Friday, October 22, 2010

மலர் 2 இணைய இதழ் 12 11 ஜூலை 2010

ஓஷோ சாஸ்வதம் செய்தி

அவினாசி கந்தம்பாளையம் சாலையில் உள்ள ஓஷோ சாஸ்வதம் NH 47 – ல் செல்பவர் பலரையும் எட்டிப் பார்க்க வைக்கிறது.

தினசரி டைனமிக் யார்யாரோ எங்கிருந்தோ வந்து செய்து தூய்மை அடைந்து சக்தி கொடுக்கின்றனர். சனி, ஞாயிறு பலவகை தியானங்கள் நடைபெறுகின்றன.

மற்ற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். தங்கி தியானம் செய்யலாம்.


தலையங்கம்

அன்பு நண்பர்களே,

தன்னுணர்வு, விழிப்புணர்வு மட்டும்தான் உண்மை என்றால் உறவு, நட்பு, காதல், அழகு, கலை, கவிதை, சங்கீதம் இப்படி வாழ்க்கையில் உள்ள எல்லாமே பொய்யா, ஞானமடைதல் மட்டுமே உண்மை என்றால் மற்றவையெல்லாம் பயனற்றதா, மாறாத சத்தியமே உண்மை என்றால் மாறும் இயல்புடையனவெல்லாம் போலியா, வேஷமா, வீணா, வாழும் வாழ்க்கையே அர்த்தமற்றதா, விரயமா, மடத்தனமா, இவையெல்லாம் தவறு என்று நீக்கிவிட்டால் வெறுமைதானே மிச்சமிருக்கிறது. வளர்ச்சி எதுவும் வருவதில்லையே, சலிப்புதானே வருகிறது, என்று ஒரு நண்பர் அடுக்கடுக்காய் பொங்கினார்.

இப்போது இதில் இரண்டு அடிப்படை விஷயங்கள் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று, ஒருவர் தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் தன்னிடம், தன்னுணர்வில் ஒரு வித்தியாசம் பிறக்கிறது. வேஷமும் வியாபாரமுமாய், போலித்தனமும் சுயநலமுமாய், பொறாமையும் பேராசையுமாய், தான் இதுவரை இருந்து வந்திருப்பதை உணர்கிறார். அதோடு தன்னைச் சுற்றியுள்ள சமூகமும் இப்படித்தான் இருக்கிறது என்பது தெரிகிறது. இதனால் அவர் ஒதுங்க ஆரம்பிக்கிறார். அப்போது அவருள் தனிமையும் வெறுமையும் சலிப்பும் சோம்பலும் ஏற்படுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இது மனதின் கடைசி ஆயுதம், கடைசி போராட்டம். மனம் தீனி கிடைக்காமல் தவிக்கும் தவிப்பு இது. இந்த சமயத்தில் திரும்பவும் சமூகத்தில் அமிழ்ந்து விடுபவரே பெரும்பாலராய் உள்ளனர். இன்னும் சிலர் தான் எதையோ அடைந்துவிட்டதைப் போல உபதேசம் செய்ய ஆரம்பித்து அதன் வழியாய் சமூகத்தில் சேர்ந்து கொள்கின்றனர். இவை இரண்டுமே சரியல்ல.

இந்த நிலைக்கு வந்த ஒருவர் மனதிலிருந்து இதயத்திற்குள் விழ வேண்டும். இதயம் திறந்து வாழ ஆரம்பிக்க வேண்டும். இதனால் வெளியே என்ன இழப்பு ஏற்படினும் உள்ளே மலர்ச்சி ஏற்படும். உன்னைச் சுற்றி மணம் பரவும்.

அதாவது இந்த வெறுமை, மனதின் வெறுமை. மனம் பயித்தியமாய் அலைந்து கொண்டிருந்தது இல்லாத வெறுமை. இதை உணர்ந்து இந்த வெறுமையிலிருந்து திரும்பவும் பயித்தியமாய் வெறி பிடித்து அலையப் பார்க்காமல், மாறாக இதயம் திறக்கும் பாசிடிவ் பக்கம் வர வேண்டும். தன்னை விரிவடைய அனுமதிக்க வேண்டும். மண்டை ஓட்டினுள் மனதில் ஒளிந்துகொண்டு நான் என்ற ஈகோவில் வாழ்வதை விட்டுவிட்டு இதயம் திறக்கும் வாழ்வுப் பாதைக்கு மாறவேண்டும்.

பயனின்றி மகிழச்சிக்காக மட்டும் ஏதாவது செய்யுங்கள். விளையாடுங்கள் வெற்றி என்ற குறிக்கோள் இருப்பது விளையாட்டு அல்ல. குழந்தையை கொஞ்சுங்கள். மலர்களை பார்த்து ஆச்சரியப் படுங்கள். மேகங்களின் பயணத்தை பார்த்து கவனியுங்கள். வெண்ணிலாவின் குளிர்ச்சியை அனுபவியுங்கள். துளித்துளியாய் சுவைத்து மணத்தை நுகர்ந்து டீ குடியுங்கள். கலர்களுடன் கலந்து வண்ணம் தீட்டி மகிழுங்கள். இதயம் திறக்கும் இசை, இன்பம் ஏற்படுத்தும் கவிதை, கல்லில் காவியமாயுள்ள சிற்பங்கள் என அனுபவியுங்கள். கடலுக்கும், மலைக்கும், அருவிக்கும் செல்லுங்கள். அழகை அனுபவியுங்கள். அழகு என்பது என்ன? வெளியே நாம் உணரும் ஒரு லயம் திடீரென நமது உள்ளே சிதறிக் கிடக்கும் நம்மை ஒரு லயப்படுத்துகிறது. அப்படி உள்ளே லயப்படுத்துகையில் ஏற்படும் உணர்வுதான் அழகுணர்வு.

அன்பு என்பது என்ன? உள்ளே நாம் நிறைவாக உணர்கையில் நம்மிடமிருந்தே பொங்கி பெருகி வழிந்தோடி சுற்றியுள்ள அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் சக்தி பெருக்கத்தால் நாம் விரிவடையும் போது எழும் உணர்வே அன்பு.

இப்படி இதயம் திறக்கையில் நாம் பிரபஞ்சத்துளியாய் மாறிவிடும் அனுபவம் கிடைக்கிறது. இதுவே ஆனந்தம்.

இப்படி இதயம் திறக்க ஏதாவது ஒன்றைச் செய்தால் மட்டுமே உனது வெறுமையும், தனிமையும், சலிப்பும், சோம்பலும் போய் வாழ்வின் பாசிடிவ் பக்கத்தை உணர முடியும், வளர முடியும். ஏன் விழிப்புணர்வில் நின்று வெறுமையைப் பார்த்தால் கூட வெறுமையை விட்டு நாம் விழிப்புணர்வுதான் என்ற நிறைவில் நுழைய முடியும்.

விழிப்புணர்வும், சாட்சிபாவமும், நிசப்தமும், அழகும், படைப்பும், சத்தியமும், நிறைவும், கருணையும், ஆனந்த நடனமும், பிரபஞ்ச இருப்பின் குணங்கள். இதில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டு வெறுமையிலிருந்து வெளிவந்தால் மீண்டும் மனம் துளிர்க்காது. மாறாக பிரபஞ்ச இருப்பில் கரைந்துவிடும் ஞானம் பிறக்கும்.

இதிலும் கவனமாக இருக்கவேண்டிய ஒரு விஷயம் உள்ளது. ஒரு கண தரிசனம் கிடைத்தவுடன் நமக்கு ஆச்சரியமும், வியப்பும், ஆனந்தமும் பொங்கும். அங்கு நாம் விழிப்புணர்வை விட்டு விடுவோம். மனம் இயங்க ஆரம்பிக்கும். நமக்கு தியான அனுபவம் கிடைத்து விட்டது, அது இப்படி இருக்கிறது, அதை நாம் அடைய முடியும், அதை அடைந்துவிட்டேன் என்றெல்லாம் சொல்லி மேலும் ஆழமாகச் செல்ல முடியாமல் மனம் நம்மை தடுத்துவிடும்.

தியானமும் எனக்குத் தெரியும் என்று அதைக் கடந்த அனுபவத்தைக் கூட நுட்பமான ஈகோவாக மாற்றிக் கொண்டுவிடும். அப்படி நமக்கு ஆகாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதன் அறிகுறி என்னவென்றால் நாம் முயற்சிப்பதை நிறுத்திவிடுவோம், சந்தோஷம் அதிகமாவதற்கு பதிலாக அன்பு அதிகமாவதற்கு பதிலாக மற்றவர்களிடம் அதுவும் காதலியிடம், மகன், மகள், மனைவி என்று தன்னை வெளிப்படுத்த உரிமை உள்ளவனாக நினைக்கும் இடங்களிலெல்லாம் கோபம் அதிகம் வரும். அவர்களை கண்டிக்க ஆரம்பிப்போம். இது தவறான பாதையில் செல்வதன் அறிகுறி.

அன்பும், தியானமும் ஒன்றாய் வளர்ந்தால்தான் அது சரியான வழி. விழிப்புணர்வும், அழகும், கருணையும், நிசப்தமும், படைப்பும் என பிரபஞ்ச இருப்பின் குணங்கள்தான் நம்மிடமிருந்து வெளிப்பட ஆரம்பிக்க வேண்டும். இது சரியான வழி.

மேலும் தியானிப்பவர்கள் நாபிக்கமலத்தில் வேர் ஊன்றி அதை இயங்கச் செய்ய வேண்டும். நாபிச்சக்கரம்தான் மனிதனின் இருப்பு நிலை. அதற்குக் கீழே உள்ளவை விலங்குகளுக்கு உள்ளவைதான். நாபிச்சக்கரத்தில் இருந்து நாம் வளர வேண்டும். இப்போது எல்லோரும் நமது இருப்பு நிலையை விட்டுவிட்டு தலையில் நமது சிறிய தன்னுணர்வால் ஏற்படுத்தப்படும் மனக்கூட்டுக்குள் வாழ்கிறோம். இது புருவமத்தி சக்கரத்தில் வாழ்வது போல தோன்றலாம். ஆனால் இது உண்மையல்ல. இங்குள்ள சக்தி மிகக் குறைந்தது. இதை அமைதிப்படுத்தும் வழிமுறைகள் பயனற்றவை. ஏனெனில் அவை நிரந்தர நிலைமாற்றத்தை, குணமாற்றத்தை ஏற்படுத்தாது. இருப்புநிலையிலிருந்து முளை விட்டு, கிளைவிட்டு, அதன் வேராய் உள்ள பாலுணர்வு சக்கரம், ஹரா சக்கரத்திலிருந்து சக்தியை எடுத்து மாற்றி மலர்ந்து இருதய சக்கரமாய் அன்பிலும், தொண்டை சக்கரமாய் வெளிப்படுத்தலிலும் புருவமத்தி சக்கரமாய் தெளிவும் அடைந்து, சகஸ்ர சக்கரத்தில் பிரபஞ்ச இருப்புடன் சங்கமிக்கும் வாய்ப்பு மனிதனுக்கு இருக்கிறது.

நாம் பொய்யான வாழ்க்கை வாழ்வதால் இருப்பு நிலைக்கு செல்வதே முதல் வேலை ஆகிறது. அதற்காகத்தான் ஓஷோ உணர்ச்சிகளை வெளியே வீசும் கேத்தாரிஸிஸ் முறையை அறிமுகப்படுத்தினார். நாம் தலை கனத்தவர்களாய், மண்டை வீங்கியவர்களாய் இருக்கிறோம். வேரிலிருந்து விளைந்த மரமாய் இல்லாமல் பிளாஸ்டிக் மரமாய் பெரிதாகப் பிரியப்படுகிறோம்.

ஆனால் இந்த நிலையிலும் நமக்கு உயிர்தொடர்பும், துடிப்பும் இருப்பதைப் பயன்படுத்தி வெறுமையைக் கடந்து பிரபஞ்ச இருப்பைத் தொடும் சுவை பெற முடியும். அதற்குத்தான் ஓஷோ ஆயிரக்கணக்கான தியானப் பயிற்சி முறைகளைக் கொடுத்திருக்கிறார்.

தியான பயிற்சி முறைகள் தியானமல்ல. அது நிகழ உதவும் சூழலை ஏற்படுத்தும் முயற்சியே. மேலும் முதல் அனுபவத்திற்க்குப் பிறகு நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நாம் தயாராகவேண்டும். தலையிலிருந்து வாழாமல் இருப்புநிலையிலிருந்து வளரும் வாழ்க்கைக்கு மாற வேண்டும். அப்போதுதான் தியானம் நிகழும்.

நமது வாழ்வைத் தொடாமல் வெறும் தியானப் பயிற்சி முறைகளைப் பின்பற்றுவது ஒரு பழக்கமாக, நல்ல பழக்கமாக வேண்டுமானால் உதவலாம். அப்படி ஆகும்போது அதுவும் மனதிற்கு உதவும் பழக்கமாகவே ஆகிவிடுகிறது. இருந்தாலும் நல்ல பழக்கம் என்பதால் அது உடல் ஆரோக்கியத்தையும், மனத்திற்கு வெறிபிடித்து விடாது சமநிலையையும் கொடுக்கும். ஆனால் இதுவல்ல ஓஷோவின் எதிர்பார்ப்பு.

புதிய மனிதன். இருப்பு நிலையிலிருந்து வளர்ந்து, மலர்ந்து, மணம் பரப்பி, இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் என்று வாழும், ஞானத்தை நோக்கிச் செல்லும், ஆரோக்கிய மனிதனே ஓஷோவின் செய்தி, செயல், வாழ்வு, விளைவு, இயக்கம், எதிர்பார்ப்பு.

அதை நனவாக்கும் முயற்சியில் ஒருவருக்கொருவர் உதவியாய் வளர்வோம். உண்மையை உணர்வோம். வாருங்கள்.

அன்பு,
சித்.
கவிதை

பரவச இரகசியம்

நண்பா!

அனைவரிடமும் அனைத்தும் உள்ளது,
அனைத்தும் உள்ளது உன்னிடமும்!
ஆம்.....நீ அன்போடு இருக்கையில் – இல்லை இல்லை,
நீ அன்பாகவே இருக்கையில் – இல்லை இல்லை,
நீ இல்லாமல் அன்பு மட்டுமேயாக இருக்கையில்!
இதுதான் பரவசத்தின் இரகசியம்,
பரம இரகசியம்!!

கட்டுப்பாட்டை இழந்துவிடுவது – அன்பில்,
திசைதெரியாமல் ஆகிவிடுவது – அன்பில்,
தன்னையே மறந்துவிடுவது – அன்பில்,
முழுப்பயித்தியம் பிடித்துவிடுவது – அன்பில்,
இதுதான் பரமசுக இரகசியம்!!!
இதுதான் வாழ்வின் அர்த்தமுள்ள சமயம்,
இதுதான் வாழ்வில் மிகத் தெளிந்த தருணம்,
இதுதான் வாழ்வில் சாகாவரம் பெறும் இரசவாதம்,
இதுதான் வாழ்வில் கடவுளான கணம்!!!

ஆனால்....அன்பில் அழிந்துவிட்டதை
எப்படி அறிவது?
அகங்காரத்திலோ, அதீதக் கற்பனையிலோ,
நீ அமிழவில்லை என்பதை எப்படி உறுதிசெய்வது?

நடப்பதற்கெல்லாம் நன்றியுணர்வு பொங்குகிறதா,
அடுத்தவர்களையும் உன்னையும் கணக்குப்
போடுவதை விட்டுவிட்டாயா
சக்தி கருணையாய் பொங்குகிறதா,
என்றுமழியாத அமைதியை எங்கும் உணர்கிறாயா,
நடனமாடுபவன் தொலைந்து நடனமாடுகிறாயா,
கவனிப்பவன் காணாமல்போய் கவனிப்பு
மட்டுமாகிவிட்டாயா
அப்போது அன்பாக நீ மாறி அன்பு மட்டுமே
இருப்பது நிஜம்!!!

அன்பு நண்பா!
இது தூரமோ கடினமோ இல்லை,
இது எது இருக்கிறதோ அதுதான்,
இது வாழ்க்கை!
சிந்திப்பதை நிறுத்திவிட்டு, ஒருகணம் சிலிர்த்துக் கொண்டு,
கண் முன்னால் இருப்பதை அன்புசெய்,
நாளைக் கவலையை விட்டுவிட்டு நடப்பை அனுபவி.
இதை முழுமையோடு செய்தால் அதுதான்!
மறுபடியும் இது கஷ்டம் என்று நினைக்காதே,
முழுமை கஷ்டமல்ல,
வெகு சுலபம்!
இதயத்திலிருந்து செயல்படு, அவ்வளவுதான்,
தலையிலிருந்து, தனிமையிலிருந்து விடுபடுவாய்!
அன்பு மடை திறந்து பொங்கும்,
அதன்பின் எல்லாம் அதுவே நடத்தும்,
நீ அழகாகிப் போவாய்!
அற்புதமாகிப் போவாய்!!

எனதருமை நண்பனே!
முயற்சி செய், முயற்சி செய்,
முயற்சியை நிறுத்தாதே,
எவ்வளவு முறை தோற்கிறாய்,
எவ்வளவுமுறை விழுகிறாய் என்பது முக்கியமல்ல,
ஒருமுறை அது கிடைத்துவிட்டால்,
அதுதான் முக்கியம்!
பிறகு அதை இழக்கமுடியாது,
அதன்முன், நீ இழந்ததெல்லாம் மதிப்பற்றது.
இப்போது நீ மீண்டும் பிறக்கிறாய்!
வாழ்வாக, அன்பாக, சிரிப்பாக!!

ஓஷோ வீடியோ

1. Osho : We use all available Media

2. Osho : This is not a Teaching

3. Osho : Meditation is not part of your Biology – but your Freedom



மூன்று தியான யுக்திகள்

தியான யுக்தி - 1

ஓஷோவின் விளக்கம் - நாகரீகமற்றவனாக மாறு

கேள்வி - நான் சோகமாக உணர்கிறேன். ஆனால் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.

பதில் – இந்த கேள்விக்கு ஓஷோ பதிலளிக்கையில் அவர் வாழ்க்கையை நம்பவில்லை என்றும் தன்னைத்தானே பிடித்து வைத்துக் கொள்கிறார் என்றும் கூறுகிறார். எங்கோ ஆழத்தில் அவர் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வில்லையென்றால் விஷயங்கள் தவறாக போய்விடும் என்பது போன்றும், எல்லாவற்றையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் விஷயங்கள் தவறாகாது என்பது போன்றும் அவர் வாழ்வின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ள்ளார். அதனால் அவர் எப்போதும் திட்டமிட்டு செயல்களை செய்து கொண்டிருக்கிறார். அவரது சிறுவயது கட்டுதிட்டம் இந்த வகைபட்டதாக இருக்கலாம். இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஏனெனில் ஒரு மனிதன் செயல்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தால், அவன் வாழ்க்கை மிக குறுகியதாகி விடும்.

வாழ்க்கை மிகப் பெரியது, அதை கையாள்வது என்பது சாத்தியமில்லாதது. அதை நீ கையாள விரும்பினால் அதை மிகச் சிறியதாக செய்தால் மட்டுமே முடியும். பின் அதை நீ கையாளலாம். இல்லாவிடில் வாழ்க்கை மிகவும் காட்டுத்தனமானது. அது இந்த வானத்தைப் போல, இந்த மரங்களைப்போல, இந்த தென்றலைப் போல, இந்த மழையைப்போல, இந்த மேகத்தைப்போல முரட்டுத்தனமானது. அது காட்டுத்தனமானது. அதைக் கையாள விரும்பினால் நீ உன்னுடைய முரட்டுத்தனமான பாகத்தை முழுமையாக வெட்டிவிட வேண்டும். நீ அதைக் கண்டு பயப்படுகிறாய். – அதனால்தான் உன்னால் முழுமையாக வெளிப்படையாக இருக்க முடியவில்லை. அதுதான் உனக்கு சோகத்தை கொடுக்கிறது.

சோகம் என்பது மகிழ்ச்சியாக மலர வேண்டிய அதே சக்திதான். நீ உன்னுடைய சக்தி மகிழ்ச்சியாக மலருவதை காண முடியவில்லையென்றால் நீ சோகமாகிறாய். யாராவது மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தால் உடனே நீ சோகமாகிறாய். இது ஏன் எனக்கு நிகழவில்லை, அது உனக்கும் நிகழும். அதில் எந்த பிரச்னையும் இல்லை. நீ உன்னுடைய கடந்த காலத்தை இழந்துவிடவேண்டும். அது நிகழ நீ உன்னுடைய பாதையிலிருந்து ஒரு சிறிதளவு விலகி வர வேண்டும். நீ வெளிப்படையாக இருக்க ஒரு சிறிதளவு முயற்சிகள் செய்ய வேண்டும். அது ஆரம்பத்தில் வலி கொடுக்க கூடியதாகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் அது வலிக்கும்.


யுக்தி - ஒரு விலங்காக முழுமையாக மாறு.

முதல் படி – நீ ஒரு மனிதன் அல்ல என்பதுபோல நினைத்துக் கொள். நீ விரும்பும் எந்த மிருகத்தையும் நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீ ஒரு பூனையாக விரும்புகிறாயா நல்லது, நீ ஒரு நாயாக விரும்புகிறாயா நல்லது, அல்லது புலி...... ஆணோ, பெண்ணோ,.......... நீ விரும்பும் வண்ணம். நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், ஆனால் பின் அதிலிருந்து மாறக் கூடாது. அந்த மிருகமாகவே மாறி விடு. நாலு காலில் நடந்து அறையின் எல்லா இடங்களுக்கும் செல். அந்த மிருகமாகவே செயல்படு.

பதினைந்து நிமிடங்களுக்கு உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு இந்த வினோதத்தை அனுபவி. நாயாக இருந்தால் நாய் போலவே குரை. நாய் செய்யும் விஷயங்களை செய்து பார். உண்மையாகவே செய், கட்டுப்படுத்தாதே. ஏனெனில் நாய்களால் கட்டுப்படுத்த முடியாது. ஒரு நாய் என்றால் முழுமையான சுதந்திரம், இந்த கணத்தில் நிகழ்வது என்னவோ அதை செய். இந்த நேரத்தில் மனிதமனத்தின் குணமான கட்டுப்பாட்டை கொண்டு வராதே. உண்மையான ஒரு நாய் போல இரு. பதினைந்து நிமிடங்களுக்கு அந்த அறையை சுற்றி குலைத்து, குதித்து சுற்றி வா. இதை ஏழு நாட்களுக்கு செய், பின் பார். எப்படி உணர்கிறாய் என்று பார்.

இது உனக்கு உதவக்கூடும். உனக்கு மிருக சக்தி தேவைப்படுகிறது. நீ மிகவும் நாகரீகமடைந்துவிட்டாய், அது உனது தூய்மையை கெடுத்துவிட்டது. உன்னை முடமாக்கி விட்டது. மிகுந்த நாகரீகம் முடக்கி விடும். அது சிறிய அளவில் இருந்தால் நல்லது, அதிகமாகி விட்டால் அதுவே ஆபத்தாகிவிடும். மிருக தன்மை பெறக்கூடிய திறமையை ஒருவர் எப்போதும் காப்பாற்றி வைத்திருக்க வேண்டும். உன்னுடைய மிருகம் வெளிப்பட வேண்டும். நான் பார்க்கும் பிரச்னை அதுதான். ஒரு சிறிதளவு காட்டுத்தனமாக இருக்க நீ கற்றுக் கொண்டு விட்டால் உனது பிரச்னைகள் அனைத்தும் மறைந்துவிடும். அதனால் இன்றிலிருந்தே ஆரம்பி – அனுபவித்து செய்.

The Passion for the Impossible

தியான யுக்தி - 2

உனது பயத்தை எதிர்கொள்ளல்

எப்போது – ஒவ்வொரு நாள் இரவும்
காலம் – 40 நிமிடங்கள்

முதல் படி – மிக மோசமானதை கற்பனை செய்து கொள்
உனது அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் அமர்ந்து பயப்பட ஆரம்பி. எல்லா விதமான பயங்கரங்களையும் பற்றி சிந்தனை செய். - உன்னுள் பயத்தை ஏற்படுத்தும் எல்லாவற்றையும் –உன்னுடைய கற்பனையின் மூலம் நீ உண்மையாகவே பயப்பட ஆரம்பி. பேய், பிசாசு என எல்லாவற்றையும் பற்றி கற்பனை செய். அவை உன்னை கொல்வது போலவும், கற்பழிக்க முயற்சி செய்வது போலவும், உன்னை மூச்சு திணற செய்வது போலவும் கற்பனை செய். பயத்தினுள் எவ்வளவு ஆழமாக போக முடியுமோ அவ்வளவு ஆழமாக போ. என்ன நிகழ்ந்தாலும் சரி, அதனுள் செல்.

இரண்டாவது படி – பயத்தை ஏற்றுக் கொள்
பகலிலோ, வேறு நேரத்திலோ எப்போது பயம் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள். அதை தவிர்க்காதே. நீ கடந்து வர வேண்டிய தவறான ஒன்று என அதை நினைக்காதே. அது இயல்பானது. அதை ஏற்றுக் கொள்வதாலும் இரவில் அதை வெளிப்படுத்துவதாலும் விஷயங்கள் மாற துவங்கும்.


