும். ஆகவே அது உன்னுடையதல்ல. அது தியானமல்ல, அது விழிப்புணர்வின் விளைவு அல்ல. அது நமது கூட்ட மனபான்மையின் விளைவுதான். அங்கு சக்தி அதிகம் இருப்பது உண்மைதான். அதைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறு ஏதும் இருப்பதாக நான் சொல்லவில்லை. முதல் அனுபவத்திற்கு அது உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது விழிப்புணர்வற்றது. ஆழமற்றது. அவ்வளவுதான். ஆகவே அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது விழிப்புணர்வு வளர்ச்சிக்கு உதவாது. விழிப்புணர்வு வளர்ச்சிக்கு இடையூறு கூட ஏற்படுத்தும். ஆகவே நான் ஒருமையில் தியானம் செய்ய ஒரு வாய்ப்பை உருவாக்க முயல்கிறேன். அவ்வளவுதான்.

நான் முடிந்தவரை ஒருவராகக் கூட தியானம் செய்யச் செல்கிறேன். 2 பேர் டைனமிக் செய்ய இருந்தால் தனிதனியாக்க் கூட செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். ஏனெனில் தியானம் மிகவும் அந்தரங்கமானது என்கிறார் ஓஷோ.

மேலும் கூட தியானம் செய்யும் முறை ஒரு ஆலோசனை, ஒரு வழிகாட்டுதல் தானே தவிர விதி அல்ல என்று ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறுகிறேன். டைனமிக் என்றால் சில ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் ஓஷோ கொடுத்திருக்கிறார். ஆனால் எப்படிச் செய்வது என்பதையும், எப்படி அந்த ஆலோசனைகளை முழுமையாகப் பயன்படுத்துவது என்பதையும் எப்படி அந்த ஆலோசனைகளின் பயனை நாம் முழுமையாக அடையும்படி மாறுவது என்பதையும் நீதான் வகுத்துக் கொள்ளவேண்டும். உனது உடல் மற்றும் மனதிற்கு இசைந்தபடி, அவற்றோடு சண்டையிடாமல், எப்படிச் செய்வது – நமது மனதை தளர்த்தி அது கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, அடக்கி வைத்துள்ளவைகளை அனுமதிக்க உன் மனதை எப்படி அணுக வேண்டும் என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும். ஒரு விளையாட்டில் ஈடுபடும் மனநிலையை நீதான் தியானம் செய்யுமுன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னுடன் சண்டை போடாமல், நீ செய்வதை மகிழ்வோடு அனுபவிக்கும் மனநிலையை நீதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி உன்னை நீ தயார்செய்து கொண்டு ஓஷோவின் தியான முறைகளில் ஈடுபட்டால்தான் அவரது ஆலோசனைகளும் வழிமுறைகளும் உனக்கு ஆழம்வரை செல்லவும், நிலைமாற்ற அனுபவத்தை தொட்டுக் காட்டவும் உதவும்.

எனவே நான் தனிமனிதன் பலவிதங்களிலும் தனக்கே உரிய விதத்தில், வேகத்தில், தனது பின்புலத்தில், ஓஷோவைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புத் தர விரும்புகிறேன். அவ்வளவுதான்.

அன்பு,
சித்.

கவிதைப் பகுதி

அடிப்படைத்தேவை

தாய்........
குழந்தையைக் கொஞ்சினாள்,
அது குதூகலித்தது!
குழந்தையை அணைத்தாள்,
அது நிறைவாய் உணர்ந்தது!
குழந்தையைத் திட்டினாள்,
அது முறைத்தது!
குழந்தைக்கு மருந்து கொடுத்தாள்,
அது அடம் பிடித்தது!
குழந்தையை அடித்தாள்,
அது அழுதது!

அனைத்திலும்........
சக்தி இருந்தது,
உயிர் இருந்தது,
துடிப்பு இருந்தது,!

தாய் ஒருநாள்.........
அலட்சிய நாடகம் ஆடினாள்........
வேலையாள் உணவு கொடுத்தான்,
உடை கொடுத்தான்,

ஆனால்......
குழந்தை வாடியது,!
சக்தி இழந்தது,
துடிப்பை மறந்தது!!

