Friday, October 22, 2010

மலர் 1 இணைய இதழ் 11 11 ஜூன் 2009

தலையங்கம்

அன்பு நண்பர்களே!

ஓஷோவைப் படிப்பவர்கள், கேட்பவர்கள், அதனால் பாதிக்கப் படுபவர்கள், அவர் கூறும் உண்மையின் தாக்கத்தில் அதைப் பின்பற்ற முயல்பவர்கள், அதை உடனே பின்பற்ற ஆரம்பிப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் நான் சொல்ல விரும்பும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.

அதற்கு முன் சில விஷயங்கள்......... ஓஷோவால் ஈர்க்கப்பட்ட அவரின் புது சந்நியாசியாக 1980 – 90 ல் மாறிய பல என் அருமை நண்பர்களின் நடைமுறை வாழ்க்கை இன்று சிதைந்து கிடக்கிறது. அவர்களின் அன்புக்கும், நேர்மைக்கும், துணிவுக்கும் உகந்ததாக ஒரு அமைதியான வாழ்க்கை கிடைக்காமல், பலரின் வாழ்க்கையிலும், குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் தோல்வி, மனக்கசப்பு, பிரச்னை.

அவர்களின் சமூக வாழ்க்கையிலும் அதற்கு தேவையான போட்டியும், பொறாமையும், வெறியும், பேராசையும், ஆணவமும் அவர்களிடம் இல்லாமல் போனதால் அல்லது மிகவும் குறைந்து போனதால் அவர்களால் சம்பாதிக்க முடியவில்லை. இந்த சமுதாயத்தில் ஒன்று உன்னால் ஏமாற்ற முடிய வேண்டும் அது அவர்களால் முடியாது அல்லது ஏதாவது ஒரு துறையில் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும் அவர்களுக்கு அதுவும் சாத்தியமில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் சக்தியை உள்நோக்கி திருப்பிக் கொண்டவர்கள். இரண்டும் இல்லாவிட்டால் அடிமைத் தொழிலில் அடிவருடியாய் நடித்து காரியம் சாதிக்க தெரிய வேண்டும். அதுவும் சாத்தியமில்லை. அவர்கள் எளிமையான, நேர்மையான, சுதந்திரமான, அதே சமயம் மிகவும் பொறுப்போடும், நேர்த்தியோடும் செயல்புரியும் தன்மைகொண்ட வேலைகளுக்குதான் உகந்தவர்கள். ஆனால் அப்படிப் பிழைக்க நம் சமூகத்தில் வாய்ப்பு ஏதும் இல்லாமல் அல்லவா இருக்கிறது.
அப்படி இருக்கும் ஒரு சில வாய்ப்புக்களுக்கும் போட்டி மிக அதிகம். ஆகவே சிரமப் படுகின்றனர்.

இப்படி குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் பிரச்னைகளை சந்திக்கும் ஓஷோ சந்நியாசிகள் பலர் என்னைச் சுற்றி தமிழ்நாட்டிலும், இந்தியா முழுவதும் உள்ளனர். பெண்கள் நிலை இன்னும் மோசமாக உள்ளது. இது மேலும் தொடர்கிறது. புதிதாக வரும் இளைஞர்களும், பெண்களுக்கும் எப்படி வாழ்வைச் சந்திப்பது என்பதில் தடுமாற்றம் ஏற்படுவதை நான் பார்க்கிறேன். ஓஷோ கூறும் உண்மை புரிந்ததால் வாழ்வை உண்மையாக வாழ முயற்சிக்க விரும்புகின்றனர். ஆனால் அதனால் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பிக்கின்றன.

இதையெல்லாம் பார்த்ததின் விளைவுதான் இப்போது நான் சொல்லவிரும்பும் விஷயம்.

அன்பர்களே
முதலில் புரிந்து கொள்ள வேண்டியது ஓஷோ தனிமனிதர்களுக்கு எதிராக ஒருபோதும் பேசியதில்லை.

அரசியல்வாதிகள், மதவாதிகள், சாமியார்கள், பூசாரிகள் என்று ஓஷோ கண்டிக்கும்போது, தோலுரித்துக் காட்டும்போது அவர் இப்போது அந்த பொறுப்பில் உள்ளவர்களை வெறுக்கிறார், பகைவனாகக் கருதுகிறார் என்று அர்த்தமல்ல.

போப்பாண்டவரை ஓஷோ கிண்டல் செய்யும்போது கிறிஸ்துவையோ, கிருஷ்ணரையோ கிண்டல் செய்யும்போது அவர்களுக்கு அவர் எதிரானவர் என்று அர்த்தமல்ல.

குடும்பத்தையும், கல்விமுறையையும், அரசியலமைப்பையும், உறவுகளையும், சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும், ஆண்களையும், ஓஷோ கண்டிக்கும்போது, அதன் இறந்துபோன நிலையை, பழமைத்தனத்தை, உதவாத்தனத்தை எடுத்துரைக்கும்போது அவர் ஆண்களுக்கோ, குடும்பத்தில் வாழ்பவர்களுக்கோ, கணவன் மனைவியாக வாழ்பவர்களுக்கோ, சடங்கைக் கடைபிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கோ தனிப்பட்ட முறையில் பகைவனோ, விரோதியோ அல்ல. அவர்கள் மோசமானவர்கள், இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று அர்த்தமுமல்ல.

ஓஷோ கண்டிப்பது அமைப்பு இயந்திரத்தைத்தான். வீணாக போய்விட்ட, காலங்கடந்த, சிலரின் சுயநலத்துக்கு மட்டுமே இப்போது உதவி செய்யும் அமைப்புக்களைத்தான். இந்த சமூகம், அதன் நம்பிக்கைகள், கொள்கைகள், கோட்பாடுகள், மதிப்பீடுகள், தர்க்க நியாயங்கள், உறவின் அடிப்படைகள் ஆகிய எல்லாம் நம்மால் நமது நன்மைக்காக, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உதவும் பொருட்டு உருவாக்கப்பட்டவைதான். நமது நாடு, மொழி, இனம், மதம், கலாசாரம், பண்பாடு, சாதி ஆகிய அனைத்தும் தனிமனித வளர்ச்சியின் பொருட்டு ஏற்படுத்தப் பட்டவைதான்.

அப்படி இல்லாவிட்டால் அவை ஆரம்பிக்கப் பட்ட காலத்திலேயே நிராகரிக்கப் பட்டிருக்கும். ஆனால் அவை இன்று நமக்கு இறந்து போன பிணம்போல சுமையாக இருக்கின்றன. காலத்திற்கு தகுந்தாற் போல மனித வளர்ச்சிக்கு தகுந்தாற் போல உலகின் இன்றைய சூழலுக்கு ஏற்றாற் போல இவையெல்லாம் புதிதாய் உண்டாக்கப் பட வேண்டும்.

நமது தன்னுணர்வோடு நாம் வாழும் வாழ்க்கையை ஆழ்ந்துணர்ந்து நாம் புதிய மனிதனுக்குத் தகுந்த புதிய வாழ்வியலை வகுக்க வேண்டும். அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மனிதனுக்காகத் தான் நாடு, மொழி, இனம், சமூகம், மற்றும் அதன் சிந்தனைகளேயன்றி அவைகளுக்காக மனிதர்கள் மடிவது மடத்தனம்.

இதுவே ஓஷோவின் பார்வை.

ஆனால் ஒரு தனிமனிதனை எடுத்துக் கொண்டால், அவன் அவனுக்குக் கிடைத்த வாழும் வாய்ப்பை புத்திசாலித் தனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே அல்லாமல், தான் தன்வழியே பழமைச் சமூகத்திலிருந்து எவ்வளவு விலகி புது மனிதனாக வாழ முடியுமோ அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே அல்லாமல், அமைப்பை எதிர்ப்பது துன்பத்தையே கொண்டுவரும்.

மேலும் அமைப்பில் உள்ளவர்களும், அவர்களின் அறியாமையால், உண்மையை உணரும் சக்தியும், தெளிவும், பார்வையும் இல்லாமல் அமைப்பினால் உறிஞ்சப்பட்டு உழல்பவர்களேயாவர். அமைப்பை விட்டு வெளியே சிந்திக்க முடியாத நிர்ப்பந்தமும், பயமும், நெருக்கடியும் ஆன சூழலில் வாழ்பவர்களேயாவர்.