Don’t Bite My Finger, Look Where I Am Pointing



தியான யுக்தி - 3

பயத்திலிருந்து அன்புக்கு

நேரம் – 40 – 60 நிமிடங்கள்

முதல் படி – சக்தியை லயப்படுத்துதல்

வசதியாக அமர்ந்து கொள். கை கோர்த்து வலது கை இடது கையின் அடியில் இருக்கும்படி வைத்துக் கொண்டு கைகட்டை விரல்களை இணைத்துக் கொள். இது சக்தியை ஒரு விதத்தில் குறிப்பிட்ட தொடர்பில் வைத்திருக்கும். இடது கை வலது மூளையுடனும் வலது கை இடது மூளையுடனும் இணைந்துள்ளது. இடது மூளை காரண காரியமுடையது, கோழை. வலது மூளை உள்ளுணர்வுடன் சம்பந்தப்பட்டது. ஒரே மனிதன் அறிவார்த்தமானவனாகவும் வீரனாகவும் இருக்க முடியாது. ஒருவனே இரண்டுமாக இருப்பது சாத்தியமில்லை.

இரண்டாவது படி – வாய் மூலம் சுவாசித்தல்

தளர்வாக இரு, கண்களை மூடிக் கொள். உனது கீழ்தாடை தளர்வாக இருக்கட்டும். அப்போதுதான் நீ உனது வாய் மூலமாக சுவாசிக்க முடியும்.
நீ உனது மூக்கின் மூலமாக சுவாசிக்காமல் வாய் மூலமாக சுவாசிக்கும்போது நீ சுவாசிப்பதற்கு ஒரு புதிய வழிமுறையை உண்டாக்குகிறாய். அதனால் இந்த பழைய முறையை மாற்ற முடியும். மேலும் நீ மூக்கின் மூலமாக சுவாசிக்கும்போது நீ தொடர்ந்து உனது மூளையை தூண்டுகிறாய். மூக்கு பிளவுபட்டது. வாய் பிளவுபடாதது.
அதனால் நீ வாய் மூலமாக சுவாசிக்கும்போது உனது மூளையை இயக்கமுடியாது – சுவாசம் நெஞ்சை வந்தடைகிறது.
இது பிளவற்ற, அமைதியான, புதிய விதமான தளர்வை உருவாக்கும். உனது சக்தி ஒரு புது வழியில் வழிந்தோட ஆரம்பிக்கும்.

The Further Shore


காலிக் கோப்பை - ஓஷோவின் கதை 24

நான்சேன் என்பவர் மிகப் பிரபலமான ஜென் ஞானிகளில் ஒருவர். அவரைப் பற்றி பல கதைகள் கூறப் படுகின்றன. அதில் ஒன்று நான் உங்களுக்கு பல முறை கூறியிருக்கிறேன். நான் அதை திரும்பக் கூறுகிறேன். ஏனெனில் இது போன்ற கதைகளை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் நீங்கள் அதை நன்கு உள்வாங்கிக் கொள்ள முடியும். அவை உங்களை வளப்படுத்தும். ஒவ்வொருநாளும் நீங்கள் ஊட்டம் பெற வேண்டும். நேற்று காலை நான் உணவு சாப்பிட்டு விட்டேன், அதனால் இப்போது எனக்கு உணவு வேண்டாம் என்று நீங்கள் கூறுவதில்லை. ஒவ்வொரு நாளும் நீங்கள் சாப்பிட்டாக வேண்டும். நேற்று நான் சாப்பிட்டுவிட்டேன். இப்போது ஏன் சாப்பிடவேண்டும் என்று கேட்பதில்லை.

இந்த வித கதைகள் – இவை உங்களை வளப்படுத்தும் கதைகள். இந்தியாவில் இவற்றைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட வார்த்தை உண்டு. அதை மொழிமாற்றம் செய்ய முடியாது, ஆங்கிலத்தில் “படிப்பது” என்ற ஒரு வார்த்தை உண்டு. இந்தியாவில் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. ஒன்று படிப்பது, மற்றொன்று படித்ததையே திரும்ப திரும்ப படிப்பது. அதன் ஒரு பாகமாகி விடுவது. ஒவ்வொரு நாளும் காலையில் நீ கீதையை படிக்கிறாய். அது படிப்பது அல்ல. ஏனெனில் நீ அதை பலமுறை படித்திருக்கிறாய். இப்போது அது ஒருவிதமான வளப்படுத்துதல். நீ அதை படிக்கவில்லை. நீ அதை ஒவ்வொரு நாளும் உண்கிறாய்.

அது ஒரு சிறந்த அனுபவமாகும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நீ வெவ்வேறு விதமான மனநிலையில் வருவதால் பல்வேறு விதமான அர்த்தங்கள் புரிகின்றன. அதே புத்தகம், அதே வார்த்தைகள் ஆனால் ஒவ்வொரு நாளும் புது ஆழத்தை நீ உணர்கிறாய். ஒவ்வொரு நாளும் புதிதான ஏதோ ஒன்றை படிப்பது போன்று நீ உணர்கிறாய். ஏனெனில் கீதை அல்லது அது போன்ற புத்தகங்களில் ஆழமான உண்மை உண்டு. அவற்றை ஒருமுறை படித்தால் மேலோட்டமாக இருக்கும், இரண்டாவது, மூன்றாவது தடவை படிக்க படிக்க ஆழ்ந்து செல்வாய். ஆயிரம் தடவைகள் படித்தபின் அந்த புத்தகங்களை முழுவதுமாக படிப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்வாய். அதிக அளவு கவனமாக, விழிப்புணர்வுடன் இருக்க இருக்க உனது தன்னுணர்வு ஆழமாகும். இதுதான் இதன் பொருள்.

நான் நான்சேனின் கதையை திரும்பவும் கூறுகிறேன். ஒரு பேராசிரியர், தத்துவ பேராசிரியர் அவரைக் காண வந்தார். தத்துவம் ஒரு நோய், அது கேன்சர் போன்றது. அதற்கு மருந்து கிடையாது, அதை நீ வெட்டிதான் எறிய வேண்டும். ஒரு பெரிய அளவிலான அறுவை சிகிச்சைதான் செய்தாகவேண்டும். தத்துவமும் அப்படிப்பட்ட ஒருவிதமான வளர்ச்சியாகும். ஒருமுறை அது உன்னுள் வந்துவிட்டால் அது உன்னுடைய சக்திகளை எடுத்துக் கொண்டு அது அதன் போக்கில் வளரும். அது ஒட்டுண்ணி. நீ பலவீனமடைந்து கொண்டே போவாய், அது மேலும் மேலும் பலமடைந்து கொண்டே போகும். ஒரு வார்த்தை மற்றொரு வார்த்தையை உருவாக்கும். அது முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும்.

ஒரு தத்துவவாதி நான்சேனை காண வந்தார். நான்சேன் ஒரு சிறிய குன்றின் மேல் வசித்துவந்தார். அவர் மலைஏறி வந்ததால் மிகவும் வியர்த்து களைத்து வந்தார். அவர் நான்சேனின் குடிசைக்குள் நுழைந்த உடனேயே உண்மை என்பது என்ன எனக் கேட்டார்.

நான்சேன், உண்மை கொஞ்ச நேரம் காத்திருக்கலாம், அதற்கு அவசரமில்லை. இப்போது உங்களுக்குத் தேவை ஒரு கோப்பை டீதான். நீங்கள் மிகவும் களைத்திருக்கிறீர்கள் எனக் கூறி விட்டு டீ தயார் செய்ய சென்றார். இதை ஒரு ஜென்குருவிடம் மட்டுமே காண முடியும். இந்தியாவில் சங்கராசாரியா உனக்காக டீ தயார் செய்வது சாத்தியமில்லாதது – உனக்காக, சங்கராசாரியாவா டீ தயார் செய்வதா, நடக்கவே நடக்காது. அல்லது மகாவீரர் உனக்காக டீ தயார் செய்வது........ மடத்தனம். ஆனால் ஒரு ஜென்குருவிடம் இது நிகழக் கூடும். அவர்களிடம் வித்தியாசமான அணுகுமுறை உள்ளது. அவர்கள் வாழ்க்கையை காதலிக்கின்றனர். அவர்கள் வாழ்க்கைக்கு எதிரி அல்ல. அவர்கள் எளிமையாக வாழலாம், ஆனால் அவர்கள் வாழ்க்கைக்கு எதிர்மறையானவர்கள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். அவர்கள் சாதாரணமாக வாழ்வதுதான் அசாதாரணமான ஒரு விஷயம் என்று கூறுகிறார்கள். அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்கின்றனர். நான் எளிமையானது என்று கூறும்போது உண்மையான எளிமையைதான் குறிப்பிடுகிறேன். திணிக்கப்பட்ட எளிமை அல்ல. இந்தியாவில் அப்படிப்பட்ட திணிக்கப்பட்ட எளிமையை நீ காணலாம். எளிமை திணிக்கப்படுகிறது. அவர்கள் நிர்வாணமாக இருந்தாலும் முழு நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் எளிமையானவர்களாக இல்லை. அவர்களது நிர்வாணம் மிகவும் சிக்கலானது. அவர்களது நிர்வாணம் ஒரு குழந்தையினுடைய நிர்வாணம் போன்றதல்ல. அவர்கள் அதை உருவாக்கிக் கொண்டனர். உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் எப்படி எளிமையானதாக இருக்கமுடியும், தங்களை அவர்கள் அப்படி வரையறுத்துக் கொண்டுள்ளனர், வரையறுத்த ஒரு விஷயம் எப்படி எளிமையானதாக இருக்க முடியும், அது மிகவும் சிக்கலானது.
ஜைன திகம்பர சாமியாரின் நிர்வாணத்தை விட உங்களது ஆடைகள் எளிமையானவைதான். அவர் அதற்காக பல ஆண்டுகள் கஷ்டப்பட்டிருக்கிறார். அதற்கு ஐந்து படிகள் உள்ளன. நீ ஒவ்வொரு படியையும் ஒன்றன்பின் ஒன்றாக பூர்த்தி செய்ய வேண்டும், அதன்பின்தான் நீ நிர்வாணமாக இருக்கமுடியும். அது ஒரு லட்சியம், ஒரு லட்சியம் எப்படி எளிமையானதாக இருக்கும், நீ அதற்காக பல வருடங்கள் உழைத்திருந்தால், அதை அடைவதற்காக நீ பல முயற்சிகள் செய்திருக்கும்போது அது எப்படி எளிமையானதாக இருக்கமுடியும், இப்போதே, இங்கேயே, உடனடியாக கிடைக்கும், அதற்காக உழைக்கவேண்டிய அவசியமில்லாத ஒரு விஷயம் மட்டுமே எளிமையானதாக இருக்க முடியும்.

நிர்வாணம் எளிமையான ஒரு விஷயமாக இருக்கும்போது அது மிக கம்பீரமான காட்சிஅற்புதம். நீ வெறுமனே உடைகளை விட்டுவிடலாம். அது மகாவீரருக்கு நடந்தது. அது எளிமையானது. அவர் அவரது மாளிகையை விட்டு கிளம்பும்போது அவர் ஆடை அணிந்திருந்தார். ஒரு ரோஜாபுதரை தாண்டும்போது அவரது ஆடை அதில் சிக்கிக் கொண்டது. அது ஒரு மாலை நேரம், எனவே அந்த ரோஜாசெடி தூங்கும்நேரம், எனவே அதை பிரித்து எடுத்து அதன் தூக்கத்தை கலைக்கக் கூடாது, எனவே அவர் சிக்கிக் கொண்ட ஆடையை மட்டும் கிழித்து விட்டுவிட்டு பாதி ஆடையுடன் சென்றார். அடுத்த நாள் ஒரு பிச்சைக்காரன் வந்து யாசகம் கேட்டான். அவனுக்கு தர ஏதுவுமில்லை இந்த பாதி ஆடையை தவிர. எனவே இந்த பாதி ஆடையையும் அவனுக்கு கொடுத்துவிட்டு நிர்வாணமாகி விட்டார். அவரது நிர்வாணம் மிகவும் அழகானது, இயற்கையானது, எளிமையானது, அது நிகழ்ந்தது. அது பயிற்சி செய்யப்பட்டதல்ல. ஆனால் ஒரு ஜைனதுறவி அதை பயிற்சி செய்கிறார்.

ஜென்குருக்கள் மிகவும் எளிமையான மக்கள். அவர்கள் மற்றவர்களைப் போலவேதான் வாழ்கிறார்கள். அவர்கள் எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கிக் கொள்வதில்லை. ஏனெனில் அடிப்படையிலேயே ஆணவம் இருந்தால்தான் வித்தியாசம் வரும். இந்த விளையாட்டை நீ பல வழிகளில் விளையாடலாம், ஆனால் விளையாட்டு ஒன்றேதான். நான் உன்னை விட உயர்ந்தவன். விளையாட்டு ஒன்றுதான், என்னிடம் உன்னைவிட அதிக பணம் இருக்கிறது, நான் உன்னைவிட உயர்ந்தவன், நான் உன்னைவிட படித்தவன், நான் உன்னை விட உயர்ந்தவன், நான் உன்னை விட அதிக மதவாதி, அதனால் நான் உன்னைவிட உயர்ந்தவன், நான் அதிகம் துறந்திருக்கிறேன், அதனால் நான் உன்னைவிட உயர்ந்தவன்,

நான்சேன் உள்ளே சென்று டீ தயாரித்துக் கொண்டு வெளியே வந்தார், கோப்பையை விரிவுரையாளரின் கைகளில் கொடுத்தார், கெட்டிலில் இருந்து டீயை ஊற்ற ஆரம்பித்தார். கோப்பை நிறைந்துவிட்டது. அந்த வினாடி வரை வந்தவர் பொறுத்திருந்தார், ஏனெனில் அதுவரை எல்லாமே சாதாரணமாகதான் நடந்தது, ஒரு களைப்பான மனிதனுக்காக இரக்கப்பட்டு டீ தயாரித்துக் கொண்டு வந்தார். அது அப்படித்தான் இருக்கும். நீ கோப்பையில் டீயை ஊற்றுகிறாய் – அதுவும் சரிதான், ஆனால் பின்தான் அசாதாரணமானது நடந்தது.

நான்சேன் ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பை நிறைந்து வழிந்தது. இப்போது விரிவுரையாளர் சிறிது ஆச்சரியமடைந்தார். இவர் என்ன செய்கிறார், இவருகென்ன பயித்தியம் பிடித்துவிட்டதா, ஆனாலும் பொறுத்தார் – அவர் மிகவும் நாகரீகமடைந்த மனிதர், இது போன்ற சிறிய விஷயங்களை ஒரளவுக்கு தாங்கிக் கொள்ள முடியும். ஒரு சிறிதளவு பைத்தியக்காரத்தனத்தை..... ஆனால் கோப்பையின் கீழே இருந்த தட்டும் நிறைந்து வழிந்தது, நான்சேன் ஊற்றிக் கொண்டே இருந்தார்.
இது மிகவும் அதிகம். இப்போது ஏதாவது செய்தாக வேண்டும், எதையாவது சொல்லியாக வேண்டும், வந்தவர் நிறுத்துங்கள் என கத்தினார். ஏனெனில் இப்போது டீ தரையில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், கோப்பை இனிமேலும் கொள்ளாது. இதைக்கூட உங்களால் பார்க்க முடியவில்லையா, உங்களுக்கு என்ன பயித்தியமா எனக் கேட்டார்.

நான்சேன் சிரித்துக் கொண்டே, இதைதான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன், உங்களுக்குகென்ன பயித்தியமா கோப்பை நிறைந்து விட்டது அதில் இன்னும் கொஞ்சம்கூட ஊற்ற முடியாது என்பதை பார்க்க முடிகின்ற உங்களால் உங்களது மூளை நிறைந்து வழிகிறது அதில் சிறிதளவுகூட உண்மை ஏறாது என்பதை ஏன் பார்க்க முடியவில்லை. இந்த டீயைப் போலவே உங்களது மண்டையிலிருந்து நிறைந்து வழியும் தத்துவம் என் குடிசை முழுவதும் பரவி இருப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா, நீங்கள் ஒரு பொருள்முதல்வாதி, உங்களால் டீயை பார்க்க முடிகிறது. இப்போது அடுத்த விஷயத்தையும் பார்ப்போம் வாருங்கள். என்று கூறினார்.

இந்த நான்சேன் என்பவர் மக்கள் விழிப்புணர்வு பெற பல வழிகளிலும், பல முறைகளிலும், பல விதங்களிலும் பலருக்கு உதவியுள்ளார். வேறுபட்ட பல விதங்களிலும் பல விதமான சூழ்நிலைகளை உருவாக்கி மக்கள் விழிப்புணர்வு பெற உதவியுள்ளார்.


Source : AND THE FLOWERS SHOWERED che #11

மலர் 2 இணைய இதழ் 11 11 ஜூன் 2010

தலையங்கம்

அன்பு நண்பர்களே,

வழக்கம் போல் இந்த ஆண்டும் இமயமலைக்குச் சென்றிருந்தேன். ரூப்குண்ட் ஏரி – 5050 மீட்டர் உயரத்தில் உள்ளது – நோக்கி இந்தமுறை நடைப்பயணம்.

எப்போதும் போல் எங்கும் நிறைந்த நிசப்தம், இறுகி உறைந்திருக்கும் சக்தி மண்டலம், இயற்கையின் லீலையாய் பூக்களும், மரங்களும். தூய்மையை இழக்க மாட்டேன் என்று உயரத்தை விட்டு இறங்கி உருக மறுக்கும் பனி, இம்முறை பனிப்புயலில் சிக்கிய அனுபவம், என்று பலவும் இருந்தன.

இதில் ஒருநாள் பனியை – மணல் போல இருக்கும் – உறையை கழட்டி விட்டு என் வெறும் கைகளால் எடுத்தேன். சிறிது கூட சில்லிப்பு இல்லை. மறுபடியும் எடுத்தேன். சிறிதுகூட சில்லிப்பு இல்லாமல் இருக்கிறது, பாருங்கள் என்று சொல்லியபடியே பனியை அருகிருந்த நண்பரிடம் கொடுத்தேன். அவர் ஆ என்றபடி கீழே போட்டு விட்டார். பிறகு தான் எனக்குத் தெரிந்தது, என் உள்ளங்கை உறைந்துபோய் இருக்கிறது, உணர்விழந்திருக்கிறது என்று.

என் உள்ளங்கைக்கு உணர்வில்லை என்பதை செயல் மற்றும் அதன் விளைவு மூலம் என்னால் – என் மனதால் – தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் முதலிலேயே உணர முடியவில்லை. இப்படி தெரிந்து கொள்ள முடிந்ததற்கு காரணம் கூட முழு உடலும் உணர்விழக்காமல், உடலில் இருந்து என்னால் செயல்பட முடிந்ததுதான்.

என் முழு உடலும் உணர்விழந்து விட்டால், நான் இறந்துவிட்டால், என் மனம் அல்லது நான் அதை உணர்வேனா என்றால், அப்படி இல்லை. வலியை நம்மால் உணர முடியும். ஆனால் இறந்துவிட்டதை உணரமுடியாது.

ஏனெனில் மனதால் தெரிந்து கொள்ளதான் முடியும், புரிந்து கொள்ளத்தான் முடியும், அறிந்து கொள்ளத்தான் முடியும், ஆனால் உணர முடியாது, வாழ முடியாது.

அப்போது நான் இறந்தபின், என் முழு உடலும் உணர்விழந்தபின், என் எண்ண ஓட்டம் நின்று விடுமா, இல்லை, மாறிவிடுமா, இல்லை, புரிந்துகொண்டுவிடுமா, அதற்கும் வாய்ப்பில்லை, ஏனெனில் மனம் புரிந்துகொள்ள ஒரு உடலின் நிகழ்வு வேண்டும். அது சுத்தமாக அங்கு இல்லை.

ஆக, உடல் இறந்தபின்னும், மனம் தொடர்ந்து உடலோடு கூடிய எண்ணங்களின் படியே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். வேறு ஏதாவது ஒரு புது உடல் உருவாகையில் அது இதற்கு ஒரளவு பொருத்தமானது எனும்போது அதற்குள் நுழைவது இயற்கையாகவே நடக்கிறது. பிறகு அந்த உடல் கருப்பையில், வளர்ந்து, மண்ணில் பிறந்து, உடலின் செய்கைகள் துவங்கையில் சிறிது சிறிதாக அந்த ஓட்டம் பின்புலத்தில் தேய்ந்து மறைகிறது. அப்போதும் இப்போதைய உலகத்தை சந்திக்கும் ஒரு அடிப்படை அணுகுமுறை பழைய பதிப்பிலிருந்தே தொடர்கிறது. இதைத்தான் நாம் மறுபிறவி என்கிறோம்.

இப்படி தொடர்வதில் பெரும்பாலோர் அல்லது சமுதாயக்கூட்டு மனத்தின் பகுதியாக வாழ்ந்து இறப்பவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட தொடர்ச்சியும் பெறுவதில்லை. அவர்கள் ஒரு கூட்டமாகவே பிறந்து, இறந்து, திரும்ப அதே கூட்டத்தில் பிறந்து என்பதோடு முடிந்தது. அவர்கள் இவ்வுலகில் இருக்கும்போதே தனிமனிதர்களாக இருப்பதில்லை. எனவே மறுபிறவி பிரச்னையே அங்கு இல்லை.

ஏதோ ஒரு விதத்தில் தனிமனிதர்களாக உருவெடுப்பவர்கள் இந்த மறுபிறவி சுழலில் சிக்குவர். இங்கு நான் மறுபிறவி என்று குறிக்கையில் அது மனதின் வலிவடைந்த எண்ண ஓட்டத்தின், எண்ண சுழலின் ஒரு தொடர்ச்சி என்பதையே குறிப்பிடுகிறேன். வாழ்வின் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் உணர்வுத் தேக்கம், உணர்ச்சிப் பெட்டகமாக, சக்தி முடிச்சாக தேங்கிவிடுகிறது மூளையில். இவையே இந்த மனம் என்னும் எண்ணச் சுழலுக்கு சக்தியாக செயல்படுகிறது. நான் என்ற சக்திமுடிச்சைச் சுற்றி நாம் ஆயிரம் முடிச்சுகளைப் போட்டுக் கொண்டே போகிறோம். இதனால்தான் மனம் என்ற எண்ணச் சுழல் பெரிதாகிக் கொண்டே போகிறது.

சரி, நான் சொல்ல வந்தது என்னவென்றால் இறக்கும்போது மனதை விடுவது இயலாது என்பதே. உடல் இருக்கும்போதே, புதிது புதிதாய் உணர முடியும்போதே, அந்த இயற்கை ஓட்டத்தில் நம்மைக் கரைத்துக் கொண்டு மனதை விடுவதே சாத்தியமே தவிர, உணர்வற்ற நிலையில் மனதை விட முடியாது. உண்மையில் அப்போது மனம் இடையூறு இல்லாமல், இடைவெளி இல்லா சினிமாவாய் ஓடிக் கொண்டே தான் இருக்கும். அது மட்டுமல்ல, அதற்கு உண்மையை, நிதர்சனத்தை உணரும் சக்தியில்லை.

மேலும் இறப்பதற்கு முன்பே நமது உடல் இறந்து கொண்டிருக்கிறது என்ற எண்ண ஓட்டம் ஏற்பட்டு, அதை சிறிது சிறிதாக தெரிந்து கொள்ள ஆரம்பிப்பதால், உடல் முழுதாய் இறந்தபின்பு மனம் தனது கனவு ஓட்டத்தில், தூக்கத்தில் நுழைவதுபோல நுழைகிறது. அப்படியில்லாமல் திடீரென உடல் இறந்தால், மனம் தொடர்ந்து உடல் இருப்பது போலவே எண்ணிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். விபத்துக்களில் இப்படி நடக்கலாம்.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், மனதை விடுவது எவ்வளவு கடினம், நமது இருப்பு நிலையை உணர எந்த அளவு மனம், உடல் இறந்தபின்னும்கூட தடையாக இருக்கிறது என்று விளக்கத்தான்.

ஆகவே உடல் இருக்கும்போது நடக்கும் சக்தி ஓட்டத்தைப் பயன்படுத்தி மனதை கடந்து இருப்பு நிலை பெறுவோம். அதற்கு தன்னுணர்வு வளர்ப்போம். அதற்கு உதவ தியான முறைகளைப் பயன்படுத்திக் கொள்வோம்.

எப்போதும் தன்னை நேசிப்போம், தன்னை உணர்வோம், தன்னை மதிப்போம், தன்னை அறிவோம், தன்னை பகுத்தாய்வோம், தன்னை ரசிப்போம், தன்னைப் பார்த்து ஆச்சரியமடைவோம், தனக்கு உதவிக் கொள்வோம், தன்னில் அக்கறை கொள்வோம், தன்னை பகிர்ந்து கொள்வோம், தன்னலம் பேணுவோம்.

தன்னை உணர்ந்தவனால் இயற்கை செழிக்கும், எல்லோருக்கும் பயன் விளையும், தன்னை உணர்ந்தவன் எல்லோரையும், இயற்கையையும் உணர்வான். உணர்ந்து செயல்படுவான்.
தன்னை உணராதவன் நடிக்கத்தான் வேண்டும். சுயநலம் மட்டுமே விளையும், எல்லோருக்கும் பொய்மையும் தீமையுமே விளையும்.

தன்னை உணர்வோம், இருப்பாய் மலர்வோம்.

அன்பு,
சித்.
கவிதை

இயற்கையை பார்

நண்பா!
ஒருநாள் ஒரு நண்பன் வீடு சென்றேன்,
அவன் நேர் கொண்ட நெஞ்சினன்,
எடுத்த செயல் முடிப்பவன்,
கடின உழைப்பாளி,
நேரம் தவறாதவன்,
நினைவு சிதறாதவன்,
அவனது தேடல்......ஞானம், முக்தி, பரவசம்,
பத்து வருட முயற்சி,
பலப்பல வழிமுறைகள்,
எரியும் தாகத்தில் சுட்ட உடம்பு,
முறிந்த முயற்சியில் வாடிய இதயம்!
எல்லாம் துறந்து எடுத்த முயற்சியிலும்
ஏன் எட்டாமல் இருக்கிறது?
தவறு முறையிலா, முயற்சியிலா, சொல்லுங்கள் - என்றான்.