ஏன்
அன்பு.....அன்பு......அன்பு
ஆம், மனித ஆன்மாவின்
அடிப்படைத் தேவையது!!!

ஓஷோ வீடியோ

1. Osho : Crimes Against Humanity, Nature, Environment and Ecology

2. Osho : The Compulsion to Reach Power and Prestige

3. Osho : Something which Never Dies


தியான யுக்திகள்

இடைவெளியை உணர்ந்து பார்

பிரபஞ்சம், தெய்வீகம், இடைவெளியில்தான் உள்ளது. இரண்டு வார்த்தைகளுக்கிடையில், இரண்டு எண்ணங்களுக்கிடையில், இரண்டு ஆசைகளுக்கிடையில், இரண்டு உணர்ச்சிகளுக்கிடையில், இரண்டு உணர்வுகளுக்கிடையில் உள்ள இடைவேளைகளில்தான் உள்ளது. தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையே, அல்லது விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே உள்ள இடைபட்டவேளையில் உள்ளது. உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள இடைவெளியில் உள்ளது. அன்பு வெறுப்பாக மாறும்போது இங்கே அன்பு போயிருக்கும், இன்னும் வெறுப்பு வந்திருக்காது, அது அன்பாக இருக்காது, ஆனால் அது இன்னும் வெறுப்பாகவில்லை அந்த இடைப்பட்ட நேரம் – கடந்தகாலம் எதிர்காலமாக மாறும்போது இடைவெளி – அது அன்பாக இல்லை, ஆனால் எதிர்காலம் இன்னும் வரவில்லை, அந்த இடைவெளி, மிகச் சிறிய இடைவெளி அதுதான் நிகழ்காலம் அதுதான் இப்போது. அது மிகச் சிறியது எனவே நீ அதை ஒரு காலத்தின் நேரமாக அழைக்க முடியாது. அது பார்க்க முடியாத அளவு சிறியது. அதை பிரிக்கமுடியாது. அந்த கணநேரம் காணமுடியாதது. அது ஒவ்வொரு கணமும் ஆயிரத்தோரு வழிகளில் வருகிறது.

உனது மனநிலை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகிறது, நீ அவற்றின் ஊடே செல்கிறாய். இருபத்தி நான்கு மணி நேரத்தில் நீ பலமுறை தெய்வீகத்தை கடந்து வருகிறாய், ஆனாலும் எப்படி நீ தொடர்ந்து தவற விடுகிறாய் என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் நாம் இடைவெளியை பார்ப்பதேயில்லை, இடைவெளியை பார்க்காமல் இருக்கும் தந்திரத்தை நாம் கற்று வைத்திருக்கிறோம். அது மிகச் சிறியது, ஆகவே அது வந்து போவதே நமக்கு தெரிவதில்லை. அதைப் பற்றிய உணர்வே நமக்கு இல்லை. ஏதாவது ஒரு விஷயம் நம்மிடமிருந்து போய், அது கடந்தகாலம் என ஆன பின் அல்லது எதிர்காலமாக இருக்கிறது இன்னும் வந்து சேரவில்லை எனும் போது நமக்கு அதைப்பற்றிய உணர்வு வருகிறது. ஆனால் அது நம்மிடம் இங்கிருக்கும்போது எப்படியோ அதை பார்க்காமல் நாம் சமாளித்துக் கொள்கிறோம்.