ஆகவே அவர்கள் செய்யும் செயல்களுக்கு அவர்கள் பொறுப்பாளியல்லர். சாதாரண திருடன் முதல் ஹிட்லர் வரை உருவாவதற்குக் காரணம் நமது சமூக அமைப்பு. ஆகவே ஹிட்லரை குறை கூறியோ, எந்த ஒரு தனிமனிதனை குறை கூறியோ, குற்றம் சாட்டியோ பேசுவது சரியல்ல. தனிமனிதர்களிடம் அன்பாக இருப்பதே தியானிப்பவனின் இயல்பாக இருக்க வேண்டும்.

தன்னுணர்வு பெறப்பெற அமைப்புகளை விட்டு விலகி செல்வதே சரி. அப்படி விலகி வந்த நாம் ஒரு புதிய கம்யூனை உருவாக்கி வாழ்வதே சரி.

தனிப்பட்ட யாரையும் எதற்கும் பொறுப்பாக சுட்டிக்காட்டி குற்றம்சாட்டுமளவு சுதந்திரமாகவும், தன்னுணர்வோடும், தெளிவோடும் யாரும் அமைப்பிற்குள் இல்லை.

மேலும் ஓஷோ ஓரிடத்தில் கூறும்போது, இந்த சமூகம், இந்த உலகம், இந்த அமைப்புகள், இங்கு எனக்குமுன் வாழ்ந்த ஞானிகள், கயவர்கள், இதற்குப் பின் பிறக்கப் போகும் புதிய மனிதன் ஆகிய எல்லாமே எனது பாகம்தான் அல்லது என்னைச் சேர்ந்ததுதான். ஆகவேதான் உரிமையோடு எல்லாவற்றையும் மிக மோசமாகவும் மிக உயர்வாகவும் என்னால் விமர்சிக்க முடிகிறது. நான் விலகி நின்று யாரையும், எதையும் விமர்சிப்பதில்லை. ஒருவகையில் திட்டினாலும், புகழ்ந்தாலும் அது என்னை நானே செய்து கொள்வதே. ஏனெனில் நான் எங்கிருந்தோ வானத்திலிருந்து குதித்தவனல்ல. என்கிறார்.

ஏன் நம்மையே எடுத்துக் கொண்டால் ஓஷோவிடம் வந்தபின் சமூகத்தின் பல போலித்தனங்களை நம்மால் உணர முடிந்தாலும், அதற்கு முன் நாமும் இந்த கட்டமைப்புக்கு அடிமையாகத்தானே இருந்தோம்.

எனவே நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஓஷோ அன்பர்கள் தங்கள் சக்தியை, தங்கள் புரிதலை, தங்கள் தியான அனுபவத்தை, தன்னுணர்வுச் சுவையை தங்களது வாழ்வின் உரமாக்கிக் கொள்ள வேண்டுமே ஒழிய, அவசரப் பட்டு அள்ளி வீசக் கூடாது.

மேலும் மேலும் அமைதியும், மெளனமும், அன்பும் தழைக்கும் உரமாகத்தான் உங்கள் புதிய உணர்வுகள், தியான அனுபவங்கள், அன்பின் ஆழங்கள் இருக்க வேண்டும்.

அவசரப் பட்டு வெளிக் காட்டவோ, வெளி வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவோ, அடுத்தவருக்கு, குடும்பத்தாருக்கு, மனைவி அல்லது கணவனுக்கு புரிய வைக்கவோ முயற்சிக்காதீர்கள்.

உங்கள் புரிதலில் நீங்கள் வேர்விட்டு வளருங்கள். வளர்ந்து மலருங்கள். மணம் பரப்புங்கள். அந்த மலரும், மணமும், ஒரு புதிய உலகை, புதிய சூழலை, புதிய புரிதலை, புதிய உணர்வை உங்களைச் சுற்றிலும் கொண்டுவரும். அப்போது அனைவரும் புரிந்துகொள்வார்கள்.

அதற்குமுன் அவசரப் பட்டு அமைப்பின் எதிரியாக, உறவுகளின் எதிரியாக, ஜாதி, மதம், சமூகம் ஆகியவற்றின் விரோதியாக மாறி கஷ்டத்திற்கு உள்ளாகாதீர்கள்.
நீங்கள் வளர்ந்து வலிமை பெற்றபின், மலர்ந்து மணம் பரப்பும்போது, உங்களைச் சுற்றிலும் எல்லோரையும் எல்லாவற்றையும் பாதிப்பீர்கள், மாற்றுவீர்கள். ஆனால் அது வேறு.

ஆகவே அதுவரை பொறுமையுடன் இருங்கள். மிகக் கவனமாக உங்கள் வளர்ச்சி எதனாலும் பாதிக்கப்படாதவாறு செயல்படுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

அன்பு,
சித்.


கவிதைப்பகுதி

அன்பின் அனுபவம்

என் இதயத்திற்கு இனிய நண்பா!
கோபம் என்பது என்ன?

நீ வன்முறையில் ஈடுபடுகிறாய்,
நீ யாரையாவது எதையாவது
அடிமை செய்ய முயல்கிறாய்,
நீ நெருப்பாய் எரிகிறாய்,
நீ அழிக்கிறாய்,
நீ அசிங்கமாகிறாய்,
முடிவில் நீ சோகத்தில் குற்ற உணர்வில்
சக்தியின்மையில் அமிழ்கிறாய்.

அன்பு என்பது என்ன?

நீ பகிர்ந்து கொள்கிறாய்,
நீ உன்னை, உன் உடலை ஆட்சி செய்பவனாகிறாய்,
நீ குளிர்ந்த நெருப்பாய் ஒளி விடுகிறாய்,
நீ படைப்பாளியாகிறாய்,
நீ அழகாகிறாய்,
முடிவில் நீ மகிழ்ச்சியில் பரவசத்தில்
சக்திப் பிரவாகத்தில் பொங்குகிறாய்.

எனது அன்பே!
நீ ஏன் அன்பைத் தேர்ந்தெடுக்கக் கூடாது?

உனக்கு அதன் சுவை ஏற்கனவே தெரியும்!
தாய்மையின் அரவணைப்பில், காதலின் சுகத்தில்,
நம் எல்லோருக்கும் தெரியும்!!
‘யாரோ ஒருவர் எந்த இலக்குமில்லாமல்
மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்ளும்போது’
இதுதான் அன்பின் ரகசியம்.

மழை, மலைகள், கடல், ஆகாயம், மலர்கள்,
இப்படி......... இயற்கை இயங்கும் ரகசியம் இதுதானே!!
இதுதான் ஆடம்பர வாழ்வு!
ஆர்ப்பரிக்கும் வாழ்வு!
ஆனந்த வாழ்வு!

அருமை நண்பா!
நாம் அனைவரும்.....
‘இலக்கு கொண்ட வாழ்வில்,
குறி கொண்ட மனதில்’
மாட்டித் தவிப்பவர்கள்.

இதுதான் விலங்கு,
இந்த உலகின் ஒரே விலங்கு.

நேசத்தில் கரைந்து போ,
எந்த விலங்காலும், உருகுவதை ஓடுவதை
கட்டிப் போட முடியாது.
இந்தப் பிரபஞ்ச அன்பு நம்முடையதாகட்டும்!
இந்தக் கடல் போன்ற அன்பில் ஆழம் செல்!
நீ அழிவில்லா அமைதியைக் காண்பாய்!!

இந்த அன்பையும் அமைதியையும்
அறியப் பெற்றவுடன்........
பாறைகள் உன்னுடன் அரட்டை அடிக்கும்,
மலர்கள் காதலுக்கு கொக்கி போடும்,
மரங்கள் நண்பனாய் கேலி பேசும்.

நீ காலத்தில் வெடிப்பாய்!
சக்தியில் பொங்கி வழிவாய்!
இதிலிருந்துதான் வாழ்வின் ஆரம்பமே......
இதற்கு முன்பு இல்லை.
காலத்தில் வாழ்வதென்பது.........
மரணத்திற்குக் காத்திருத்தல்தானே?

எனது சிநேகமே!
நான் உன் கண்களில் ஒரு கவிதையைப்
படிக்க வேண்டும்!
நான் உன் இதயத்தில் ஒரு நடனத்தைக்
காண வேண்டும்!
நான் உன் உயிரில் அமரத்துவ அன்பை
உணர வேண்டும்!