என் உயிர் நண்பனே!
தவறு செயலில் இல்லை,
தவறு ‘நீ’ உன் தேடல்,
தேடுவது பேராசை!
உன் கூர்மை முயற்சியும், எரியும் தாகமும்,
இதயத்திலிருந்து பிறந்தவை அல்ல,
உன் தேடல் உன் அகம்பாவம்!
வாழ்வில் பழுத்து எழுந்த தாகமல்ல அது,
வாழ்வை பகுத்து எழுந்த பேராசை!

ஆம் நண்பா!
இயற்கையைப் பார்,
இயல்பான வாழ்வு,
இயல்பான அன்பு,
எதையோ தேடி எங்கோ போவதில்லை எதுவும்!
பூமிக்கு வா!
இயல்பாக இரு!
கிடைத்த வாழ்க்கையை இழந்துவிடாமல்
முழுதாய் வழி நட!
மனதின் பேராசைக்கு முக்தியடையும்
தீனி போடாதே!
மனதை விட்டு இதயம் வா!
வாழ்வின் வானவில்லை அன்புக்கண் கொண்டு
அனுபவித்து ரசி!

புலன் சுவை துய்,
அறிவுக் கூர்மை அறி,
நட்புநாடி நனை,
பாசச் சிறையைப் பார்!
இந்தக் கண நேரமும் மாறும் வாழ்வின்........
அன்பிலும் அழகிலும் கரைந்து ஒன்றி விடும் கணங்களில்,
நீ அனுபவிக்கிறாயே..... ஒரு துளி ஆனந்தச் சுவை,
இந்த சுவையிலிருந்து பிறக்க வேண்டும்.......
உன் ஆர்வமும் தாகமும்,
அதுவே வழி நடத்தும் ஆரம்பம்!
இப்போதுள்ளது பேராசை,
அதிகத்தை, அதிகாரத்தை நாடும் அகங்காரம்,
அதற்கு வழியாய் ஆன்மீகத்தில் சாதிக்க நினைக்கும் தந்திரம்!

ஆகவே.......
தேடுவதை விடு,
அன்பு கொள்,
வாழு, சிரி!
அதிசயம் நடக்கும்,
பரவசம் பிறக்கும்,
வாசல் திறக்கும்..

ஓஷோ வீடியோ

1. Osho :

2. Osho :

3. Osho :



கேள்வி – பதில்

ஓஷோ விளக்கும் சில புரிதல்கள்

முயற்சியின்றி விழிப்புணர்வோடு இருத்தல்

விழிப்புணர்வு கணத்துக்கு கணம் இருக்க வேண்டும், ஆனால் அது அப்படி இருக்க வேண்டுமானால் அது முயற்சியின்றி நடைபெறுவதாக இருக்கவேண்டும். முயற்சியோடு செய்யும்போது நீ திரும்ப திரும்ப தொடர்பை விட்டு விடுவாய். முயற்சியோடு செய்யும்போது உனக்கு ஓய்வு தேவைப்படும். முயற்சி தொடர்ந்து இருக்க முடியாது. அது சாத்தியமற்றது. ஒவ்வொரு முயற்சிக்கும் பின் ஓய்வு தேவைப்படும். அதனால் விழிப்புணர்வு முயற்சியின் மூலம் வரும்போது விழிப்புணர்வு தொடர்ச்சியானதாக, ஒரு தொடர் ஓட்டமாக இருக்கமுடியாது. நீ விழிப்புணர்வை தவற விடும் கணங்கள் வரும். அவை முயற்சியின்றி ஓய்வாக இருக்கும் கணங்கள்.

வாழ்க்கை துடித்துக் கொண்டேயிருக்கும், அது எப்போதும் எதிர்மறைக்கு சென்றுவரும். முயற்சி செய்தால் நீ ஓய்வு எடுத்தே தீர வேண்டும். திரும்பவும் முயற்சி எடுப்பாய், பின் திரும்பவும் ஓய்வு எடுப்பாய். ஆனால் வாழ்வை தாண்டி செல்லும் ஒரு விழிப்புணர்வு உண்டு. அது கடந்து நிற்பது. அப்போது அங்கு அலைபாய்தல் இருக்காது. அது முயற்சியின்றி இருப்பது, அது இயல்பானது. முயற்சி இருக்குமானால் அது வலுக்கட்டாயமானது, வலுக்கட்டாயமானது எப்போதும் இயல்பானதாக இருக்காது. இயல்பற்ற விழிப்புணர்வு விழிப்புணர்வே அல்ல. அது வெளிவட்டத்தில்தான் இருக்கும். உன்னுள் இருக்காது. அது உன்னுள் இருக்குமானால் முயற்சி செய்ய தேவையே இல்லை. முயற்சி எப்போதும் வெளிவட்டத்தில் இருப்பது. முயற்சியின் மூலம் மையத்தை தொட முடியாது.

ஆரம்பத்தில் முயற்சி தேவைதான். இல்லாவிடில் நீ எப்படி ஆரம்பிப்பாய், நீ முயற்சி செய்தே தீர வேண்டும், மனமற்று இருக்க முயல்வாய், தன்னுணர்வோடு இருக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்வாய். ஆனால் இந்த முயற்சி ஒருவித பதட்டத்தை உண்டாக்கும். எந்த அளவு முயற்சி செய்கிறாயோ அந்த அளவு பதட்டம் உண்டாகும். சிறிய அளவிலான அனுபவகீற்றுகள் கிடைக்கும், ஆனால் இந்த பதட்டத்தால் இந்த கணநேர அனுபவங்கள் கரைந்துவிடும். முயற்சி செய்தல் என்ற இந்த கட்டத்தை நீ கடந்து வந்தாக வேண்டும்.

ஆனால் முயற்சி செய்யும்போது சில சமயங்களில் திடீரென நாம் முயற்சி எதுவும் செய்யாமலே விழிப்புணர்வாக இருப்பது உனக்கு தெரியவரும். அந்த சமயங்களில் இருக்கும் விழிப்புணர்வுதான் ஒளியாக, நிறைவாக, மகிழ்வாக, நடனமாக இருக்கும்.

மூலம் - MY WAY: THE WAY OF THE WHITE CLOUDS


இணங்கி இருக்கும் கலை

அன்பு என்பது அடுத்தவருடன் இணங்கி இருக்கும் கலை. தியானம் என்பது நீ உன்னுடன் இணங்கி இருத்தல். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன்னுடன் எப்படி இருப்பது என்று தெரியாத ஒருவரால் மற்றவருடன் உண்மையாக தொடர்பு கொள்ள முடியாது. அவரது உறவுகள் அருவெறுக்கதக்கதாக, அசிங்கமானதாக, விபத்து போல, இருக்கும். ஒரு நிமிடம் எல்லாமும் நன்றாக இருக்கும், மற்றொரு நிமிடம் எல்லாமும் தவறாகி விடும். அது எப்போதும் மேலும் கீழுமாக சென்று வரும். அதற்கு ஆழமிருக்காது. அது மிகவும் கூச்சலிடும். அது உன்னை ஆக்ரமித்திருக்கும். ஆனால் அதில் எந்த லயமும் இருக்காது, அது உன்னை இயற்கையின் உயரங்களுக்கோ, இருப்பின் ஆழங்களுக்கோ எடுத்துச் செல்லாது.

மற்றொரு வகையிலும் இது அப்படித்தான். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவருக்கு தன்னுடன் தொடர்பு கொள்வதும் மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் தொடர்பு கொள்ளும் கலை என்பது அதேதான். உன்னுடன் நீ தொடர்பு கொள்வதோ, அன்றி மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதோ ஒன்றேதான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.
இவை ஒரே நேரத்தில் சேர்ந்தே கற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவற்றை பிரிக்க முடியாது. மக்களுடன் இரு. தன்னுணர்வின்றி இருப்பது போல இருக்காதே. உணர்வுடன் இரு. புல்லாங்குழல் வாசிப்பது போல, ஒரு பாடல் பாடுவது போல மக்களுடன் தொடர்பு கொள். ஒவ்வொருவரும் ஒரு இசைக் கருவி போல. மரியாதை கொடு, அன்பு செய், அவர்களை ஆராதனை செய். ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இறைமை ஒளிந்திருக்கிறது.

அதனால் மிகவும் கவனமாக இரு. மிகவும் ஈடுபாட்டுடன் இரு. நீ சொல்வது என்ன என்பதில் கவனமாக இரு. நீ என்ன செய்கிறாய் என்பதில் கவனமாக இரு. சிறிய விஷயங்கள் உறவை சிதைத்துவிடும். சிறிய விஷயங்கள் உறவை மிகவும் அழகாக்கிவிடும். சில நேரங்களில் ஒரு புன்னகை கூட அடுத்தவரின் இதயத்தை உனக்கு திறந்துவிடும். சில நேரங்களில் உன்னுடைய கண்களில் இருக்கும் ஒரு தவறான பார்வை கூட அடுத்தவரின் இதயத்தை மூடி விடும். இதுதான் மிக மென்மையான செயல்பாடு. இதை ஒரு கலை. ஒரு ஓவியன் வண்ணத்திரையில் எவ்வளவு கவனமாக வரைவானோ அதைப் போலத்தான் இதுவும். ஒரு கோடு கூட வித்தியாசத்தை உண்டாக்கி விடும். ஒரு உண்மையான ஓவியனால் ஒரு சிறிய கோட்டின் மூலம் மிகப் பெரிய வித்தியாசத்தை கொண்டு வர முடியும்.

வாழ்க்கையை மிகவும் கவனத்துடன், மிகவும் மென்மையாக நுணுக்கமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் மற்றவர்களுடன் நாம் தொடர்பு கொள்வது என்பது ஒரு கண்ணாடி போல. நீ என்ன செய்கிறாய், அதை எப்படி செய்கிறாய், என்ன நிகழ்கிறது என்று பார். அடுத்தவர்களுக்கு என்ன நிகழ்கிறது, நீ அவர்களது வாழ்க்கையை துயரமானதாக மாற்றுகிறாயா, நீ அவர்களுக்கு வலி கொடுக்கிறாயா, நீ அவர்களுக்கு ஒரு நரகமாக மாறுகிறாயா, அப்படி என்றால் விலகிவிடு. உன் வழியை மாற்றிக் கொள். உன்னைச் சுற்றி வாழ்க்கையை அழகாக்கு. உன்னை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதை ஒரு பரிசாக உணர வேண்டும். உன்னுடன் இருப்பதாலேயே ஏதோ ஒன்று பொங்கி பெருக வேண்டும், ஏதோ ஒன்று வளர வேண்டும், இதயத்துள் பாடல் மலர வேண்டும், மலர்கள் மலர வேண்டும். தனிமையில் இருக்கும்போது மௌனத்தில் இரு, நிசப்ததில் இரு, உன்னை நீயே கவனி.
எப்படி பறவைக்கு இரண்டு சிறகுகள் இருக்கிறதோ அது போல அன்பும் தியானமும் உனது இரண்டு சிறகுகள் ஆகட்டும். அவை இரண்டிற்க்கும் ஒத்த லயத்தை உருவாக்கு. அப்போது அவை இரண்டும் ஒன்றுகொன்று பிளவுபடாது, ஒன்றையொன்று வளப்படுத்தும், ஒன்றுகொன்று ஊட்டப்படுத்தும், ஒன்றுக்கொன்று உதவும். இதுதான் உன் பாதை. அன்பும் தியானமும் ஒருங்கிணைந்தது.

மூலம் - T HE RAINBOW BRIDGE

குறிக்கோள் இன்றி இருத்தல்


இங்கே இப்போது என இருப்பதற்கு எனக்கு கடினமாக இருக்கிறது. நான் எப்போதும் கனவு கண்டுகொண்டிருக்கிறேன். என்ன செய்வது.

அதற்காக கவலைப்படாதே. என்ன நிகழ்கிறதோ அதை அனுபவி. மேகத்தில் இருந்தால் அதை அனுபவி. எதற்காக அந்த கணத்தை நழுவ விடுகிறாய், அதில் கரைந்து போ, அதில் முழ்கு. இங்கே இப்போது எப்படி இருப்பது என்பதை ஒரு பிரச்னையாக மாற்றிக் கொள்ளாதே. அப்படி செய்தால் இதை நீ தவற விட்டு விடுவாய். எண்ணங்கள் இருந்தால் அவைதான் உனது நிகழ்காலம். நிகழ்காலத்தில் இருத்தல் என்பது அடைவதற்கான ஒரு குறிக்கோள் அல்ல. அது ஒரு குறிக்கோளாக இருந்தால் அதை ஒருநாளும் அடையவே முடியாது. நிகழ்காலம் என்பது இங்கே இருப்பது, குறிக்கோள் என்பது எதிர்காலத்தில் இருப்பது.
அதனால் நீ எங்கே இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் அந்த செயலில் இரு.

நினைத்தால் நினைத்துக் கொண்டிரு, கனவு கண்டு கொண்டிருந்தால் கனவு காணு. பிரிவினையை உண்டாக்கிக் கொள்ளாதே. கனவிலிருந்து உன்னை தனியே பிரித்து, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், நான் நிகழ்காலத்தில் இங்கே இப்போது இருக்க வேண்டுமே, கனவு கண்டு கொண்டிருக்கிறேனே, என யோசிக்காதே. ஏனெனில் கனவு காணுதல்தான் உன்னுடைய இங்கே இப்போது. என்னுடைய இங்கே இப்போது என்பதில் நீ இருக்க முடியாது. நீ உன்னுடைய இங்கே இப்போது என்பதில்தான் இருக்கமுடியும். புரிகிறதா

கனவு காணுதல்தான் உன்னுடைய நிதர்சனம். நீ வேறு ஏதாவது செய்ய ஆரம்பித்தால் உன்னுடைய நிகழ்காலத்திலிருந்து நீ வெளியேறுகிறாய்.

தியான முறைகள்

தலையணை யுத்தம்

எப்போது - ஒவ்வொரு நாளும் காலை

நேரம் - இரண்டு வாரங்களுக்கு தினமும் 20 நிமிடங்கள்.

அறையின் கதவை மூடிக்கொண்டு தனிமையில் இருங்கள். ஆத்திரம் வரட்டும். ஒரு தலையணையை எடுத்து அடித்து, உதைத்து, கடித்து, வீசி, மிதித்து, கிழித்து, துவையுங்கள். முக்கியமாக யார் மேலாவது கோபம் இருந்தால் அவர்கள் பெயரை அதன் மேல் எழுதுங்கள், அல்லது அவர்கள் போட்டோவை அந்த தலைகாணி மேல் ஒட்டி வையுங்கள்.
நீங்கள் மடத்தனமாக உணரக் கூடும். ஆனால் கோபமே மடத்தனமானதுதான். அதை நீங்கள் எதுவும் செய்ய முடியாது. அதனால் அது அங்கே அப்படியே இருக்கட்டும், அதை ஒரு சக்திநிலையாக உணருங்கள். நீங்கள் யாரையும் புண்படுத்தாதவரை அதில் எதுவும் தவறு இல்லை.

அதை நீங்கள் ஒரு தியானயுக்தியாக பயன்படுத்தும்போது, மெதுமெதுவாக அடுத்தவரை காயப்படுத்தும் எண்ணம் குறைவதை நீங்கள் காண்பீர்கள். கோபமாக மாறி சேகரமாகியுள்ள சக்தி வெளியே வீசப்படுவதால் நீங்களும் அமைதியடைவதை உணருவீர்கள். விஷமாகியுள்ள சக்தி உன் அமைப்பிலிருந்து வெளியேற்றப் படுகிறது.
சொல்லப்பட்டுள்ள காலகட்டம் வரை தினமும் தொடர்ந்து செய்தால் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நீங்கள் கோபம் கொள்ளவில்லை என்பதை நீங்களே உணருவீர்கள். கோபத்தால் தூண்டப்படவில்லை
என்பது உங்களுக்குத் தெரியும்.

மூலம் - HAMMER ON THE ROCK


கேட்கும் முறை

எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லா விதமான எண்ணங்களும் உன்னுடைய மனதை வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன. தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனமும் தன்னைச் சுற்றி பஞ்சுபொதி போன்ற ஒரு சுவரை எழுப்பி கொள்கிறது, வந்த எண்ணங்கள் அதில் மோதி திரும்பி விடுகின்றன. அவை உன் மனதிற்குள் நுழைய முடிவதில்லை. இது நல்லதுதான். ஆனால் மெதுமெதுவாக அவை எதையும் உள்ளே வரவிடாமல் மிகப் பெரிதாக வளர்ந்துவிடுகின்றன. அவை உன் கட்டுப்பாட்டை தாண்டி விடுகின்றன. அதை உடைக்கும் ஒரே வழி எண்ணங்களை உடைப்பதுதான்.

உன்னுடைய எண்ணங்களுக்கு ஒரு சாட்சியாக இரு. உனது எண்ணங்கள் மறைய மறைய இந்த பஞ்சுப்பொதி சுவருக்கு தேவை இன்றி போய் விடுகிறது. அப்போது அவை விழுந்து விடுகின்றன. அவைகள் கண்ணுக்குத் தெரியும் பொருட்களல்ல. அதனால் உன்னால் அவற்றை பார்க்க முடியாது – ஆனால் அவற்றின் விளைவு இருக்கும்.
தியானம் செய்ய தெரிந்த மனிதனுக்கு மட்டுமே கேட்கவும் தெரியும். எதிர்மறையாகவும் இது இருக்கும். கேட்கத் தெரிந்த மனிதனுக்கு தியானம் செய்யவும் தெரியும், ஏனெனில் அவை ஒரே விஷயங்கள்தான்.

முதல் நிலை - ஒரு மரத்தடியில், உனது படுக்கையில், எங்கேயிருந்தாலும் சரி – வெளிப்புற சத்தத்தை கேட்க முயற்சி செய். நல்லது என்றோ கெட்டது என்றோ எந்த கருத்தும் கொள்ளாமல் முழுமையாக ஆழ்ந்து கேட்க முயற்சி செய்.

உனது எண்ணங்கள் தானே விழுந்துவிடும், அது போல அந்த பாதுகாப்பு சுவரும் விழுந்துவிடும். அப்போது திடீரென மௌனத்துக்கும் அமைதிக்கும் உன்னை அழைத்துச் செல்லக்கூடிய ஒரு பாதை திறக்கும்.

நூற்றாண்டுகளாக இயற்கையின் மர்மத்துக்கு அருகில் வருவதாக இருந்தாலும் சரி, தனது இருப்பின் நிதர்சனத்தை அறிந்து கொள்வதாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் இந்த ஒரே வழிதான் உள்ளது. அருகில் நெருங்கி வர வர நீ குளிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வாய். நிறைவாகவும், திருப்தியாகவும், ஆனந்தமாகவும் உணர்வாய். நீ முழு நிறைவாக உணர்ந்து அதை இந்த முழு உலகத்துக்கும் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு கட்டம் வரும். அப்படி பகிர்ந்து கொண்டாலும் அந்த நிறைவு குறையாமல் அப்படியே இருக்கும். நீ கொடுத்துக் கொண்டே இருப்பாய், ஆனாலும் அது தீராது.

இங்கே இந்த முறையை அறிந்து கொள். பின் இதை உபயோகப்படுத்து. எங்கேயிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி இதை முயற்சி செய்து பார். உனக்கு இதற்கு ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பேருந்தில் நின்று கொண்டிருக்கும் போது, ரயிலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது.............

மூலம் - The Osho Upanishad

கேட்கும் வித்தை

கேட்பது ஒரு வேலையல்ல. கேட்க நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை. நீ அங்கே இருந்தால் மட்டும் போதும்.
முயற்சியோ, ஈடுபாடோ எதுவும் தேவையில்லை – அமைதியாக அமர்ந்து கேள். வெறுமனே அமர்ந்திருக்கும் போது, எதையும் நீ செய்யாமலிருக்கும் போது தியானம் நடைபெறும்.
நீ தனிமையில் இருக்கும் போது, வீட்டில் இருக்கும் போது, இந்த பயிற்சியை செய்து பார்.

பறவைகளுடன், அருவியுடன், மரத்தின் இலைகளை அசைத்துப் போகும் காற்றுடன், நீ செய்யக் கூடியதெல்லாம் மௌனத்துக்கு நகர்ந்து விடலாம். நதியின் கரையில் அமர்ந்து அமைதியில் ஆழ்ந்து விடு. இப்போது நதி உன் குரு அல்ல, அதற்கு நீ அங்கே இருப்பது கூட தெரியாது. காற்றுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை. இலையின் அசைவு உனக்காக இல்லை. மரத்தடியில் அமர்ந்து வெறுமனே இந்த ஒலிகளை கேட்கும்போது அந்த கணத்தில் நீ வேறு உலகிற்கு செல்கிறாய்.

சரியாக கேட்பது என்பதை அடிக்கடி ஜே. கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி சொல்வார். ஆனால் சரியாக கேட்பது என்பது கூட ஆபத்தாகி விடக் கூடும். அதற்கு ஒரு பயன் இருக்கிறது. அது உனக்கு முதன்முறை ஒரு அனுபவத்தை கொடுக்கும். ஆனால் அவற்றை உனது வாழ்வின் அடிப்படையாக கொள்ளாதே. அதற்கு பதிலாக அதே அனுபவங்களை வேறுபட்ட சூழ்நிலைகளிலும் பெற முயற்சி செய். அப்போது நீ அதிலிருந்து விடு பட்டு நிற்பாய். அதனால் சில நேரங்களில் மரத்தின் அருகில், சில நேரங்களில் ஒரு நதியின் அருகில், சில நேரங்களில் கடைவீதியின் நடுவில், சப்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாக இரு. அங்கேயும் அந்த வேறு பட்ட உலகம் உனக்கு திறக்கும்.

மூலம் - NO WHERE TO GO BUT IN


புத்தரின் புரிதல் - ஓஷோவின் கதை 23

நான் சொல்லும் இதை தியானம் செய்து பாருங்கள். சோசுவை, ஒரு துறவி “ஒரு நாய்க்கு புத்தத்தன்மை இருக்கிறதா இல்லையா?” என்று கேட்டார். சோசு, “இருக்கிறது”. என பதில் கூறினார்.

இதை ஆழ்ந்து பார்க்க வேண்டும். ஒரு நாய்க்கு புத்த தன்மை இருக்குமானால் அது உனக்கும் இருக்கும். நாயும் ஒருநாள் புத்தராக கூடும் என்றால் உனது லட்சியம் வெகு தொலைவில் இல்லை. இதில் பல விஷயங்கள் உள்ளன. ஒரு நாய் புத்த தன்மை உடையது என்றால் பின் அது உனக்கும், உனது எதிரிக்கும்கூட இருக்கும். எல்லா உயிர்களுக்கும், உடையதுதானே – இதில் உயர்வு தாழ்வு ஏது?

விழித்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதில்தான் முக்கியத்துவம் இருக்கிறது. இன்னும் சிறிது நேரம் தூங்கலாமா வேண்டாமா என்று நீ முடிவெடுப்பதில்தான் இருக்கிறது – புரண்டு படுத்து போர்வையை இழுத்து போர்த்தி தூங்குவதில்தான் சுகம். ஆனால் போர்வைக்குள் தூங்கும்போது, அதிகாலையை அனுபவித்தால் நீ புத்தர்தான். அது உன்னைப் பொறுத்தது. புத்தர் மரத்தடியில் உட்கார தீர்மானித்தார், நீ படுக்கையில் படுத்திருக்க தீர்மானித்திருக்கலாம். அது மிக முக்கியமான வித்தியாசம் அல்ல. ஒரு புத்தர் மரத்தடியில் ஞானத்தன்மை பெற முடியுமானால் உன்னாலும் போர்வைக்குள் ஞானத்தன்மை பெற முடியும். அது உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் நீ எதிர்கால மனித சமுதாயத்துக்கு ஒரு புதிய சாத்தியத்கூறை உண்டாக்குகிறாய். இல்லாவிடில் மக்கள் மரத்தடியில்தான் உட்கார வேண்டும் என எப்போதும் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில், குளிர்காலத்தில், ஏதாவது சூழ்நிலையில் பிரச்னை இருக்கும்போதெல்லாம் அவர்கள் புத்ததன்மையை ஒத்திப் போட்டு விடுவார்கள்.

அதில் எந்த பிரச்னையும் இல்லை என நான் உனக்கு கூறுகிறேன். போர்வைக்குள் கதகதப்பாக இருந்தபடியே நீ புத்தராகலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஏனெனில் புத்தராவதற்க்கும் மரத்தடியில் உட்காருவதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படித்தான் என்று கிடையாது. அதேபோல பத்மாசனத்தில் உட்காருவதற்கும் ஞானத்தன்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. பத்மாசனத்தில் அமர்வது தேவை என்றால் நாய்களால் ஞானத்தன்மை பெற முடியாது. எப்படி ஒரு நாயால் பத்மாசனத்தில் உட்கார முடியும்?.

போர்வைக்குள் இருக்கும் போது நடைபெறக்கூடும் என்றால் உங்களில் அதிகம் பேர் அதைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள் என நினைக்கிறேன். புத்தர் மரத்தடியில் அமர்ந்திருக்கும்போது அது நிகழ்ந்தது தற்செயலானது. அது போர்வைக்குள் இருக்கும் போதும் நிகழக்கூடும் என்பது அவருக்குத் தெரியாது. உண்மையில் இதே கேள்வி அவரது மனைவி அவரைப் பார்த்து கேட்டாள்........