நீ கோபமாக இருக்கும்போது நீ அதைப் பார்ப்பதேயில்லை, பின் செய்த பிழைக்காக வருந்துகிறாய். பின் அதுவே திரும்பவும் நடக்கிறது, பின் திரும்பவும் நீ வருத்தப்படுகிறாய், மேலும் அது திரும்ப திரும்ப நடப்பதால் நீ சஞ்சலப்படுகிறாய். ஆனால் அது வரும்போது நீ குருடாக, செவிடாக, தன்னுணர்வற்றவனாக, விழிப்புணர்வின்றி திடீரென ஆகி விடுகிறாய். அந்த இடைநேரம் மிகச் சிறியதாக இருப்பதால் அதை தவற விடும் கவனம் உனக்கு இருப்பதில்லை. அது நுண்ணியது, அதை முழுமையான விழிப்புணர்வினால் மட்டுமே கைப்பற்ற முடியும். முழுமையாக இருக்கும் போது மட்டுமே உன்னால் அதை பார்க்க முடியும். உயிர்ப்பிலிருந்து ஒரு எண்ணம் வெளியேறும், வேறொரு எண்ணம் உயிர்ப்புக்குள் வரும், இந்த இரண்டு செயல்களுக்கு நடுவே ஒரு எண்ணமற்ற இடைநேரம் இருக்கும். இதுதான் தெய்வீகம்.
.............நான் உனக்கு திறவுகோலை முழுமையாக கொடுத்து விட்டேன். இப்போது நீ இந்த திறவுகோலினால் உனது இருப்பினுள் செயல்பட ஆரம்பிக்கலாம்.

தியான யுக்தி – 1

இடைநேரத்தை பார்.

தூங்கப் போகும் நேரம் விழிப்புமல்லாத ஆனால் இன்னும் தூக்கம் வராத அந்த இடைநேரத்தை பார்க்க முயற்சி செய். ஒரு கணம், மிக நுண்ணிய கணம் வரும். ஆனால் அது அதிக நேரம் இருக்காது. அது ஒரு தென்றல் போல, சின்ன காற்றுப் போல வரும். அது அங்கிருக்கும், பார்க்கும்முன் போய்விடும். ஆனால் உன்னால் அதை பிடிக்க முடிந்தால் நீ மிகவும் ஆச்சரியமடைவாய். வாழ்க்கையின் மிகச் சிறந்த பொக்கிஷத்தின் மீது மோதிக் கொண்டதை நீ உணர்வாய்.

............இந்த இடைநேரத்தை விழிப்புணர்வின்றி கடந்தால்கூட நீ பலனடைவாய். அதன் மணத்தின் ஏதோ சில பகுதி, ஏதோ கொஞ்சம், நீ அறியாமலேயே உனது இருப்பினுள் சென்று விட்டால்கூட அது அங்கே நெடுநேரமிருக்கும். ஆனால் அந்த கணத்தில் இருந்து எச்சரிக்கையாக இரு. மெது மெதுவாக அந்த சாமர்த்தியம் வந்துவிடும்.

Source: LET GO

தியான யுக்தி - 2

இயல்பாயிருக்கும் கலை

எப்போது – ஒவ்வொரு நாள் இரவும்

முதல் படி – உடலிலிருந்து ஆரம்பி
உடல்தான் ஆரம்பமாயிருக்க வேண்டும். படுக்கையில் படுத்துக் கொள்.....தூக்கம் வருவதற்கு முன், மூடிய கண்களுடன் காலிலிருந்து கவனிக்க தொடங்கு. அங்கிருந்து ஆரம்பி – உள்ளே கவனி, ஏதாவது பதட்டம் எங்காவது இருக்கிறதா, காலில், தொடையில், வயிற்றில் பதட்டம் இருக்கிறதா எங்காவது இடையூறு, ஏதாவது பதட்டம் உள்ளதா

இரண்டாவது படி – அந்த பதட்ட முடிச்சை தளர்வடையச் செய்
எங்காவது பதட்டமாக ஏதாவது இருப்பின், அதை தளர்வடையச் செய். அங்கே தளர்வை நீ உணரும்வரை அந்த இடத்திலிருந்து நீ நகராதே.

மூன்றாவது படி – கைகளிலிருந்து தொடங்கு
கைகள் முழுவதையும் உணரு. – ஏனெனில் உனது கைகள்தான் உனது மனம். அவை உனது மனதுடன் இணைந்துள்ளன. உனது வலது கரம் பதட்டமாக இருந்தால் உனது இடது மூளை பதட்டமாக இருக்கும். உனது இடது கரம் பதட்டமாக இருந்தால் உனது வலது மூளை பதட்டமாக இருக்கும். அதனால் முதலில் உனது கைகளை உணரு. அவை கிட்டத்தட்ட உனது மூளையின் கிளைகள் போன்றவை. பின் கடைசியாக மனதை சென்றடை.