ஓஷோ வீடியோ

1. OSHO : On Copyright and Trademark

2. OSHO : A Buddha will be Misunderstood (1 of 2)

3. OSHO : A Buddha will be Misunderstood (2 of 2)


கேள்வி பதில் பகுதி

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள். எனவே கீழ்க்கண்ட
ஓஷோ பதில்களை அளிக்கிறோம்.

விழிப்புணர்வும் மையமும்

முதலில் விழிப்புணர்வு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அனேக விஷயங்களை அறிகிறீர்கள். – அதாவது கடைகள், உங்களை கடந்து செல்லும் மக்கள், அங்குள்ள போக்குவரத்து இப்படி எல்லாவற்றையும் உணர்கிறீர்கள். நீங்கள் அனேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணர்வதில்லை. – அதுதான், உங்களைப் பற்றி. நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது அநேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களை உணர்வதில்லை!. தன்னைப் பற்றிய இந்த விழிப்புணர்வினை ஜார்ஜ் குருட்ஜிப் தன்நினைவு (Self Remembering) என்று அழைக்கிறார். “இடைவிடாமல், நீங்கள் எங்கிருந்தாலும், உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்று குருட்ஜிப் கூறுகிறார்.

நீங்கள் என்ன செய்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் இடைவிடாமல் உங்களுக்குள் செய்து கொண்டு வாருங்கள்; நீங்கள்தான் அதைச் செய்கிறீர்கள் என்கின்ற விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் – உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் நடந்து செல்கிறீர்கள் – அப்போது உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கவனிக்கலாம். நீங்கள் பேசலாம். – எதுவாக இருந்தாலும், உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் கோபப்படும்போது நீங்கள்தான் கோபப்படுகிறீர்கள் என்று விழிப்புணர்வு கொள்ளுங்கள். இப்படி இடைவிடாமல் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது, ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியை உங்களுக்குள் உருவாக்குகிறது. நீங்கள் ஒன்று திரண்ட ஒரு உயிராக இருக்க ஆரம்பிக்கிறீர்கள்.

சாதாரணமாக, நீங்கள் ஒரு தொளதொள என்று இருக்கும் பை போல இருக்கிறீர்கள். உங்களிடம் கெட்டித் தன்மை இல்லை, உங்களிடம் மையம் இல்லை – உண்மையில் வெறுமனே ஒரு திரவத்தன்மை, எந்தவிதமான மையமும் இல்லாமல், அநேகப் தனித்தனியான பொருட்கள் இருப்பது போன்று இருக்கிறீர்கள். ஒரு கூட்டம், உங்களுக்குள் இடைவிடாமல் மாறிக்கொண்டும், இடம் பெயர்ந்துகொண்டும் உள்ளது. உங்களுக்குள் எஜமானன் என்பவர் இல்லை. விழிப்புணர்வுதான் உங்களது எஜமானன். நான் எஜமானன் என்பதை, உருவாக்குபவர் கட்டுப்படுத்துபவர் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. நான் எஜமானன் என்று கூறுவது, நீங்கள் வெறுமனே உங்களுக்குள் இருங்கள், தொடர்ந்து இடைவிடாது இருங்கள் என்கிற அர்த்தத்தில்தான். நீங்கள் எதைச் செய்தாலும் அல்லது செய்யாமல் சும்மா இருந்தாலும், உங்களது தன்னுணர்வில் நீங்கள் இருக்கிறீர்கள் என்கிற ஒரு விஷயம் மட்டும் இடைவிடாமல் இருக்கவேண்டும்.

ஒருவர் உள்ளே இருக்கிறார் என்கிற எளிய உணர்வு, ஒரு மையத்தை உருவாக்குகிறது. இது அசைவற்ற மையம், அமைதியின் மையம், அகந்தையை வென்ற மையமாக இருக்கும். அது உள்ளுக்குள் உள்ள சக்தி. நான் “உள்ளிருக்கும் சக்தி” என்று கூறும்போது, அதன் பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். அதனால்தான் புத்தர், “விழிப்புணர்வு என்னும் நெருப்பு” என்று பேசுகிறார். அது ஒரு நெருப்பு. நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்தால், நீங்கள் ஒரு புதிய சக்தியை உங்களுக்குள் உணர்வீர்கள். ஒரு புதிய நெருப்பை, ஒரு புதிய உயிரை உங்களுக்குள் உணர்வீர்கள். மேலும், இந்த புதிய உயிரினால், புதிய சக்தியினால், புதிய ஆளுமையினால், உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வந்த அநேக விஷயங்கள் வெறுமனே கரைந்து போய்விடும். நீங்கள் அவைகளோடு போராட வேண்டியதில்லை.

ஆனால் இப்போது நீங்கள் உங்களது கோபத்தோடு, உங்களது பேராசையோடு, உங்களது பாலுணர்வோடு போராட வேண்டியுள்ளது. ஏனெனில், நீங்கள் பலவீனர்களாக இருக்கிறீர்கள். எனவே, உண்மையில் கோபம், பேராசை, பாலுணர்வு இவைகள் எல்லாம் பிரச்னைகள் அல்ல; உங்களின் பலவீனம்தான் பிரச்னை. நீங்கள் உங்களுக்குள் இருப்பதை – நான் இருக்கிறேன் – என்று உணர ஆரம்பித்துவிட்டால், உங்களது சக்திகள் எல்லாம் ஒரே புள்ளியை நோக்கி ஒருமுகப்படுகின்றன, கெட்டிப்படுகின்றன. மேலும், அப்போது உங்களுக்குள் ஒரு ‘ஆன்மா’ பிறக்கிறது. இது, நான் என்னும் தன்முனைப்பு அல்ல என்றும், இது ஆன்மா என்றும் நினைவில் கொள்ளுங்கள். நான் என்னும் தன்முனைப்பு என்பது ஆன்மாவின் பொய்யான உணர்வாகும். ஆன்மாவைப் பெறாமலேயே, நீங்கள் ஆன்மாவைப் பெற்றிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் ஆணவம், நான் என்னும் தன்முனைப்பு. ஆணவம் என்பது பொய்யான ஆன்மா – நீங்கள் ஆன்மாவாக ஆகவில்லை என்றாலும்கூட நீங்கள் ஒரு ஆன்மா என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

சத்யத்தைத் தேடுபவரான மௌலிங்கப்புத்திரர் என்பவர் புத்தரிடம் வந்தார். புத்தர் அவரிடம், “நீங்கள் என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?”என்று கேட்டார்.

அதற்கு மௌலிங்கப்புத்திரர், “நான் எனது ஆன்மாவைத் தேடுகிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.

தான் சொல்வதையெல்லாம் செய்வேன் என்று ஒரு வாக்குறுதி அளிக்கும்படி மௌலிங்கபுத்திரரிடம் புத்தர் கேட்டார். அதைக் கேட்ட மௌலிங்கபுத்திரர் அழுதார். அவர் புத்தரிடம், “என்னால் எப்படி வாக்கு கொடுக்க முடியும்? நான் என்பவன் இன்னமும் இல்லையே, எப்படி என்னால் வாக்குறுதி கொடுக்கமுடியும்? நாளை நான் என்னவாக இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வாக்குறுதி அளிக்ககூடிய அந்த ஆன்மாவை நான் இன்னும் பெற்றிருக்கவில்லை. எனவே முடியாத ஒன்றை நீங்கள் என்னிடம் கேட்காதீர்கள். நான் முயற்சி செய்கிறேன். அதிகபட்சம் நான் இதைத்தான் கூறமுடியும். நீங்கள் எதைச் சொன்னாலும், அதை நான் செய்கிறேன் என்று என்னால் கூற முடியாது. ஏனெனில் அதைச் செய்வது யார்? வாக்குறுதி கொடுக்கின்றதையும், வாக்குறுதியை நிறைவேற்றுகின்றதுமாகிய அந்த ஒன்றைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் அதைப் பெறவில்லை.” என்றார்.