பனிரெண்டு வருடங்கள் கழித்து அவர் தனது அரண்மனைக்கு வருகிறார். தந்தை மிக மிக கோபமாக இருப்பார் என்பது அவருக்கு மிக நன்றாக தெரியும். தந்தைக்கு மிகவும் வயதானபின் பிறந்த மகன், ஒரே மகன், தந்தையின் நம்பிக்கைகள் எல்லாம் இவரை சார்ந்துதான் இருந்தது. அவர் மிகவும் சக்தியிழந்து போய் விட்டார், ஓய்வெடுக்க விரும்பினார். தனது மகன் ராஜீய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவதற்காக காத்திருந்தார். அதற்கு முன்னதாக கௌதம புத்தர் அரண்மனையிலிருந்து சென்றுவிட்டார்.

இந்த கதையில் மனித மனம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும். கௌதம புத்தர் கிளம்புவதற்கு முன்தினம்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தனது வாரிசை, தனது துணைவிக்கும் தனக்கும் உள்ள அன்பின் வெளிப்பாட்டை, கிளம்புவதற்குமுன் ஒருமுறை காண விரும்பினார். அதனால் அவர் தனது மனைவியின் அறைக்கு சென்றார். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள், குழந்தை போர்வைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அவர் போர்வையை விலக்கி குழந்தையின் முகத்தை ஒரு முறை காண நினைத்தார். ஏனெனில் அவர் திரும்ப வராமலும் போகலாம்.

அவர் புரிபடாத யாத்திரைக்குச் செல்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்று அவருக்கே தெரியாது. அவர் தனது நாடு, மனைவி, குழந்தை, தன்னை, எல்லாவற்றையும் ஞானவிழிப்படைய பணயம் வைக்கிறார். அதற்காகவே அலைந்து திரிந்து ஞானமடைந்த வெகு சிலரிடமிருந்து கேள்விப்பட்ட ஒரு சாத்தியக்கூறாக மட்டுமே உள்ள ஒன்றை தேடி செல்கிறார்.

உங்களைப் போலவே அவருக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள், கேள்விகள். ஆயினும் ஒரு முறை முடிவு பெற்று விட்டால்....... அவர் மரணத்தை, முதுமையை, நோயை, பார்த்த அந்த நாள், அவர் தனது வாழ்வில் முதன்முறையாக ஒரு சந்நியாசியை பார்த்த அந்த நாள்...... அவருள், “மரணம் உறுதி எனும்போது பின் அரண்மனையில் காலத்தை செலவிடுவது ஆபத்தானது. மரணம் வருவதற்கு முன் இறப்பை கடந்தும் இருப்பதை கண்டடைந்தேயாக வேண்டும்”. என்ற இறுதி நிலைப்பாட்டுக்கான கேள்வி எழுந்தது.

அவர் செல்ல முடிவெடுத்துவிட்டார். ஆனாலும் மனித மனம், மனித இயல்பு...... தனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினார் - அவர் இன்னும் குழந்தையை பார்க்கவேயில்லை. ஆனால் போர்வையை விலக்கும்போது யசோதரா – அவரது மனைவி – விழித்துவிட்டால், அவள் எழுந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவள் எழுந்துவிட்டால், “இந்த இரவில் என் அறையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், நீங்கள் எங்கோ செல்ல தயாராகி இருப்பதுபோல தோன்றுகிறதே?” எனக் கேட்பாள்.

தேர் வாசலில் தயாராக இருக்கிறது, எல்லாமும் ரெடி, அவர் கிளம்ப வேண்டியதுதான் பாக்கி. அவர் தனது தேரோட்டியிடம், “ஒரு நிமிடம் பொறு, நான் எனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். ஏனெனில் நான் திரும்ப வராமலும் போகலாம்”. என்று கூறியிருந்தார்.

ஆனால் அவர் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை, ஏனெனில் யசோதரா எழுந்து அழுது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, எதற்கு இந்த துறவறம்?, நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?, ஞானமடைதல் என்பது என்ன? என்று கதற தொடங்கிவிட்டால்.... என்று பயப்பட்டார். ஒரு பெண்ணைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது – அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும். தந்தை வந்துவிடுவார், எல்லாமும் முடிந்துவிடும். அதனால் அவர் நழுவி சென்றுவிட்டார்.

பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஞானமடைந்தபின் அவர் செய்த முதல் வேலை, தந்தையிடம், மனவியிடம், பனிரெண்டு வயதடைந்த மகனிடம் மன்னிப்பு கேட்க திரும்பி வந்ததுதான். அவர்கள் கோபமாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார். தந்தை மிகவும் ஆத்திரமாக இருந்தார். புத்தரை பார்த்தவுடன், அரைமணி நேரம் திட்டி தீர்த்தார். பின் திடீரென தான் கூறிய எந்த விஷயமும் தன் மகனை தொடவில்லை, அவன் ஒரு பளிங்குச்சிலை போல நிற்கிறான் என்பதை உணர்ந்தார்.
தந்தை தன்னை கவனித்தவுடன் புத்தர், “இதைத்தான் நான் விரும்பினேன். கண்ணீரை துடைத்துக் கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். அரண்மனையை விட்டு சென்றபோது இருந்தவன் அல்ல நான். உங்களது மகன் முன்னரே இறந்து விட்டான். நான் தோற்றத்தில் உங்களது மகன்போல இருக்கலாம். ஆனால் எனது இருப்பு மிகவும் வேறுபட்டது. என்னைப் பாருங்கள்”. என்றார்.

“நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அரைமணி நேரம் நான் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தேன், நீ எதுவுமே பேசவில்லை. நீ எவ்வளவு ஆத்திரக்காரன் என்று எனக்குத் தெரியும். உன்னால் அமைதியாக இருந்திருக்க முடியாது. இப்படி அமைதியாக இருந்தவிதமே நீ மாறிவிட்டாய் என்பதை காட்டுகிறது. உனக்கு என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.

புத்தர், “சொல்கிறேன். அதற்குமுன் நான் போய் என் மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு வருகிறேன். நான் வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பார்கள்.” என்றார்.

அவரை பார்த்தவுடன் அவர் மனைவி, “நீங்கள் மாறியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு வருடங்கள் மிகவும் துன்பமான காலங்கள். நீங்கள் சென்று விட்டதல்ல காரணம், நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்றதே காரணம். நான் உண்மையை தேட செல்கிறேன் என என்னிடம் கூறியிருந்தால் நான் உங்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் என நினைத்தீர்களா? நீங்கள் என்னை கேவலப் படுத்தி விட்டீர்கள். இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வருத்திய விஷயம் இதுதான்.

நீங்கள் உண்மையை தேட சென்றது வருத்தப்பட வைக்க வில்லை,
அது சந்தோஷமான விஷயம்தான். நீங்கள் ஞானத்தை தேடி சென்றது குற்றமல்ல. நான் உங்களை தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேன். நானும் ஷத்திரிய குலத்தை சேர்ந்தவள்தான். கத்தி கதறி அழுது உங்களை தடுக்கும் அளவு பலவீனமானவளாகவா என்னை நினைத்தீர்கள்?,
நீங்கள் என்னை நம்பவில்லையே என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் என்னை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் நீங்கள் செல்ல அனுமதித்திருப்பேன், நான் உங்களுக்கு விடை கொடுத்திருப்பேன், தேர் வரை வந்து வழியனுப்பி வைத்திருப்பேன். நீங்கள் அடைந்திருப்பது எதுவோ அதை இங்கிருந்தே அடைந்திருக்க முடியாதா என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் உங்களை நான் கேட்க துடித்துக் கொண்டிருந்த கேள்வி. நீங்கள் எதையோ அடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது........

இந்த அரண்மனையிலிருந்த சென்ற நபர் அல்ல நீங்கள். நீங்கள் வேறுவிதமாக ஜொலிக்கிறீர்கள், உங்களது இருப்பு முற்றிலும் புதிதாக, புத்துணர்வோடு இருக்கிறது. உங்களது கண்கள் மேகமற்ற வானம் போல தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் அழகுதான், ஆனால் இந்த அழகு புறஅழகல்ல, அகஅழகு உங்களுக்குள் பூத்திருக்கிறது. உங்களுக்கு கிடைத்தது என்னவோ அது இங்கே நீங்கள் இருந்தால் கிடைத்திருக்காதா? இந்த அரண்மனை நீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா?” என்று கேட்டாள்.

இது மிக புத்திசாலித்தனமான கேள்வி. இதை கௌதம புத்தர் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. “நான் இங்கிருந்தே அடைந்திருக்கலாம். ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. இப்போது என்னால் ‘இங்கிருந்தே அடைய முடியும், எந்த மலைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை, எங்கேயும் செல்ல வேண்டியதில்லை’ என சொல்ல முடியும். நான் என்னுள் சென்றாலே போதும், நான் எங்கே இருந்தாலும் அது நிகழும். வெளியே வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. இந்த அரண்மனையும் மற்ற இடங்களைப் போன்றதே. ஆனால் என்னால் இதை இப்போது சொல்ல முடியும், அப்போது இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே.

நான் உன்னைப் பற்றியோ உன் தைரியத்தைப் பற்றியோ சந்தேகபடவில்லை. உண்மையில் நான் என்னைப் பற்றித்தான் சந்தேகப்பட்டேன். அதனால் என்னை மன்னித்துவிடு. நீ எழுந்துவிட்டாலோ, நம் குழந்தையை நான் பார்த்துவிட்டாலோ, “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?, என்னுடைய அழகான மனைவியை, இந்த முழுமையான அன்பை, என்னிடம் அவள் கொண்டிருக்கும் முழுமையான அர்ப்பணிப்பை விட்டு விலகுவதா?, இந்த ஒரு நாளே ஆன குழந்தை என்ன செய்தது?, நான் அவனை விட்டு போகிறேன் என்றால் ஏன் இவனை பெற்றெடுத்தேன்?, நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விடுவேன்.

என்னுடைய தந்தை விழித்துக் கொண்டு விட்டாலோ என்னால் போகவே முடியாது. நான் உன்னை நம்பவில்லை என்பதல்ல, நான் என்னைத்தான் நம்பவில்லை. நான் முழுமையாக துறக்கவில்லை, அங்கு ஒரு அலைபாய்தல் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுள் ஒரு பாகம், ‘ஏய், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்றது. மற்றொரு பாகம், ‘செல்வதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம், இதை நீ விட்டுவிட்டால் போவது மேலும் மேலும் கடினமானதாகி விடும். உனக்கு முடி சூட்டுவதற்கு உனது தந்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். முடி சூட்டிக் கொண்டு அரசனாகி விட்டால் பின் செல்வது மிகவும் கடினம்’. என்றது.” என்று கூறினார்.

யசோதரா, “நான் உங்களிடம் கேட்க நினைத்த ஒரே ஒரு கேள்வி இதுதான். அதை எங்கிருந்தாலும் அடைய முடியும், இங்கிருந்தாலும் அடைந்திருக்க கூடும் என நீங்கள் கூறிய பதிலின் உண்மை தன்மையில் என் உள்ளம் குளிர்ந்தது. இதோ உங்கள் மகன், இவன் உங்களைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் நான், “பொறு, அவர் திரும்பி வருவார். அவரால் மனிததன்மையற்று, கருணையின்றி, கொடூரமாக நடந்து கொள்ள முடியாது. ஒரு நாள் அவர் திரும்பி வருவார். அவர் எதை உணர சென்றிருக்கிறாரோ அதற்கு நாள் பிடிக்கும். ஆனால் அதை உணர்ந்த உடனே அவர் செய்யும் முதல் விஷயம் இங்கே திரும்பி வருவதுதான்.” என பதில் கூறுவேன்.

உங்களது மகனுக்கு நீங்கள் தரப் போகும் சொத்து என்ன?, அவனுக்குத் தர நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?, அவனுக்கு உயிர் கொடுத்திருக்கிறீர்கள், வேறு என்ன அவனுக்கு கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

புத்தரிடம் பிச்சைப் பாத்திரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் தனது மகனை – அவன் பெயர் ராகுல். ஏன் அவன் பெயர் ராகுல் என்பதை நான் பிறகு சொல்கிறேன் அந்த பெயர் கௌதம புத்தர் அவனுக்கு கொடுத்தது – அருகில் அழைத்தார்.

ராகுலை அருகில் அழைத்து பிச்சைப் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்தார். “என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதுதான் என்னிடமுள்ள ஒரே விஷயம். இனிமேல் நான் என் கைகளையே பிச்சைப் பாத்திரமாக உபயோகப் படுத்தி பிச்சை எடுத்துக் கொள்வேன். இந்த பிச்சைப் பாத்திரத்தை உனக்கு கொடுத்ததன் மூலமாக நான் உனக்கு சந்நியாசம் கொடுத்துவிட்டேன். நான் கண்டறிந்த மிகப் பெரிய அரிதான விஷயம் இதுதான். நீயும் இதை கண்டறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றார்.

அவர் தனது மனைவியிடம், “நீயும் எனது சந்நியாசிகளின் கூட்டத்தில் ஒரு பாகமாக தயாராகு,” என்றார். தனது மனைவிக்கும் தீட்சையளித்தார். புத்தரின் தந்தை வந்து இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். “ஏன் என்னை மட்டும் விட்டு விட்டாய்?, நீ கண்டறிந்ததை உன் வயதான தந்தையுடன் பகிர்ந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா?, என்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது...... எனக்கும் தீட்சை கொடு” என்று அவர் கேட்டார்.

புத்தர், “உங்கள் எல்லோரையும் என்னுடன் கூட்டிச் செல்லத்தான் நான் இங்கு வந்தேன். ஏனெனில் அழியாத, யாராலும் பறித்துக் கொள்ள முடியாத, முற்றிலும் பெரியதான சாம்ராஜ்யத்தை நான் அறிந்தேன். நான் இங்கே வந்தால் என்னுடைய இருப்பை, என்னுடைய தெளிவை, உங்களால் உணர முடியும் என்றே நான் இங்கே வந்தேன். என்னை பின் தொடர்ந்து வாருங்கள் என நான் உங்களை அழைக்க முடியும்.” எனக் கூறி அவர்கள் மூவருக்கும் தீட்சையளித்தார்.

இந்திய புராணங்களில் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கு உள்ள இரண்டு எதிரிகளான ராகுவும் கேதுவும் சந்திரனை பிடித்து கொல்ல முயற்சி செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் சந்திரன் அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். என்பதை தான் சந்திரகிரகணம் என்று கூறப் படுகிறது. கௌதம புத்தர், “இந்த மகன்தான் எனக்கு மிகப் பெரும் தடையாக இருக்கப் போகிறான், இவன்தான் என்னுடைய எதிரியாக இருக்கப் போகிறான், இமயமலைக்கு நான் செல்வதை தடுக்கப் போவது இவன்தான். இவன்மேல் நான் வைக்கும் அன்பு, இவனுடன் நான் கொண்டுள்ள நேசம், பாசம். இவைதான் என்னுடைய விலங்குகளாக இருக்கப் போகின்றன.” என்று நினைத்ததால் அவர் தன் மகனுக்கு ராகுல் என பெயர் வைத்தார்.

அவர்கள் எல்லா சந்நியாசிகளும் தங்கியிருந்த, ஊரை விட்டு வெளியே தள்ளியுள்ள காட்டுக்கு வந்தனர். அன்று மாலை அவர் சந்நியாசிகளிடையே உரை நிகழ்த்துகையில், “எனது மனைவி யசோதரா என்னை ஒரு கேள்வி கேட்டாள். அது மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி. ஒரு அரசராக வாழ்ந்து கொண்டே ஞானம் பெறுவது சாத்தியமில்லையா என்று கேட்டாள். ‘இடத்தைப் பற்றியோ, நேரத்தைப் பற்றியோ கேள்வியே கிடையாது. ஒருவர் எங்கேயிருந்தாலும் சரி ஞானம் பெற முடியும் – ஆனால் அந்த நேரம் இதை சொல்வதற்கு எனக்கு யாருமில்லை. எங்கே இதை பெற முடியும், யாரிடம் இதை கேட்பது, எங்கே போவது என்று எனக்கு எந்த யோசனையும் இல்லை. நான் அறியாததற்க்குள் குதித்து விட்டேன்.’ என்று உண்மையை கூறினேன். ஆனால் இப்போது, நீ எங்கே இருந்தாலும் கவனத்தோடும் விழிப்போடும் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பணயம் வைக்க கூடிய தைரியம் உன்னிடம் இருக்குமானால் ஞானமடைதல் நிகழும் என்று என்னால் கூற முடியும்.” என்றார்.

மலர் 2 இணைய இதழ் 10 11 மே 2010

தலையங்கம்

அன்பர்களுக்கு வணக்கம்.

இருபுறமும் தீபம் ஏற்றப்பட்ட தன்னுணர்வோடு நீ ஒளிர வேண்டும். இதுதான் ஓஷோவின் புதிய பரிமாணம், புதிய மனிதன், ஜோர்புத்தா, ஓஷோவின் மனித குலத்திற்கான பங்களிப்பு.

இதன் பாதிப்பு ஓஷோவிற்குப் பின் வந்த அனைத்து குருமார்கள், போலிகள், உண்மைகள், அரைகுறைகள் என எப்படிப்பட்டவர்களாயினும் அவர்கள் கூட ஓஷோவின் இந்த செய்தியை கடைபிடிக்கின்றனர், மக்களிடம் பேசுகின்றனர். வறட்டு வேதாந்தமே ஆன்மீகம் என்பதை ஓஷோ உடைத்துப் போட்டு விட்டார். இனி அது மக்களிடம் செல்லுபடி ஆகாது. பிச்சை எடுப்பதும், பிரம்மச்சரியம் மேற்கொள்வதுமே ஆன்மீகம் என்ற நிலையை ஏற்கனவே ஓஷோ உடைத்துவிட்டார்.

இப்போதுள்ள எல்லா சாமியார்களும் இதைப் பின்பற்றி வாழ்வோடு இயைந்த ஆன்மீகம் பேச ஆரம்பித்து விட்டார்கள். இதன் பாதிப்பாகத்தான் பழமை சாமியார்களான சங்கராச்சாரியார் போன்றவர்களின் மதிப்பு குறைந்து புதுச்சாமியார்கள் வியாபாரம் வெற்றிநடை போடுகிறது.

ஆனால் ஓஷோவின் பங்களிப்பை சரியாகப் புரிந்து நம் வாழ்வை அப்படி வாழ ஓஷோவின் அன்பர்கள் இதயபூர்வமாக ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் ஜோர்புத்தா எனும் புதிய மனிதனும், தன்னுணர்வின் வெளிச்சத்தில் செயல்படும் ஒரு புதிய கூட்டமைப்பும், அதனால் சொர்க்கமாக மாறும் ஒரு புதிய உலகமும் சாத்தியமாகும்.

இந்த உடலே புத்தர், இந்த புமியே சொர்க்கம் என்கிறார் ஓஷோ. ஆம், அப்படி வாழ்வும், பூமியும் மலர முடியும்.

அதற்கு செய்ய வேண்டியது என்ன, ஆன்மீக நாட்டம் உடையவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் தன்னுணர்வை வளர்க்க தியானமுயற்சி கடுமையாகச் செய்கின்றனர். ஆனால் அதே தன்னுணர்வோடு தங்கள் உடலில் வாழ்வதில்லை. புலன்களையும், மூளையும் தன்னுணர்வின் வெளிச்சத்தில் முழு வீச்சோடு செயல்படுத்துவதில்லை. வெளி உலகின் நிகழ்வுகளை தன்னுணர்வு வெளிச்சத்தில் பார்த்து ஈடுபாட்டோடு பங்கேற்பதில்லை. உதாரணமாக ஒரு தொழில் செய்வது, ஒரு படைப்பில் ஈடுபடுவது, ஒரு அழகுணர்ச்சியோடு செயலாற்றுவது என்பதில் எல்லாம் தன்னுணர்வு வளர முடியும், அதோடு கூட பழமை மனதின் கட்டுதிட்டங்களை உடைத்து எறிந்து தன்னுணர்வின் வெளிச்சத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சேவகம் செய்வதாக அந்த மனம் மாற வேண்டுமென்றால் வெளிஉலகில் தன்னுணர்வோடும், விழிப்புணர்வின் கூர்மையோடும் வாழ வேண்டியது அவசியம்.

இப்படி வாழும்போது வெளி உலகும் சொர்க்கமாகிறது, மனமும் சேவகனாகிறது. தன்னுணர்வும் வளர்கிறது.

இதேபோல தொழிலில் வெற்றிக்கொடி நாட்டும் பலருக்கு வெளி விஷயங்களில் விழிப்புணர்வு கூர்மையாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் திசைதெரியாமல் ஓடிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளனர். முதலிடத்தை நிலைநாட்டிக் கொள்ளும் முயற்சியே வாழ்க்கையாகி விடுகிறது. அவர்களுக்கு கடைசியில் சலிப்பும், ஏமாற்றமுமே மிஞ்சுகிறது. பயித்தியக்காரத்தனமான ஈகோவின் பிடியில் சிக்கி பாழ்பட்டதாக வருத்தப்படுகின்றனர்.

ஆனால் அது அப்படியல்ல. தங்களது விழிப்புணர்வுக் கூர்மையோடு தியானத்தில் அவர்கள் ஈடுபட்டால் உள்ளொளியை அவர்கள் பெற முடியும். தன்னுணர்வின் அமைதியையும் ஓய்வையும், சாந்தத்தையும் அனுபவிக்க முடியும்.

அப்போது உலகம் அழகான மனிதர்களால் நிறையும். இப்படி விழிப்புணர்வை தீயை இருபுறமும் பற்ற வைத்துக்கொண்டு வாழ்வின் சக்தியை எல்லாப் பரிமாணங்களிலும் வெளிப்படுத்தி வாழும் மனிதனே ஓஷோவின் கனவு. இது அவரது கடைசி வாக்கியம், “நான் எனது கனவை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.”

அவரது கனவு மெய்ப்பட வேண்டும். அதற்கு நெஞ்சினிலே உறுதி வேண்டும், நேர்மை வேண்டும், உழைப்பு வேண்டும், இயற்கையோடு இணைப்புணர்வு வேண்டும், தியானம் வேண்டும், திறந்த இதயம் வேண்டும், அவ்வளவுதான்.

வாழ்வோம். விழிப்புணர்வோடு வாழ்வோம். உள்ளும் புறமும் விழிப்புணர்வோடு வாழ்ந்தால் அந்தப் பிரிவினை மறைந்துபோகும்.

உள்ளே, வெளியே, அகம், புறம் என்ற பிரிவினையே மனித மனத்தின் மாயைதான். அப்படியொரு பிரிவினையே கிடையாது. இப்படி மனிதன் பிளவுபட்டதே இன்றைய உலகத்தின் வீழ்ச்சிக்கு, மனிதனின் சிதைந்த நிலைக்குக் காரணம். இதை உணர்ந்துதான் ஓஷோ இதை இணைக்கும் ஒரு புதிய மனிதனை, இந்த பிளவே இல்லாத ஒரு புதிய மனிதனை, ஒரு புதிய வாழ்க்கை முறையை, ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதில் தன் சக்தியைக் கொடுக்கிறார்.

விழிப்புணர்வை உள்ளும் வெளியும் இதயத்திலும், செயலிலும், ஒரு சேரப் பற்றவைத்து வாழும்போது வெகு சீக்கிரமே இந்தப் பிரிவினை உடைந்து வெறும் விழிப்புணர்வாய், தன்னுணர்வாய், சக்தியாய், அன்பாய், அழகாய், ஒளி வெள்ளமாய் வாழும் வாழ்வின் சுவை நமக்குக் கிடைக்கும். அப்படி வாழும் வாழ்க்கைக்கு உடலும், மனமும், தொழிலும், படைப்பும், கலையும், தியானமும் சேவகம் செய்து உயர்த்திப் பிடிக்கும்.

அன்பு
சித்.
கவிதை

ஏமாறாதே

எனதருமை நண்பா!
நீ இலையை நேசிக்கிறாய்,
ஆம்...... உறவை நேசிப்பது நல்லதே!
ஆனால், இலையை மட்டும் எவ்வளவு நாள் நேசிப்பாய்?
இலையைத் தாங்கி இருக்கும் கிளைக்கும் கிளைவிட வேண்டுமல்லவா உன் நேசம்?

கிளையை நேசிப்பவரும் பலர்,
சுற்றத்தையே நேசிப்பது சிறப்பே,
ஆனால் நீங்கள் நேசத்திற்கு உண்மையாக இருக்கும்போது........
கிளையை பரப்பும் மரத்திற்கும் பரவ வேண்டுமல்லவா உங்கள் நேசம்?

மரத்தையே நேசிப்பவன் என்று மார் தட்டுவோர் உண்டு,
கருத்துக்கும் கொள்கைக்கும் காதல்வயப்பட்டு
மதமும் கட்சியுமாய் இதயம் விரிவது நல்லதே.
ஆனால், நேசத்தில் நிறைந்தவராய் நீங்கள் இருக்கும்போது....
மரத்தை தாங்கும் வேரை மறந்திருப்பது எப்படி சாத்தியம்?

எதிர் எதிர் திசையில் வளருவதால் மரத்தின் வேரும் கிளையும் வெவ்வேறா?
இவை நமது பார்வையின் பிரிவுகளே.
இதை உணர்ந்து உயர்வு தாழ்வு கொள்ளாமல்
மனிதனை நேசிக்கும் ஆன்மாக்களும் உண்டு.
இது மிகவும் உயர்வுதான்......
ஆனால் ஊற்றெடுக்கும் நேசத்தில் நிறைந்துவழிபவர்........
எப்படி ஒரு எல்லைக்குள் நிற்க முடியும்?

அன்புக்கு அணை போடலாமா?
அது வெள்ளமாய் பெருக்கெடுத்து எங்கும் உரம் சேர்க்கவேண்டாமா?
அணைகளின் நலன் குறுகியபார்வைதான்,
தொலைநோக்கில் தரிசு நிலங்களையே அவை தரும்,
இதை அறிய வில்லையே இந்த மனிதர்கள்.