நான்காவது படி – கடைசியாக மனம்
முழு உடலும் தளர்வாக இருக்கும்போது உனது மனம் கிட்டத்தட்ட 90 சதவீதம் தளர்வாக இருக்கும், ஏனெனில் உடல் என்பது மனதின் ஒரு நீட்டிப்புதான். இப்போது ஒரு 10 சதவீத பதட்டம் உனது மனதில் இருக்கும் – வெறுமனே அதை கவனி. அதை கவனிப்பதாலே அந்த மேகம் மறைந்துபோகும்.

இதற்கு சில நாட்கள் பிடிக்கும், இது ஒரு உபாயம். நீ மிகவும் தளர்வாக இருப்பது உனது குழந்தைபருவ அனுபவத்தை திரும்ப கொண்டுவரும். எப்படி ஓய்வாக இருப்பது என்ற ரகசியத்தை யாரும் உனக்கு கற்றுக் கொடுக்கமுடியாது, நீயேதான் அதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் ஒரு முறை தெரிந்துகொண்டு விட்டால் பின் பகலில்கூட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீ உன்னை தளர்த்திக் கொள்ளலாம். தளர்த்திக் கொள்வதில் ஆற்றல் படைத்தவனாக இருப்பது இந்த உலகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்த அனுபவங்களில் ஒன்றானதாகும்.

Source : SATYAM, SIVAM, SUNDERAM

கேள்வி – பதில்

முயற்சிப்பதா அல்லது இயல்பாயிருப்பதா

நான் வாழ்க்கையை வாழும்போது அதில் மிகவும் ஈடுபட்டு அதை அனுபவிப்பதால் பல சமயங்களில் தன்னுணர்வின்றி இருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன். தன்னுணர்வோடு இருப்பதற்கு எனக்கு தீவிரமான முயற்சி தேவைப்படுகிறது என்றாலும்கூட நான் ஒவ்வொரு கணமும் முயற்சி செய்து தன்னுணர்வை கொண்டுவர வேண்டுமா?

மக்கள் பல வழிகளில் பல விதமாக இருக்கின்றனர். இரண்டு பேர் ஒரேவிதமாக இருக்க உறுதியாக வாய்ப்பே இல்லை. உனக்கு பொருந்தாத ஏதோ ஒன்றை நீ செய்ய ஆரம்பிக்கும் போதுதான் பிரச்னையே.

ஒரு சிறிய நிபந்தனையை நினைவில் கொள்ள வேண்டும். எது உனக்கு நல்ல உணர்வை தருகிறதோ – தன்னிச்சையாக அமைதியை, ஆனந்தத்தை தானாகவே அளிக்கிறதோ – அதுவே உனது வழி.

ஆனால் யார் தன்னிச்சையாக இல்லையோ, யாருக்கு தளர்வடைவது மிகவும் கடினமான செயலோ, யாருக்கு எதுவும் செய்யாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பது சாத்தியமில்லாததோ, அவர்களுக்காகவும் நான் பேசியாக வேண்டும்.

அவர்களுக்குத்தான் நான், முழுமையான தீவிரத்தோடு வாழு, முழு முயற்சியோடு இரு என்று சொல்கிறேன். ஏனெனில் அதுதான் அவர்களுக்கு சுலபம். யாருக்கு எது சுலபமோ அதுதான் அவர்களை உண்மைக்கு அருகே கொண்டு வரும்.

உன்னைப் பொறுத்தவரை, அது சுலபமான விஷயமல்ல. நீ உனக்கு எதிராகவே பெருமுயற்சி செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வது நீ ஏற்கனவே உணர்ந்திருக்கும் அமைதி மற்றும் மௌனத்தின் முழு அழகையும் கெடுத்து விடும்.