அதைக் கேட்ட புத்தர், “மௌலிங்கப்புத்ரா, உன்னிடம் இந்த பதிலைக் கேட்பதற்காகத்தான் நான் இந்த கேள்வியைக் கேட்டேன். நீ என்னிடம் வாக்குறுதி அளித்திருந்தால், நான் உன்னை திருப்பி அனுப்பி இருப்பேன். நீ என்னிடம், “நான், நீங்கள் கூறுவதை செய்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்” என்று கூறியிருந்தால், உணமையிலேயே நீ ஆன்மாவைத் தேடுபவன் அல்ல என்பதை நான் அறிந்திருப்பேன். ஏனெனில் சாதகன் ஒருவன், எப்போதும் தான் இன்னும் அதை அடையவில்லை என்று அறிந்திருக்கவேண்டும். இல்லையெனில் தேடுவதன் நோக்கம் என்ன? நீ ஏற்கனவே அதுவாக இருந்தால், அதற்கு அவசியமே இல்லையே! நீ அதுவாக இல்லை! மேலும் ஒருவர் இதை உணர்ந்து கொண்டால், அதன்பிறகு அவரது ஆணவம் ஆவியாகப் போய்விடும்.” என்று பதில் கூறினார்.

நான் என்னும் ஆணவமானது, அங்கே இல்லாத ஏதோ ஒன்றினைப் பற்றிய தப்பான அபிப்பிராயம். ‘ஆன்மா’ என்றால், வாக்குறுதி அளிக்க முடிந்த ஒருமையம் என்று அர்த்தம். இந்த மையமானது, நீங்கள் இடைவிடாது தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலமாகத்தான் உருவாக்கப்படுகிறது. ஏதோ ஒன்றினைச் செய்யும்போது நீங்கள் விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் உட்கார்ந்துகொண்டிருக்கலாம், இப்போது தூங்கப் போகலாம், அப்போது உங்களுக்கு தூக்கம் வரும். நீங்கள் தூக்கத்தில் விழலாம். இப்படி ஒவ்வொரு நொடிப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருங்கள். அதன்பிறகு, உங்களுக்குள் ஒருமையம் பிறந்துவிட்டதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்; அப்போது விஷயங்கள் கெட்டியாக ஆகிவிடும். அங்கே ஒரு மையத்திலிருத்தல் ஏற்பட்டுவிடும். இப்போது, எல்லாமே அந்த மையத்தோடு தொடர்புடையதாக இருக்கும்.

ஆனால் இப்போதோ, நாம் மையங்கள் இல்லாமல் இருக்கிறோம். சில நேரங்களில் நாம் மையத்தில் இருப்பது போன்று உணர்கிறோம். ஆனால், அந்தத் தருணங்கள், ஏதாவது ஒரு சூழ்நிலை உங்களை விழிப்புணர்வு அடையச் செய்வதனால் உருவானதாக இருக்கும். திடீரென்று ஏதாவது சூழ்நிலை, ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் உங்களுக்குள் ஒரு மையத்தை உணர்வீர்கள். ஏனெனில், ஆபத்தில் நீங்கள் விழிப்புணர்வு பெறுவீர்கள். யாராவது ஒருவர் உங்களைக் கொலை செய்ய வரும்போது, உங்களால் அந்த நொடிப்பொழுதில் எதையும் சிந்திக்கமுடியாது, உங்களால் சுயநினைவு இல்லாமல் அந்த தருணத்தில் இருக்கமுடியாது. உங்களது சக்தி முழுவதும் மையம் கொண்டுவிடும். மேலும் அந்தத் தருணம் திடமானதாக ஆகிவிடும். உங்களால் கடந்த காலத்திற்கும் நகர முடியாது, எதிர்காலத்திற்கும் செல்லமுடியாது. அந்த நொடிப்பொழுதுதான் எல்லாமுமாக ஆகிவிடும். அதன்பிறகு, நீங்கள் உங்களை கொலை செய்ய வருபவனைப் பற்றி மட்டுமல்ல, உங்களைப் பற்றியும், அதாவது, கொலை செய்யப்படப் போகின்ற உங்களைப் பற்றியும் விழிப்புணர்வு கொள்வீர்கள்.

அதனால்தான், ஆபத்தான விளையாட்டுக்களுக்கு மக்களிடம் அதிக ஆதரவு இருக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள கௌரிசங்கரின் உச்சிக்குச் சென்றுவந்த யாரையாவது கேட்டுப் பாருங்கள். முதல்முறையாக ஹிலாரி அதை அடைந்தபோது, அவர் திடீரென்று அந்த மையத்தை உணர்ந்திருக்க வேண்டும். மேலும் முதன்முதலாக யாராவது நிலவில் காலடி எடுத்து வைத்தவுடன், திடீரென்று அந்த மையத்தைப் பற்றிய உணர்வு வந்திருக்க வேண்டும். அதனால்தான் ஆபத்தானவைகளுக்கு கவர்ச்சி உள்ளது. நீங்கள் காரை ஓட்டிக் கொண்டு போகிறீர்கள். அப்போது நீங்கள் வேகத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டு போகும்போது, அந்த வேகம் ஆபத்தானதாகிறது. அப்போது உங்களால் சிந்திக்க முடியாது. எண்ணங்கள் மறைந்து போகும். அப்போது நீங்கள் கனவு காண முடியாது. அப்போது நீங்கள் கற்பனையில் மிதக்க முடியாது. அப்போது நிகழ்காலம் என்பது திடமானதாக ஆகிவிடும். எந்த நேரத்திலும் மரணம் என்பது சாத்தியம் என்கிற அந்த ஆபத்தான நேரத்தில், திடீரென நீங்கள் உஙகளுக்குள் உள்ள அந்த மையத்தை உணர்வீர்கள். இப்படி ஆபத்தான சில வேளைகளில், நீங்கள் உங்களது மையத்தை உணர்வதால்தான், ஆபத்தானவை உங்களுக்கு கவர்ச்சியானதாகத் தெரிகிறது.

போர்கள் தொடர வேண்டும் என்று நீட்சே எங்கோ கூறியுள்ளார். ஏனெனில், போர்களால் மட்டுமே சில சமயம் உங்களது ஆன்மா உணரப் படுகிறது – ஒரு மையம் உணரப்படுகிறது – ஏனெனில் போர் என்பது ஆபத்தானது. மேலும் மரணம் என்பது உண்மை என்றாகிவிட்டால், வாழ்க்கை தீவிரமானதாக ஆகிவிடுகிறது. மரணம் மிகவும் நெருங்கி வரும்போது, வாழ்க்கை தீவிரமாக ஆகிவிடுவதால், நீங்கள் மையத்தில் இருப்பீர்கள். நீங்கள் உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கின்ற எந்தத் தருணமும், அங்கே மையத்திலிருத்தல் ஏற்படுகிறது. ஆனால், அது ஏதாவது ஒரு சூழ்நிலையால் உருவானதாக இருக்குமென்றால், அதன்பின்னர் அந்தச் சூழ்நிலை முடிந்தவுடன் அது மறைந்து போய்விடும்.

அது, வெறுமனே ஏதோ ஒரு சூழ்நிலையால் உருவானதாக மட்டுமே இருக்கக் கூடாது. அது உங்களுக்குள் உள்ளதாக இருக்க வேண்டும். ஆகவே, ஒவ்வொரு சாதாரண காரியத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போதுகூட இதை முயற்சி செய்து பாருங்கள் – அப்போது அந்த உட்கார்ந்திருப்பவரைப் பற்றி விழிப்புடன் இருங்கள். நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியைப்பற்றி மட்டுமல்ல, உட்கார்ந்திருக்கும் அறையைப் பற்றி மட்டுமல்ல, சுற்றிலும் உள்ள வெளியைப் பற்றி மட்டுமல்ல, உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களைப் பற்றியும் விழிப்புணர்வுடன் இருங்கள். உங்களது கண்களை மூடிக் கொண்டு உங்களை உணருங்கள்; உங்களுக்குள் ஆழமாகத் தோண்டி உங்களை உணர்ந்து பாருங்கள்.

ஈகன் ஹெரிக்கல் என்பவர், ஒரு ஜென்குருவிடம் கற்று வந்தார். மூன்று வருடங்களாக அவர் வில்வித்தை கற்று வந்தார். ஆனால், அந்த குருவோ எப்போது பார்த்தாலும், “நீ செய்வது நன்றாகத் தான் உள்ளது. ஆனால் இது போதாது.” என்பார். ஹெரிக்கல் இப்போது ஒரு வில் வித்தைக்காரராக ஆகி விட்டார். அவரது குறி, நூறு சதவீதம் சரியாக இருந்தது. என்றாலும்கூட, அந்த குரு, “நீ நன்றாகத் தான் செய்கிறாய். ஆனால் இது போதாது.” என்று கூறுவார்.