என் தோழா,
ஊட்டமளிக்கும் மண்,
உயிரளிக்கும் சூரியன்,
உணர்வளிக்கும் காற்று,
வாழ்வளிக்கும் நீர்,
கூடிவாழும் உயிரினங்கள்......
என்று எல்லையற்ற பிரபஞ்சம் வரை,
உன் நேசம் விரிய வேண்டாமா?
ஆம்.......நீ அன்பின் ஊற்று!
வாழ்வெனும் ஆறு!
இலையில் ஏமாந்து போகாதே!
முழு இயற்கையும் நீயே!!!

ஓஷோ வீடியோ

1. Osho : Love and Loneliness

2. Osho : Ecology

3. Osho : Courge



கேள்வி – பதில்

மனதை அனுபவி

நான் எனது மனதுடன் சலித்து போய் விட்டேன். தியானம் செய்வதற்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்கும் எல்லாமும் செய்து பார்த்து விட்டேன். ஆனால் அதை என்னால் உணரவே முடிய வில்லை.


முதல்படி – மனதை நிறுத்த முயற்சி செய்யாதே. சலனம் அதன் இயல்பு. அதை நிறுத்த முயற்சி செய்தால் உனக்கு பைத்தியம் பிடித்து விடும்.

ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதைப் போன்றது இது.. மரத்துக்கு பைத்தியம் பிடித்துவிடும். மரத்துக்கு இலைதான் இயல்பு. நீ மனவயப்பட்ட ஒருவன், நீ இதயப்பூர்வமான மனிதனாக மாற முயற்சி செய்தால் தேவையில்லாமல் உனக்கு நீயே தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்வாய். ஏனெனில் மனதிலிருந்து நகர்ந்து செல்வதற்கு வழிகள் உள்ளன. உன்னை இதயபூர்வமான ஒருவனாக கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அது உன்னுடைய இயல்புக்கு மாறானது.
உனது இயல்புடன் ஒன்றிவிடுவதற்கு, உனது இயல்பை பின்பற்றுவதற்கு கற்றுக் கொள். இயல்பாக இருப்பதுதான் மத்தன்மை. உனது இயல்புடன் லயப்படுவதுதான் மிக முக்கியமானதேவை. அதனால் உனது சிந்தனையை நிறுத்த முயற்சி செய்யாதே. அது மிகவும் சரியானதே.

இரண்டாவது படி – மனம் தனது வேலையை செய்வதை அனுபவி.
மனது வேலை செய்வதை நிறுத்துவதற்கு முயலாதே. அதை அனுபவி. அதனுடன் விளையாடு. அது மிக அழகான விளையாட்டு. அதனுடன் விளையாடு, அதை அனுபவி, அதை விரும்பு, அதைப் பற்றி விழிப்புடன் இரு, அதை பற்றி கவனம் கொள்.

மனதின் எண்ண ஓட்டத்தை பார். அவை எப்படி ஓடுகிறது, எப்படி ஒன்று ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறது என்று பார். ஒன்று ஒன்றை எப்படி இழுக்கிறது என்று பார். அது ஒரு அதிசயம். ஒரு சிறிய எண்ணம் எங்கோ இழுத்துச் செல்வதை கவனி. ஆரம்பித்த இடத்துக்கும், முடியும் இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை பார்.

ஒரு நாய் குரைக்கும், உனது எண்ண ஓட்டம் தூண்டப்படுகிறது. நாய் மறக்கப்பட்டு விடுகிறது, அழகான நாய் ஒன்றை வைத்திருக்கும் உனது நண்பனின் ஞாபகம் வருகிறது. பின் நீ அங்கு இல்லை. நண்பன் மறந்து போய் அவனின் அழகான மனைவி நினைவுக்கு வருகிறாள், பின் வேறொரு பெண்....... நீ எங்கே போய் முடியப் போகிறாய் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு நாய் குரைப்பதில் ஆரம்பிக்கிறது. கவனி, எண்ணங்களின் தொடர்பை பார். எண்ணங்களின் சங்கிலியை பார்.

எளிதாக எடுத்துக் கொள், ஓய்வாக இரு. விழிப்புணர்வு உன்னுள் வரும், அது மறைமுகமாக வரும். விழிப்புடன் இருப்பது ஒரு முயற்சி அல்ல. அதைத்தான் நீ செய்து கொண்டிருக்கிறாய். விழிப்புணர்வு அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். உனது மனம் உன்னை திசை திருப்புகிறது, அதனால் உனக்கு கோபம் வருகிறது. இந்த கேடுகெட்ட மனம் தொடர்ந்து உளறிக் கொண்டேயிருப்பதை நீ உணர்கிறாய். நீ அமைதியாக இருக்க முயற்சி செய்கிறாய், ஆனால் இந்த மனம் அதற்கு அனுமதிப்பதேயில்லை. அதனால் நீ மனதிடம் ஆத்திரம் கொள்கிறாய். அது நல்லதல்ல. இது உன்னை இரண்டாக பிரித்துவிடும். நீயும் உன் மனமும் என இரண்டாக பிரிந்து இருப்பீர்கள்.

எல்லா பிளவுகளும் தற்கொலைக்கான முயற்சியே. ஏனெனில் உனது சக்தி தேவையின்றி வீணாகிறது. நம்முடன் நாமே சண்டையிட்டுக் கொள்ளும் அளவு நம்மிடம் சக்தி இல்லை. அதே சக்தியை நாம் சந்தோஷத்துக்கு செலவிட வேண்டும்.

சண்டையிடுதல் உன்னை அழித்துவிடும். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை – அன்பு செய். எல்லா அழிவு சக்திகளும் அன்பு சக்தியாக மாற வேண்டும். அனுபவித்துப்பார் விரைவில் எல்லா விஷயங்களும் மாற ஆரம்பிக்கும்.

தியான முறைகள்

உள்ளுணர்வு தரும் செய்தியை கவனித்தல்

ஆழ்ந்த உறக்கத்திற்குப்பிறகு உன்னுடைய இருப்பின் அடித்தளத்தில் இருந்து தகவல்கள் வருவது சில நேரங்களில் நிகழும்.

முதல் படி – காலை எழுந்தவுடன் உன்னுள் எழும் எண்ணங்களை கவனிக்க ஆரம்பி. உறக்கத்தின் போது நீ உனது இருப்பின் அருகாமையில் இருப்பாய்.
எழுந்த இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் சில தகவல்கள் உனது இருப்பின் அடித்தளஅனுபவத்தில் இருந்து நீ பெறக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. இரண்டு மூன்று நிமிடங்களில் அந்த தொடர்பு அறுந்து விடும். நீ திரும்பவும் இந்த உலகத்திற்கு வந்துவிடுவாய். இந்த உலகத்தினுள் வீசப்பட்டு விடுவாய்.


மனப்பதிவை திரும்பி பார்த்தல்

எப்போது – உறங்கப் போகுமுன்

முதல் படி – திரும்பிப்பார் – அன்றைய தினத்தின் எல்லா நினைவுகளுக்குள்ளும் திரும்ப சென்று பார். காலையில் இருந்து ஆரம்பிக்காதே. எங்கிருக்கிறாயோ, அங்கிருந்து, படுக்கையிலிருந்து ஆரம்பி. கடைசி செயல், பின் அதற்கு முந்தினது, பின் அதற்கு முந்தினது, படிப்படியாக காலையில் செய்த முதல் செயல் வரை திரும்ப சென்று பார். அதனுடன் உன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வதில்லை என்பதை தொடர்ந்து நினைவில் கொண்டபடி அன்றைய நாளின் நிகழ்ச்சிகளை பின்னால் சென்று பார்.
உதாரணத்துக்கு ஒருவர் உன்னை கோபப்படுத்தினார், நீ அவமானப்பட்டதாக உணர்ந்தாய், இப்போது ஒரு பார்வையாளனாக மட்டும் இரு. அதனுடன் ஐக்கியப்பட்டு விடாதே. கோபப்பட்டு விடாதே. அது நிகழ்ந்தால் நீ அதனுடன் இணைந்து விடுவாய். தியானம் செய்கிறோம் என்பதையே தவற விட்டு விடுவாய். அந்த மனிதர் உன்னை அவமதிக்கவில்லை. ஆனால் அந்த நிகழ்வில் உள்ள வடிவம் உன்னுடையதுதான். ஆனால் அந்த வடிவம் இப்போது இல்லை. நீ நதி போல ஓடிக் கொண்டிருக்கிறாய். வடிவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. குழந்தை பருவத்தில் உன்னிடமிருந்த அந்த வடிவம் இப்போது உன்னிடத்தில் இல்லை. அது போய்விட்டது. நதி போல தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கிறாய்.

காலை எழுந்தவுடன் செய்த முதல் செயல்வரை திரும்ப சென்று பார்த்துவிட்டால் காலை எழுந்த உடன் இருப்பது போன்ற புத்துணர்வை நீ திரும்ப பெறுவாய். பின் ஒரு சிறு குழந்தை போல நீ உறங்கிவிடலாம்.

இது ஒரு ஆழமான தூய்மை படுத்துதல். இதை உன்னால் தினமும் செய்ய முடிந்தால் ஒரு புது இளமை, ஒரு புத்துணர்ச்சி உன்னுள் வருவதை நீ உணரலாம். இதை நாம் தினமும் செய்ய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால் அவர்கள் தங்களது கடந்தகாலத்தை சுமந்துகொண்டு திரிய மாட்டார்கள். அவர்கள் எப்போதும் இங்கே இப்போது இருப்பார்கள். எதுவும் விடுபட்டுவிடாது. கடந்தகாலத்திலிருந்து எதுவும் சுமையாக மாறாது.

தியான முறைகளை பற்றிய விளக்கங்கள்

வாழ்வே ஒரு சினிமாதான்

“..........மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிவகைகளை தேடாதே. நோக்கும் விதத்தை மாற்றிக் கொள். பார்வையை மாற்றிக் கொள். தீவிரமான மனதினால் சந்தோஷமாக இருக்க முடியாது. குதூகலமான மனதுடன் சந்தோஷமாக இருக்க முடியும். வாழ்வை ஒரு கதையாக, இதிகாசமாக எடுத்துக் கொள். இப்படி பார்க்க கற்றுக் கொண்டு விட்டால், பின் உன்னால் சந்தோஷமற்று இருக்க முடியாது. மகிழ்ச்சியற்ற தன்மை தீவிரமான தன்மையால் வருகிறது. ஏழு நாட்களுக்கு முயற்சி செய். ஒன்றை மட்டுமே நினைவில் வை. அதாவது இந்த உலகமே ஒரு நாடகம் என்பதை நினைவில் வைத்திருந்தால் பின் ஒருபோதும் நீ முன்பு இருந்தது போல இருக்கமாட்டாய். ஏழே நாட்கள்! நீ எதையும் இழக்கப் போவதில்லை. ஏனெனில் இழப்பதற்கு உன்னிடம் எதுவுமில்லை.

நீ முயற்சி செய்யலாம். ஒரு நாடகம் போல வாழ்வே ஒரு சினிமாதான் என்பது போல ஏழு நாட்கள் இருந்துபார். உனது உள்ளார்ந்த மாசற்ற தன்மையின், உனது புத்த இயல்பின் சிறிய அனுபவங்களை இந்த ஏழு நாட்கள் உனக்கு கொடுக்கும். ஒருமுறை நீ அனுபவம் பெற்று விட்டால் பின் ஒருபோதும் நீ முன்பு இருந்தது போல இருக்கமாட்டாய். நீ சந்தோஷமாக இருப்பாய். ஆனால் இது எந்தவகையான சந்தோஷம் என்று நீ அறியமாட்டாய். ஏனெனில் சந்தோஷம் என்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. மகிழ்ச்சியற்ற நிலைகளின் பல படிகள் உனக்குத் தெரியும். சில நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியற்று இருப்பாய், சில நேரங்களில் மகிழ்ச்சியற்ற நிலை குறைவாக இருக்கும். மகிழ்ச்சியற்ற நிலை குறைவாக இருக்கும் நிலையைத்தான் நீ மகிழ்ச்சி என்று அழைக்கிறாய்.

மகிழ்ச்சி என்றால் என்னவென்று உனக்குத் தெரியாததால், அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. நீ மிகவும் தீவிரத்தோடு இருக்கும் இந்த உலகத்தில் மகிழ்ச்சியைப் பற்றிய ஒரு கருத்து மட்டுமே உள்ளது. அந்த கருத்தின் மூலம் மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்று உன்னால் புரிந்து கொள்ளவே முடியாது. இந்த உலகமே ஒரு விளையாட்டுதான் என்னும் இந்த நோக்கில் நீ வேரூன்றினால் மட்டுமே மகிழ்ச்சியை உன்னால் பெறமுடியும்.

அதனால் ஒவ்வொன்றையும் மகிழ்வோடு கொண்டாடும் விதமாக, நாடகத்தில் பங்கேற்கும் ஒரு கதைபாத்திரம் போல செய்ய முயற்சி செய். உண்மையென்று கொள்ளாமல் கதாபாத்திரமாக இருக்க முயற்சி செய். கணவன் போல என்றால் கணவன் போல நடி, மனைவி என்றால் மனைவி போல நடி. அதை ஒரு விளையாட்டாக செய். எந்த நாடகம் என்றாலும் கதாபாத்திரங்கள் வேண்டும், நடிப்பதற்கு நடிகர்களும் வேண்டும். திருமணம் என்றாலும், விவாகரத்து என்றாலும் எல்லாமும் நடிப்பதற்கான இடங்களே. ஆனால் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதே. பல விதிமுறைகள் இருக்கின்றன. ஒன்று ஒன்றால் உருவானது, விவாகரத்து மோசமான ஒரு விஷயம். ஏனெனில் அதற்கு முன்பான திருமணமே மோசமானது. ஒன்று ஒன்றால் உருவாகும். அதனால் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், எப்படி உனது வாழ்வின் தன்மை உடனடியாக மாறுகின்றது என்று பார்.

இன்று இரவு உனது வீட்டுக்கு போனபின் கணவனோ, மனைவியோ, குழந்தையோ உனது கதாபாத்திரம் நாடகத்தில் எதுவோ அந்த கதாபாத்திரமாக நடிக்க முயற்சி செய். பின் அது எவ்வளவு அற்புதமாக இருக்கின்றது என்று பார். நீ கதாபாத்திரமாக இருக்கும்போது திறமையோடு நடிக்க முயற்சி செய்வாய். ஆனால் அதனால் தொந்தரவுக்குள்ளாக மாட்டாய். அதனால் பாதிப்படைய மாட்டாய். அதற்கு தேவையிராது. நீ உனது பாகத்தை பூர்த்தி செய்துவிட்டு தூங்கப் போய்விடலாம். ஆனால் ஏழு நாட்களும் தொடர்ந்து இது ஒரு நாடகம் என்ற நினைப்பு உனக்குள் இருக்க வேண்டும்.

பின் மகிழ்ச்சி உன்னுள் மலரும். ஒருமுறை மகிழ்ச்சி என்றால் என்ன என்று நீ தெரிந்து கொண்டு விட்டால், மகிழ்வற்ற தன்மைக்குள் நீ போக வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் மகிழ்ச்சியோடு இருப்பதா, மகிழ்ச்சியற்று இருப்பதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இப்போது உன் கையில் இருக்கிறது.

வாழ்க்கையைப் பற்றிய தவறான நோக்கை நீ தேர்ந்தெடுத்ததால் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. ஒரு சரியான பார்வையை தேர்ந்தெடுத்தால் நீ மகிழ்வோடு இருப்பாய்.

சரியான பார்வை என்பதற்கு புத்தர் மிக முக்கியத்துவம் கொடுத்தார். சரியான பார்வை என்பதை ஒரு அடித்தளமாகவே ஒரு அஸ்திவாரமாகவே மாற்றினார். சரியான பார்வை என்பது என்ன? அதை எப்படி அடையாளம் காண்பது? என்னைப் பொறுத்தவரை உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நோக்கு சரியான பார்வை. அது பொருளைப் பற்றியது அல்ல. உன்னைத் துயரத்திலும் துன்பத்திலும் வைத்திருக்கும் நோக்கு தவறான பார்வை. அடையாளம் பொருள் சார்ந்தது அல்ல. உனது மகிழ்வே அதன் அடையாளம்.

உண்மையான ஒன்று

நான் இந்த கணத்தை மட்டுமே வலியுறுத்துகிறேன். ஏனெனில், இந்த கணம் அனைத்தையும் உள்ளடக்கியது. இப்போது என்பது மட்டுமே உண்மையான ஒன்று. மற்றவை யாவும் நினைவுகளாகவோ, கற்பனைகளாகவோ மட்டுமே உள்ளன. கடந்தகாலம் ஒரு நினைவாக தொடர்ந்து இருப்பதற்கு இப்போது தேவைப்படுகிறது. அது கடந்தகாலமாக இருப்பதில்லை. அது நிகழ்காலத்தில் ஒரு நினைப்பாக இருக்கிறது.

இதுதான் எதிர்காலத்திற்கும். எதிர்காலம் எதிர்காலமாக இருப்பதில்லை. அது ஒரு கற்பனையாக இந்த கணத்தில் இருக்கிறது. இருப்பவை யாவும் இப்போது மட்டுமே இருக்கிறது. இருக்கும் ஒரே காலம் நிகழ்காலம்தான்.

பந்தமின்றி இருத்தல் - ஓஷோவின் கதை 22

ஒரு நாட்டின் ராஜா ஒவ்வொரு நாள் இரவும் நகர்வலம் வருவான். அப்போது அவன் தினமும் ஒரு இளைஞன் மரத்தடியில் அசைவின்றி சிலைபோல அமர்ந்திருப்பதை போல பார்ப்பான். அவனுக்கு அமைதியாக அந்த இளைஞன் அமர்ந்திருப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

அவனால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒருநாள் தனது குதிரையை நிறுத்தி இறங்கி, “இளைஞனே, உனது தியானத்தைக் கலைத்ததற்காக என்னை மன்னித்துக் கொள்.” என்றான்.

அந்த இளைஞன் தனது கண்களை திறந்து, இங்கே எந்த மன்னிப்புக்கும் இடமே இல்லை, நான் தியானம் செய்யவில்லை, இங்கே தியானம்தான் இருக்கிறது – யாரும் அதை தொந்தரவு செய்ய முடியாது. ஆனால் உனது ஆர்வம் எதுவோ அதை பூர்த்தி செய்துகொள். என்றான்.

அரசன், “நீங்கள் எனது அரண்மனைக்கு வர வேண்டும். நான் உங்களை கவனித்துக் கொள்வேன். இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களது தவத்தினாலும், உங்களது பொலிவினாலும், அமைதியினாலும் நான் ஈர்க்கப்பட்டு விட்டேன். அமைதியாக இந்த மரத்தடியில் நீங்கள் அமர்ந்திருப்பதை பார்த்தால் ஒரு புத்தரை பார்ப்பது போல இருக்கிறது. நான்தான் இந்த நாட்டின் அரசன், நான் உங்களை எனது அரண்மனைக்கு அழைக்கிறேன்.” என்றான்.

இப்படித்தான் காட்டுமிராண்டிதனமான மனம் வேலை செய்கிறது. அரசன் அந்த இளைஞனை தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான் – ஆனால் அவனது ஆழ் மனதில் இவர் தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாதென தோன்றுகிறது. ஏனெனில் அப்போது அவர் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறார் என ஆகி விடுமென பயப்படுகிறான்.

ஆனால் அந்த இளைஞன் எழுந்து நின்று, “போகலாம்” எனக் கூறுகிறான்.

இப்போது உடனடியாக அந்த சூழ்நிலையே மாறுகிறது. அரசனின் மனம், “நான் இப்போது என்ன செய்வது? அரசனின் விருந்தாளியாக இருப்பதற்கு, அரண்மனையில் இருக்கும் சுகங்களை அனுபவிப்பதற்கு இவர் ஆர்வமாக இருப்பது போல தோன்றுகிறதே, இவர் உண்மையான துறவியே அல்ல.” என நினைக்கிறது. எந்த அளவு ஒருவர் தன்னை துன்புறுத்திக் கொள்கிறாரோ அந்த அளவு அவர் ஒரு துறவி என்பது பழமையான ஒரு கருத்து. வசதியின்றி இருப்பது மதம். நோய், பசி, என தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள ஆயிரம் வழிகள்........ அப்போது ஒரு சிறப்பான துறவி. அரசனின் மனதில் இந்த இளைஞன் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி விட்டார். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. தனது வார்த்தையிலிருந்து மாற முடியாது.

ஆனால் இந்த இளைஞன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் பேசவில்லை. அரசன் அரண்மனையின் சிறப்பான இடத்தை கொடுத்து நல்ல வேலையாட்களை அமர்த்தி இளைஞனை கவனித்துக்கொள்ள இளம்பெண்களை ஏற்பாடு செய்தான். துறவி இது ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்ள கொள்ள அரசனின் மனதில் தனது துறவிதன்மையிலிருந்து கீழிறங்கி கொண்டே வந்தான். என்ன வகையான துறவி இவர்? அழகான மிகப் பெரிய படுக்கையை ஏற்றுக் கொண்டார். அரண்மனையின் சிறப்பான உணவு வகைகளை உண்டார்.

அரசன், “கடவுளே, மடையன் நான். இவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவன் வலை விரித்து பிடித்துவிட்டான். நான் ஒவ்வொரு நாள் இரவும் போகும் வழி அறிந்து அந்த இடத்தில் ஒரு புத்தரைப் போல அமர்ந்து என்னை ஏமாற்றும் வகை அறிந்து என்னை வீழ்த்தியிருக்கிறான். நானும் ஏமாந்து விட்டேன். இப்போது இவனை மெல்லவும் முடியாது, துப்பவும் முடியாது. அரண்மனைக்குள் வந்துவிட்டான். மிகவும் ஏமாற்றுக்காரன் இவன்.” என்று நினைத்தான்.

ஆனால் இப்படிப்பட்ட மனநிலையோடு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கமுடியும்?
ஆறு மாதம் கழித்து ஒருநாள் அதிகாலையில் தோட்டத்தில் உலாவியபடி பேசிக் கொண்டிருக்கையில், அரசன், ஒரு விஷயம் உங்களிடம் கேட்க வேண்டும். அது என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அதனால் ஆறு மாதங்களாக சரியாக தூங்கக் கூட முடியவில்லை. என்றான்.

இளைஞன், நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். என்று கூறினான்.

நான் இப்படி உங்களிடம் கேட்கக்கூடாது. ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எனக்கு தெரிய வேண்டும். நீங்களும் அரண்மனையில்தான் இருக்கிறீர்கள், எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறீர்கள், உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன?

என்றாவது ஒருநாள் இந்த கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும். உண்மையில் நான் இங்கே வருவதற்காக மரத்தடியில் எழுந்து நின்றபோதே அது உன்னுள் எழுந்து விட்டது. நீ தைரியசாலி அல்ல. நீ இந்த கேள்வியை அப்போதே கேட்டிருக்க வேண்டும். ஆறு மாதங்கள் தேவையின்றி உனது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆறு மாதங்களை வீணடித்திருத்த வேண்டியதில்லை. நான் உனது கேள்விக்கு பதிலை இங்கு சொல்ல போவதில்லை. நீ என்னுடன் உனது எல்லையை தாண்டி வர வேண்டும்.
என்றான் இளைஞன்.

அந்த இடம் ஒன்றும் அதிக தூரம் இல்லை. சில மைல் தூரத்தில் உள்ள நதிகரைதான் அரசனின் எல்லை.

அரசன், அங்கே போக வேண்டிய தேவை என்ன? நீங்கள் எனக்கு இங்கேயே பதில் கூறுங்கள். என்றார்.

இளைஞன், இல்லை, அவசியம் இருக்கிறது. என்றார்.

இருவரும் நதியை கடந்தனர். கரையை கடந்தவுடன் இளைஞன் நான் தொடர்ந்து போகப் போகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா இதுதான் என் பதில் என்றார்.

அரசன், “என்னால் எப்படி வர முடியும்? என்னுடைய அரண்மனை, என்னுடைய அரசாங்கம், என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைகள்....... ஆயிரக்கணக்கான கவலைகளும் பிரச்னைகளும் எனக்கு உள்ளன. என்னால் எப்படி உங்களோடு வர முடியும்?”
என்றான்.

இளைஞன், வித்தியாசத்தை பார்த்தாயா, நான் போகிறேன். எனக்கு அரண்மனை, குழந்தைகள், மனைவி, பிரச்னைகள் என எதுவும் இல்லை. நான் அரண்மனையில் எவ்வளவு மகிழ்வோடு இருந்தேனோ அதே மகிழ்வோடு மரத்தடியிலும் இருப்பேன் – இம்மியளவும் கூடவும் குறைவும் இல்லாமல். நான் காட்டில் இருந்தாலும் சரி, அரண்மனையில் இருந்தாலும் சரி எனது விழிப்புணர்வு அதேதான். என்றார்.

தான் இவ்வளவு மோசமாக நினைத்ததை எண்ணி அரசன் மிக வருந்தினான். அவன் இளைஞனின் காலில் விழுந்து, இப்படி நினைத்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. என்றான்.

இளைஞன், அப்படி நினைக்காதே. நீ மன்னிப்பு கேட்டு கண்ணீர் விடுவதால் திரும்பி வருவதற்கு எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால் நீ திரும்பவும் கடவுளே, என்னை இவன் திரும்பவும் ஏமாற்றி விட்டானோ என்று நினைக்க ஆரம்பித்துவிடுவாய். நான் திரும்பவும் வருவதில் எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லை. ஆனால் உன் மீதுள்ள கருணையால் நான் வரப் போவதில்லை. என்னை போகவிடு. இந்த முழு உலகமும் பரந்து விரிந்திருக்கிறது, எனக்கு எதுவும் பெரிதாக தேவையில்லை. ஒரு மரநிழல் மட்டுமே போதுமானது. எதுவாக இருந்தாலும் சரியே. என்றார்.