நீ தன்னிச்சையாக இருப்பதன் மூலமாக, தளர்வாக இருப்பதன் மூலமாக, இயல்பாக இருப்பதன் மூலமாக அமைதியையும், மௌனத்தையும், சக்தியையும் உணர்ந்தால் அப்போது அதுதான் உனது வழி. ஒவ்வொருவரும் தங்களது இதயத்துக்கு நெருங்கியது எது என்பதை அவர்களேதான் கண்டுபிடிக்க வேண்டும். எது உனக்கு சரியானது என்பதை நீதான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.

ஆகவே எதனுடன் உனது இதயம் லேசானதாக உணர்ந்தாலும் அதன் அடிஆழம் வரை செல், அதனுடன் செல், அதுஎன்னவென்று உணர்ந்து கொள். பிறகு திரும்பி பார்க்காதே, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதே.

Source : BEYOND ENLIGHTMENT

தேடல் – ஓஷோவின் கதை - 27

ஒரு இளைஞன் உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும் எனும் தீராத ஆவலால் தனது குடும்பம், தனது சுற்றம் எல்லோரையும் துறந்து தனக்கு ஒரு குருவைத் தேடி புறப்பட்டான். அப்படி அவன் தனது நகரத்தை விட்டு புறப்பட்டுச் செல்லும்போது ஒரு அறுபது வயது குறிப்பிடத்தக்க ஒருவர் ஒரு மரத்தடியில் மிகவும் அமைதியாகவும், மிகவும் வசீகரத்தோடும் அமர்ந்திருப்பதை பார்த்தான். அவர் எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியவராகவும், மிகவும் காந்த சக்தியுடையவராகவும் இருந்தார். அவனையறியாமலேயே தற்செயலாக அவன் அவரிடம் சென்று தான் ஒரு குருவைத் தேடி புறப்பட்டு இருப்பதை கூறினான். “நீங்கள் ஒரு மூதறிஞர், உங்களுடைய ஞானத்தை என்னால் உணர முடிகிறது. உங்களைச் சுற்றியுள்ள உயிர்துடிப்பை என்னால் உணர முடிகிறது. நான் எங்கே போவது? இவர்தான் என்னுடைய குரு என்பதை நான் எப்படி கண்டு பிடிப்பது? அதன் அறிகுறி என்ன? இங்கே பலகுருமார்கள் இருக்கின்றனர், ஆனால் யார் எனக்கு முடிவற்றதற்கு வழி காட்டக் கூடியவர் என்பதை நான் எப்படி உணர்ந்து கொள்வது? என்று எனக்கு கூற முடியுமா?” என்று கேட்டான்.

அந்த வயதானவன், “அது மிகவும் சுலபம்” என்று கூறிவிட்டு, “அந்த குரு எப்படி இருப்பார், அவரைச் சுற்றி எந்த விதமான சூழ்நிலை இருக்கும், அவருக்கு எவ்வளவு வயதிருக்கும்,” எனறெல்லாம் கூறிவிட்டு ‘அவர் எந்த மரத்தடியில் அமர்ந்திருப்பார்’ என்பதைக் கூட கூறினார்.

இளைஞன் அவருக்கு நன்றி கூறினான். அப்போது அவர், “நீ எனக்கு நன்றி கூறும் நேரம் இன்னும் வரவில்லை, நான் காத்திருக்கிறேன்” என்றார். “ஏன் அவர் இப்படி கூறுகிறார், எதற்காக அவர் காத்திருக்கிறேன் என்கிறார்” என்பது இளைஞனுக்கு புரியவில்லை.

சுமார் முப்பது வருடங்கள் அவன் குருவைத் தேடி காடு, மலை, வனம், வனாந்திரம், பாலைவனமெல்லாம் அலைந்தான். ஆனால் எல்லா விதத்திலும் பொருந்தக் கூடியவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தோல்வியடைந்தவனாய், விரக்தியுற்று, சோர்வாக அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் இப்போது இளைஞன் அல்ல. அவன் கிளம்பும்போது அவனுக்கு வயது முப்பது, இப்போது அவனுக்கு வயது அறுபது.