அதைக் கேட்ட ஹெரிக்கல், “இப்படி நூறு சதவீதம் தவறாமல் அம்பு எய்தாலும் போதாதா? அப்படியானால், உங்களது எதிர்பார்ப்புதான் என்ன? நான் எப்படி இன்னும் முன்னேற முடியும்? நூறு சதவீத துல்லியத்தைவிடவும் நீங்கள் இதற்குமேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த ஜென்குரு, “எனக்கு உனது வில் வித்தையைப் பற்றியும், உனது குறி பார்க்கும் திறனைப் பற்றியும் கவலை இல்லை. எனது கவலை, உன்னைப் பற்றிதான். நீ முழு தொழில்நுட்ப கலைஞர் ஆகிவிட்டாய். ஆனால் உனது வில்லை விட்டு உனது அம்பு வெளியே செல்லும்போது, நீ உன்னைப் பற்றிய விழிப்புணர்வுடன் இல்லை. இது உபயோகமற்றது! அம்பானது குறியைச் சென்றடைவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு உன் மீதுதான் அக்கறை! உனது வில்லில் இருந்து அம்பு புறப்படும்போது, உனக்குள்ளும் உனது தன்னுணர்வானது அம்பாக வேண்டும். வெளியில் நீ உனது குறியை தவறவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் நீ உனக்குள் உள்ள அந்த இலக்கினை தவறவிடக் கூடாது. ஆனால், இப்போது நீ அதை தவறவிட்டு விடுகிறாய். நீ ஒரு தேர்ச்சி பெற்ற தொழில்நுட்ப கலைஞன் ஆகிவிட்டாய். ஆனால் நீ செய்வதெல்லாம் மற்றவர்களைப் பார்த்து, அதைப் போல செய்வதாகும்.” என்று கூறினார். ஆனால் மேலை நாட்டு மனதை அல்லது நவீனகால மனதை உடையவருக்கு இதைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. இது முட்டாள்தனம் போலத் தெரிந்தது. குறி பார்த்து அம்பு விடுவதுதான் வில் வித்தையின் திறமையாகும்.

கொஞ்சம் கொஞ்சமாக ஹெரிக்கல் ஏமாற்றம் அடைந்தார். எனவே ஒருநாள் அவர் வந்து, “நான் சென்று வருகிறேன். இது என்னால் முடியாது! இது சாத்தியப் படாது! நீங்கள் ஏதாவது ஒன்றை குறி பார்க்கும்போது, உங்களது விழிப்புணர்வு உங்களது குறியை நோக்கித் தான் செல்லும். அந்தப் பொருளை நோக்கித் தான் செல்லும். மேலும், நீங்கள் வெற்றிகரமான ஒரு வில் வித்தைக் காரராக இருந்தால், நீங்கள் உங்களை மறந்து விட வேண்டும். நீங்கள் இலக்கை மட்டுமே நினைக்க வேண்டும். மற்றவற்றை மறந்துவிட வேண்டும். இலக்கு மட்டுமே அங்கு இருக்க வேண்டும்.” என்றார். ஆனால் அந்த ஜென்குருவோ, ஹெரிக்கலிடம் மீண்டும் அவர் தனக்குள் மற்றொரு இலக்கினை உருவாக்கும்படி தொடர்ந்து நிர்பந்தித்தார். அந்த அம்பானது இருமுனை கொண்டதாக இருக்க வேண்டும். ஒருமுனை வெளியில் உள்ள இலக்கினை குறி பார்த்துக் கொண்டும், மறுமுனை இடைவிடாமல் உங்களுக்கு உள்ளே உள்ள இலக்கினை அதாவது, ஆன்மாவை குறி பார்த்தும் இருக்கவேண்டும், என்றார்.

“அப்படியானால் நான் போகிறேன். எனக்கு இது சாத்தியப்படாது போல் தெரிகிறது. உங்களது நிபந்தனைகளை என்னால் நிறைவேற்ற முடியாது”. என்று கூறினார். எனவே புறப்படுகின்ற அந்த நாளில், அவர் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் குருநாதரிடம் விடைபெற்று செல்ல வந்திருந்தார். அப்போது அந்த குரு வேறு யாரோ ஒருவருக்கு இலக்கினை குறி பார்க்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். முதல்முறையாக ஹெரிக்கல் அதில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார். அவர் விடைபெறுவதற்காகவே வந்திருந்தார். அவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். குரு, தான் கற்றுக் கொடுப்பதை நிறுத்தியவுடன் ஹெரிக்கல் அவரிடம் கூறிவிட்டு விடை பெறலாம் என்று இருந்தார்.

ஆனால் அப்போது திடீரென அவர் அந்த குருவையும், அவரது இருமுனை கொண்ட தன்னுணர்வையும் கண்டு கொண்டார். அப்போது குரு குறிபார்த்துக் கொண்டிருந்தார். மூன்று ஆண்டுகளாக ஹெரிக்கல் இதே குருவுடன் கூட இருந்தார். ஆனால் அப்போதெல்லாம் அவர் தனது சொந்த முயற்சி பற்றிதான் அக்கறை கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் இந்த குருவைப் பார்த்தது இல்லை; இந்த குரு என்ன செய்கிறார் என்று பார்த்தது இல்லை. முதன்முறையாக அவர் அப்போது குருவை பார்த்து அதை உணர்ந்தார். அப்போது தானாகவே, திடீரென்று அவரிடமிருந்து வில்லை வாங்கினார். இலக்கினை குறி பார்த்தார். அதன்பின்னர் அம்பை விட்டார். அப்போது அந்த குரு, “சரி, முதல்முறையாக நீ அதைச் செய்துவிட்டாய், நான் மிகவும் சந்தோஷமடைகிறேன்.” என்றார்.

ஹெரிக்கல் செய்தது என்ன? முதல்முறையாக, அவர் தனக்குள் மையம் கொண்டிருந்தார். அவரது இலக்கும் இருந்தது, ஆனால் கூடவே அவரும் இருந்தார் – அவரும் ஆஜராகி இருந்தார்.

எனவே, நீங்கள் எதைச் செய்தாலும் – என்னவாக இருந்தாலும், அது வில்வித்தையாகத் தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை – நீங்கள் எதைச் செய்தாலும், வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தாலும்கூட, அப்போது இருமுனை அம்பாக இருங்கள். வெளியில் என்ன நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் அதோடுகூட, உங்களுக்குள் இருப்பவர் யார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

லின்-சீ, ஒருநாள் காலையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று யாரோ ஒருவர், “எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள்: நான் யார்?” என்று கேட்டார். லின்-சீ கீழே இறங்கி வந்து அந்த மனிதரை நோக்கி சென்றார். அந்த முழு அறையும் மிகவும் அமைதியானது. அவர் என்ன செய்யப் போகிறாரோ? இது ஒரு எளிய கேள்விதான். இதற்கு அவர் தனது இருக்கையில் இருந்தே பதில் அளித்திருக்கலாம். அவர் அந்த ஆளிடம் வந்தார். அந்த அறையே அமைதியாக இருந்தது. லின்-சீ கேள்வி கேட்டவரின் முன்பு, அவரின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றார். அது ஒரு ஊடுருவிச் செல்கிற தருணமாக இருந்தது. எல்லாமே நின்று விட்டது. கேள்வி கேட்டவருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. லின்-சீ அவரது கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது லின்-சீ அவரிடம், “என்னிடம் கேட்காதே. உனக்குள் சென்று இந்தக் கேள்வியைக் கேட்பவன் யார் என்று கண்டுபிடி. உனது கண்களை மூடிக் கொள். ‘நான் யார்’ என்று கேட்காதே. உனக்குள் சென்று, இந்தக் கேள்வியைக் கேட்பது யார் என்று கணடுபிடி. உள்ளே உள்ள கேள்வி கேட்பவர் யார்? என்னை மறந்துவிடு. கேள்வியின் மூலத்தைக் கண்டுபிடி. உனக்குள் ஆழ்ந்து செல்!” என்றார்.