ஆனால் அரசன், இல்லை, இல்லை. நீங்கள் வராவிட்டால் நான் மிகவும் கவலைப்படுவேன், காயப்பட்டுப்போவேன், நான் என்ன செய்துவிட்டேன் என வருத்தப்பட்டுப் போவேன். என்று வலியுறுத்திச் சொன்னான்.

அந்த மனிதர், நீ இப்போது என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டாய். நான் வருவதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நினைவில் வைத்துக் கொள், என்ன வித்தியாசம் என திரும்பவும் உனக்கு தோன்ற ஆரம்பித்துவிடும். என்றார்.


Source: HYAKUJO: THE EVEREST OF ZEN, WITH BASHO’ HAIKUS

மலர் 2 இணைய இதழ் 9 11 ஏப்ரல் 2010

தலையங்கம்

அன்பர்களுக்கு வணக்கம்.

ஒரு நண்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார். பல மாதங்களாக என்னை சந்திக்க முயற்சிப்பதாகவும் என் இருப்பிடம் தெரியாமல் அலைக்கழிந்ததாகவும் கூறினார். ஓஷோவின் அன்பர் என்று கூறினார். ஓஷோ புத்தகங்கள் பலவும் படித்திருப்பதாகக் கூறினார். தியானம் செய்கிறீர்களா இப்போது என்றேன். பதிலில்லை. தினசரி எப்போது வேண்டுமானாலும் வந்து ஓஷோவின் தியானங்களை நீங்கள் இங்கு செய்யலாம். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செய்யலாம். நான் இருந்தாலும்கூட என்னை சந்திக்க வேண்டியதில்லை. நீங்கள் தியான ஹாலுக்கு சென்று உங்களுக்கு விருப்பமான தியானத்தை செய்துவிட்டு போகலாம் என்றேன். அதற்கும் ஒன்றும் பதிலில்லை.

மற்றொரு ஓஷோ நண்பர் பற்றியும், ஒரு இடத்தை அவர் உருவாக்கியிருப்பது பற்றியும் அங்கு ஒரு ஜே.கே அபிமானி வந்து தங்கிப் பேசுவார், சிறப்பாயிருக்கும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு சென்றுவிட்டார். சில நாள் கழித்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் அப்போது கோவையில் இருந்தேன். அவர்தான் பேசினார். எனது வீட்டில் அவர் இப்போது இருப்பதாகவும் தான் அந்த ஜே. கே அபிமானி எழுதிய ஒரு புத்தகத்தை கொண்டு வந்திருப்பதாகவும் அதைக் கொடுத்துவிட்டு போவதாகவும் கூறினார். அவர் இதை ஏன் கொண்டுவந்து என்னிடம் கொடுக்கிறார் என்று புரியாத குழப்பத்துடன் சரி என்று மட்டும் சொல்லி போனை வைத்து விட்டேன்.

பலநாள் கழித்து ஒருநாள் என் துணைவி என்னிடம் ஒரு புத்தகத்தை நீட்டினாள். ஒருநாள் உங்களை வந்து சந்தித்தவர், சிலநாள் கழித்து இதைக் கொண்டுவந்து கொடுத்தார், அவரே போன் செய்து உங்களிடமும் அப்போதே பேசியதால் நான் நீங்களே இந்த புத்தகத்தை பார்த்துக் கொள்வீர்கள் என விட்டுவிட்டேன். இன்று ஞாபகம் வந்தது. மறந்து விட்டீர்களே என எடுத்துக் கொடுக்கிறேன் என்றாள். நான் மறக்கவில்லை. வீடு திரும்பியவுடனேயே பார்த்தேன். புத்தகத்தின் தலைப்பு “தியானத்தை விடு. ஞானத்தை பெறு” என்று இருந்தது. சிரித்துவிட்டு விட்டுவிட்டேன்.

இப்போது தலையங்கம் எழுத வேண்டிய நேரம் அந்த புத்தகம் தட்டுப்பட்டது. அதனால் மறுபடியும் சிரித்துவிட்டு இதை எழுதுகிறேன்.

முதலில் இந்த புத்தகத்தை எழுதிய அந்த ஜே.கே. அபிமானி தியானத்தையே விடச் சொல்லும் இந்த நபர், மனதின் செயல்பாடாக உள்ள படிப்பது, அறிவு சேர்ப்பது, ஆராய்ச்சி செய்வது, கவர்ச்சியாக தலைப்பு வைத்து வியாபாரம் செய்வது என்ற அடிப்படையில் இந்த புத்தகத்தை சிரமப்பட்டு எழுதியுள்ளாரே, இவர் ஞானம் எப்படி பெறுவார் என்று சிரித்துவிட்டேன்.

புரிதல்தான் வேண்டும், தியானம் வேண்டாம் என்று இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். ஆனால் புரிதல் என்ற சொல்லைப் படித்தால் என்ன புரிந்து கொள்ள முடியும்?. புரிதலுக்கு உன்னை தயார்படுத்திக் கொள்ளும் யுக்திகள்தான் தியானம் என்பது, தியானம் எதுவும் செய்து பார்க்காததால் அவருக்கு புரியவில்லை.

புரிதல் மூலமே ஞானம் பிறக்கிறது என்பதையே ஓஷோவும் வலியுறுத்துகிறார். ஆனால் புரிதல் என்றால் என்ன, புரிதலுக்கான சாத்தியத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துத்தான் தியானமுறைகளை ஓஷோ வகுத்தார்.

புரிந்துகொள் என்று ஜே.கே.யும் யு.ஜி. யும் வாயால் சொல்லிக் கொண்டே இருந்ததால்தான் அவர்கள் மூலம் புரிந்தவர் எவருமே உருவாகவில்லை என்று ஓஷோ தெளிவாகக் கூறுகிறார்.

பள்ளிக்கூடக் குழந்தைகளிலிருந்தே இன்று வெறும் வாய்ச்சொல் பயனற்றது. ஆகவே செயல்முறை கல்வி வேண்டும் என்று மாறிக் கொண்டிருக்கிறோம் நாம்.

ஞானம் ஆரோக்கியம் போன்றது. நோய் வந்தவனிடம் போய் மருந்து சாப்பிடுவதால் பயனில்லை. மருந்துக்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தமில்லை. ஆரோக்கியமாய் இருப்பவன் மருந்து சாப்பிட மாட்டான். மருந்தால் ஆரோக்கியம் வராது என்று முழங்கும் ஆரோக்கியமானவனது பேச்சு பொய்யல்ல. ஆனால் அப்படிப் பேசுபவன் தன்னைப் பற்றி மட்டுமே பேசுகிறான். நோயுள்ளவன் நிலையை உணரும் சக்தி அவனிடமில்லை. அவன் வெறும் ஆரோக்கியமானவன் மட்டும்தான், ஒரு வைத்தியனாக இல்லை.

ஆனால் குரு என்பவர் ஒரு வைத்தியரைப் போல. அவர் தனது ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவதை விட அதிகமாக நோயுள்ளவனை ஆராய்ந்து நோயைத் தீர்க்க மருந்து தயாரித்துக் கொடுக்க முயல்கிறார். ஓஷோவைப் போல. இதை ஓஷோ பலமுறை பலவிதமாக விளக்கியிருக்கிறார்.

புரிதல் என்ற ஒரு முடிச்சு கூட போடாமல் வெறும் வாழ்தல், தனித்து வாழ்தல், வருவதை ஏற்று வாழ்தலே போதும் என்று லா வோட்ஸூ கூறுகிறார்.

ஆனால் வெறும் சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு புரிதல், புரிதல் என்று சொல்லிக்கொண்டும், விளக்கிக் கொண்டும், விவரித்துக் கொண்டும், வார்த்தை ஜாலம் ஆடிக் கொண்டும் இருப்பதை விட தன்னுணர்வை அதிகரிக்கும் மருந்தைக் கொண்டு ஓஷோ எல்லோருக்கும் பயன்தருகிறார்.

ஓஷோ தியானத்தைப் பற்றி ஒரு இடத்தில் தியானம் என்பது மருந்து போலத்தான். நோய் தீர்ந்தவனுக்கு மருந்து தேவையில்லை. பின் அவன் வாழ்வே போதும் என்று தெளிவாகக் கூறுகிறார். ஆனால் அப்போதும் ஓஷோ வாழ்வைப் பேசுபவர்.

விழிப்புணர்வை உள்ளும் புறமும தன்னைக் குறித்தும் வெளிஉலகைக் குறித்தும் என இருபக்கமும் எரிந்து ஒளி வீசும் தீப்பந்தமாக வாழ்வை ஆழமாக, முழுமையாக, ஆபத்தாக, தன்னுணர்வை இழக்காமல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என எல்லாப் பரிமாணங்களிலும் வாழச் சொல்கிறார்.

அப்போதுதான் புரிதல் நிகழும் சாத்தியம் இருக்கிறது.

புரிதல் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் வீண் என்று பேசிக் கொண்டிருப்பவருக்கு அது நிகழும் வாய்ப்பு மிகமிகக் குறைவு மட்டுமல்ல. வெறும் வாய்ப்பேச்சில் நின்றுவிடும் ஒருவருக்கு மன இயக்கமே அதிகம் இருக்கும். ஆகவே எதிர்பாராமல் இருப்பை சந்திக்கும் புரிதல்-கணம் வாய்த்தால்கூட நழுவவிடும் வாய்ப்பே அவருக்கு அதிகம்.

உதாரணத்திற்கு சர்க்கரையின் சுவை எப்படி இருக்கும் என்று கேட்டால் அதை சுவைத்துப்பார்த்தால்தான் தெரியும், அதைப் பற்றி பேசுவதோ, விளக்குவதோ, விவாதிப்பதோ பயனற்றது. சர்க்கரையை சுவைத்தவன் சுவைக்காதவனிடம் சொல்லும்போது அந்த சுவையை விளக்க முடியாது. நீ அறிந்த எதுவாகவும் அது இல்லை. அதை சுவைக்கும்போது ஒரு புரிதல் உனக்குள் நிகழும். பிறகு இந்த கேள்வி மறைந்துவிடும் என்று சொல்வதுபோலத்தான் ஜே.கே. கூறுகிறார். அது உண்மைதான். ஆனால் சுவைப்பது முக்கியம். சுவைக்கும்போதுதான் புரிதல் நிகழ முடியும்.
வாழ்வின் சுவையை பெற நமது விழிப்புணர்வை, தன்னுணர்வை, சக்தியை அதிகரித்துக்கொள்ளும் வழிதான் தியானம். ஆகவே தியானத்துக்கும் சத்தியத்துக்கும் தொடர்பு நேரடியாக இல்லை. ஆனால் இருக்கிறது.

ஓஷோ தியானம் பற்றி கூறும்போது அது வாழ்வோடு இரண்டறக் கலந்தது, 24 மணி நேரமும் செய்வது, ஏதோ ஒரு மணி நேரம் செய்துவிட்டு மறந்துவிடும் தியான யுக்திகள் தியானமல்ல, அவை அந்த சுவை பெற ஏற்படுத்தப்படும் சூழல்களே என்று கூறுகிறார். தியானம் செய்வது அல்ல, அது நிகழ்வது. தியானம் நடந்தால் அங்கு நீ இல்லை. நீ செய்தால் அங்கு தியானம் நிகழாது என்கிறார். ஆனால் அதற்காக தியான யுக்திகள் செய்வதை விட்டுவிடச் சொல்வதில்லை ஓஷோ. மாறாக செய்வதையெல்லாம் தியானமாக மாற்றும் வழியை கற்றுத்தருகிறார் ஓஷோ.

வெறும் வம்பளப்பும், வாய்ப்பேச்சும், தர்க்கமும், அகராதி பேசுதலும், மனதின் செயல்பாடுகளே அன்றி அதைக் கடந்து செல்லும் சுவையைத் தராது. ஜே.கே. மற்றும் யு.ஜி. பயனற்றுப் போனதன் காரணம் அவர்கள் வாழ்ந்த வழி மனம் கடந்த செயல்பாடாக இல்லாமல் போனதுதான்.

தியானயுக்தியே தேவையில்லை, வாழ்வதே போதும் என்று வாழ்ந்த லாவோட்ஸூ உரையாற்றவோ, உரையாடவோ இல்லை. வாழ்வோடு கணத்துக்கு கணம் கரைந்து விட்டவராகவே இருந்தார்.

பக்தியே போதும் என்று வாழ்ந்த மீரா, கபீர், குருநானக் போன்றவர்கள் பாடி மகிழ்ந்தனரேயன்றி வறட்டு விவாதத்தில் இறங்கவில்லை.
நான் யார் என்ற தேடலே போதும் என்ற ரமணர் அதுவே போதும் என்று வாய் மூடி மௌனியாகவே வாழ்ந்தார்.

தந்திராவை கடைபிடித்தவர்கள் தந்திரா வாழ்வையே வாழ்ந்தனர்.
எல்லா ஞானிகளின் எல்லா வழிகளையும் புதுப்பித்து புனரமைத்துக் கொடுத்த ஓஷோவும் உலகையே உலுக்கி எடுக்கும் புயல் போன்ற வாழ்க்கையையே கொண்டவர்.

ஆகவே வெறும் மனதின் விளையாட்டாக உள்ள வார்த்தை ஜாலத்தில் சிக்கி அதைத் தவிர எந்த ஒரு ஆழ்ந்த வாழ்வையும் தொடாமல் வாழ்வதற்கு பதிலாக ஏதோ ஒரு தியான யுக்தியை ஒரு மணி நேரம் செய்து மனம் கடந்த நிலையின் கண நேர தரிசனம் பெறுவோர் பல படிகள் முன்னே உள்ளவர்களே.

வெறும் வார்த்தை விளையாட்டு, விவாதம், தர்க்கம், அறிவுத்தேடல், கருத்துக்கள், கருத்துக்களுக்கு எதிரான கருத்து, இப்படி இருப்பது எந்த விதத்திலும் மனம் கடந்த அனுபவத்தை கொடுக்காது. மாறாக நுட்பமான ஈகோவையே வளர்க்கும்.

இவைகளுக்கு பதிலாக பாடு, ஆடு, உடலில் விளையாடு, சிற்பம் செதுக்கு, செடி வளர், வானத்தைப் பார், நதியில் நீந்து, மலையேறு, குழந்தையோடு விளையாடு, பெண்களை துரத்து, ஆண்களை கவரு. ஏதாவதொன்று, ஆனால் வாழு. வெறும் மனதின் செயல்பாடாய் உள்ள உணர்வற்ற விவாதமும், கருத்துக்களும் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளவே உதவக்கூடும். ஆனால் வாழ்வாகாது.

ஆகவே வாழு. தியானத்தோடு வாழு. ஆம். விழிப்புணர்வோடு வாழு. இதுதான் வளரும் வழி.

அன்பு
சித்.


கவிதை

உன்னையே நீ நேசி

அருமை நண்பா
பாசம் அக்கறை இரக்கம் காதல்........
இவையெல்லாம் அன்பு கலந்த பண்புகளில் சில.
ஆனால்....பண்புகளை பழக்கப்படுத்திக் கொள்வது
போலித்தனம் நடிப்பு ஏமாற்றம்

இப்படித்தான்......
உன் பாசம் வெறும் வியாபாரமாகிவிட்டது,
உன் அக்கறை வெறும் அரசியலாகிவிட்டது,
உன் இரக்கம் வெறும் அகம்பாவமாகிவிட்டது,
உன் காதல் வெறும் காமமாகிவிட்டது.

என் இனிய நண்பனே,
இந்த நாடக உலகைவிட்டு வாழும் உலகுக்கு வா
அதற்கு வழி ஒன்றே
அது உன்னையே நீ நேசி
ஆம்.....உண்மை எப்போதும் உன்னிடமிருந்தே பிறக்கமுடியும்
அன்பு செய்யாதே...... அன்பில் நிறை
கோபமும் காமமும் கொப்பளிப்பதுபோல்
பொங்கி பூரிக்கும் உணர்ச்சி அன்பு
அந்த அனுபவத்தையே அழித்துவிட்டு நடிக்குது உலகம்.
அன்பை வேரிலேயே வெட்டிவிட்டு போலிக்கிளை பரப்பும் வேலை
செய்கிறது சமூகம்.

ஏன் தெரியுமா
அன்பெனும் அமிர்தத்தைக் குடித்தவன்....
சமுதாய லேபிளுக்குள் அடையமாட்டான்.
போலி அடையாளங்களின் பின் மறைய மாட்டான்.
ஆம்......உடலின்பங்கள் சிறைபடுத்தாவனாய்,
இறப்பின் பயம் மிரட்டமுடியாதவனாய்,
ஆகிவிடுகிறான் இந்தப் புரட்சிக்காரன்.

இவன் பேதங்களை பார்த்துச் சிரிக்கிறான்....
இந்தச் சிரிப்பு.....
சாதி மதம் இனம் கட்சி மொழி நாடு போன்ற பெயர்களில்.....
மக்களை பிரித்தாளும் சுயநலக் கும்பலுக்குக் கேடு,
அதனால்தான், அன்பை எதிர்க்குது நாடு.

என் நண்பா...
அன்பின் வேர்... உன்னை நீ நேசிப்பது,
இந்த அன்பின் வேர் உன்னுள் படர்ந்து உன்னை அறியட்டும்..
அப்போது உன்னையே நீ அறிவாய்..
அந்த அனுபவத்திலிருந்து பிறக்கும்.......
ஆயிரத்தெட்டு பண்புகள்,
அப்போது அவை போலி பிளாஸ்டிக் பூக்கள் அல்ல,
மணம் பரப்பும் மலர்கள்..
ஆகவே நண்பனே
நேசி, நேசி, உன்னையே நீ நேசி...

ஓஷோ வீடியோ

1. Osho : I am an Existentialist

2. Osho : Psychologists know nothing about Themselves

3. Osho : One World (Meditation Minutes)


இம்மாதம் மூன்று தியானமுறைகளை ஓஷோவின் விளக்கங்களோடு அளிக்கிறோம்.

1. மனதை நிறுத்துவதும் இயக்குவதும்.
மனம் பல எண்ணங்களாலும் பல வார்த்தைகளாலும் நிரம்பியிருக்கிறது. நீ எந்த கம்ப்யூட்டரை வேண்டுமானாலும் நிறுத்தலாம், இயங்கச் செய்யலாம். ஆனால் உனது மனத்தை நிறுத்தச் செய்ய உன்னால் முடியாது. அதற்கான பட்டன் இல்லை. கடவுள் இந்த உலகத்தை, மனிதனை, உருவாக்கும்போது மனத்தை நிறுத்துவதற்கான பட்டனை எங்கே வைத்தார் எனற விவரமே இல்லை. அதனால் மனத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அதற்கான சுவிட்சு இல்லை. அதனால் பிறப்பிலிருந்து இறப்பு வரை அது ஓடிக் கொண்டே இருக்கிறது.

இந்த தொணதொணப்புக்கு காரணம் நமது கல்வி முறைதான். அது அடிப்படையிலேயே தவறானது. ஏனெனில் அது எப்படி மனதை உபயோகிப்பது என்று ஒரு பாதியை மட்டுமே சொல்லித் தருகிறது – அதை ஓய்வெடுக்க கூடியதாக நிறுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுப்பதில்லை. ஏனெனில் அது நீ தூங்கும்போதும் தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு தூங்கத் தெரிவதில்லை. எழுபது வருடங்கள் அல்லது எண்பது வருடங்கள் அது தொடர்ந்து செயல் படுகிறது.

நம்மால் அதையும் சொல்லிக் கொடுக்க முடிந்தால்...... அது சாத்தியம்தான். இதைதான் நான் உங்களிடம் வற்புறுத்த விரும்புகிறேன். நாம் அதை தியானம் என அழைக்கிறோம். மனது தேவைப்படாத போது அதை நிறுத்தும் ஒரு பட்டனை உருவாக்க முடியும். அது இரண்டு வழிகளில் உதவும். நீ இதுவரை அறிந்திராத ஒருவிதமான அமைதியை, ஒருவிதமான மௌனத்தை அது உனக்கு கொடுக்கும். உன்னைப் பற்றிய ஒரு அறிமுகத்தை உனக்கு கொடுக்கும். எப்போதும் தொணதொணத்துக் கொண்டிருக்கும் மனதினால் அந்த அறிமுகம் கிடைக்காமல் இருக்கிறது. அது உன்னை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டாவதாக இந்த தியானம் மனதுக்கு ஓய்வை கொடுக்கும். மனதுக்கு ஓய்வை கொடுக்கும்போது அது விஷயங்களை மேலும் அதிக திறமையோடும், அதிக புத்திசாலித்தனத்தோடும் செய்யும் வலிமை பெறும்.

ஆக இரு விதமாகவும் நீ – மனதின் விதமாகவும் இருப்பின் விதமாகவும் – பயன் பெறுவாய். எப்படி மனதின் இயக்கத்தை நிறுத்துவது, எப்படி அதனிடம், போதும். நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாதே. நீ ஓய்வெடுத்துக் கொள். என்று கூறுவது எனக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
தேவைப்படும்போது மட்டும் மனதை உபயோகப் படுத்து. பின் அது எப்போதும் இளமையாகவும், புதிதாகவும், மிகவும் சக்தியோடும், ,புத்துணர்வோடும் இருக்கும். பின் நீ சொல்வது எதுவும் வற்றிப் போனதாக இராது. அதில் உண்மையும் நேர்மையும் இருக்கும், அது ஆணித்தரமானதாக, ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருக்கும். அதனுள் வாழ்விருக்கும். நீ அதே வார்த்தைகளை உபயோகிக்கலாம், ஆனால் ஓய்வெடுத்ததன் மூலமாக மனம் மிகவும் சக்தி பெற்றிருப்பதால் ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பு போல மிகவும் வீரியமாக வெளி வரும்.

தேஜஸ் என்பது சக்தி சேகரித்துக்கொள்வது. எந்த மனது ஓய்வெடுத்து சக்தியை சேகரித்து கொள்கிறதோ அதற்கு இந்த உலகில் தேஜஸ் கிடைக்கிறது. அப்போது அது பேசும்போது அது கவிதையாகிறது, அது போதனையாகிறது. அது சொல்லும் விஷயங்களுக்கு எந்த ஆதாரமும் தர்க்கமும் தர தேவையில்லை. மக்களுக்கு புரிய அதன் சக்தி மட்டுமே போதும். மக்களால் அது இதுதான் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் இது ஏதோ ஒன்று என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அதைதான் அவர்கள் தேஜஸ் என்றழைகின்றனர்.

முதன் முறையாக நான் தேஜஸ் என்றால் என்ன என்று உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் இதை அனுபவத்தின் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். இரவும் பகலும் வேலை செய்துகொண்டே இருக்கும் மனது வலிமையற்றதாக, சோர்வாக, இழுபறியோடுதான் இருக்கமுடியும். அது பயன்படும். அவ்வளவுதான். நீ காய்கறி வாங்கப் போகலாம். –அது பயனுள்ளதாக இருக்கும். அதற்குமேல் அதற்கு சக்தி இருக்காது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் ஆணித்தரமின்றி, தேஜஸ் வலிமையின்றி, சொல்லாற்றல் இன்றி இருக்கிறார்கள்.

மனதை மௌனத்தில் வைத்து அது தேவைப்படும்போது மட்டும் உபயோகப்படுத்த முடிந்தால் – அது சாத்தியம்தான் - அப்போது அது வீரியத்தோடு வெளிப்படும். அது மிக அதிக சக்தியை பெற்றிருப்பதால் அதன் வார்த்தைகள் இதயத்தை ஊடுருவும். தேஜஸ் பெற்றவர்கள் மற்றவர்களை மனோவசியம் செய்து விடுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. அவர்கள் வசியம் செய்வதில்லை. அவர்கள் மிகவும் புத்துணர்வோடும், இளமையோடும் இருப்பதால் அப்படி நிகழ்கிறது. இது மனதிற்கு நிகழ்வது.

இருப்பில் இந்த அமைதி ஒரு அழிவற்றதை, ஒரு நிலையான பிரபஞ்சத்தை நீ ஒரு வரமாக நினைக்கும் ஒரு விஷயத்தை உன்னுள் திறக்கிறது. அதனால் தியானம்தான் மிகத்தேவையான மதம், ஒரே மதம் என்று நான் வலியுறுத்துகிறேன். வேறு எதுவும் தேவையில்லை. மற்ற எல்லாமே தேவையற்ற சடங்குகள்தான்.

தியானம் தான் அடிப்படை, மிக அடிப்படையானது.

தியானம் உன் உள்ளிருப்பின் உலகத்தில் மிகவும் வளமையை உருவாக்கித் தரும். அதோடு உன்னுடைய திறன்களை உன்னுடைய மனதின் மூலமாக வெளிப்படுத்தும் சக்தியை பெற்றுத் தரும்.

ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட விதமான திறனுடன்தான் பிறக்கிறார்கள். அவன் தனது திறனை முழுமையாக வாழ்ந்தால் தவிர அவனுள் ஏதோ ஒன்று குறையாகவே இருக்கும். ஏதோ ஒன்று.

மனதுக்கு ஓய்வு கொடு. அதற்கு அது தேவை. அது மிகவும் எளிது. அதற்கு ஒரு சாட்சியாக இரு. அது உனக்கு பல விஷயங்களை கொடுக்கும்.

மெதுமெதுவாக மனம் மௌனமாக இருக்க கற்றுக் கொள்ளும். ஒருமுறை அமைதியாக இருக்க அது கற்றுக் கொண்டு விட்டால் பின் அது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். பின் அதன் வார்த்தைகள் வார்த்தைகள் அல்ல. முன் எப்போதும் இல்லாத ஒரு தன்மை அதில் இருக்கும். அது சரியானதாகவும் வளமானதாகவும் இருக்கும். அவை ஒரு அம்பு போல துளைத்துக் கொண்டு போகும். அது எல்லா தடைகளையும் கடந்து இதயத்தை சென்றடையும்.

பின் மனமானது மௌனத்தின் மூலம் அளப்பரிய ஆற்றல் பெற்ற ஒரு வேலையாள் ஆகும்.
பின் இருப்பு முதலாளியாகும். பின் அதற்கு தேவைப்படும்போது மனதை உபயோகிக்கவும், தேவைப்படாத போது மனதின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவும் முடியும்.


2. உன்னுடைய மனதின் நிலையை மாற்றுதல்

காதில் போடப்படும் துளைகள் மிக முக்கியமான அங்குபஞ்சர் நிலைகளாகும். அவை நினைவாற்றலோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை. காது குத்தப்படும்போது ஏற்படும் சக்தியாற்றல் ஒரு மின்னலைப் போல இருக்கும். உண்மையில் காது குத்துவது சில மனதின் தடுமாற்றங்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். சீனாவில் இது ஒன்றுதான் மனது நிலைமாற்றங்களுக்கு சிகிச்சையாகும். இந்த துளை போடுவதன் மூலம் தேவையற்ற தடைகளை நீக்கி சக்தி மூளைக்கு நேரடியாக பாய உதவும். இது நினைவாற்றலை அதிகப் படுத்த மிகமுக்கியமான கருவியாகும்.

இது இந்தியாவில் ஒரு சடங்காகும். காது குத்துவதன் மூலம் வாழ்வின் சக்தியில் அடிப்படையான ஒரு மாறுதல் நிகழும். காது குத்துவது என்பது குழந்தைகளுக்கு இன்றியமையாதது. பிறந்த சில நாட்கள் கழித்து காது குத்துவது என்பது சம்பிரதாயமாக உருவாகி உள்ளது. என்று ஓஷோ கூறுகிறார்.

யுக்தி

செய்யும் நேரம்- நீ மிகவும் டல்லாக, கவலையாக, கோபமாக, சோகமாக இருக்கும்போது.

செய்முறை - (உன் காதுகளை குத்திக் கொள். சும்மா விளையாட்டுக்கு)
உன் காதுநுனியை பிடித்துக் கொள், அவற்றை கடினமாக அழுத்து. அப்போது உன் மனதின் நிலையில் ஒரு வித்தியாசத்தை காண்பாய்.


3. மூளையை சமன்படுத்துதல்.

எனது தலையின் இடது வலது பாகங்களில் வேறுவேறு விதமான உணர்வுகளை உணர்கிறேன். சமன் படுத்திக்கொள்ள என்ன செய்வது.

செய்யும் காலம் – ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் வீதம் 15 நாட்கள்.

முதல் படி – அமைதியாக அமர்ந்துகொண்டு 4 அல்லது 5 நிமிடங்களுக்கு உனது கண்களை நீயே அழுத்து. நீ கண்ணை அழுத்தும்போது கண்ணுக்குள் வெளிச்சம் தெரியும். அதுவரை அழுத்து. உனது கண்களை மிகவும் கஷ்டப்படுத்தாதே. சிறிதளவே போதுமானது. அந்த வெளிச்சத்தை பார்த்துக் கொண்டே இரு. இது பல விஷயங்களை சமன்படுத்தும்.

இரண்டாவது படி – இப்போது 5 நிமிடங்களுக்கு தளர்வாக இரு.

மூன்றாவது படி – திரும்பவும் அழுத்து.

உனது இரண்டு மூளைகளும் தனித்தனியாக செயல்படுகின்றன. ஒவ்வொருவருடைய மூளையும் அப்படித்தான். ஆனால் தியானம் உன்னை ஆழமாக தாக்கும்போது இந்த வேறுபடுதலும், வித்தியாசங்களும் காணாமல் போய் விடும். இந்த பயிற்சி உன்னுடைய மூளையில் பல விஷயங்களை சமன்படுத்தும். நீ மிகவும் அமைதியாகவும் ஒருமுகப்பட்டதாகவும் உணர்வாய்.


அறிவுரைக்கான தகுதி - ஓஷோவின் கதை 21

ஒரு பெண் தனது குழந்தையினால் மிகவும் தொந்தரவுக்குள்ளானாள். அவளுக்கு ஒரே ஒரு குழந்தை. அவளது கணவன் இறந்துவிட்டான். அவள் பெரும் பணக்காரிதான். ஆனால் அவளுக்கு வாழ்வில் மிகவும் சலிப்பாகிவிட்டது. அவள் தனது குழந்தைக்காகத்தான் வாழ்ந்தாள். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் மிகவும் தொந்தரவாகி விடுவர். அந்த பையன் இனிப்பைத் தவிர வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. டாக்டர்கள் இது மிகவும் தவறான பழக்கம். அவனது உடல்நிலை கெட்டுவிடும் எனக் கூறி விட்டனர். ஆனால் அந்த குழந்தை கேட்பதேயில்லை.

அவள் ஒரு சூஃபி ஞானியிடம் எப்போதும் செல்வாள். அதனால் அவள், இவன் நான் சொல்வதை கேட்பதேயில்லை. அவர் அவருக்கு அருகில் வரும் அனைத்து மக்களையும் ஈர்க்கும் சக்தியுடையவராக இருக்கிறார். அதனால் இவன் அவர் சொன்னால் கேட்கக் கூடும். என்று நினைத்தாள்.

அதனால் அவள் அந்த குழந்தையை அந்த ஞானியிடம் கூட்டி சென்று, இவன் இனிப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதேயில்லை. நானும் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். கேட்க மாட்டேன் என்கிறான். அதற்கு பதிலாக பட்டினி கூட கிடக்கிறான். டாக்டர்கள் உடல்நிலை கெட்டுவிடும் என்கிறார்கள். அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். எனது கணவர் இறந்துவிட்டார். இவன் எனது ஒரே குழந்தை இவனுக்காகத்தான் இருக்கிறேன். என்னால் இவன் பசியாக இருப்பதை பார்க்க முடியாது, அதனால் இவனுக்கு இனிப்பு கொடுக்க வேண்டி வருகிறது. இனிப்பு இவனுக்கு விஷம் என்று தெரிந்தே கொடுக்க வேண்டி வருகிறது. சர்க்கரை வெள்ளை விஷம். அதனால் நான் இவனை இங்கே கூட்டி வந்தேன். இவனுக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். நீங்கள் மனிதரில் தெய்வம். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு பலன் இருக்கக் கூடும்.

அந்த ஞானி குழந்தையை பார்த்தார். அவர், என்னால் இந்த குழந்தைக்கு இப்போது அறிவுரை கூற முடியாது. ஏனெனில் இப்போது நானே இனிப்பை மிகவும் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வாருங்கள். அதற்குள் இந்த இரண்டு வாரங்களும் நான் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறேன். இதை என்னால் செய்ய முடிந்தால் பிறகு என்னால் அறிவுரை கூற முடியும். இல்லாவிடில் இந்த அறிவுரை கூற சரியான ஆள் நானல்ல. என்றார்.

அந்த பெண்மணியால் நம்பவே முடிய வில்லை. இது இன்னும் அபாயகரமானது. ஆனால் அந்த குழந்தை மிகவும் ஈர்ப்படைந்தான். அவன் அந்த ஞானியின் காலில் விழுந்தான். அவன், என் அம்மா பல பேரிடம் என்னை அழைத்து சென்றிருக்கிறாள். அத்தனை பேரும் உடனே எனக்கு அறிவுரை கூறினார். ஆனால் நேர்மையான முதல் ஆள் நீங்கள்தான். இரண்டு வாரங்கள் கழித்து வருகிறேன். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். நான் உங்களை நம்புகிறேன். என்று கூறினான்.

குழந்தையின் முன் தனது தவறை ஒத்துக் கொண்ட ஒரு வளர்ந்த மனிதன், நானே இப்போது இனிப்பு விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை. அதனால் இரண்டு வாரங்களில் இந்த அறிவுரையை நானே கடைபிடித்து பார்க்கிறேன். நான் தோற்றுவிட்டால், என்னை மன்னித்துவிடு. என்னால் அறிவுரை கூற முடியாது. நான் வென்றுவிட்டால் அப்போது அறிவுரை கூறுவேன். ஒரு வயதான மனிதன் நானே வென்றுவிடும்போது உனக்கு இள வயது, அதிக ஆற்றலுடன், அதிக புத்திசாலித்தனமாக இருக்கிறாய். உன்னாலும் வெற்றியடைய முடியும். அதனால் ஒரு முயற்சி செய்து பார் என்று கூற முடியும். என்றார்.

அந்த தாய் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அந்த ஞானி கூறிய இரண்டு வாரங்களில் அவரால் அதை கடைபிடிக்க முடியாவிட்டால் எல்லாமும் முடிந்தது. பின் அந்த குழந்தையை கூட்டிச் செல்ல வேறு எந்த இடமும் இல்லை.

இரண்டு வாரங்கள் சென்றபின் அவர்கள் திரும்பி வந்தனர். ஞானி அந்த குழந்தையிடம், மகனே, அது கடினம்தான். ஆனால் இயலாதது அல்ல. இந்த இரண்டு வாரங்களும் இனிப்பு சாப்பிடாமல் என்னால் சமாளிக்க முடிந்தது. நான் இனி என் வாழ்வு முழுவதும் இனிப்பு சாப்பிடப் போவதேயில்லை என உனக்கு உறுதியளிக்கிறேன். அப்போது உனக்கு அறிவுரை கூற தகுதி இருக்கிறது என நீ நினைக்கிறாயா – எனக்கு நீ அனுமதியளித்தால் என்னால் உனக்கு அறிவுரை கூற முடியும். எனக் கேட்டார்.

அந்த பையன், எதுவும் கூற வேண்டிய தேவையில்லை. எனக்கு புரிந்துவிட்டது. உங்களுக்கு எனது நன்றிகள். உங்களை போன்ற ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவதற்காக தனது வாழ்நாள் பூராவும் இனிப்பு சாப்பிடாமல் இருப்பது- தானே அப்படி இருப்பது - நம்பிக்கையுணர்வு வைக்க தகுதியானதே. நான் உங்கள் மேல் நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். இந்த வினாடியிலிருந்து இனிமேல் நானும் இனிப்பு சாப்பிடப் போவதில்லை என உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றான்.

THE GREAT ZEN MASTER TA HUI - CHA # 4

மலர் 2 இணைய இதழ் 8 11 மார்ச் 2010

தலையங்கம்

அன்பர்களுக்கு வணக்கம்.

பலர் என்னைப் பார்க்க வருகிறார்கள். பாராட்டவும் செய்கிறார்கள். பார்க்க அழைப்பவர்களும் பலர். இவர்கள் எல்லாமே ஒரே வார்த்தையில் ஓஷோ அன்பர்கள்தான்.

ஆனால் நான் பலரையும் ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆர்வம் காட்டாமல் என் அன்பை பொழியாமல் ஒதுக்க வேண்டியிருக்கிறது. சிலரை கட்டாயமாக ஒதுக்க வேண்டியிருக்கிறது.

இப்படி நான் நடந்து கொள்வது பல சமயங்களில் என்னுடன் இருப்பவர்களுக்கு தர்ம சங்கடமாகவும், எதிர்பாராததாகவும், என் இயல்புக்கு மாறாகவும், நான் பேசும்படி நடக்காமல் போவது போலவும் தெரிகிறது, தெரியும்.

ஆனால் எனது இந்த 34 வருட ஓஷோவின் அன்பர்களுடனான பயணத்தில் அவரது அன்பர்களை நான் இருவகையில் பார்க்கிறேன். அப்படிப் பார்க்காமல் பழகியதால் பயனில்லை என்பதையும் இப்போது உணர்ந்தவனாய் இருக்கிறேன். ஆகவே அப்படி பார்த்து பழகுவதை இப்போது எனக்கு நானே கட்டாயப்படுத்திக் கொள்கிறேன்.

ஒரு பிரிவினர் ஓஷோவைபோ படிப்பவர்கள், ரசிப்பவர்கள், கைதட்டுபவர்கள், பாராட்டுபவர்கள், புகழ்பவர்கள், சமூகத்திற்கு சொல்பவர்கள், கலந்துரையாட விரும்புவர்கள், அவரது பேச்சாற்றலை, புத்தி கூர்மையை, கல்வியறிவை, மேதா விலாசத்தை, தைரியத்தை சிலாகிப்பவர்கள், மெச்சுபவர்கள்.
அவரது எழுத்தைப் படித்ததால், கருத்தும் சிந்தனையும் மாறியுள்ளவர்களும் இதில் அடங்குவர்.

தங்களின் வாழ்வின் சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்கு, அமைதியான ஒரு வாழ்க்கைக்கு தாங்கள் தந்திரமாக ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு ஏற்பாட்டை நியாயப்படுத்திக் கொள்ள ஓஷோவை பயன்படுத்திக் கொள்ளும் ஏராளமானவர்களும் இதில் அடக்கம். ஒரு கண நேர தரிசனத்தில் ஓஷோவிடம் நெருங்கி அவரது புது சந்நியாசம் பெற்று, அதன்பின் நழுவி பழையபடி மனதின் தந்திரத்திற்கே ஓஷோவை உபயோகிக்கும் ஓஷோ சந்நியாசிகளையும் நான் இதில்தான் சேர்க்கிறேன்.

ஓஷோ புத்தகங்கள் ஏராளமாய் படித்திருக்கிறேன். ஓஷோவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஓஷோ ரொம்ப பெரிய ஞானி. ஓஷோ தியானம் செய்து பார்க்க விருப்பம். இப்போது நான் ஈஷா தியானம் செய்கிறேன், நித்யா தியானம் செய்கிறேன், வேதாந்த மகரிஷி தியானம் செய்கிறேன், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஏதாவது புரோகிராம் நீங்கள் நடத்தினால் சொல்லுங்களேன், நான் வர முயற்சிக்கிறேன். உங்க இடத்தில் தியானம் செய்ய ஓரளவு ஆட்கள் வராங்களா என்று கேட்கும் பத்தாம் பசலி ஆன்மீகம், சமூக கௌரவ ஆன்மீகம், அறிவு நிறைந்த ஆன்மீகம் பேசுபவர்களையும் நான் இதில்தான் வகைப் படுத்துகிறேன்.

இவர்கள் எல்லோரைக் கண்டும் நான் ஒதுங்குகிறேன். அவர்கள் மேல் எனக்கு கோபம் என்பதல்ல. அவர்களை நான் நேசிக்கவில்லை என்பதல்ல. அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் எனக்கு எதிரிகளோ பிடிக்காதவர்களோ அல்ல. அவர்கள் மேலும் எனக்கு பிரியமும் மரியாதையும் உள்ளது. ஆனால் எனக்கு அவர்களோடு என்னைப் பகிர்ந்து கொள்ளும் அளவு நேரமுமில்லை, காலமுமில்லை. இன்னும் இந்த உடலில் இருக்கப்போகும் குறுகிய காலத்தில் ஓஷோவைப் பகிர்ந்து கொள்ள எனக்கு உயிர்த்துடிப்பானவர்கள் தேவை. அவர்களையே நான் நாடியும் தேடியும் போய் சேவை செய்ய விரும்புகிறேன். இதுவே காரணம்.

அப்படி உயிர் துடிப்புள்ளவர்களாக நான் பார்க்கும் ஓஷோ அன்பர்களின் அளவுகோல் எனக்கு அவர்கள் தினசரி குறைந்தது ஒரு மணி நேரமாவது தியானம் செய்பவர்களா என்பதுதான். தியானமுறையில் ஏதாவது ஒன்றை தினசரி முயற்சிக்கும் தேடுதல் வேட்கை கொண்டவர்களையே நான் தேடவும் நாடவும் செய்கிறேன். அவர்களுக்கே தன்னுணர்வு மலரவும் சத்தியத்தை தரிசிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதாலேயே மற்றவர்களை விலக்கி இவர்களை நாடுகிறேன்.
இதனால்தான் ஓஷோவும் தன்னிடம் சந்நியாச தீட்சை கேட்டு வருபவர்களிடம், அவர்களின் ஒரே தகுதியாக அவர்களால் தினசரி ஒரு மணி நேரமாவது தியானத்திற்கு என்று ஒதுக்கக் கூடிய வைராக்கியம் இருக்க வேண்டுமெனக் கேட்டார்.

ஒரே வரியில் கூறினால் ஆறுதலும் தேறுதலும் நாடுபவர்களை விட தேடுபவர்களுக்கும் தியானம் செய்ய விரும்புவர்களுக்கும் இடையே இருப்பதிலேயே என் குறி இருக்கிறது.

தியானத்தின் மூலம் மட்டுமே பிரபஞ்ச இணைப்புணர்வை (TRUST) ஒருவன் பெற முடியும் . அந்த இணைப்புணர்வு நிகழ்ந்து விட்டால் பிறகு இந்த உலகம் மாயையாய் விளையாட்டு லீலையாய் மாறிப் போகும். கனவுகளை கனவுகள் எனப் புரிந்து கொள்ள அப்போதுதான் முடியும். உடல், மன எல்லைகளை அப்போதுதான் அறிய முடியும். அதுதான் விழிப்புணர்வு. நான் என்ற உறக்கத்திலிருந்து எழுவது. இது ஒரு அனுபவ அறிவு. இந்த அனுபவம், இந்தப் பிரபஞ்ச அனுபவம் நான் என்பதன் கடைசி அனுபவம் எனலாம்.

மேலும் இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் பின்னும் எதுவும் மாறுவதில்லை. மாறாது. உடலும், மனமும், மூளையும் அதனதன் எல்லைக்குள்தான் செயலாற்றும். என்ன, அதிகபட்ச எல்லைவரை செயல்படும். ஆற்றல் வரும். அவ்வளவுதான். அது ஒன்றும் முக்கியமானதல்ல. முக்கியம் அதை வேடிக்கை பார்க்க முடிவதுதான். இதன்பின் வேடிக்கை விளையாட்டு நிலையாமையின் நடனம் இப்படி பூமியே சொர்க்கமாய் ஆகிப் போகும்.

சென்ற மாதம் ஓஷோவின் புதுமை சந்நியாசியும் எங்கள் அன்பு நண்பருமான சுவாமி யோகராஜ் திடீரென தனது இளவயதில் காலமானார்.
அப்போது பார்த்தேன். நமது ஓஷோ அன்பர்களைத் தவிர சமூகத்தில் எவருக்குமே மகிழ்ச்சியோடு அவரை வழியனுப்பும் உணர்வும் தைரியமும் இல்லை. இறக்கும்வரை அவர் உயிர் வாழ விரும்பும் போராட்டத்தில் உதவி செய்தோம். ஆனால் உடல் சீர்பட வில்லை. இறந்து விட்டது. பின் என்ன, ஒரு குட்பை கூறி ஆனந்தமாக வழியனுப்ப வேண்டியதுதானே.

இந்த மாதம் மார்ச் 21-ம் தேதி முதல் ஓஷோ ஸாஸ்வதம் புதிய தியான
அரங்கில் செயல்பட உள்ளது. இது அவினாசி அருகே உள்ளது. அனைவரும் வந்து தியானம் புரிந்து மகிழ்க.

அன்பு,
சித்.
கவிதை

அன்பு வழி வாழ்வு

நண்பனே,
கூடு விட்டு கூடு தாவும் அனுபவம் உண்டா உனக்கு,
அடுத்தவர் எண்ணம் அறியும் ஆற்றலுண்டா உனக்கு,
விதை பார்த்து கனியின் சுவை கூறமுடியுமா உன்னால்,
சுலபம்,..... வெகு சுலபம்,
இவையெல்லாம் சித்துவேலையல்ல,
அன்பின் சத்து வேலை.

ஆம்....அருமை நண்பனே,
அன்பின் இராசயனம் அனைத்து இயற்கையிலும் பரவிக்கிடக்கிறது.
அந்த சாத்தியத்தில்.....
அன்பில் நீ கரையும்போது அனைத்தையும் உணர முடியும்.
மரத்தை நேசிக்கும்போது இலையின் அசைவை நீ அறிவாய்.

ஆம்.....நண்பா,
அன்பில் கரைந்தபின் எதுவும் சாத்தியம்.
பாறை வளர்வதையும் பார்த்து ரசிக்கலாம்,
வெறும் கோப்பையிலிருந்து தேநீரையும் சுவைத்துக் குடிக்கலாம்,
இறப்பின் ஆனந்தத்தை இனிய கவிதையாய் வடிக்கலாம்,
தனிமையே ஒருமையாய் தன்னை எங்கும் உணரலாம்.

ஆகவே எனக்குப் பிரியமானவனே,
அன்பு வழி வாழ்வு.
வாழ்வின் பொருள் அன்பு,
அதை சுவைக்கவும் அதில் கரையவும்,
நாம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம்.

ஓஷோ வீடியோ

1. Osho : I am not a worshiper of poverty

2. Osho : Ecstasy (Meditation Minutes)

3. Osho : Something which never dies



இம்மாதம் மூன்று தியானமுறைகளை ஓஷோவின் விளக்கங்களோடு அளிக்கிறோம்.

1.எண்ணங்களின் உணர்வுகளின் ஆளுமையை உடைத்தல்

உங்களுடைய உணர்வுகளுடன் ஐக்கியப்பட்டு விடாதீர்கள்.
உங்களுடைய மனத்தின் ஆளுமையை வீசியெறிய வேண்டுமெனில் அதனுடன் நீங்கள் கொண்டுள்ள அனைத்து தொடர்புகளையும் அழித்து விடுங்கள். உங்களுக்குள் ஒரு எண்ணம் எழுகிறது, - அதனுடன் ஒன்றாகி விடாதீர்கள். நீங்கள் அதனுடன் ஒன்றாவதுதான் அதற்கு வலிமையை கொடுக்கிறது. தனித்து நில்லுங்கள். சாலையோரம் நின்றுகொண்டு கடந்து மக்களை வேடிக்கை பார்ப்பது போல பாருங்கள். வானத்தில் உள்ள மேகங்களை கீழே உள்ள பூமியில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது போல பாருங்கள். அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள். அதனுடன் ஐக்கியப்பட்டு விடாதீர்கள். இது என்னுடைய எண்ணம் என்று சொல்லாதீர்கள். என்னுடைய என்று சொல்லும் அந்த கணமே நீங்கள் தொடர்பு கொண்டு விடுகிறீர்கள். தொடர்பு ஏற்பட்ட அந்த வினாடியே உங்களுடைய அனைத்து சக்திகளும் அந்த எண்ணத்துக்கு போய் விடுகிறது. அந்த சக்திதான் உங்களை அடிமை படுத்துகிறது – அது உங்களது சக்திதான்.

உங்களது எண்ணங்களிடமிருந்து நீங்கள் விலகி நின்று பார்க்கும்போது அவை சக்தி இழந்து போகிறது, வாழ்விழக்கிறது. ஏனெனில் அவைகளிடம் எந்த சக்தியும் கிடையாது. நீ ஒரு பக்கம் விளக்கை அணைக்க விரும்புகிறாய், இன்னொரு பக்கம் அதற்கு எண்ணை ஊற்றிக் கொண்டிருக்கிறாய். கையால் எண்ணை ஊற்றிக் கொண்டே வாயால் அதை ஊதுகிறாய். இதுதான் உன் பிரச்னை. புதிதாக எந்த எண்ணையும் ஊற்றாதே. இருக்கும் எண்ணை வெகு நேரம் எரியாது.

எண்ணை என்பது என்ன? எப்போதெல்லாம் ஒரு எண்ணம் உன்னை பிடித்துக் கொள்கிறதோ, - உதாரணமாக எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ – நீ உடனடியாக அதனுடன் ஒன்றாகி விடுகிறாய். நீ நான் கோபமாக இருக்கிறேன் என்று சொல்கிறாய். நீ அந்த கோபத்துடன் உன்னை மிகவும் அடையாளப்படுத்திக் கொண்டு விட்டதால் உனது சக்தி முழுவதும் அதற்கு சென்று விட்டது. இதுதான் உண்மை. நீ நிழலாகி விட்டாய். கோபம் எஜமானனாகி விட்டது. கோபம் வரும்போது தனியாக நின்று அதைப் பார், கவனி. கோபம் பொங்கி எழட்டும். அது உன் உடலை முழுவதுமாக ஆக்ரமிக்கட்டும். அது எல்லா திசைகளிருந்தும் சூழட்டும். நடக்கட்டும். நீ நான் கோபமல்ல என்ற ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் நினைவில் கொண்டிருந்தால் போதும். கோபத்தினுள் குதிக்க அவசரம் காட்டாதே, ஏனெனில் அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம்.

இடைவெளிக்காக காத்திரு.
உனது கோபத்தை கவனி. ஆனால் அதற்காக எதுவும் செய்யாதே. உன்னை அவமதித்த மனிதனை நீ ஏதாவது செய்ய வேண்டுமானால், கோபம் வடியும் வரை காத்திரு. அதற்கு முன் எந்த சூழ்நிலையிலும் அதற்கு பதிலளிக்காதே.

ஆரம்பத்தில் அது மிகவும் கடினமானதாக இருக்கும். மிகவும் கடினமானதாக தான் இருக்கும். நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உன்னை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும், போக, போக அது சுலபமானதாகிவிடும். கோபம் இருக்கும் வரை உன் வாயை மூடிக் கொண்டிரு. கோபம் வடிந்த பிறகு பதில் சொல். இதுதான் ஒரே சரியான வழி. அமைதியான தருணங்களில்தான் சரியான பதில் வரும். கோபத்தில் பதில் சொல்வது போதையில் பதில் சொல்வதைப் போன்றது. உனக்கும் உனது எண்ணங்களுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இடைவெளி உண்டாக்கிக் கொள்கிறாயோ அவ்வளவு உனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்திக் கொள்கிறாய். நீ உனது ஆசைகளுக்கு மிக அருகில் இருப்பதால் அதற்கும் உனக்கும் இடையே இடைவெளி இருக்கிறது என்பதையே நீ மறந்து போய் விடுகிறாய். இரண்டிற்கும் இடையே இடைவெளியே இருப்பதில்லை.

பலன் உடனே கிடைக்காது. ஏனெனில் உனது நெருக்கம், அதனுடன் உனது தொடர்பு கணக்கற்ற பிறவிகளாக தொடர்ந்து வருகிறது. அந்த தொடர்பை ஒரு நாளில் உடைக்க முடியாது. அதற்கு காலம் பிடிக்கும். ஆனால் உன் பக்கத்திலிருந்து கிடைக்கும் சிறு முயற்சி பலனை கொடுக்கும், ஏனெனில் இது தவறான அடையாளம். அது உண்மையென்றால் அதை உன்னால் உடைக்கவே முடியாது.

ஆனால் உன்னுடைய எண்ணங்களோடு நீ கொண்டுள்ள இந்த அடையாளம் உன்னுடைய ஒப்புதலேயன்றி வேறல்ல. இருப்பினும் இதுதான் உன் எல்லா பிரச்னைகளையும் உருவாக்குகிறது.
பசி வரும்போது நான் பசியாயிருக்கிறேன் என்று சொல்லாதே. பதிலாக இந்த உடல் பசியாக உணருவதை நான் பார்க்கிறேன் என்று சொல்.

இதுதான் உண்மை. நீ பார்ப்பவன்தான். உடல்தான் பசியை உணருகிறது. தன்னுணர்வு ஒருபோதும் பசியாக இருப்பதில்லை. உணவு உடலுக்குள் தான் செல்கிறது. உடலுக்கு, தசைக்கு, இரத்ததிற்கு தான் தேவை இருக்கிறது. இந்த உடல்தான் சோர்வடைகிறது. தன்னுணர்வு சோர்வடையாது. திரியும் எண்ணையும் இல்லாமல் எரியும் தீபம்தான் தன்னுணர்வு. அதற்கு எரிபொருளும் தேவையில்லை, உணவும் தேவையில்லை. அதற்கு எதுவுமே தேவையில்லை.

உடலுக்குத்தான் எரிபொருளும், உணவும் தேவை. உடல் ஒரு மெஷின், உயிர் மெஷினல்ல.

உடலுக்கு உணவு தேவை எனும்போதெல்லாம் அதற்கு உணவளி. ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள். உடல்தான் பசியோடு இருக்கிறது, நான் அதை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு தாகமாக இருக்கும்போது தண்ணீர் கொடு.

உடல், உணவும் தண்ணீரும் தேவைப்படும் ஒரு இயந்திரம். நான் உடலல்ல, அதனால் அதற்கு உணவும் தண்ணீரும் தர மாட்டேன் எனக் கூறும் மனிதன் ஒரு முட்டாள். காருக்கு பெட்ரோல் போட வில்லையென்றால் எப்படி காரை ஓட்ட முடியும்? நீ அதற்குள் உட்கார்ந்து இருக்கலாம், ஆனால் அது ஓடாது...... காருக்கு பெட்ரோல் போட வேண்டும். அப்போதுதான் அது ஓடும். காருடன் ஒன்றி விடாதே. ஒரு முதலாளியாக இருந்து அதன் தேவைகளை நிறைவேற்று.

உடலின் தேவைகள் நிறைவேற்றப் பட வேண்டும். அது நீ உபயோகப்படுத்தக் கூடிய ஒரு இயந்திரம். அது மிகப் பயனுள்ள ஒரு சாதனம். அதுதான் முக்தி நிலைக்கு நாம் செல்ல உதவும் ஒரு ஏணி. இந்த உடல் ஒரு இயந்திரம், ஒரு சுமந்து செல்லும் மெஷின். அதை கவனமாக பராமரி, அதை கெடுத்து விடாதே. உன்னுடைய வேலைக்காரனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய், அதற்காக அவனையே முதலாளி என்று எண்ண வேண்டியதில்லை.

மனதை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் உண்மையை உணரலாம். மனது உனது கட்டுப்பாட்டில் இருக்கும்போது நீ மெதுமெதுவாக சாட்சியாளனாக மாறி விடுவாய், உனக்கு உண்மை புரியும், உனது உயிர், உனது உண்மையான இருப்பு விழிப்புணர்வு நிலையை அடைய ஆரம்பிக்கும்.

Source : The Great Path Ch. #6

2.உரிமையாளனை நினைவு கொள்ளுதல்

எனக்கு வலிக்கிறது, எனக்கு வலியாக இருக்கிறது, நான் வலியை உணருகிறேன், இவைதான் மூன்று நிலைகள், முற்றிலும் வேறு விதமான நிலைகள். ஞானமடைந்த ஒருவர் கூறுகையில், நான் வலியை உணருகிறேன் என்றுதான் கூறுவார். இந்த அளவு கூறுலாம். ஏனெனில் இப்போது நீ வலியை கடந்து போகிறாய். விழிப்புணர்வு நிலைமாற்றுகிறது. – நீ வலியிலிருந்து வேறுபட்டவன். அங்கே ஆழமான பிரிவினை இருக்கிறது. உண்மையில் அங்கு சம்பந்தமே இல்லை. அருகாமையில் இருப்பதால், உன்னுடைய தன்னுணர்வு நெருக்கமாக அங்கு இருப்பதால் அங்கே உறவு இருப்பது போல தோன்றுகிறது.

நீ வலியை உணரும்போது தன்னுணர்வு வெகு நெருக்கமாக இருக்கும் – அது அங்கேயே அருகிலேயே இருக்கும். அது அங்கேதான் இருக்கமுடியும். இல்லாவிடில் வலி குணமாகாது. அதை தெரிந்து கொள்ள, அதை புரிந்து கொள்ள, அதை பற்றி விழிப்பு அடைய அதன் அருகிலேயே இருந்தாக வேண்டும். ஆனால் இந்த அருகாமையால் நீ அதனுடன் ஒன்றி விடுகிறாய். இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு, ஒரு இயற்கையான காவல். ஒரு வலி வரும்போது உன்னுடைய தன்னுணர்வு அங்கே விரைந்து வந்தாக வேண்டும் – வலியை உணர, அதற்கு ஏதாவது செய்ய, அங்கே வரும். அந்த நெருக்கத்தினால் இந்த ஐக்கியப் படுதல் ஏற்படுகிறது.

நீ உணரக் கூடிய எதுவும் நீயல்ல. வந்து போகும் பல உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் தலைவன். விருந்தாளிகளுக்கிடையில் தொலைந்து போய் விடாதே. உன்னுடைய நிலையை நினைவில் கொள்.

விருந்தாளி வரும்போது உரிமையாளரை நினைவில் கொள். பல விதமான விருந்தாளிகள் வருவர். சந்தோஷமானவர்கள், கவலையோடு இருப்பவர்கள், என பலர். நீ விரும்பும் வகையினர் விருந்தினராக வருவர், நீ யாருடன் இருக்க விரும்புகிறாயோ அவர்களும் வருவர், யாரை நீ தவிர்க்க விரும்புகிறாயோ அவர்களும் வருவர், ஆனால் அனைவரும் விருந்தாளிகள்தான்.

தொடர்ந்து உரிமையாளரை நினைவில் கொள், உரிமையாளராகவே இரு. அப்போது அங்கே ஒரு பிரிவினை இருக்கும், ஒரு இடைவெளி, நடுவில் ஒரு இடம் இருக்கும் – பாலம் உடைந்து போகும். அப்போது நீ அதில் இருப்பாய், ஆனாலும் அதனுடன் இருக்க மாட்டாய். அப்போது நீ அங்கிருப்பாய், விருந்தாளிகளுடன் இருந்தாலும் உரிமையாளராக இருப்பாய். விருந்தாளிகளை விட்டு ஓடிப் போக வேண்டிய அவசியமில்லை, தேவையுமில்லை.

Source : That Art Thou Ch. #16

3,கடந்து போதல்

1. அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிரு. துயரம் வரும்போது அதை அடையாளம் கண்டு கொள். அது நல்லது கெட்டது என்றோ இது எனக்கு வந்திருக்கக் கூடாது என்றோ வந்திருக்க வேண்டும் என்றோ மதிப்பீடு செய்யாதே. துன்பம் வந்திருப்பதை பற்றி மட்டும் விழிப்போடு இரு. அதை உணர்ந்திரு.

2. மகிழ்ச்சியை உண்டாக்க முயற்சி செய்யாதே. செய்தால் அடுத்த பக்கமும் சேர்ந்தே வரும். மகிழ்ச்சி வந்தால் அதை பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதே. இல்லாவிடில் மற்றொரு பக்கத்தையும் சேர்ந்தே அனுபவிக்க நேரிடும். திரும்பவும் துயரம் வந்து சேரும்.

3. நீ தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தால் துன்பம், மகிழ்ச்சி இரண்டையும் பார்த்துக் கொண்டே இருந்தால் திடீரென ஒரு நாள் நீ தனித்து இருப்பதை இரண்டிலிருந்தும் தனியாக பிரிந்து இருப்பதை, உணருவாய். இந்த விஷயங்கள் அனைத்தும் உன்னைச் சுற்றி நடப்பவை மட்டும்தான். நீ அவற்றிற்க்கு அப்பாற் பட்டவன் என்பது உனக்கு தெரிய வரும். இந்த தனித்து இருத்தல்தான் பிரபஞ்ச ஆன்மா. அப்பாற் பட்டு இருத்தலின் நடப்பு, இரண்டையும் கவனித்து பார்த்தாலும் இரண்டையும் தாண்டி இருக்கும் இந்த இருப்பு, என்ற இந்த கணம்தான் நீ முழுமையானதாகவும், வெறுமையானதாகவும் இருக்கும் நேரம். நீ வெறுமையாகவும் இல்லை, அல்லது நிரம்பி வழிபவனாகவும் இல்லை.
ஏனெனில் நீ மகிழ்வும் அல்ல துயரமும் அல்ல என்பதை நீ
உணர்ந்திருக்கிறாய்.

Source : The Great Secret Ch. #2

ஞானத்தின் பக்குவம் - ஓஷோவின் கதை 20

ஒரு நாள் இரவு நான் ஒரு சூஃபி கதையை படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அது மிகவும் பிடித்தது. நான் அதை அனுபவித்தேன். நான் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு சூஃபி ஞானி கடவுளை தேடி நாடுநாடாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவர் பல குருமார்களை சந்தித்தார். ஆனால் எதுவும் அவருக்கு திருப்தியளிக்க வில்லை. இதயத்தை அர்ப்பணிக்க கூடிய இடத்தை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஏமாற்றத்தோடும் நிராசையோடும் அவர் வெளியே குருவை தேடுவதை நிறுத்தி விட்டு உள் குரலை கேட்பது என்று முடிவு செய்து, தனித்து இருப்பதற்காக காட்டுக்குச் சென்றார்.

அங்கு அவர் ஒரு மிக அழகான தேக்கு மரக் கூட்டத்தை கண்டார். பழமையான வயதான பல தேக்கு மரங்கள் ஒன்று கூடி ஒரு கூடாரம் போல உருவாகியிருந்தன. அதன் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயற்கையின் மழை, காற்று, வெயில் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாகியிருந்தது. அருகில் ஒரு ஏரி இருந்தது. அந்த கூடாரம் மிகவும் அமைதியானதாக, காட்டின் நடுவில் யாரும் வராத இடத்தில் இருந்தது.
அந்த சூஃபி அதனுள் சென்றார். அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்தது. அதற்கே உரிதான அழகுடன் அந்த இடம் இருந்தது. அவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். வாரத்திற்கு ஒருமுறை அவர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பக்கத்து கிராமத்துக்குப் போய் கொஞ்சம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார்.

சூஃபிக்கள் கடவுளின் பெயரை அல்லா என்று திரும்ப திரும்ப உச்சரிப்பர். முகம்மதியர்களின் மந்திரமான இதன் பொருள், `கடவுள் என்று யாரும் இல்லை. ஆனால் கடவுள் உண்டு.` ஆனால் சூஃபிகள் இதை அல்லா என்ற ஒரே வார்த்தைக்குள் சுருக்கி விட்டனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் திடீரென ஒருநாள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் போதே இறந்து விடக்கூடும். அப்படி உச்சரித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விட்டால் பாதியில் கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போது இறக்க நேரிட்டால் நீ ஒரு நாத்திகனாக இறந்து விடுவாய். கடைசி நிமிடத்தில் எல்லாமும் குழம்பி விடும். எதிர்மறையாளனாகி விடுவாய். அதனால் அது ஆபத்தானது என்பதாகும். அதனால் அவர்கள் இந்த முகம்மதிய மந்திரத்தை அதன் முழுவதுமாக சொல்வதில்லை. வெறுமனே அல்லா அல்லா எனக் கூறுவதோடு சரி. அல்லா எனக் கூறிக் கொண்டே இருந்தால் கடைசி நிமிடத்தில் கூட அவர்கள் இதயம் நிரம்பி, அவர்கள் மூச்சுக் காற்றுக்கூட அல்லா எனக் கூறும், கடவுளின் நினைவாகவே இறப்பர். இந்த நிலையைத்தான் அவர்கள் ஜீக்குரா என்று அழைக்கின்றனர்.

இந்த சூஃபி தன்னுடைய மந்திரமான அல்லா, அல்லா என்பதை மாதக்கணக்கில் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். அவர் மிகவும் அமைதியாகவும், சாந்தமானவராகவும், தன்மையானவராகவும், மாறுவதை அவர் உணர ஆரம்பித்தார். அந்த கூடாரத்தை சுற்றி மிகவும் ஆழ்ந்த மௌனம் இருந்தது. அது மிகவும் அமைதியானதாக இருந்தது. அவர் தனக்குள்ளும் அந்த மௌனத்தை உணர துவங்கினார். அவரது இருப்பின்னுள்ளும் அந்த அமைதி பரவியது. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது போதாது. முக்தி நிலை, ஞானமடைதல் அதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.

வருடங்கள் கடந்தன. அந்த கூடாரம் ஒரு தூய்மையான இடமாக மாறி விட்டது. தேக்கு மரங்கள் மிகவும் வளமடைந்தன. அவை புதிதாக நிறைய கிளைகள் விட்டு, இலைகள் விட்டு செழிப்படைந்தன. அந்த கூடாரமே அழகால் நிரம்பியிருந்தது. - ஆனால் அந்த சூஃபியின் இதயம் மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் காத்துக் கொண்டேயிருந்தார். அவர் அவரால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து விட்டார். அவர் தியானமும் பிரார்த்தனையும் செய்து கொண்டேயிருந்தார். பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அவர் முக்தி நிலை பெறவேயில்லை. அவர் ஆழ்ந்த மௌனத்திலும் அமைதியிலும் இருந்தார். ஆனாலும் அவர் ஞான நிலை கிட்ட வில்லை. இருந்தது கரைந்து விட்டது, ஆனால் எதுவும் அவருக்கு நிகழவில்லை. இருந்தது போய் வெறுமையாகி விட்டது, வெறுமை ஒரு விதமான அமைதிதான், ஆனாலும் வெறுமை வெறுமையாகவே இருந்தது. வேறு எதுவும் செய்ய வழியில்லை.
ஒரு நாள் நடு இரவில் திடீரென அவருக்கு ஒரு ஐயம் எழுந்தது. ஒரு சந்தேகம் தோன்றியது. ஏனெனில் பதினெட்டு வருடங்கள் என்பது மிகவும் அதிகமானது, அவர் மிகவும் முயற்சி செய்து பார்த்து விட்டார், அவர் தனது முழு மனதோடு அதில் ஈடு பட்டு இருந்தார், அவர் எதையும் பிடித்து வைக்கவில்லை, அப்படியும் அது நடக்கவில்லை என்றால் அது எப்போதுமே நடக்காது போல தோன்றுகிறது. ஒரு சந்தேகம் எழுந்தது, அவர் சிந்தித்து பார்க்க ஆரம்பித்தார். இந்த தேக்கு மரக் கூட்டம் எப்படி மழையையும், வெயிலையும் உள்ளே அனுமதிப்பதில்லையோ, அது போல எனது பிரார்த்தனையையும் வெளியே போக அனுமதிப்பதில்லையோ? இதன் கிளைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் எனது பிரார்த்தனைகள் உள்ளேயே நின்று விடுகின்றதோ, இறைவனை போய் சேர வில்லையோ? எப்படி சூரிய ஒளி இந்த கூடாரத்துக்குள் ஊடுருவ முடிந்ததில்லையோ, அது போல எனது பிரார்த்தனை இறைவனைப் போய் சேர வில்லையோ? இந்த கூடாரம் ஒரு டிராகுலா போன்றதோ, ஒரு ஒட்டுண்ணியோ என நினைத்தார்.

பயந்து போய் நட்ட நடு இரவில் இருளில் உடனே அந்த கூடாரத்தை விட்டு தப்பியோடி விட்டார்.

ஆனால் அதே சமயத்தில் அந்த அடர்ந்த மரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஒரு பிச்சைக்காரன் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்க்கு போய் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு காட்டிற்க்குள் போக வேண்டுமென்ற தீவிர வேட்கை எங்கிருந்தோ தோன்றியது. அவன் அந்த அவாவை அலட்சியம் செய்தான். காலைக்குள் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்தாக வேண்டும், இன்னும் பாதி தூரம் கூட போய் சேர வில்லை. எதற்காக காட்டிற்க்குள் போக வேண்டும்? அது ஆபத்தானது, காட்டிற்க்குள் விலங்குகள் இருக்கும், அவனுக்கு அங்கென்ன வேலை என நினைத்தான். ஆனால் ஏதோஒன்று அவனை இழுத்தது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் வகையற்று போனான். அவன் பைத்தியம் பிடித்தாற்போல காட்டிற்க்குள் ஓடலானான். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என அவன் நினைத்தான். ஆனால் அவனது உடல் அவனது கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன் போக்கில் இயங்கியது. அவன் தப்பியோட நினைத்தான். காட்டுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானது, அவன் பயந்தான், நடுங்கினான் – ஆனால் பயனில்லை. ஆனால் அவன் அந்த மரக்கூடாரத்தை நெருங்கியவுடன் அவனுக்கு புரிந்தது.

அந்த மரக்கூடாரத்திலிருந்து ஒரு மெல்லிய குரல் வந்தது. என்னிடம் வா. அது புற செவிகளுக்கு கேட்காது, ஆனால் அது அவனுக்கு கேட்டது. அந்த கூடாரம் நம்பவே முடியாத அளவு ஜொலித்தது. அந்த முழு கானகமும் இருட்டில் இருக்க, இந்த கூடாரம் மட்டும் தனியாக நீல வண்ணத்தில் மின்னியது.

அது ஏதோ வேறு ஒரு உலகம் போலவும், அந்த மரத்திற்கு அடியில் ஏதோ ஒரு புத்தர் அமர்ந்திருப்பது போலவும், அதன் அடியில் யாரோ ஒருவர் ஞானமடைந்தது போலவும், அந்த மரத்தை சுற்றி ஞானஒளியும், முக்தி நிலையின் அமைதியும் பரவசமும் பரவி படர்ந்திருந்தது. அவன் அந்த மரத்தைச் சுற்றி ஒரு அதிர்வலை இருந்ததை உணர்ந்தான். இப்போது அந்த பயம் போய் விட்டது. அவன் அந்த மரக்கூடாரத்தினுள் நுழைந்தான். நுழைந்த அந்த கணமே அந்த நிலைமாற்றமடைந்தான். ஒரு புதிய மனிதனாக பரிமணித்தான். அவனால் அவனை நம்பவே முடிய வில்லை. அவன் ஒரு சாதாரண மனிதன், நல்லவனுமல்ல, கெட்டவனுமல்ல, ஒரு சராசரியான மனிதன்.

அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களில், குழப்பங்களில், ஆழ்ந்து கிடப்பவன். அவன் ஒரு ஆத்திகனுமல்ல, நாத்திகனுமல்ல. உண்மையில் அவன் கடவுளைப்பற்றி எனக் குறிப்பாக எதையும் நினைத்தது கிடையாது. மதத்தைப்பற்றி எந்த கொள்கையும் கிடையாது. அவன் அதைப் பற்றி கவலைப் பட்டதே கிடையாது. வாழ்க்கையின் பல பிரச்னைகளோடு அவன் போராடிக் கொண்டிருந்தான்.....ஆனால் திடீரென அந்த மரக்கூடாரத்தில் நுழைந்தவுடன் அவன் ஒரு சுழலில் சிக்குண்டான். அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான், அவனால் நம்பவே முடியவில்லை. – அவன் அந்த விதமாக அது வரை அமர்ந்ததே இல்லை. அவன் ஒரு சூஃபி ஞானியை போல அமர்ந்தான். அவனுள் ஒரு லயம் பரவியது, அவன் இருப்பினுள் ஒரு நாதம் எழுந்தது. அவனது உள்ளிருந்து ஒரு ஓசை ஒலித்தது. என்ன நடக்கிறதென்றே அவனுக்கு புரிய வில்லை. அது ஒரு அதிசயம். இன்னவென்று அவன் அறிந்திராத ஒரு சத்தம் அவனுக்குள்ளிருந்து வெடித்துக் கிளம்பியது. மெதுமெதுவாக, அந்த பரபரப்பு அடங்கியவுடன், எல்லாமும் அமைதி பட்டவுடன் அவனால் அந்த சத்தத்தை கேட்க முடிந்தது, அந்த ஓசை தெளிவடைந்தது, வடிவற்றது வடிவமடைந்தது, அப்போது அது என்னவென்று அவனுக்கு தெரிந்தது. அது வேறு எதுமல்ல - அல்லா, அல்லா – இப்போது அவனையும் அறியாது அவனே அதை சொல்லத் துவங்கினான். அவன் அதை சொல்ல வில்லை. அவன் செய்பவனல்ல. அது நிகழ்ந்தது. அவன் ஒரு சாட்சியாளனாக இருந்து அதைப் பார்த்தான்.

ஏதோ ஒரு பிரபஞ்ச கடலின் கரையில் அவன் இருப்பதைப் போலவும், பெரும் அலை வந்து அவன் மீது நீரை வாரி இறைப்பதை போலவும் இருந்தது. – அல்லா, அல்லா, அல்லா – கடலின் பிரமாண்டமான அலை கரையில் இருந்த அவனை முழுவதுமாக நனைத்து சென்றது. நிலைமாற்றமடைந்த அவன் பல்லாயிரம் தடவை அன்றைய இரவில் இறந்து பிறந்தான்.

பதினெட்டு வருடங்கள் அந்த சாதகன் அங்கே இருந்தான், எதுவும் நடக்கவில்லை. பதினெட்டு மணி நேரங்களில் அந்த பிச்சைக்காரன் புத்தனாகி விட்டான். அவன் எதுவும் செய்யவில்லை. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்தது. லா வேட்ஸூ இந்த கதையை மிகவும் விரும்பி இருப்பார். அவரால் இந்த கதையை புரிந்து கொள்ள முடியும். இதன் ரகசியம் என்ன? இது இயல்புக்கு முரணானதாக தெரிகிறது. பதினட்டு வருடங்கள் முயற்சி செய்தவனுக்கு எதுவும் நிகழ வில்லை, பிரார்த்தனையே செய்யாதவனுக்கு பதினட்டு மணி நேரங்களில் எல்லாமும் கிடைத்து விட்டது. இந்த கதையின் பொருள் என்ன?

லா வேட்ஸூ எப்போதும் ஒரு வார்த்தை கூறுவார். அது வூ வீ. அதன் பொருள் செயலற்ற செயல். செயலற்று செயல் செய்தல். செயல் செய்தலும் செயலற்று போதலும் ஒருங்கிணைத்து இருப்பது. இதுதான் ரகசியம். அந்த சாதகன் அதிகப்படியாக செய்தான். அவன் தன்னை சமமாக நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. அவன் அதிகமாக செய்தது செய்யாதது போன்றதுதான்.

வாழ்க்கை ஒரு சமன்பாடுதான். அவன் சமப்படுத்திக் கொள்ள வில்லை. அடைவதற்கான பேராசையினால், லட்சியத்தினால், அவன் எல்லைக்கே சென்று விட்டான். அவன் மிகவும் ஈடுபட்டு விட்டான்.

எப்போதெல்லாம் நீ மிகவும் செயல்படுபவனாக இருக்கிறாயோ, எப்போதெல்லாம் செயல்படுபவனாக மட்டுமாக இருக்கிறாயோ, அப்போது இந்த உலகின் விஷயங்கள் அனைத்தும் ஒத்துவரும் – ஆனால் அக உலகின் விஷயங்கள் உனக்கு நிகழாது போய் விடும். ஏனெனில் நீ மிகவும் பதற்றத்தோடும், தவிப்போடும் இருப்பதால் ஏற்றுக் கொள்வதற்க்குரிய நிலையில் நீ இல்லை. செயலுக்கும் செயலற்ற நிலைக்கும் இடையில் சமனோடு, நேர்மறைக்கும் எதிர்மறைக்கும் இடையில் சமனோடு, எல்லா இரட்டை தன்மைகளுக்கும் இடையில் சமமாக யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் பெற்றுக் கொள்ள முடியும்.

TAO: THE THREE TREASURES, VOL 2 CHAPTER #7