ஆனால் அவன் தன்னுடைய நகரத்தினுள் நுழையும் சமயம் அவன் அந்த வயதானவன் இன்னும் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்தான். அவனால் தனது கண்களையே நம்ப முடிய வில்லை. “அடக் கடவுளே இவர்தானா அவர் குறிப்பிட்ட மனிதர்! – அவருக்கு 90 வயதிருக்கும் என்று கூட குறிப்பிட்டாரே...... மேலும் மரத்தைப் பற்றி கூட சொன்னார். அவர் அமர்ந்திருந்த மரம் என்ன என்பதைக் கூட பார்க்க முடியாத அளவு முழுமையாக தன்னுணர்வின்றி இருந்திருக்கின்றேனே. அவர் குறிப்பிட்ட அந்த மணம் - அந்த பிரகாசம், அந்த இருப்பு, அவரைச்சுற்றியுள்ள அந்த உயிர் துடிப்பு.........”

அவன் அவர் காலடியில் விழுந்தான். “என்ன விதமான வேடிக்கை இது,! முப்பது வருடங்களாக நான் பாலைவனத்திலும், மலைகளிலும் தேடி அலைந்தேன். இது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்படி என்னை தேடி அலைய விட்டு விட்டீர்களே” என்று கேட்டான்.

அவர் கூறினார், “எனக்கு தெரிந்திருப்பது ஒரு பொருட்டே அல்ல. உன்னால் தெரிந்துகொள்ள முடிகிறதா என்பதுதான் கேள்வி. நான் முழுமையாக தெளிவாக விளக்கிக் கூறினேன். ஆனால் நீ இந்த முப்பது வருடங்கள் தேடி திரிய வேண்டும். இந்த முப்பது வருடங்கள் அலைச்சலுக்குப் பிறகுதான் உனக்கு ஒரு சிறிதளவு கவனம் வந்திருக்கிறது. அன்று நீ எனக்கு நன்றி கூறியபோது, நான் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை, ஒருநாள் அந்த நேரம் வரும் எனக் கூறினேன் அல்லவா?
நீ உன்னுடைய முப்பது வருடங்கள் தேடி அலைந்ததைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறாய், ஆனால் நான் இங்கே முப்பது வருடங்களாக உனக்காக உட்கார்ந்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய சொந்த வேலை எப்போதோ முடிந்து விட்டது. என்னுடைய படகு வந்து எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நான் ஒத்திப் போட்டு, ஒத்திப்போட்டுகொண்டே வந்திருக்கிறேன். முட்டாளே முப்பது வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறாயே! – நான் மரத்தைப் பற்றிக்கூட விவரித்தேனே, என்னுடைய ஒவ்வொன்றையும் பற்றியும் விவரமாக கூறினேனே – என்னுடைய மூக்கு, என்னுடைய தாடி, என்னுடைய கண்கள்!. நான் விரிவாக விளக்கமாக எல்லாவற்றையும் கூறினேன். நீ என்னைத் தேடி அவசரமாக ஓடினாய்.

ஆனால் இன்னும் தாமதமாகி விடவில்லை. நான் இறந்து போய்விட்டால் எனது வார்த்தை, எனது வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் போய்விடுமே என்று அஞ்சினேன். கூடிய விரைவில் இந்த முட்டாள் வந்துவிடுவான், ஆனால் நான் இங்கே இல்லையென்றால் எனது வர்ணனை, என்னைப்பற்றிய எனது குறிப்பு, எல்லாமே வீணாகிப் போய்விடுமே, எல்லாம் பொய்யென்று ஆகிவிடுமே என்று கவலைப்பட்டேன். அதை நிரூபிப்பதற்காக, நான் இந்த மரத்தடியில் முப்பது வருடங்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். நீ என்னை அன்றே தேர்ந்தெடுத்துவிட்டாய், ஆனால் நீ அதை உணர முடியாது, உனக்கு அந்த கண்கள் அன்று இல்லை. நீ என் வார்த்தைகளை கேட்டாய், ஆனால் அதன் பொருளை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் உன் முன்னால் இருந்தேன், என்னை நானே விவரித்துக் கூறினேன், ஆனால் நீ என்னை எங்கோ தேடும் எண்ணத்தில் இருந்தாய்” என்று கூறினார்.

The Osho Upanishad, che – 20