அப்போது அந்த மனிதன் கண்களை மூடிக் கொண்டு, அமைதியாகி விட்டதாகவும், மேலும் திடீரென்று அவன் மெய்ஞானம் பெற்றவன் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவன் கண்களைத் திறந்தான், சிரித்தான், லின்-சீயின் காலைத் தொட்டு வணங்கினான். மேலும் அவரிடம், “நீங்கள் எனக்கு பதிலளித்துவிட்டீர்கள். நான் ஒவ்வொருவரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டு வந்தேன். அப்போது எனக்கு அநேக பதில்கள் கொடுக்கப் பட்டன. ஆனால் எதுவும் அதற்கான பதிலாக நிரூபணம் ஆகவில்லை. ஆனால் இப்போது நீங்கள் எனக்கு பதிலளித்துவிட்டீர்கள்.” என்றான்.

“நான் யார்?” இதற்கு, யாரால் பதில் அளிக்க முடியும்? ஆனால், அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் – கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அமைதியாக இருக்கும்போது, குண்டூசி விழும் சப்தம்கூட கேட்கும். அந்த அமைதியில் – லின்-சீ கீழே இறங்கி வந்து, தனது ஊடுருவும் கண்களால் அவனைப்பார்த்து, அதன்பிறகு அவனிடம், “உனது கண்களை மூடிக்கொள். உனக்குள் போ. போய், கேள்வி கேட்கும் அந்த நபர் யார் என்று கண்டுபிடி. நான் பதில் சொல்ல வேண்டும் என்று காத்திருக்காதே. கேள்வி கேட்டவர் யார் என்று கண்டுபிடி.” என்றார். அப்போது, அந்த மனிதனும் கண்களை மூடிக் கொண்டான். அந்தச் சூழ்நிலையில் நடந்தது என்ன? திடீரென்று அவன், அவனது மையத்திற்குச் சென்றுவிட்டான். திடீரென்று அவன் தனக்குள் உள்ள அந்த நடுப்பகுதி குறித்து விழிப்புணர்வு பெற்று விட்டான்.

இது, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது. மேலும், விழிப்புணர்வு என்பதற்கு இப்படி உங்களுக்குள் உள்ள அந்த நடுப்பகுதியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறை என்று அர்த்தம். நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வு இல்லாமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களிடமிருந்து மிகவும் அதிக தூரம் விலகி இருக்கிறீர்கள். அதே போன்று, நீங்கள் எந்த அளவுக்கு அதிக தன்னுணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக வருவீர்கள். உங்களது தன்னுணர்வு முழுமையாக ஆகிவிடும்போது, நீங்கள் உங்களது மையத்தில் இருப்பீர்கள். உங்களது தன்னுணர்வு குறைவாக இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பீர்கள். நீங்கள் தன்னுணர்வு இல்லாமல் இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பதால், அங்கே உங்களது மையம் முற்றிலுமாக மறக்கப் பட்டு விடுகிறது. எனவே இந்த இரண்டு வழிகளில் தான் நீங்கள் நகர்ந்து செல்வது சாத்தியமாகும்.

நீங்கள் வட்டத்துக்குள் வெளிப்பரப்பிற்கு நகர்ந்து செல்லலாம். – அதன்பிறகு, நீங்கள் தன்னுணர்வற்ற நிலைக்கு நகர்ந்து செல்வதாகிவிடும். உட்கார்ந்துகொண்டு ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதும், எங்கோ உட்கார்ந்துகொண்டு இசையை கேட்டுக் கொண்டிருக்கும்போதும், நீங்கள் உங்களை மறந்து போக முடியும், - அப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள். அதே போன்று, பகவத்கீதையை படிக்கும்போதும் அல்லது பைபிள் அல்லது குரானை படிக்கும்போதும் நீங்கள் உங்களை மறந்து போக முடியும் – இப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள்.

நீங்கள் என்ன செய்தாலும், உங்களால் உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியுமெனில், அதன்பிறகு நீங்கள் மையத்தை நெருங்கி வருவீர்கள். அதன்பின்னர், ஒருநாள் திடீரென்று நீங்கள் அந்த மையத்தில் இருப்பீர்கள். அதன்பிறகு உங்களுக்கு சக்தி வந்துவிடும். அந்த சக்திதான் நெருப்பு. இந்த பிரபஞ்சம் முழுவதும், இந்த உயிர்கள் அனைத்தும் அந்த சக்தியுடன்தான், அந்த நெருப்புடன்தான் உள்ளது. நெருப்பு என்பது பழைய பெயர். இப்போது அவர்கள் அதை மின்சாரம் என்று அழைக்கின்றனர். மனிதன் அதை அநேக அநேக பெயர்களால் அடையாளமிட்டு வந்திருக்கிறான். ஆனால் நெருப்பு என்பது சிறந்தது. மின்சாரம் என்றால் கொஞ்சம் உயிரற்றது போலத் தெரிகிறது. ஆனால் நெருப்பு என்னும்போது, அது உயிர்த்துடிப்புள்ளதாகத் தெரிகிறது.

எனவே நிறைமனதுடன் செயலாற்றுங்கள். இது ஒரு நீண்ட கடினமான பயணம். மேலும், ஒரு சிறு நொடிப் பொழுதுகூட விழிப்புணர்வுடன் இருப்பது கடினம். இந்த மனம் இடைவிடாது கண் சிமிட்டிக் கொண்டே இருக்கும். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று அல்ல. இது கடினமானது, இது சிரமமானது. ஆனால் இது சாத்தியமில்லாதது அல்ல. இது சாத்தியமானது. நம் ஒவ்வொருவருக்கும் இது சாத்தியப்படும். முயற்சி மட்டுமே தேவை; உள்ளம் நிறைந்த முயற்சி மட்டுமே தேவை. எதையும் விட்டு வைக்கக் கூடாது; உங்களுக்குள் எதுவும் தொடப்படாமல் விட்டு வைக்கப்படக் கூடாது. விழிப்புணர்வுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். அதன்பிறகு மட்டுமே, அந்த உள் ஒளிச் சுடர் கண்டுபிடிக்கப் படும். அது அங்கேதான் உள்ளது.

இப்போது இருக்கின்ற மதங்களிலோ அல்லது இனிமேல் இருக்கப் போகின்ற மதங்களிலோ உள்ள முக்கியமான ஒற்றுமையை ஒருவன் தேடிச் சென்றால், அங்கே இந்த விழிப்புணர்வு என்கிற ஒரு சிறு வார்த்தைதான் கண்டு கொள்ளப் படும்.

இயேசு ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரிய வீட்டின் எஜமான் வெளியில் சென்றார். அப்போது அவர் தனது வேலைக்காரர்களிடம், தான் எந்த நேரத்திலும் திரும்பி வந்துவிடுவதாகவும், அவர்கள் இடைவிடாது எப்போதும் உஷாராக விழித்திருக்கும்படியும் கூறி விட்டுச் சென்றார். ஆகவே, ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரமும் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதாயிற்று. எஜமான் எந்த வேளையிலும் வரலாம்! ஒரு குறிப்பிட்ட நேரமோ, குறிப்பிட்ட தேதியோ, குறிப்பிட்ட வேளையோ கிடையாது. ஒரு குறிப்பிட்ட தேதி இருந்தால் அப்போது நீங்கள் அதுவரை தூங்கலாம். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் செய்துவிட்டு, எஜமான் வருகின்ற அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் உஷாராக இருந்தால் போதும். ஆனால் எஜமானனோ, “நான் எந்த நேரத்திலும் வருவேன். இரவும் பகலும் என்னை வரவேற்பதற்கு நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்”. என்று கூறிவிட்டு போய் விட்டார்.

வாழ்க்கையின் கதையும் இதுதான். நீங்கள் எதையும் ஒத்திப் போட முடியாது, எந்த நேரத்திலும் எஜமான் வரலாம். ஒருவர், இடைவிடாது விழிப்புடன் இருக்கவேண்டும். எந்த குறிப்பிட்ட தேதியும் இல்லை. அந்த திடீர் நிகழ்வு எப்போது நடக்கும் என்றும் ஒன்றுமே தெரியாது. எனவே, ஒருவர் ஒரே ஒரு காரியம் மட்டுமே செய்ய முடியும். அதுதான் விழித்துக் கொண்டு காத்திருப்பது.

விழிப்புணர்வுதான், ஒருவர் தனக்குள் மையத்தில் இருப்பதற்கான செயல்நுணுக்கம்; உள் நெருப்பை அடைவதற்கான செயல் நுணுக்கம். அது, உள்ளேதான் மறைந்து உள்ளது.. அதை கண்டுகொள்ள முடியும். மேலும், அந்த மையத்தை, அந்த நெருப்பை நாம் கண்டு கொண்டால் மட்டுமே, நாம் கோவிலுக்குள் நுழைகின்ற தகுதி பெற்றவராக ஆவோம். – அதற்கு முன்பு அது ஒருபோதும் கிடையாது.

ஆனால், நாம் அடையாளக் குறியீடுகளின் மூலம் நம்மை ஏமாற்றிக் கொள்ள முடியும். அடையாளக் குறியீடுகள் நமக்கு ஆழ்ந்த உண்மைகளை காட்டுவதற்காக உள்ளன. ஆனால் நாம் அதை ஏமாற்று வித்தைகளாகப் பயன்படுத்த முடியும். நாம் ஊதுபத்தி கொளுத்தி வைக்கலாம். நாம் வெளியில் உள்ள பொருட்களை வணங்கலாம். அதன்பிறகு, நாம் ஏதோ செய்துவிட்டோம் என்று நீங்கள் உங்களை சமாதானம் செய்து கொள்ளலாம். நாம் சமயநெறி இல்லாதவர்களாக இருந்து கொண்டே, சமயநெறி உள்ளவர்களாக உணர்ந்து கொண்டு போகலாம். இதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூமி இப்படித்தான் ஆகிவிட்டது. தங்களுக்குள் உள்ள அந்த அக நெருப்பை கண்டு கொள்ளாமலேயே, மக்கள் தாங்கள் வெறுமனே வெளி அடையாள குறியீடுகளை பின்பற்றுவதன் மூலம், தாங்கள் மிகவும் சமயநெறி மிக்கவர்களாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் தோல்வி அடைந்தாலும்கூட, முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருக்கையில், நீங்கள் மீண்டும் மீண்டும் தோல்வி அடைவீர்கள்; ஆனால் உங்களது தோல்வியும்கூட உங்களுக்கு உதவ முடியும். உங்களால் ஒரு சிறு நொடிகூட விழிப்புணர்வோடு இருக்க முடியாமல் தோற்றுப் போவதுகூட நீங்கள் எந்த அளவிற்குத் தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்த முடியும்.

நீங்கள் தெருவில் நடந்து செல்லுங்கள். அப்போது, தன்னுணர்வோடு உங்களால் ஒருசில அடிகள் கூட நடந்து செல்ல முடியாது. மீண்டும் மீண்டும் நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள். ஒரு விளம்பரப் பலகையை படிக்கும்போது, நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள். யாராவது ஒருவர் உங்களைக் கடந்து செல்வார்., நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள். அதன்பிறகு நீங்கள் உங்களை மறந்து விடுவீர்கள்.

உங்களது தோல்விகள், உங்களுக்கு உதவுபவை. நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு அவைகள் காட்ட முடியும். மேலும், நீங்கள் தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்கின்ற அந்த ஒரு சிறு விழிப்புணர்வு பெற்றாலே போதும். அப்போது நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வை சம்பாதித்ததாகிவிடும். ஒரு பைத்தியக்காரன், தான் ஒரு பைத்தியம் என்கிற விழிப்புணர்விற்கு வந்துவிட்டால், அவன் புத்தி சுவாதீனத்தின் பாதையில் செல்வதாகிவிடும்.

மூலம். விழிப்புணர்வு(தமிழ்) #1 - 4

திறன் பிறந்தது – ஓஷோவின் கதை - 11

ஒரு குரு வேலை செய்யும் விதம் திருடன் வேலை செய்யும் விதத்தைப் போன்றது.

ஒரு ஜென் கதை. ஜென்குருக்கள் இதை மிகவும் விரும்புவர். நீ இந்த கதையை முதன்முறையாக கேட்கும்போது மிகவும் ஆச்சரியப் படுவாய். – இது ஒரு திருடன் குருவான கதை.

ஜப்பானில் ஒரு திருடன் மிகச் சிறந்த திருடனாக இருந்தான். அவன் நாடு முழுவதும் பிரபலமானவனாக, எல்லோருக்கும் தெரிந்தவனாக இருந்தான். அவன் திருட்டில் கை தேர்ந்தவனாக இருந்ததால் யாராலும் அவனை பிடிக்க முடியவில்லை. அவன் கையும்களவுமாக பிடிபட்டதேயில்லை. – அவன்தான் திருடியவன் என எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும்கூட – அரசரின் கஜானாவிலிருந்து கூட அவன் திருடியிருக்கிறான். அவன் தனது முத்திரையை பதித்துவிட்டு போவதால் அவன்தான் வந்து போயிருக்கிறான் என எல்லோரும் அறிவர்.

அதன்மூலம் அது ஒரு கௌரவமான விஷயமாக மாறிவிட்டது. அந்த கை தேர்ந்த கள்வன் உன்னிடம் வந்து திருட உன்னிடம் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது என்பதே ஒரு மரியாதையாக மாறிவிட்டது. அதனால் அது ஒரு கௌரவம். மக்கள், “நேற்று இரவு அந்தக் கள்வன் என் வீட்டிற்க்கு வந்திருந்தான். என பெருமையாக சொல்லிக் கொண்டனர்.

ஆனால் அவனுக்கு வயதாகி விட்டது. அவனது மகன் இளைஞன். அவன் தனது தந்தையிடம், உங்களுக்கு வயதாகி விட்டது. அந்தக் கலையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். எனக் கேட்டான்.
அந்த தந்தை, சரி இன்று இரவு என்னுடன் வா – ஏனெனில் அது சொல்லித் தரக் கூடிய விஷயமல்ல. என்னுடைய ஆற்றலை கண்டுக் கொள்ளத் தான் வேண்டும். உனக்கு புத்திசாலித் தனமிருந்தால் அதை நீ கணடு கொள்வாய். அதை உனக்கு கற்றுத் தர முடியாது, ஆனால் உன்னால் அதை பிடித்துக் கொள்ள முடியும். நான் உனக்கு தர முடியாது, ஆனால் உன்னால் தெரிந்து கொள்ள முடியும். என்னுடன் இன்றிரவு வா. பார்க்கலாம். என்றான்.

முதல்தடவை என்பதால் மகன் மிகவும் பயந்தான். இயல்புதானே!
சுவற்றை உடைத்து மாளிகைக்குள் சென்றனர். அந்த வயதான காலத்தில்கூட தந்தையின் கரங்கள் நடுங்கவில்லை, ஆடவில்லை, ஒரு டாக்டரின் கரங்கள் போல ஆடாமல் அசையாமல் உறுதியாக நின்றது. அவன் தனது சொந்த வீட்டில் வேலை செய்வதுபோல பயமின்றி சுவற்றில் ஓட்டை போட்டான். சத்தம் கேட்டுவிடுமோ என சந்தேகமே படாமல் தனது வேலையின் திறமை மீது நம்பிக்கை கொண்டு அங்கே, இங்கே யாராவது வருகிறார்களா என திரும்பியே பார்க்கவில்லை. ஆனால் அது குளிர்கால இரவாக இருந்தபோதிலும் இளைஞனுக்கு வேர்த்து கொட்டியது. அவன் பயத்தில் நடுங்கினான். ஆனால் தந்தை தனது வேலையை சப்தமின்றி செய்தான்.

கள்வன் வீட்டினுள் நுழைந்தான். மகன் தொடர்ந்து நுழைந்தான். அவனது கால்கள் நடுங்கியது. அவன் எந்த விநாடியும் விழுந்துவிடுவோம் என நினைத்தான். அவனுக்கு சுயஉணர்வே இல்லை. ஏனெனில் பயம்......... பிடிபட்டுவிட்டால் பின் என்ன செய்வது.

தந்தை அந்த வீட்டினுள் ஏதோ அது அவனது சொந்த வீடு போல நுழைந்தான். அவனுக்கு அந்த வீட்டைப்பற்றி, வீட்டினுள் உள்ள பொருட்கள் இருக்கும் இடம் எல்லாமே தெரிந்திருந்தது. அந்த இருட்டில் கூட எந்த சாமான்கள் மீதும் மோதிக்கொள்ளாமல், கதவில் முட்டிக்கொள்ளாமல் சென்றான். சப்தமேயில்லாமல், எந்த சப்தமும் செய்யாமல் அவன் அந்த மாளிகையின் உள்ளறையை சென்றடைந்தான். அவன் ஒரு அலமாரியை திறந்து மகனிடம் உள்ளே போய் ஏதாவது விலைமதிப்பான பொருட்கள் இருக்கிறதா என பார்க்கச் சொன்னான். மகன் உள்ளே போனான்.

தந்தை கதவை மூடி வெளியே தாழிட்டுவிட்டு, திருடன், திருடன் ஓடிவாங்க என கத்தியபடி சுவற்றில் அவர்கள் உருவாக்கியிருந்த ஓட்டை வழியாக தப்பிப் போய்விட்டான்.
இப்போது இது மிகவும் அதிகம். மகனால் என்ன இது என புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது அவன் அந்த அலமாரிக்குள் நடுங்கி வேர்த்துக் கொட்டியபடி இருந்தான். வீடு முழுவதும் விழித்துக் கொண்டு விட்டது. திருடன் எங்கே என தேடியது. அப்பாவா இது, என்னை கொன்றே விட்டார், என நினைத்தான். என்ன வகையான பாடம் இது அவன் இதுபோன்ற ஒரு விஷயத்தை கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. தந்தை பயங்கரமான கனவை மகனுக்கு தந்து விட்டார். இவன் பிடிபடுவது உறுதியாகி விட்டது. தந்தை வெளியேயிருந்து கதவை தாழிட்டுவிட்டார். மகன் கதவை திறந்து தப்பித்து போகமுடியாது.

ஒரு மணிநேரத்திற்கு பின் மகன் வீட்டை அடைந்தபோது தந்தை குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். மகன் அவன் போர்வையை விலக்கி, என்ன மடத்தனம் இது, எனக் கேட்டான்.
தந்தை, நீ திரும்பி வந்து விட்டாய். என்ன நடந்தது என சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – நீயும் போய் தூங்கு. இப்போது உனக்கும் இந்தக் கலை தெரிந்துவிட்டது. நாம் இதை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் மகன், என்ன நடந்ததென்று நான் உங்களிடம் சொல்லியே தீர வேண்டும். என்றான்.
தந்தை, நீ சொல்ல விரும்பினால் சொல், மற்றபடி அது எனக்கு அவசியமில்லை. நீ திரும்பி வந்ததே போதுமான அத்தாட்சி. நாளை இரவிலிருந்து நீயே சொந்தமாக போய் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு திருடனுக்கு தேவையான புத்திசாலித்தனமும் சுதாரிப்பும் கவனமும் உன்னிடம் உள்ளது. எனக்கு உன்னைப் பற்றி மிகவும் சந்தோஷமாக உள்ளது, என்றான்.

ஆனால் மகன் மிகவும் ஆர்வமாக இருந்தான். அவன் முழு விஷயத்தையும் விவரித்து சொல்ல விரும்பினான். அவன் அத்தகைய மிகப் பெரிய வேலை செய்திருந்தான். அவன், கேளுங்களேன். இல்லாவிடில் என்னால் தூங்கவே முடியாது. நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் கிட்டத்தட்ட என்னை கொன்றே விட்டீர்கள். என்றான்.

தந்தை, அது அப்படிப்பட்ட கடினமான காரியம்தான். ஆனால் ஒரு குருவானவர் இப்படிதான் வேலை செய்தாக வேண்டும். என்ன நடந்தது முழு கதையையும் சொல் என்றார்.
மகன், எங்கிருந்தோ – உறுதியாக அது என்னுடைய மனதிலிருந்தோ, என்னுடைய அறிவிலிருந்தோ அல்ல – அது உதித்தது. என்றான்.

தந்தை, நீ ஒரு திருடனோ, தியானம் செய்பவனோ, காதலனோ, விஞ்ஞானியோ, கவிஞனோ, ஓவியனோ அது முக்கியம் அல்ல. வாழ்வு என்னவாக இருந்தாலும் இதுதான் திறவுகோல். வாழ்வின் தளம் எதுவாக இருப்பினும் நிகழ்வது ஒன்றே – எதுவும் தலையிலிருந்து நிகழ்வது அல்ல. எல்லாமும் நாபியிலிருந்து நிகழ்வதுதான். அதை உள்ளுணர்வு என்றோ, மனமற்ற நிலை என்றோ, தியானம் என்றோ கூறிக்கொள்ளலாம். இவை யாவும் ஒரே விஷயத்தின் வேறுவேறு பெயர்கள். அவ்வளவுதான். அது உன்னுள் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அதை நான் உன்னுடைய முகத்தில் பார்க்கிறேன். உன்னைச் சுற்றி சக்தி இயக்கத்தை பார்க்கிறேன். நீ ஒரு கை தேர்ந்த கள்வனாக போகிறாய். கை தேர்ந்த கள்வனாக இருப்பதன் மூலமாக நான் தியானநிலையை அடைய முடிந்தது. அதனால் நினைவில் கொள். இதுதான் உனக்கும் தியானத்தை அடைவதற்கான வழி. என்றார்.

மகன், நான் அந்த அலமாரிக்குள் நின்று கொண்டிருந்தேன். மக்கள் எழுந்து திருடனை தேடிக் கொண்டிருந்தனர். ஒரு வேலைக்காரி கையில் விளக்குடன் வந்ததை சாவித் துவாரத்தின் வழியாக பார்த்தேன். எங்கிருந்தோ உதித்த யோசனையின் பேரில் பூனையை போல சத்தம் கொடுத்தேன் நான். இதற்குமுன் நான் அப்படி செய்ததேயில்லை. – வேலைக்காரி பூனை அலமாரிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது என நினைத்து அலமாரி கதவை திறந்தாள். அவள் கதவை திறந்தவுடன் நான் என்ன செய்தேன் எப்படி செய்தேன் என எனக்குத் தெரியாது. ஆனால் அது நிகழ்ந்தது – நான் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, அந்த பெண்ணை தள்ளிவிட்டு ஓடினேன். மக்கள் என்னை துரத்தினார்கள். வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர். பக்கத்து வீட்டுக்காரர்களும் விழித்துக் கொண்டு விட்டனர். தப்பித்து ஓடி வந்த என்னை எல்லோரும் துரத்தி வந்தனர். அவர்கள் என்னை பிடித்து விடக் கூடிய அளவு நெருங்கி வந்துவிட்டனர். அந்த சமயத்தில் நான் ஒரு கிணற்றை கடந்து ஓடினேன். கிணற்றின் ஓரத்தில் பெரிய பாறை ஒன்று இருப்பதை பார்த்தேன். இப்போது அந்த பாறையை என்னால் தூக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அதை அப்போது நான் செய்தேன்.


அது போன்ற அபாயமான சந்தர்ப்பங்களில் உங்களது முழு சக்தியையும் உங்களால் செலவிடமுடியும். நீங்கள் மேம்போக்காக இருக்க மாட்டீர்கள். வாழ்க்கை அபாயத்தில் இருக்கும்போது முழு சக்தியோடு இருப்பீர்கள்.

நான் அந்த பாறையை நகர்த்தி, அதை தூக்கினேன். – அதை என்னால் நகர்த்த முடியும் என்பதையே என்னால் நம்ப முடியாது. அதை எடுத்து கிணற்றில் வீசிவிட்டு ஓடினேன். பாறை கிணற்றில் விழுந்த சத்தத்தால் என்னை பின்தொடர்ந்த மக்கள் என்னை பின் தொடர்வதை நிறுத்தி விட்டனர். அவர்கள் அந்த கிணற்றை சூழ்ந்து கொண்டனர். நான் கிணற்றில் குதித்து விட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டனர். இப்படித்தான் நான் தப்பி வந்தேன். என்றான்.

தந்தை, நீ இப்போது தூங்கு போ, என் வேலை முடிந்தது. இனிமேல் எதையும் என்னை கேட்காதே. உன்னிஷ்டப்படி செயல்படலாம் என்றார்.

Source : Be Still and Know Ch.#9

No comments: